பாடல் #1775

பாடல் #1775: ஏழாம் தந்திரம் – 7. சிவ லிங்கம் (பேரருளாக இருக்கின்ற பரம்பொருளின் வடிவம்)

ஒன்றெனக் கண்டே னெம்மீச னொருவனை
நன்றென் றடியிணை நானவனைத் தொழ
வென்றைம் புலனு மிகக்கிடந் தின்புற
வன்றென் றருள்செய்யு மாதிப் பிரானே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

ஒனறெனக கணடெ னெமமீச னொருவனை
நனறென றடியிணை நானவனைத தொழ
வெனறைம புலனு மிகககிடந தினபுற
வனறென றருளசெயயு மாதிப பிரானெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

ஒன்று என கண்டேன் எம் ஈசன் ஒருவனை
நன்று என்று அடி இணை நான் அவனை தொழ
வென்று ஐம் புலனும் மிக கிடந்து இன்பு உற
அன்று என்று அருள் செய்யும் ஆதி பிரானே.

பதப்பொருள்:

ஒன்று (ஐந்து விதமான பூதங்களால் உருவாகிய அசையும் பொருள் அசையா பொருள் ஆகிய அனைத்தும் ஒன்றே) என (என்று) கண்டேன் (கண்டு தரிசித்து) எம் (எம்) ஈசன் (பரம்பொருளாகிய இறைவன்) ஒருவனை (ஒருவனே அவை அனைத்துமாக இருப்பதை உணர்ந்து கொண்டோம்)
நன்று (ஆகவே அவை அனைத்தும் நன்மையானது) என்று (என்றும்) அடி (இறைவனின் திருவடிகளுக்கு) இணை (சரிசமமானது என்றும்) நான் (யாம் அறிந்து கொண்டு) அவனை (அவனை ஐந்து பூதங்களால் ஆகிய அனைத்திலும் கண்டு) தொழ (வணங்கினோம்)
வென்று (அதன் பயனால் உலக ஆசைகளிலிருந்து வெற்றி பெற்ற) ஐம் (எமது ஐந்து) புலனும் (புலன்களும்) மிக (இறைவனுடனே மிகவும்) கிடந்து (சேர்ந்து கிடந்து) இன்பு (பேரின்பத்தில்) உற (திளைத்திருக்கும் படி)
அன்று (அப்பொழுதில் இருந்து) என்று (என்றும்) அருள் (அருள்) செய்யும் (செய்கின்றான்) ஆதி (ஆதி மூல) பிரானே (தலைவனாகிய இறைவன்).

விளக்கம்:

ஐந்து விதமான பூதங்களால் உருவாகிய அசையும் பொருள் அசையா பொருள் ஆகிய அனைத்தும் ஒன்றே என்று கண்டு தரிசித்து எம் பரம்பொருளாகிய இறைவன் ஒருவனே அவை அனைத்துமாக இருப்பதை உணர்ந்து கொண்டோம். ஆகவே அவை அனைத்தும் நன்மையானது என்றும் இறைவனின் திருவடிகளுக்கு சரிசமமானது என்றும் யாம் அறிந்து கொண்டு, அவனை ஐந்து பூதங்களால் ஆகிய அனைத்திலும் கண்டு வணங்கினோம். அதன் பயனால் உலக ஆசைகளிலிருந்து வெற்றி பெற்ற எமது ஐந்து புலன்களும் இறைவனுடனே மிகவும் சேர்ந்து கிடந்து பேரின்பத்தில் திளைத்திருக்கும் படி அப்பொழுதில் இருந்து என்றும் அருள் செய்கின்றான் ஆதி மூல தலைவனாகிய இறைவன்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.