பாடல் #1298: நான்காம் தந்திரம் – 11. சாம்பவி மண்டலச் சக்கரம் (சிவசக்தி சேர்ந்திருக்கும் சிவலிங்கத் திருமேனி சக்கரம்)
நாடறி மண்டலம் நல்லவிக் குண்டத்துக்
கோடற வீதியுங் கொணர்ந்துள் ளிரண்டழி
பாடறி பத்துட னாறு நடுவீதி
ஏடற நாலைந்து இடவகை யாமே.
விளக்கம்:
பாடல் #1297 இல் உள்ளபடி சிவலிங்க அமைப்பில் இருக்கின்ற சக்கரமாக அறிந்து கொண்ட சாம்பவி மண்டலத்தை நன்மையான இந்த நவகுண்டமாகிய உடம்பிற்குள் சக்கரத்தில் வரைந்த கோடுகளை நீக்கி விட்டு அவற்றை சக்தி பாயும் வீதிகளாக கொண்டு வந்து உள் வாங்கிக் கொண்டு சக்கரத்தை இரண்டு பாகமாக பிரித்து வைக்க வேண்டும். இப்படி இரண்டு பாகமாக உண்டாகும் பக்கங்களை அறிந்து கொண்டு பத்து அறைகளுடன் ஆறு அறைகளும் சேர்த்து மொத்தம் பதினாறு அறைகளில் இரண்டு சிவலிங்கங்களையும் நடுவில் இருக்கின்ற நான்கு அறைகளில் உள்ள சிவலிங்கமும் ஓம் மந்திரமும் சேர்த்து வைக்க வேண்டும். அதன் பிறகு மனதில் இறைவனைத் தவிர வேறு எந்த சிந்தனைகளும் இல்லாமல் இருபது அறைகளாக இருக்கின்ற இடது பக்கமும் வலது பக்கமும் ஆகிய பகுதிகளை அமைத்துக் கொள்ளுங்கள்.
குறிப்பு: கீழ் கொடுக்கப்பட்டுள்ள படத்தில் அனைவருக்கும் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இருபது எண்களும் இருபது அறைகள் இருக்கின்ற இடம் வலது ஆகிய பக்கங்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக நீலம் மற்றும் பச்சை கலர்களில் பிரித்து கொடுக்கப்பட்டுள்ளது.
