பாடல் #1297

பாடல் #1297: நான்காம் தந்திரம் – 11. சாம்பவி மண்டலச் சக்கரம் (சிவசக்தி சேர்ந்திருக்கும் சிவலிங்கத் திருமேனி சக்கரம்)

சாம்பவி மண்டலச் சக்கரஞ் சொல்லிடில்
ஆம்பத மெட்டாக விட்டிடின் மேலதாங்
காண்பதந் தத்துவ நாலுள் நயனமும்
நாம்பதங் கண்டபின் நாடறிந் தோமே.

விளக்கம்:

சாம்பவி என்கிற சிவமும் சக்தியும் ஒன்றாக வீற்றிருக்கின்ற சிவலிங்க அமைப்பில் அமைகின்ற சக்கரத்தைப் பற்றி சொல்லப் போனால் சக்கர அமைப்பாக இருக்கின்ற அறைகள் ஒரு வரிசைக்கு எட்டாக எட்டு வரிசையில் மொத்தம் அறுபத்து நான்கு அறைகள் கொண்ட சக்கரம் அமைக்க வேண்டும். அதன் பிறகு அதற்கு நடுவில் இருக்கின்ற மேன்மையான நான்கு அறைகளுக்குள் சிவம், சக்தி, விந்து, நாதம் ஆகிய நான்கு தத்துவங்களையும் அமைக்க வேண்டும். இப்படி அறுபத்து நான்கு அறைகள் கொண்ட இந்த சக்கர அமைப்பை மானசீகமாக தமக்குள்ளேயே வரைந்து அதை உணர்ந்து தரிசித்த சாதகர்கள் சிவலிங்க அமைப்பில் இருக்கின்ற சாம்பவி மண்டலச் சக்கரத்தை அறிந்து கொள்ளலாம்.

கருத்து:

சாதகர்கள் மானசீகமாக பாடலில் குறிப்பிட்டு உள்ளபடி அறுபத்து நான்கு அறைகள் கொண்ட சக்கரத்தை அமைத்து அதன் நான்கு மூலைகளிலும் நான்கு சிவலிங்கங்களாக அமைத்து அதற்கு நடுவில் சிவம் சக்தி தத்துவங்களை ஒரே ஒரு சிவலிங்கமாகவும் விந்து தத்துவமாக ஓம் மந்திரத்தை அமைத்து நாத தத்துவமாக அந்த ஓம் மந்திரத்தை அசபையாக சொல்லி தியானித்தால் சாம்பவி மண்டலச் சக்கரத்தை அறிந்து கொள்ளலாம்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.