பாடல் #210

பாடல் #210: முதல் தந்திரம் – 10. நல்குரவு (வறுமை)

பொய்க்குழி தூர்ப்பான் புலரி புலருதென்
றக்குழி தூர்க்கும் அரும்பண்டந் தேடுவீர்
எக்குழி தூர்த்தும் இறைவனை ஏத்துமின்
அக்குழி தூரும் அழுக்குஅற்ற போதே.

விளக்கம்:

உயிர்களின் வயிறு என்பது ஒரு பொய்யான குழி போன்றது. பசி வரும்போது உணவு சாப்பிட்டு பசி தீர்ந்தது போலத் தெரிந்தாலும் மீண்டும் நான்கு மணி நேரத்தில் பசிக்க ஆரம்பித்து விடுகின்றது. இப்படி பொய்யாக இருக்கும் வயிறு எனும் குழியை நிரப்புவதற்கு உணவு கிடக்குமா என்று உயிர்கள் தினமும் தேடி அலைகின்றன. பொய்யான வயிற்றுப் பசியைப் போக்க உணவு தேடும் உயிர்கள் தமது பசியை எப்படி தீர்த்துக் கொண்டாலும் எந்த வேலை செய்தாலும் எப்படி பொருள் சம்பாதித்தாலும் அதிலேயே மூழ்கி இருந்துவிடாமல் இறைவனைப் போற்றிப் புகழ்ந்து வழிபடவும் நேரம் ஒதுக்க வேண்டும். அப்படி இறைவனைப் போற்றிப் புகழ்ந்து வழிபட்டு வந்தால் பிறவியோடு வந்த மும்மலங்களாகிய (ஆணவம், கன்மம், மாயை) அழுக்குகளும் நீங்கி உள்ளம் தெளிவுபெறும். உள்ளம் தெளிவு பெற்ற உயிர்களின் பிறவிப்பசி அப்போதே தீர்ந்து இனி பிறவி இல்லாத மோட்ச நிலை கிட்டிவிடும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.