பாடல் #326

பாடல் #326: முதல் தந்திரம் – 24. கள்ளுண்ணாமை (போதையைத் தரக்கூடிய எதையும் சாப்பிடாமல் இருப்பது)

காமமும் கள்ளும் கலதிகட் கேயாகும்
மாமல முஞ்சம யத்துள் மயலுறும்
போமதி யாகும் புனிதன் இணையடி
ஓமய ஆனந்தத் தேறல் உணர்வுண்டே.

விளக்கம்:

காமமும் போதை தரும் மதுவும் கீழ்த்தரமான மனிதர்களுக்கே உரியது. மதுவினால் மிகப்பெரிய அழுக்காகிய ஆணவம் அதிகரிக்கும். ஆணவம் மிகுந்தால் நம்மையே உணர முடியாத அளவுக்கு அறிவு எல்லா நேரத்திலும் மயங்கி கிடக்கும். நாளடைவில் அறிவு அழிந்தே போகும். எப்போதும் பேரானந்த உணர்வைத் தரும் இறைவனின் திருவடிகள் போலவே பேரானந்தத்தைத் தரும் அமிர்தத்தைப் பெற்று அருந்துவது மேன்மையான மனிதர்கள் செய்யும் செயலாகும்.

பாடல் #325

பாடல் #325: முதல் தந்திரம் – 24. கள்ளுண்ணாமை (போதையைத் தரக்கூடிய எதையும் சாப்பிடாமல் இருப்பது)

சித்தம் உருக்கிச் சிவமாம் சமாதியில்
ஒத்த சிவானந்தம் ஓவாத தேறலைச்
சுத்த மதுவுண்ணச் சுவானந்தம் விட்டு
நித்தல் இருத்தல் கிடத்தல்கீழ்மைக் காலே.

விளக்கம்:

உயிர்கள் வெளியுலக எண்ணங்களை முழுமையாக நீக்கிவிட்டு இறைவனின் மேல் சிந்தனையை வைத்து யோகத்தில் சிவமாக இருக்கும் சமாதி நிலையில் குண்டலினி சக்தியை சுழுமுனை நாடி வழியே மேலேற்றி சகஸ்ரரதளத்தில் சேர்த்தால் அங்கே ஊறும் மிகவும் தூய்மையான அமிர்தத்தைப் பருகி பேரானந்தத்திலேயே இருப்பதை விட்டுவிட்டு புத்தியை மயக்கும் உலக மதுவை பருகி அந்த மயக்கத்தில் இருப்பதும் சுய நினைவின்றி மயங்கிக் கிடப்பதும் உயிர்களை இழிவு நிலைக்கு அழைத்துச் செல்லும்.

பாடல் #324

பாடல் #324: முதல் தந்திரம் – 24. கள்ளுண்ணாமை (போதையைத் தரக்கூடிய எதையும் சாப்பிடாமல் இருப்பது)

கழுநீர்ப் பசுப்பெறிற் பின் கயந்தேரா
கழுநீர் விடாய்த்துத்தங் காயம் சுருக்கும்
முழுநீர்க் கள்ளுண்போர் முறைமை அகன்றோர்
செழுநீர்ச் சிவன்றன் ஆனந்தத் தேறலே.

விளக்கம்:

அரிசி கழுவிய நீரை பசுவுக்குக் கொடுத்தால் அதைக் குடித்துப் பழகிய பசு அதற்குப் பிறகு குளங்களைத் தேடிச் சென்று நல்ல நீரைப் பருகாது. தாகம் எடுத்தாலும் எளிதாக கிடைக்கும் நல்லநீரை குடிக்காமல் அரிசி கழுவிய கழுநீருக்காக காத்திருந்து அந்தப் பசுக்கள் தங்களது உடல் நலத்தைக் கெடுத்துக் கொள்ளும். அதுபோலவே போதை தரக்கூடிய மதுவைக் குடித்துப் பழகிய மனிதர்கள் ஒழுக்கத்திலிருந்து விலகி எளிதாக கிடைக்கும் செழுமையான நீரான சிவானந்தத் தேனான அமிர்தத்தைப் பருகாமல் போதைதரும் மதுவை பருகி தங்களின் வாழ்க்கையை வீணாகக் கழிக்கின்றனர்.

பாடல் #323

பாடல் #323: முதல் தந்திரம் – 23. நடுவுநிலைமை (விருப்பு வெறுப்பு இன்றி ஞானத்தை மட்டுமே பற்றி இருப்பது)

தோன்றிய எல்லாம் துடைப்பன் அவனன்றி
ஏன்றுநின் றாரென்றும் ஈசன் இணையடி
மூன்றுநின் றார்முதல் வன்திரு நாமத்தை
நான்றுநின் றார்நடுவு ஆகிநின் றாரே.

விளக்கம்:

அண்டசராசரங்கள் அனைத்திலும் தோன்றிய அனைத்தையும் அழிப்பவன் சதாசிவமூர்த்தி ஒருவனே அவன் இல்லாமல் வேறு எதுவும் இல்லை என்பதை உணர்ந்து ஈசன் திருவடிகளை பற்றி மும்மூர்த்திகளுக்கும் முதன்மையானவனாகிய சதாசிவமூர்த்தியின் திருநாமமாகிய நமசிவாய மந்திரத்தை சிந்தித்துக் கொண்டு இருப்பவர்கள் நடுநிலையுடன் இருக்கும் ஞானியாகி விடுவார்கள்.

பாடல் #322

பாடல் #322: முதல் தந்திரம் – 23. நடுவுநிலைமை (விருப்பு வெறுப்பு இன்றி ஞானத்தை மட்டுமே பற்றி இருப்பது)

நடுவுநின் றார்சிலர் ஞானிக ளாவர்
நடுவுநின் றார்சிலர் தேவரு மாவர்
நடுவுநின் றார்சிலர் நம்பனு மாவர்
நடுவுநின் றாரொடு நானும்நின் றேனே.

விளக்கம்:

பாடல் #320ல் உள்ளபடி நடுநிலையுடன் இருப்பவர்களில் சிலர் சிறந்த ஞானிகளாகி தேவர்களாகி சிவமாகவே ஆகின்றார்கள், யாமும் நடுநிலையுடன் இருப்பவர்களுடன் கலந்து இருக்கின்றேன்.

பாடல் #321

பாடல் #321: முதல் தந்திரம் – 23. நடுவுநிலைமை (விருப்பு வெறுப்பு இன்றி ஞானத்தை மட்டுமே பற்றி இருப்பது)

நடுவுநின் றான்நல்ல கார்முகில் வண்ணன்
நடுவுநின் றான்நல்ல நான்மறை ஓதி
நடுவுநின் றார்சிலர் ஞானிக ளாவோர்
நடுவுநின் றார்நல்ல நம்பனும் ஆமே.

விளக்கம்:

பாடல் #320ல் உள்ளபடி நடுநிலையுடன் இருந்து ஞானம் அடைந்தவர்களே பின்பு உலகத்தைக் காக்கும் திருமால் உயிர்களைப் படைக்கும் பிரம்மனாகவும் மாறுவார்கள். சிலர் சிறந்த ஞானியாகி சிவமாகவே மாறிவிடுவார்கள்.

பாடல் #320

பாடல் #320: முதல் தந்திரம் – 23. நடுவுநிலைமை (விருப்பு வெறுப்பு இன்றி ஞானத்தை மட்டுமே பற்றி இருப்பது)

நடுவுநின் றார்க்கன்றி ஞானமும் இல்லை
நடுவுநின் றார்க்கு நரகமும் இல்லை
நடுவுநின் றார்நல்ல தேவரும் ஆவர்
நடுவுநின் றார்வழி நானும்நின் றேனே.

விளக்கம்:

தனக்கோ உற்றார் உறவினர் மற்ற உயிர்கள் வாழும் உலகத்திற்கோ என்ன நடந்தாலும் இன்பம் துன்பம் என எது வந்தாலும் எல்லாம் இறை செயல் என்று எதனாலும் பாதிக்காத விருப்பு வெறுப்பு இல்லாமல் தான் செல்லும் இறை வழியிலிருந்து சிறிதும் மாறாமல் நடுநிலையான மனநிலையில் இருப்பவர்களைத் தவிர மற்றவர்களுக்கு உண்மையான ஞானம் கிடைப்பதில்லை. அப்படி இருப்பவர்களுக்கு நரகமும் இல்லை. அப்படி இருக்கக்கூடியவர்களே நல்ல தேவர்களாகவும் இருப்பார்கள். அப்படிப்பட்டவர்கள் நின்ற நெறியிலேயே யானும் நிற்கின்றேன்.

பாடல் #319

பாடல் #319: முதல் தந்திரம் – 22. கல்லாமை (கல்வி கற்று உண்மை ஞானம் இல்லாமை)

ஆதிப் பிரான் அமரர்க்கும் பரஞ்சுடர்
சோதி அடியார் தொடரும் பெருந்தெய்வம்
ஓதி உணரவல் லோமென்பர் உள்நின்ற
சோதி நடத்துந் தொடர்வுஅறி யாரே.

விளக்கம்:

பிறப்பு இறப்பு இல்லாத தேவர்களுக்கு இறைவனாகவும் அண்டங்கள் முழுவதும் பரவி ஜோதியாக ஆதியிலிருந்தே இருக்கும் இறைவனை உணர்ந்த அடியவர்கள் இறைவன் கூறிய வழியிலையே தொடர்ந்து சென்று இறுதியில் அடையும் பெருந்தெய்வமாக இருக்கும் இறைவனை உலகக் கல்வியை படித்து உணர்ந்து விடமுடியும் என்று கூறுபவர்கள் தமக்குள் ஜோதி வடிவாக நின்றுகொண்டு தம்மை வழி நடத்துபவனும் உயிரை உடலோடு தொடர்ந்து வைத்திருப்பவனும் அவனே எனும் உண்மை அறியாதவர்கள் ஆவார்கள்.

பாடல் #318

பாடல் #318: முதல் தந்திரம் – 22. கல்லாமை (கல்வி கற்று உண்மை ஞானம் இல்லாமை)

கற்றும் சிவஞானம் இல்லாக் கலதிகள்
சுற்றமும் வீடார் திரிசறார் மூடர்கள்
மற்றும் பலதிசை காணார் மதியிலோர்
கற்றன்பில் நிற்போர் கணக்கறிந் தார்களே.

விளக்கம்:

அற நூல்களையும் வேதங்களையும் கற்று சிவஞானத்தை அடைய வேண்டும் என்ற எண்ணம் இல்லாத தீயகுணமுடையவர்கள் தமது ஐம்புலன்கள் வழியாக உள்ள ஆசைகளையும் உலக வாழ்க்கையையும் பற்றிக்கொண்டு ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலங்களால் வரும் மாசையும் அகற்றாத மூடர்கள் மற்றும் பல திசைகளிலும் உள்ள கற்றறிந்து உண்மை ஞானம் அடைந்தவர்களை உணரும் அறிவில்லாதவர்கள் இறைவனை அடையும் வழி தெரியாதவர்களே. அற நூல்களையும், வேதங்களையும் கற்று அதன் வழியில் இறைவனின் மேல் அன்போடு இருப்பவர்களே இறைவனை அடையும் வழி தெரிந்தவர்கள்.

பாடல் #317

பாடல் #317: முதல் தந்திரம் – 22. கல்லாமை (கல்வி கற்று உண்மை ஞானம் இல்லாமை)

கல்லாத மூடரைக் காணவும் ஆகாது
கல்லாத மூடர்சொல் கேட்கக் கடனன்று
கல்லாத மூடர்க்குக் கல்லாதார் நல்லராம்
கல்லாத மூடர் கருத்துஅறி யாரே.

விளக்கம்:

உண்மையான ஞானத்தைக் கற்று அறியாத மூடர்களை சென்று பார்ப்பது நமக்கு நல்லது இல்லை. அவர்கள் சொல்லுவதைக் கேட்டே ஆகவேண்டும் என்கிற கடமையும் நமக்கு இல்லை. உண்மையான ஞானத்தை கற்று அறியாத மூடர்களுக்கு தம்மைப் போலவே கற்று அறியாத மற்ற மூடர்களை நல்லவர்கள் என்று சொல்வார்கள். கல்லாத மூடர்க்கு எந்த கருத்தையும் அறிந்து கொள்ளும் திறன் கிடையாது.