பாடல் #1626: ஆறாம் தந்திரம் – 5. தவம் (துறவின் முழுமை பெற்ற நிலையே தவம் ஆகும்)
பிறப்பறி யார்பல பிச்சைசெய் மாந்தர்
சிறப்போடு வேண்டிய செல்வம் பெறுவர்
மறப்பில ராகிய மாதவத் தோர்கள்
பிறப்பினை நீக்கும் பெருமைபெற் றாரே.
திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:
பிறபபறி யாரபல பிசசைசெய மாநதர
சிறபபொடு வெணடிய செலவம பெறுவர
மறபபில ராகிய மாதவத தொரகள
பிறபபினை நீககும பெருமைபெற றாரெ.
சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:
பிறப்பு அறியார் பல பிச்சை செய் மாந்தர்
சிறப்போடு வேண்டிய செல்வம் பெறுவர்
மறப்பு இலர் ஆகிய மா தவத்தோர்கள்
பிறப்பினை நீக்கும் பெருமை பெற்றாரே.
பதப்பொருள்:
பிறப்பு (பிறவி எதற்காக எடுத்து வந்தோம் என்பதை) அறியார் (அறியாமல்) பல (இந்த உலகத்தில் உயிர் வாழ்வதற்கு தேவையான பலவற்றை) பிச்சை (பிச்சையாகவே) செய் (பெற்று வாழ்கின்ற) மாந்தர் (மனிதர்கள்)
சிறப்போடு (மாயையில் இருப்பதால் தங்களின் உலக வாழ்க்கைக்கு சிறப்பானது) வேண்டிய (என்று ஆசைப்பட்டு வேண்டிய) செல்வம் (செல்வத்தையே இறைவனிடம் கேட்டு) பெறுவர் (பெறுகின்றார்கள்)
மறப்பு (ஆனால் இறைவனின் திருவருளால் மாயை) இலர் (இல்லாதவர்) ஆகிய (ஆகிய) மா (மாபெரும்) தவத்தோர்கள் (தவத்தை செய்தவர்கள்)
பிறப்பினை (இனி பிறவி எடுக்கின்ற நிலையையே) நீக்கும் (நீக்கி விடுகின்ற) பெருமை (பெருமையை) பெற்றாரே (பெற்றவர்கள் ஆவார்கள்).
விளக்கம்:
பிறவி எதற்காக எடுத்து வந்தோம் என்பதை அறியாமல் இந்த உலகத்தில் உயிர் வாழ்வதற்கு தேவையான பலவற்றை பிச்சையாகவே பெற்று வாழ்கின்ற மனிதர்கள் மாயையில் இருப்பதால் தங்களின் உலக வாழ்க்கைக்கு சிறப்பானது என்று ஆசைப்பட்டு வேண்டிய செல்வத்தையே இறைவனிடம் கேட்டு பெறுகின்றார்கள். ஆனால் இறைவனின் திருவருளால் மாயை இல்லாதவராகிய மாபெரும் தவத்தை செய்தவர்கள் இனி பிறவி எடுக்கின்ற நிலையையே நீக்கி விடுகின்ற பெருமையை பெற்றவர்கள் ஆவார்கள்.
