பாடல் #428

பாடல் #428: இரண்டாம் தந்திரம் – 11. சங்காரம் (வினையின் படி நன்மைக்காக அழித்தல்)

நித்தசங் காரமும் நீடிளைப் பாற்றுதல்
வைத்தசங் காரமும் மன்னும் அனாதியிற்
சுத்தசங் காரமுந் தோயாப் பரனருள்
வைத்தசங் காரமும் நாலாம் மதிக்கிலே.

விளக்கம்:

உயிர்கள் தங்களது துன்பங்களை மறந்து நீண்ட நேரத்திற்கு இளைப்பாற வேண்டும் என்கிற இறைவனது கருணையினால் நித்த சங்காரம் நிகழ்கிறது. ஆரம்பம் இல்லாத கனவு நிலையில் உலக மாயைகளெல்லாம் மறைந்து எண்ணங்களும் இல்லாமல் உயிர்கள் சிறிது நேரமாவது இளைப்பாற வேண்டும் என்கிற இறைவனது கருணையினால் வைத்த சங்காரம் நிகழ்கிறது. இறைவனது திருவருளை மட்டுமே எண்ணிக் கொண்டு மற்ற அனைத்தையும் விட்டு விலகி ஆன்மா திரும்ப வர வேண்டும் என்கிற இறைவனது கருணையினால் சுத்த சங்காரம் நிகழ்கிறது. அனைத்து வினைகளையும் கழித்த ஆன்மா இனி தனித்தன்மை இல்லாமல் உண்மைப் பொருளான இறைவனுடனே கலந்துவிட வேண்டும் என்கிற இறைவனது கருணையினால் உய்த்த சங்காரம் நிகழ்கிறது. இறைவனது கருணையை மதித்துப் பார்த்தால் இந்த நான்கு சங்காரங்களும் உயிர்களின் நன்மைக்காகவே இறைவன் வைத்திருக்கின்றான்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.