பாடல் #688

பாடல் #688: மூன்றாம் தந்திரம் – 11. அட்டமா சித்தி (தவத்தால் அடையக்கூடிய எட்டுவிதமான சித்திகள்)

மெய்ப்பொரு ளாக விளைந்தது வேதெனின்
நற்பொரு ளாகிய நல்ல வசித்துவங்
கைப்பொரு ளாகக் கலந்த உயிர்க்கெலாந்
தற்பொரு ளாகிய தன்மைய னாகுமே.

விளக்கம்:

பாடல் #687 இல் உள்ளபடி உணர்ந்த உண்மைப் பொருளான சதாசிவம் எது என்று பார்த்தால் நல்ல வசித்துவம் எனும் சித்தியாகும். அவ்வாறு வசித்துவம் எனும் சித்தியை அடைந்தவர்கள் தன்னுடைய உயிர் எது என்று உணர்ந்தது போல எல்லா உயிர்களையும் உணர்ந்து தாமே சிவமாகி அந்த உயிர்களோடு கலந்து இருப்பார்கள்.

கருத்து: வசித்துவம் எனும் சித்தி பெற்றவர்கள் சிவ தன்மையை அடைந்து அனைத்து உயிர்களோடும் கலந்து இருப்பார்கள்.

பாடல் #689

பாடல் #689: மூன்றாம் தந்திரம் – 11. அட்டமா சித்தி (தவத்தால் அடையக்கூடிய எட்டுவிதமான சித்திகள்)

தன்மைய தாகத் தழைத்த பகலவன்
மென்மைய தாகிய மெய்ப்பொருள் கண்டிடின்
பொன்மைய தாகப் புலன்களும் போயிட
நன்மைய தாகிய நற்கொடி காணுமே.

விளக்கம்:

வசித்துவம் எனும் சித்தியைப் பெற்று சிவமாக மாறியபின் சூரியனைப் போன்ற பிராகாசத்துடன் விளங்கும் யோகி அனைத்திற்கும் மேலான உண்மைப் பொருளான சதாசிவத்தை தரிசித்தபின் உலகப் பற்றை விட்டது போலவே உடலின் ஐம்புலன்களின் பற்றையும் விட்டுவிட நன்மை தரும் சதாசிவத்தின் சக்தியை தரிசிக்கலாம்.

கருத்து: வசித்துவம் எனும் சித்திபெற்ற யோகி ஐம்புலன்களின் மேலிருக்கும் பற்றை விட்டுவிட்டால் சதாசிவத்தின் சக்தியை தரிசிக்கலாம்.

பாடல் #690

பாடல் #690: மூன்றாம் தந்திரம் – 11. அட்டமா சித்தி (தவத்தால் அடையக்கூடிய எட்டுவிதமான சித்திகள்)

நற்கொடி யாகிய நாயகி தன்னுடன்
அக்கொடி யாகம் அறிந்திடில் ஓராண்டு
பொற்கொடி யாகிய புவனங்கள் போய்வருங்
கற்கொடி யாகிய காமுக னாமே.

விளக்கம்:

பாடல் #689 இல் உள்ளபடி சதாசிவத்தின் சக்தியைத் தரிசித்தபின் அச்சக்த்தியைத் தனக்குள்ளேயே உணர்ந்து அதிலேயே மனதை வைத்து ஒரு வருடம் யோகப் பயிற்சி செய்தால் ஏற்கனவே பெற்ற வசித்துவ சித்தியின் மூலம் எல்லா உலகங்களுக்கும் தன் விருப்பம் போல சென்று வருவது மட்டுமின்றி அவ்வுலகங்களில் இருக்கும் எல்லா உயிர்களோடும் கலந்து அந்த உயிர்களை தன்வசம் ஈர்க்கவும் முடியும்.

கருத்து: சதாசிவ சக்தியை ஒரு வருடம் தியானம் செய்தால் எல்லா உலகங்களிலுள்ள உயிர்களையும் தன்வசப்படுத்த முடியும்.

பாடல் #691

பாடல் #691: மூன்றாம் தந்திரம் – 11. அட்டமா சித்தி (தவத்தால் அடையக்கூடிய எட்டுவிதமான சித்திகள்)

காமரு தத்துவ மானது வந்தபின்
பூமரு கந்தம் புவனம தாயிடும்
மாமரு வுன்னிட மெய்திடு மானனாய்
நாமரு வும்ஒளி நாயக மானதே.

விளக்கம்:

பாடல் #690 இல் உள்ளபடி எல்லா உயிர்களையும் தன்வசப்படுத்தும் சக்தியைப் பெற்றபின் உயிர்களைத் தன் விருப்பத்திற்கேற்ப செயல்படுத்தி உலகத்தை மாற்றலாம். ஆனாலும் அனைத்தையும் தன்வசப்படுத்தும் பெருஞ்சக்தியான சதாசிவத்தை ஒளியாக தன் உள்ளத்தில் வைத்திருந்தால் அந்த ஒளியே நம்மை வசப்படுத்தும் சதாசிவமாகிவிடும்.

கருத்து: வசித்துவம் சித்தி பெற்றவர் உலகத்தை தன் எண்ணத்திற்கேற்ப மாற்றும் ஆற்றலைப் பெறுவார்.

பாடல் #692

பாடல் #692: மூன்றாம் தந்திரம் – 11. அட்டமா சித்தி (தவத்தால் அடையக்கூடிய எட்டுவிதமான சித்திகள்)

நாயக மாகிய நல்லொளி கண்டபின்
தாயக மாகத் தழைத்தங் கிருந்திடும்
போயக மான புவனங்கள் கண்டபின்
பேயக மாகிய பேரொளி காணுமே.

விளக்கம்:

பாடல் #691 இல் உள்ளபடி சதாசிவமாகிய ஒளியை உணர்ந்தபின் ஆன்மாவின் பிறப்பிடமாகிய சதாசிவம் தமக்குள்ளேயே தழைத்து இருக்கும். உலகப் பற்றுகள் அனைத்தும் தம்மை விட்டு விலகுவதைக் உணர்ந்தபின் தமக்குள் இருக்கும் இருள் அனைத்தையும் விலக்கும் பேரொளியைக் காணலாம்.

கருத்து: உலகப் பற்றுகள் தம்மை விட்டு விலகுவதை உணர்ந்தபின் அனைத்து இருளையும் அகற்றும் பேரொளியைத் தரிசிக்கலாம்.

பாடல் #693

பாடல் #693: மூன்றாம் தந்திரம் – 11. அட்டமா சித்தி (தவத்தால் அடையக்கூடிய எட்டுவிதமான சித்திகள்)

பேரொளி யாகிய பெரியஅவ் வேட்டையும்
பாரொளி யாகப் பதைப்பறக் கண்டவன்
தாரொளி யாகத் தரணி முழுதுமாம்
ஓரொளி யாகிய காலொளி காணுமே.

விளக்கம்:

சகஸ்ரதளத்தின் மேலே இருக்கும் பெரிய தாமரை மலர் போன்ற பேரொளியைத் தரிசிக்கக் கூடிய சக்தியைப் பெற்றவன் தனது மூச்சுக்காற்று ஒரு ஒளியாக மாறி அது பிரபஞ்சம் முழுவதும் பரவியிருப்பதைக் காண முடியும்.

கருத்து: பேரொளியைத் தரிசிக்கும் சக்தியுடையவன் தனது மூச்சுக்காற்றை பிரபஞ்சம் முழுவதும் பரவும் ஒளியாகக் காண முடியும்.

பாடல் #694

பாடல் #694: மூன்றாம் தந்திரம் – 11. அட்டமா சித்தி (தவத்தால் அடையக்கூடிய எட்டுவிதமான சித்திகள்)

காலோ டுயிருங் கலக்கும் வகைசொல்லிற்
காலது அக்கொடி நாயகி தன்னுடன்
காலது ஐஞ்ஞூற் றொருபத்து மூன்றையும்
காலது வேமண்டிக் கொண்டஇவ் வாறே.

விளக்கம்:

மூச்சுக்காற்றோடு உயிர் கலக்கும் முறை என்னவென்றால் உடம்பில் மொத்தம் உள்ளதாக யோக நூல்கள் கூறும் எழுபதாயிரம் நாடிகளில் ஐநூறு நாடிகள் சிறப்பானவை. இவற்றில் பத்து நாடிகள் மிகவும் சிறப்பானவை (பாடல் #595 இல் உள்ளபடி). அதிலும் சிறப்பானவை இடைகலை, பிங்கலை, சுழுமுனை ஆகிய மூன்று நாடிகளாகும். இந்த ஐநூற்று பதிமூன்று நாடிகளும் சுழுமுனை நாடியிலிருக்கும் சிவசக்தியோடு கலந்து இருந்தால் மூச்சுக்காற்றோடு உயிர் கலந்து இருக்கும்.

கருத்து: சிறப்பான ஐநூற்றி பதிமூன்று நாடிகளும் சிவசக்தியோடு கலந்திருந்தால் மூச்சுக்காற்றோடு உயிர் கலந்து இருக்கும்.

பாடல் #695

பாடல் #695: மூன்றாம் தந்திரம் – 11. அட்டமா சித்தி (தவத்தால் அடையக்கூடிய எட்டுவிதமான சித்திகள்)

ஆறது வாகும் அமிர்தத் தலையினுள்
ஆறது ஆயிர முந்நூற் றொடைஞ்சுள
ஆறது வாயிர மாகு மருவழி
ஆறது வாக வளர்ப்ப திரண்டே.

விளக்கம் :

தலைக்கு உள்ளே ஆறு போல உண்டாகின்ற அமுதம் ஆயிரத்து முந்நூற்று ஐந்து நரம்புத் தொகுதிகள் வழியாக செல்கின்றன. அவ்வாறு செல்லும் அமுதம் அந்த நரம்புத் தொகுதிகளின் மறுபகுதியில் உள்ள சகஸ்ரதளத்தை அடைந்து உயிரை பக்குவப்படுத்தி மேல்நிலைக்கு கொண்டு செல்வது சிவசத்திகளே ஆகும்.

கருத்து : சிவசக்திகளே அமுதத்தை நரம்புத்தொகுதிகளின் வழியாக சகஸ்ரதளத்திற்கு கொண்டு சென்று உயிரை பக்குவப்படுத்துகிறார்கள்.

பாடல் #696

பாடல் #696: மூன்றாம் தந்திரம் – 11. அட்டமா சித்தி (தவத்தால் அடையக்கூடிய எட்டுவிதமான சித்திகள்)

இரண்டினின் மேலே சதாசிவ நாயகி
இரண்டது கால்கொண் டெழுவகை சொல்லில்
இரண்டது ஆயிரம் ஐம்பதொ டொன்றாய்த்
திரண்டது காலம் எடுத்தது அஞ்சே.

விளக்கம் :

இடைகலை பிங்கலை நாடிகளின் மேல் சுழுமுனைத் தலையில் இருக்கும் சிவசத்தி இடைகலை பிங்கலை இரண்டு நாடிகள் வழியாக மூச்சுக்காற்று செயல் புரிகின்ற முறையைக் கூறினால் உடலில் உள்ள மண்டலங்களையும் நரம்புத் தொகுதிகளையும் தாண்டி ஆறு சக்கரங்களில் உள்ள ஐம்பத்தொன்று கைகள் வழியாக கலந்து ஆயிரம் தாமரை இதழ்களைக் கொண்ட சகஸ்ரதளத்தை அடைகின்றன. காலத்தைக் கடப்பதற்குத் துணை செய்வது ஐம்முகச் சக்தி ஆகும். இந்நிலையில் உயிரின் காலத்தைக் கடக்கச் செய்வதும் ஐம்முகங்களோடு கூடிய சதாசிவனின் நாயகியாகும்.

பாடல் #697

பாடல் #697: மூன்றாம் தந்திரம் – 11. அட்டமா சித்தி (தவத்தால் அடையக்கூடிய எட்டுவிதமான சித்திகள்)

அஞ்சுடன் அஞ்சு முகமுள நாயகி
அஞ்சுடன் அஞ்சது வாயுத மாவது
அஞ்சது வன்றி இரண்டது வாயிரம்
அஞ்சது காலம் எடுத்தருளும் ஒன்றே.

விளக்கம்:

பத்துத் திசைகளையும் பத்து முகங்களாகக் கொண்டிருக்கும் சதாசிவசக்திக்கு உயிரின் மூச்சிக்காற்றுடன் உடலில் இருக்கும் பத்து வாயுக்களும் பத்து ஆயுதங்களாகும். இந்த பத்து ஆயுதங்களும் கீழே பார்த்த சகஸ்ரதளம் மேலே பார்த்த சகஸ்ரதளம் என்று இரண்டு ஆயுதங்களான அச்சக்தியுடன் உருவமற்ற நிலையில் ஆயிரம் இதழ்கள் கொண்ட தாமரை மலராக இருக்கும் சகஸ்ரார தளத்தில் என்றும் ஒடுங்கியே இருந்து பலகாலங்கள் பேரின்பத்தில் திளைத்திருக்க வைத்து அருளுவது சதாசிவமூர்த்தியாகிய ஒரு சக்தியே ஆகும்.

கருத்து: ஆயிரம் இதழ்கள் கொண்ட மலர்ந்த தாமரை மலராத தாமரை ஆகிய இரண்டுவித சக்திகளையும் பத்து திசைகளாகிய முகங்களையும் பத்து வாயுக்களாகிய ஆயுதங்களையும் கொண்டிருக்கும் சதாசிவமூர்த்தியாகிய இறை சக்தி ஒன்றுதான் எட்டுவிதமான சித்திகள் அடைந்தவர்களுக்கு அனைத்தையும் அருளுகின்றது.

பத்துவித காற்றுக்கள்:

  1. பிராணன் – உயிர்க்காற்று
  2. அபாணன் – மலக் காற்று
  3. வியானன் – தொழிற்காற்று
  4. உதானன் – ஒலிக்காற்று
  5. சமானன் – நிரவுக்காற்று
  6. நாகன் – விழிக்காற்று
  7. கூர்மன் – இமைக்காற்று
  8. கிருகரன் – தும்மற் காற்று
  9. தேவதத்தன் – கொட்டாவிக் காற்று
  10. தனஞ்செயன் – வீங்கல் காற்று