பாடல் #1536

பாடல் #1536: ஐந்தாம் தந்திரம் – 21. புறச் சமய நிந்தனை (இறைவனை அடைய வேண்டும் என்று வழிபாடு செய்யாமல் ஆசைகளுக்காக புற வழிபாடு செய்வதை நிந்திப்பது)

சிவகதி யேகெதி மற்றுள்ள தெல்லாம்
பவகதிப் பாசப் பிறவியொன் றுண்டு
தவகதி தன்னோடு நேரொன்று தோன்றி
லவகதி மூவரு மவ்வகை யாமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

சிவகதி யெகெதி மறறுளள தெலலாம
பவகதிப பாசப பிறவியொன றுணடு
தவகதி தனனொடு நெரொனறு தொனறி
லவகதி மூவரு மவவகை யாமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

சிவ கதியே கெதி மற்று உள்ளது எல்லாம்
பவ கதி பாச பிறவி ஒன்று உண்டு
தவ கதி தன்னோடு நேர் ஒன்று தோன்றில்
அவ கதி மூவரும் அவ் வகை ஆமே.

பதப்பொருள்:

சிவ (சிவப் பரம்பொருளை) கதியே (சரணடைவதே) கெதி (முக்திக்கான வழியாகும்) மற்று (சரணாகதியைத் தவிர வேறு விதமாக) உள்ளது (இருக்கின்ற வழி முறைகள்) எல்லாம் (அனைத்தும்)
பவ (உலக வாழ்க்கைக்கான) கதி (வழியாக) பாச (பாசத் தளைகளுடன்) பிறவி (மீண்டும் மீண்டும் பிறவி எடுப்பதற்காகவே) ஒன்று (இருக்கின்ற) உண்டு (வழி முறைகளாகும்)
தவ (சரணாகதியாக தவம் செய்கின்ற) கதி (வழி முறையை) தன்னோடு (சாதகர்கள்) நேர் (முக்திக்கு நேரான) ஒன்று (ஒரே வழிமுறையாக எடுத்துக் கொண்டு) தோன்றில் (செய்யாமல் போனால்)
அவ (துன்பமான பிறவிகளுக்கே) கதி (வழியாக இருக்கின்ற) மூவரும் (ஆணவம், கன்மம், மாயை ஆகிய மூன்று விதமான மலங்களும்) அவ் (துன்பமான பிறவி எடுப்பதற்கான) வகை (வழி முறைகளாகவே) ஆமே (இருக்கும்).

விளக்கம்:

சிவப் பரம்பொருளை சரணடைவதே முக்திக்கான வழியாகும். சரணாகதியைத் தவிர வேறு விதமாக இருக்கின்ற வழி முறைகள் அனைத்தும் உலக வாழ்க்கைக்கான வழியாக பாசத் தளைகளுடன் மீண்டும் மீண்டும் பிறவி எடுப்பதற்காகவே இருக்கின்ற வழி முறைகளாகும். சரணாகதியாக தவம் செய்கின்ற வழி முறையை சாதகர்கள் முக்திக்கு நேரான ஒரே வழிமுறையாக எடுத்துக் கொண்டு செய்யாமல் போனால் துன்பமான பிறவிகளுக்கே வழியாக இருக்கின்ற ஆணவம், கன்மம், மாயை ஆகிய மூன்று விதமான மலங்களும் துன்பமான பிறவி எடுப்பதற்கான வழி முறைகளாகவே இருக்கும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.