பாடல் #1774

பாடல் #1774: ஏழாம் தந்திரம் – 7. சிவ லிங்கம் (பேரருளாக இருக்கின்ற பரம்பொருளின் வடிவம்)

வரைத்து வலஞ்செய்யு மாறுமிங் கொன்றுண்டு
நிரைத்து வருங்கங்கை நீர்மல ரேந்தி
யுரைத்த வனாம முணர வல்லார்க்குப்
புரைத் தெங்கும்போகான் புரிசடை யோனே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

வரைதது வலஞசெயயு மாறுமிங கொனறுணடு
நிரைதது வருஙகஙகை நீரமல ரெநதி
யுரைதத வனாம முணர வலலாரககுப
புரைத தெஙகுமபொகான புரிசடை யொனெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

வரைத்து வலம் செய்யும் ஆறு இங்கு ஒன்று உண்டு
நிரைத்து வரும் கங்கை நீர் மலர் ஏந்தி
உரைத்த அவன் நாமம் உணர வல்லார்க்கு
புரைத்து எங்கும் போகான் புரி சடையோனே.

பதப்பொருள்:

வரைத்து (அளவில்லாத இறைவனை ஒரு எல்லைக்குள் வரையறுத்து) வலம் (வழிபாடு) செய்யும் (செய்கின்ற) ஆறு (முறை) இங்கு (தாம் இருக்கின்ற இடத்திலேயே) ஒன்று (ஒன்று) உண்டு (இருக்கின்றது)
நிரைத்து (எப்போதும் எப்போதும் அசைந்து ஓடி) வரும் (வருகின்ற) கங்கை (கங்கையாக பாவித்த) நீர் (தூய்மையான நீரையும்) மலர் (வாசனை மிக்க தூய்மையான மலரையும்) ஏந்தி (கைகளில் ஏந்திக் கொண்டு)
உரைத்த (மனதிற்குள் ஜெபிக்கின்ற) அவன் (இறைவனின்) நாமம் (திருநாமத்தின் மூலம்) உணர (இறைவனை தமக்குள்ளேயே உணர) வல்லார்க்கு (முடிந்தவர்களுக்கு)
புரைத்து (பொய்யாக) எங்கும் (எங்கும்) போகான் (போகாமல் மாறாத சத்தியமாக எப்போதும் உடன் இருப்பான்) புரி (கயிறு போல் திரிந்த) சடையோனே (சடை முடியை தலையில் அணிந்து கொண்டு இருக்கின்ற அருள் வடிவான இறைவன்).

விளக்கம்:

பாடல் #1773 இல் உள்ளபடி பஞ்ச பூதங்களால் ஆகிய அனைத்துமாகவும் அவை அனைத்தையும் தாண்டியும் அளவில்லாமல் இருக்கின்ற இறைவனை ஒரு எல்லைக்குள் வரையறுத்து தாம் இருக்கின்ற இடத்திலேயே வழிபாடு செய்கின்ற முறை ஒன்று இருக்கின்றது. எப்போதும் அசைந்து ஓடி வருகின்ற கங்கையாக பாவித்த தூய்மையான நீரையும், வாசனை மிக்க தூய்மையான மலரையும் கைகளில் ஏந்திக் கொண்டு, மனதிற்குள் ஜெபிக்கின்ற இறைவனின் திருநாமத்தின் மூலம் இறைவனை தமக்குள்ளேயே உணர முடிந்தவர்களுக்கு, எங்கும் பொய்த்து போகாமல் மாறாத சத்தியமாக எப்போதும் உடன் இருப்பான் கயிறு போல் திரிந்த சடை முடியை தலையில் அணிந்து கொண்டு இருக்கின்ற அருள் வடிவான இறைவன்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.