பாடல் #1700

பாடல் #1700: ஆறாம் தந்திரம் – 14. பக்குவன் (இறைவனை அறிவதற்கான மன முதிர்ச்சியை பெற்றவர்கள்)

உணர்த்து மதிபக்கு வற்கே உணர்த்தி
யிணக்கில் பராபரத் தெல்லை யுன்னிட்டுக்
குணக்கோடு தெற்குத் தரபச்சி மங்கொண்
டுணர்த்து மின்னாவுடை யான்றன்னை யுன்னியே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

உணரதது மதிபககு வறகெ உணரததி
யிணககில பராபரத தெலலை யுனனிடடுக
குணககொடு தெறகுத தரபசசி மஙகொண
டுணரதது மினனாவுடை யானறனனை யுனனியெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

உணர்த்தும் அதி பக்குவற்கே உணர்த்தி
இணக்கு இல் பரா பரத்து எல்லை உள் இட்டு
குணக்கோடு தெற்கு உத்தர பச்சிமம் கொண்டு
உணர்த்துமின் ஆவுடையான் தன்னை உன்னியே.

பதப்பொருள்:

உணர்த்தும் (பரம்பொருளின் பேருண்மைகளை உணர்த்துகின்ற ஞான குருவானவர்) அதி (மிகவும்) பக்குவற்கே (பக்குவம் பெற்ற சீடனுக்கே) உணர்த்தி (அவற்றை உணர்த்தி)
இணக்கு (அனைத்துமாக இருந்தாலும் அதனோடு சேர்ந்து) இல் (இல்லாமல் விட்டு விலகி நிற்கின்ற) பரா (அசையா சக்தியாகிய) பரத்து (பரம்பொருளின்) எல்லை (எல்லைக்கு) உள் (உள்ளே) இட்டு (சீடனை கொண்டு சென்று)
குணக்கோடு (கிழக்கோடு) தெற்கு (தெற்கு) உத்தர (வடக்கு) பச்சிமம் (மேற்கு ஆகிய நான்கு திசைகளையும்) கொண்டு (கொண்டு இருக்கின்ற அனைத்து பொருள்களிலும் மறைந்து இருக்கின்ற பேருண்மையாகிய பரம்பொருளை)
உணர்த்துமின் (உணர்த்துவார்கள்) ஆவுடையான் (ஆன்மாக்களுக்கெல்லாம் அதிபதியாகிய) தன்னை (ஆண்டவனை) உன்னியே (தமது மனதிற்குள் தியானித்தே இவை அனைத்தையும் அவர்கள் செய்வார்கள்).

விளக்கம்:

பரம்பொருளின் பேருண்மைகளை உணர்த்துகின்ற ஞான குருவானவர் மிகவும் பக்குவம் பெற்ற சீடனுக்கே அவற்றை உணர்த்தி, அனைத்துமாக இருந்தாலும் அதனோடு சேர்ந்து இல்லாமல் விட்டு விலகி நிற்கின்ற அசையா சக்தியாகிய பரம்பொருளின் எல்லைக்கு உள்ளே சீடனை கொண்டு சென்று, கிழக்கோடு தெற்கு வடக்கு மேற்கு ஆகிய நான்கு திசைகளையும் கொண்டு இருக்கின்ற அனைத்து பொருள்களிலும் மறைந்து இருக்கின்ற பேருண்மையாகிய பரம்பொருளை உணர்த்துவார்கள். ஆன்மாக்களுக்கெல்லாம் அதிபதியாகிய ஆண்டவனை தமது மனதிற்குள் தியானித்தே இவை அனைத்தையும் அவர்கள் செய்வார்கள்.

பாடல் #1701

பாடல் #1701: ஆறாம் தந்திரம் – 14. பக்குவன் (இறைவனை அறிவதற்கான மன முதிர்ச்சியை பெற்றவர்கள்)

இறையடி தாழ்ந்தை வணக்கமு மெய்திக்
குறையது கூறிக் குணங்கொண்டு போற்றிச்
சிறையுடன் னீயறக் காட்டிச் சிவத்தோ
டறிவுக் கறிவிப்போன் சன்மார்க்கி யாமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

இறையடி தாழநதை வணககமு மெயதிக
குறையது கூறிக குணஙகொணடு பொறறிச
சிறையுடன னியறக காடடிச சிவததொ
டறிவுக கறிவிபபொன சனமாரககி யாமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

இறை அடி தாழ்ந்து ஐ வணக்கமும் எய்தி
குறை அது கூறி குணம் கொண்டு போற்றி
சிறை உடன் நீ அற காட்டி சிவத்தோடு
அறிவுக்கு அறிவிப்போன் சன் மார்க்கி ஆமே.

பதப்பொருள்:

இறை (உண்மையான ஞானத்தை அறிந்தவராகிய குருவானவர் இறைவனின்) அடி (திருவடிகளை) தாழ்ந்து (பணிந்து வணங்கி) ஐ (இறையருளால் அண்டத்தில் இருக்கின்ற ஐந்து பூதங்களையும் தமக்குள் இருக்கின்ற ஐந்து பூதங்களோடு இணைத்து) வணக்கமும் (அவற்றை இறைவனாகவே உணர்ந்து வணங்குகின்ற) எய்தி (நிலையை அடைந்தவராகவும்)
குறை (தமக்குள் இருக்கின்ற குறைகள்) அது (எது என்பதை) கூறி (இறைவனிடம் எடுத்துக் கூறி அவனருளால் அவற்றை நீக்கி விட்டு) குணம் (இறையருளால் புனிதமான குணத்தை) கொண்டு (கொண்டு) போற்றி (அதற்கு நன்றி கூறி இறைவனை போற்றி வணங்குபவராகவும்)
சிறை (மாயை எனும் சிறை) உடன் (உடன் சேர்ந்து தன்னுடன் இருக்கின்ற உடல் பொருள் ஆகிய அனைத்தும் தான் என்று நினைக்கின்ற சீடருக்கு) நீ (நீ என்பது இந்த உடம்போ உடமைகளோ அல்ல நீ என்பது உனக்குள் இருக்கின்ற ஆன்மா என்பதை) அற (மாயையை நீக்கி) காட்டி (காட்டி அருளுபவராகவும்) சிவத்தோடு (இறைவனுடைய அருளோடு சேர்ந்து இருந்து)
அறிவுக்கு (சீடருடைய அறிவுக்கு புரியும் படி) அறிவிப்போன் (உண்மை அறிவை அறிவிக்கின்றவராகவும் இருக்க வேண்டும்) சன் (இப்படி இருக்கின்ற குருவே அழிவில்லாத) மார்க்கி (சன் மார்க்கத்தில் இருப்பவர்) ஆமே (ஆகும்).

விளக்கம்:

உண்மையான ஞானத்தை அறிந்தவராகிய குருவானவர் இறைவனின் திருவடிகளை பணிந்து வணங்கி இறையருளால் அண்டத்தில் இருக்கின்ற ஐந்து பூதங்களையும் தமக்குள் இருக்கின்ற ஐந்து பூதங்களோடு இணைத்து அவற்றை இறைவனாகவே உணர்ந்து வணங்குகின்ற நிலையை அடைந்தவராகவும், தமக்குள் இருக்கின்ற குறைகள் எது என்பதை இறைவனிடம் எடுத்துக் கூறி அவனருளால் அவற்றை நீக்கி விட்டு இறையருளால் புனிதமான குணத்தை கொண்டு அதற்கு நன்றி கூறி இறைவனை போற்றி வணங்குபவராகவும், மாயை எனும் சிறை உடன் சேர்ந்து தன்னுடன் இருக்கின்ற உடல் பொருள் ஆகிய அனைத்தும் தான் என்று நினைக்கின்ற சீடருக்கு நீ என்பது இந்த உடம்போ உடமைகளோ அல்ல நீ என்பது உனக்குள் இருக்கின்ற ஆன்மா என்பதை மாயையை நீக்கி காட்டி அருளுபவராகவும், இறைவனுடைய அருளோடு சேர்ந்து இருந்து சீடருடைய அறிவுக்கு புரியும் படி உண்மை அறிவை அறிவிக்கின்றவராகவும் இருக்க வேண்டும். இப்படி இருக்கின்ற குருவே அழிவில்லாத சன் மார்க்கத்தில் இருப்பவர் ஆகும்.

பாடல் #1702

பாடல் #1702: ஆறாம் தந்திரம் – 14. பக்குவன் (இறைவனை அறிவதற்கான மன முதிர்ச்சியை பெற்றவர்கள்)

வேட்கை விடுநெறி வேதாந்த மாதலால்
வாழ்க்கைப் புலன்வழி மாற்றிச் சித்தாந்தத்து
வேட்கை விடுமிக்க வேதாந்தி பாதமே
தாழ்க்குந் தலையினோன் சற்சீட னாமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

வெடகை விடுநெறி வெதாநத மாதலால
வாழககைப புலனவழி மாறறிச சிததாநததது
வெடகை விடுமிகக வெதாநதி பாதமெ
தாழககுந தலையினொன சறசீட னாமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

வேட்கை விடு நெறி வேத அந்தம் ஆதல் ஆல்
வாழ்க்கை புலன் வழி மாற்றி சித்த அந்தத்து
வேட்கை விடும் மிக்க வேத அந்தி பாதமே
தாழ்க்கும் தலையினோன் சற் சீடன் ஆமே.

பதப்பொருள்:

வேட்கை (அனைத்து விதமான ஆசைகளையும்) விடு (விடுகின்ற) நெறி (வழி முறையே) வேத (வேதத்தின்) அந்தம் (எல்லையாகிய) ஆதல் (அனைத்தும்) ஆல் (சொல்லுவதால்)
வாழ்க்கை (உலக வாழ்க்கையை) புலன் (ஐந்து புலன்களாகிய கண், காதுகள், மூக்கு, வாய், தொடுதல் ஆகியவற்றின்) வழி (வழியே சென்று கொண்டு இருப்பதை) மாற்றி (மாற்றி விட்டு) சித்த (அனைத்து விதமான எண்ணங்களையும்) அந்தத்து (நீக்கி ஒடுங்குதலை செய்து)
வேட்கை (அனைத்து விதமான ஆசைகளையும்) விடும் (விட்டு விடுவதில்) மிக்க (மிகவும் சிறந்து இருக்கின்றவரும்) வேத (அனைத்து வேதங்களுக்கும்) அந்தி (எல்லையாக இருக்கின்ற இறை நிலையில் இருக்கின்றவரும் ஆகிய குருவின்) பாதமே (திருவடிகளை)
தாழ்க்கும் (பணிந்து வணங்குவதை மட்டுமே) தலையினோன் (தலையாக கொண்டு வாழ்பவனே) சற் (உண்மையான) சீடன் (சீடன்) ஆமே (ஆகும்).

விளக்கம்:

அனைத்து விதமான ஆசைகளையும் விடுகின்ற வழி முறையே வேதத்தின் எல்லையாகிய அனைத்தும் சொல்லுவதால், உலக வாழ்க்கையை ஐந்து புலன்களாகிய கண், காதுகள், மூக்கு, வாய், தொடுதல் ஆகியவற்றின் வழியே சென்று கொண்டு இருப்பதை மாற்றி விட்டு, அனைத்து விதமான எண்ணங்களையும் நீக்கி ஒடுங்குதலை செய்து, அனைத்து விதமான ஆசைகளையும் விட்டு விடுவதில் மிகவும் சிறந்து இருக்கின்றவரும், அனைத்து வேதங்களுக்கும் எல்லையாக இருக்கின்ற இறை நிலையில் இருக்கின்றவரும் ஆகிய குருவின் திருவடிகளை பணிந்து வணங்குவதை மட்டுமே தலையாக கொண்டு வாழ்பவனே உண்மையான சீடன் ஆகும்.

பாடல் #1703

பாடல் #1703: ஆறாம் தந்திரம் – 14. பக்குவன் (இறைவனை அறிவதற்கான மன முதிர்ச்சியை பெற்றவர்கள்)

சற்குணம் வாய்மை தயாவிவேகந் தண்மை
சற்குரு பாதமே சாயைபோ னீங்காமே
சிற்பர ஞானந் தெளியத் தெளிவோர்தல்
அற்புதமே தோன்ற லாகுஞ்சற் சீடனே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

சறகுணம வாயமை தயாவிவெகந தணமை
சறகுரு பாதமெ சாயைபொ னீஙகாமெ
சிறபர ஞானந தெளியத தெளிவொரதல
அறபுதமெ தொனற லாகுஞசற சீடனெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

சற் குணம் வாய்மை தயா விவேகம் தண்மை
சற் குரு பாதமே சாயை போல் நீங்காமே
சிற் பர ஞானம் தெளிய தெளிவு ஓர்தல்
அற்புதமே தோன்றல் ஆகும் சற் சீடனே.

பதப்பொருள்:

சற் (எதிலும் உண்மையாகவே) குணம் (இருத்தல்) வாய்மை (எப்போதும் உண்மையையே பேசுதல்) தயா (அனைத்து உயிர்களின் மேலும் அன்பும் கருணையும் கொண்டு இருத்தல்) விவேகம் (உண்மையான ஞானமாகிய அறிவோடு இருத்தல்) தண்மை (எது நடந்தாலும் அதனால் பாதிக்கப் படாமல் இருத்தல்)
சற் (உண்மையான) குரு (குருவின்) பாதமே (திருவடிகளை) சாயை (அதன் நிழல்) போல் (போல) நீங்காமே (எப்போதும் நீங்கி விடாமல் சேர்ந்தே இருத்தல்)
சிற் (சித்தத்தில்) பர (இறைவனது பேரறிவு) ஞானம் (ஞானத்தை) தெளிய (தெளிவாக உணரும் படி) தெளிவு (குருவின் அருளோடு தெளிவாக) ஓர்தல் (ஆராய்ந்து அறிந்து கொள்ளுதல்)
அற்புதமே (மனிதர்களுக்கு மேலான நிலையில் அற்புதமான) தோன்றல் (சக்திகளை உலக நன்மைக்காக செய்து காட்டுதல்) ஆகும் (ஆகிய இவைகளோடு இருப்பவனே) சற் (உண்மையான) சீடனே (சீடன் ஆவான்).

விளக்கம்:

எதிலும் உண்மையாகவே இருத்தல், எப்போதும் உண்மையையே பேசுதல், அனைத்து உயிர்களின் மேலும் அன்பும் கருணையும் கொண்டு இருத்தல், உண்மையான ஞானமாகிய அறிவோடு இருத்தல், எது நடந்தாலும் அதனால் பாதிக்கப் படாமல் இருத்தல், உண்மையான குருவின் திருவடிகளை அதன் நிழல் போல எப்போதும் நீங்கி விடாமல் சேர்ந்தே இருத்தல், சித்தத்தில் இறைவனது பேரறிவு ஞானத்தை தெளிவாக உணரும் படி குருவின் அருளோடு தெளிவாக ஆராய்ந்து அறிந்து கொள்ளுதல், மனிதர்களுக்கு மேலான நிலையில் அற்புதமான சக்திகளை உலக நன்மைக்காக செய்து காட்டுதல், ஆகிய இவைகளோடு இருப்பவனே உண்மையான சீடன் ஆவான்.