பாடல் #295: முதல் தந்திரம் – 20. கல்வி (உண்மை அறிவான ஞானம்)
நூலொன்று பற்றி நுனியேற மாட்டாதார்
பாலொன்று பற்றினால் பண்பின் பயன்கெடும்
கோலொன்று பற்றினால் கூடா பறவைகள்
மாலொன்று பற்றி மயங்குகின் றார்களே.
விளக்கம்:
அறநூல்கள் கூறிய வழிமுறைகளின்படி நடந்து இறைவனை அடைய முடியாத உயிர்கள் உலக ஆசைகளின்படி வழி நடந்து நல்ல பண்புகளால் கிடைக்கும் பயன்களை கெடுத்துக் கொண்டு திரிகின்றார்கள். குச்சி ஒன்றை எடுத்து காண்பித்தால் உணவை உண்ண வரும் பறவைகள் விலகி ஓடிவிடுவதுபோல அறநூல்கள் கூறிய வழிமுறைகளின்படி நடந்தால் உலக ஆசைகளைக் கொடுக்கும் ஐம்புலன்களும் நம்மை விட்டு ஓடிவிடும். இது தெரியாமல் உலக ஆசைகளில் மயங்கிக் கிடந்து வாழ்வை இழக்கின்றனர் உயிர்கள்.
