பாடல் #1424

பாடல் #1424: ஐந்தாம் தந்திரம் – 2. அசுத்த சைவம் (இறைவனை உணர்ந்து கொள்ள உதவும் நான்கு வகையான சைவ நெறிமுறைகளில் இரண்டாவது)

காதுபொன் னார்ந்த கடுக்க னிரண்டுசேர்த்
தோதுந் திருமேனி யுட்கட் டிரண்டுடன்
சோதனை செய்து துவாதெச மார்கரா
யோதி யிருப்பா ரொருசைவ ராமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

காதுபொன னாரநத கடுகக னிரணடுசெரத
தொதுந திருமெனி யுடகட டிரணடுடன
சொதனை செயது துவாதெச மாரகரா
யொதி யிருபபா ரொருசைவ ராமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

காது பொன் ஆர்ந்த கடுக்கன் இரண்டு சேர்த்து
ஓதும் திரு மேனி உள் கட்டு இரண்டு உடன்
சோதனை செய்து துவா தச மார்க்கர் ஆய்
ஓதி இருப்பார் ஒரு சைவர் ஆமே.

பதப்பொருள்:

காது (தனது காதுகளில்) பொன் (ஒளி வீசிப் பிரகாசிக்கும் தங்கத்தால்) ஆர்ந்த (அழகாக வார்க்கப்பட்ட) கடுக்கன் (கடுக்கன்கள்) இரண்டு (இரண்டையும்) சேர்த்து (காதோடு சேர்த்து அணிந்து கொண்டு)
ஓதும் (இறைவனது திருநாமத்தை ஓதுகின்ற) திரு (தமது மரியாதைக்கும் மேன்மைக்கும் உரிய) மேனி (உடலுக்கு) உள் (உள்ளே இறைவனது திருநாமத்தை ஓதுவதினால் உருவாகுகின்ற சக்திகளை) கட்டு (தம்மை சுற்றியே செயல் படுத்தும் பூனூல் மற்றும் அதை மேம்படுத்தி செயல் பட வைக்கும் ருத்திராட்சம்) இரண்டு (ஆகிய இரண்டு) உடன் (மாலைகளுடன் அணிந்து கொண்டு)
சோதனை (இவற்றின் செயல்பாடுகளை சோதனை) செய்து (செய்து கொண்டே) துவா (இரண்டும்) தச (பத்தும் ஆகிய மொத்தம் பன்னிரண்டு அங்குலம் [கழுத்துக்கு கீழே எட்டு அங்குலமும் கழுத்துக்கு மேலே நான்கு அங்குலம்]) மார்க்கர் (சுற்றிக் கொண்டு இருக்கின்ற மூச்சுக்காற்றை) ஆய் (ஆராய்ந்து)
ஓதி (அதனோடு சேர்ந்து அசபையாக மந்திரங்களை உச்சரித்துக் கொண்டே) இருப்பார் (இருப்பவர்களே) ஒரு (அசுத்த சைவம் வழிமுறையை கடைபிடிக்கும்) சைவர் (சைவர்கள்) ஆமே (ஆவார்கள்).

விளக்கம்:

தனது காதுகளில் ஒளி வீசிப் பிரகாசிக்கும் தங்கத்தால் அழகாக வார்க்கப்பட்ட கடுக்கன்கள் இரண்டையும் காதோடு சேர்த்து அணிந்து கொண்டு இறைவனது திருநாமத்தை ஓதுகின்ற தமது மரியாதைக்கும் மேன்மைக்கும் உரிய உடலுக்கு உள்ளே இறைவனது திருநாமத்தை ஓதுவதினால் உருவாகுகின்ற சக்திகளை தம்மை சுற்றியே செயல் படுத்தும் பூனூல் மற்றும் அதை மேம்படுத்தி செயல் பட வைக்கும் ருத்திராட்சம் ஆகிய இரண்டு மாலைகளையும் அணிந்து கொண்டு இவற்றின் செயல்பாடுகளை சோதனை செய்து கொண்டே பாடல் #457 இல் உள்ளபடி கழுத்துக்கு கீழே எட்டு அங்குலமும் கழுத்துக்கு மேலே நான்கு அங்குலம் சுற்றிக் கொண்டு இருக்கின்ற மூச்சுக்காற்றுடன் சேர்ந்து அசபையாக மந்திரங்களை உச்சரித்துக் கொண்டே அது சரியாக இயங்குகின்றதா என்பதை ஆராயந்து செயல் படுத்துபவர்களே அசுத்த சைவம் வழிமுறையை கடைபிடிக்கும் சைவர்கள் ஆவார்கள்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.