பாடல் #188

பாடல் #188: முதல் தந்திரம் – 5. உயிர் நிலையாமை

ஐவர்க் கொருசெய் விளைந்து கிடந்தது
ஐவரும் அச்செய்யைக் காத்து வருவார்கள்
ஐவர்க்கு நாயகன் ஓலை வருதலால்
ஐவரும் அச்செய்யதன் காவல்விட் டாரே.

விளக்கம்:

ஐந்து நபர்களுக்கு ஒரு நிலம் கிடைத்தது. அதில் நன்றாக விவசாயம் செய்து விளைச்சல் விளைந்து கிடந்தது. ஐந்து நபர்களும் அந்த நிலத்தையும் அதன் விளைச்சலையும் கெட்டுப்போகாமல் நன்றாக காத்து பராமரித்து வந்தனர். ஒரு நாள் அந்த ஐந்து நபர்களின் தலைவன் அவர்களை உடனே தன் இடத்திற்கு வந்து சேரும்படி ஓலை அனுப்பினான். அந்த ஓலை வந்தவுடனே ஐவரும் உடனே தாங்கள் இதுவரைக் காத்து பராமரித்து வைத்திருந்த நிலத்தை விட்டுவிட்டு தங்களின் தலைவனை நாடிச் சென்றுவிட்டனர். இதில் ஐவர்கள் என்பது உடலில் இருக்கும் உயிரின் ஐந்து புலன்கள் (கண் – பார்த்தல், காது – கேட்டல், மூக்கு – நுகர்தல், வாய் – பேசுதல், தோல் – தொடுதல்), நிலம் என்பது உயிர் உலகில் எடுத்த உடல் ஆகும். ஐவர்களின் தலைவன் இறைவன் ஆவார். ஐந்து புலன்களும் உடலை கெட்டுப்போகாமல் நன்றாக காத்து பராமரித்து வந்தனர். எப்போது உயிர்களின் உலகப் பிறப்பு வினையின் காலம் முடிகிறதோ அப்போது இறைவன் அழைத்தவுடன் ஐந்து புலன்களும் உடலைவிட்டு பிரிந்து சென்றுவிடும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.