பாடல் #505: இரண்டாம் தந்திரம் – 17. அபாத்திரம் (கொடுப்பதற்கும் பெறுவதற்கும் தகுதி இல்லாதவர்கள்)
கோல வறட்டைக் குனிந்து குளகிட்டுப்
பாலைக் கறந்து பருகுவ தேயொக்கும்
சீலமும் நோன்பும் இலாதவர்க் கீந்தது
காலங் கழிந்த பயிரது ஆகுமே.
விளக்கம்:
மடி வற்றிப்போன பசுமாடு அழகாக இருக்கிறதே என்று குனிந்து அதற்கு புற்களை உணவாகக் கொடுத்து அதன் மடியிலிருந்து பாலைக் கறந்து குடித்து விடலாம் என்று நினைப்பது ஒழுக்கமும் தவமும் இல்லாதவர்களுக்கு தானம் கொடுத்து பேரின்ப வாழ்வைப் பெற்று விடலாம் என்று நினைப்பது போலாகும். ஒழுக்கமும் தவமும் இல்லாதவர்களுக்கு கொடுக்கும் தானம் பருவம் முடிந்த பிறகு விதைத்த பயிர் எப்படி வளர்ந்து செழிக்காதோ அதுபோல எந்தப் பயனையும் கொடுக்காமல் வீணாகிவிடும்.
உள்விளக்கம்: ஒழுக்கமும் தவமும் இல்லாதவர்கள் தானம் பெற தகுதி இல்லாதவர்கள் ஆவார்கள்.
