பாடல் #1620

பாடல் #1620: ஆறாம் தந்திரம் – 4. துறவு (அனைத்தையும் விட்டு விலகி இருக்கின்ற தவ நிலை)

மேல்துறந் தண்ணல் விளங்கொளி கூறுவன்
நாள்துறந் தார்க்கவ னண்ப னவாவலி
கார்துறந் தார்க்கவன் கண்ணுத லாய்நிற்கும்
பார்துறந் தார்க்கே பதஞ்செய்ய லாமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

மெலதுறந தணணல விளஙகொளி கூறுவன
நாளதுறந தாரககவ னணப னவாவலி
காரதுறந தாரககவன கணணுத லாயநிறகும
பாரதுறந தாரககெ பதஞசெயய லாமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

மேல் துறந்து அண்ணல் விளங்கு ஒளி கூறுவன்
நாள் துறந்தார்க்கு அவன் நண்பன் அவா வலி
கார் துறந்தார்க்கு அவன் கண் நுதல் ஆய் நிற்கும்
பார் துறந்தார்க்கே பதம் செய்யல் ஆமே.

பதப்பொருள்:

மேல் (துறவின் மேலான நிலையில்) துறந்து (தான் எனும் உணர்வை விட்டு விலகி இருக்கின்ற துறவிகளுக்கு) அண்ணல் (அனைத்தையும் காத்து அருளுபவனாகிய இறைவன்) விளங்கு (உண்மையை காண்பித்து உணர வைக்கின்ற) ஒளி (ஒளியாக) கூறுவன் (உள்ளுக்குள் இருந்து சொல்லிக் கொடுத்து வழி நடத்துவான்)
நாள் (அதன் படியே கடை பிடித்து தமது வாழ்நாளை) துறந்தார்க்கு (விட்டு விலகி இருக்கின்ற துறவிகளுக்கு) அவன் (அந்த இறைவனே) நண்பன் (உற்ற நண்பனாக இருப்பான்) அவா (ஆசைகள்) வலி (எனும் வலிமை மிக்க)
கார் (மாய இருளை) துறந்தார்க்கு (விட்டு விலகி இருக்கின்ற துறவிகளுக்கு) அவன் (அந்த இறைவன்) கண் (ஞானமாகிய) நுதல் (நெற்றிக் கண்) ஆய் (ஆகவே) நிற்கும் (நின்று அருளுவான்)
பார் (அவன் காட்டிய ஞான வழியில் உலகத்தையும் உலக பற்றுக்களையும்) துறந்தார்க்கே (விட்டு விலகி இருக்கின்ற துறவிகளுக்கே) பதம் (இறை நிலையை அடையும் பக்குவத்தை) செய்யல் (செய்து கொடுத்து) ஆமே (அருளுவான் இறைவன்).

விளக்கம்:

பாடல் #1619 இல் உள்ளபடி துறவின் சமாதியாகிய மேலான நிலையில் தான் எனும் உணர்வை விட்டு விலகி இருக்கின்ற துறவிகளுக்கு அனைத்தையும் காத்து அருளுபவனாகிய இறைவன் உண்மையை காண்பித்து உணர வைக்கின்ற ஒளியாக உள்ளுக்குள் இருந்து சொல்லிக் கொடுத்து வழி நடத்துவான். அதன் படியே கடை பிடித்து தமது வாழ்நாளை விட்டு விலகி இருக்கின்ற துறவிகளுக்கு அந்த இறைவனே உற்ற நண்பனாக இருப்பான். ஆசைகள் எனும் வலிமை மிக்க மாய இருளை விட்டு விலகி இருக்கின்ற துறவிகளுக்கு அந்த இறைவன் ஞானமாகிய நெற்றிக் கண்ணாகவே நின்று அருளுவான். அவன் காட்டிய ஞான வழியில் உலகத்தையும் உலக பற்றுக்களையும் விட்டு விலகி இருக்கின்ற துறவிகளுக்கே இறை நிலையை அடையும் பக்குவத்தை செய்து கொடுத்து அருளுவான் இறைவன்.

2 thoughts on “பாடல் #1620

    • Saravanan Thirumoolar Post authorReply

      கண்ணூதல் என்பதை பிரித்தால் கண் நூதல் என்று இந்த பாடலுக்கு தவறாக வரும். பாடலில் கண்ணுதல் என்று உள்ளபடி பிரித்தால் கண் நுதல் (நெற்றி) என்பதே சரியானதாகும்.

Leave a Reply to Sathish KumarCancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.