பாடல் #588

பாடல் #588: மூன்றாம் தந்திரம் – 7. தாரணை (பிரத்தியாகாரம் மூலம் உள்ளே ஒருநிலைப்படுத்திய மனதை நிலைத்திருக்க வைத்தல்)

கோணா மனத்தைக் குறிக்கொண்டு கீழ்க்கட்டி
வீணாத்தண் டூடே வெளியுறத் தானோக்கிக்
காணாக்கண் கேளாச் செவியென் றிருப்பார்க்கு
வாணாள் அடைக்கும் வழியுமது வாமே.

விளக்கம்:

பிரத்தியாகாரம் மூலம் உள்ளே ஒருநிலைப்படுத்திய மனதை மீண்டும் முன்பு இருந்தபடி அலைபாயவிடாமல் வைத்து மனக் கண்ணை முதுகெலும்பின் வழியே செல்லும் சுழுமுனை சென்றுசேரும் இடமாகிய தலை உச்சிக்குச் சிறிது மேலே (தோராயமாக 9 அங்குலம் அளவு) உள்ள வெற்று இடத்தில் வைத்து கண்ணால் காணும் காட்சிகளும் காதால் கேட்கும் ஒலிகளும் மனதை பாதிக்காத வண்ணம் உணர்வில்லாமல் இருந்தால் இந்தப் பிறவியின் ஆயுள் முடியாமல் இருக்கலாம்.

பாடல் #589

பாடல் #589: மூன்றாம் தந்திரம் – 7. தாரணை (பிரத்தியாகாரம் மூலம் உள்ளே ஒருநிலைப்படுத்திய மனதை நிலைத்திருக்க வைத்தல்)

மலையார் சிரத்திடை வானீர் அருவி
நிலையாரப் பாயும் நெடுநாடி யூடுபோய்ச்
சிலையார் பொதுவில் திருநட மாடுந்
தொலையாத ஆனந்தச் சோதிகண் டேனே.

விளக்கம்:

மலை போன்ற தலையின் உச்சியில் வானத்திலிருந்து வரும் மழை போல அமிர்தம் எப்போதும் பொழிந்துகொண்டு இருக்கின்ற சுழுமுனை நாடியின் வழியாக மனதைச் செலுத்தி அம்பலத்தில் ஆடும் சிவபெருமானின் என்றும் தெவிட்டாத பேரின்பம் தரும் ஆனந்தக் கூத்தைக் கண்டேன்.

பாடல் #590

பாடல் #590: மூன்றாம் தந்திரம் – 7. தாரணை (பிரத்தியாகாரம் மூலம் உள்ளே ஒருநிலைப்படுத்திய மனதை நிலைத்திருக்க வைத்தல்)

மேலை நிலத்தினாள் வேதகப் பெண்பிள்ளை
மூல நிலத்தில் எழுகின்ற மூர்த்தியை
ஏல எழுப்பி இவளுடன் சந்திக்கப்
பாலனும் ஆவான் பார்நந்தியின் ஆணையே.

விளக்கம்:

மூலாதாரத்தில் இருக்கும் குண்டலினியாகிய இறைவனை சுழுமுனை வழியே மேல் நோக்கி எடுத்துச் சென்று தலை உச்சியிலிருக்கும் சகஸ்ரதளத்தில் இருக்கும் சக்தியுடன் சேர்த்துவிட்டால் அமுதம் சுரந்து அதன் விளைவாக வயதானவரும் வாலிபனாக மாறி என்றும் இளமையுடன் இருப்பார். இது உலகாளும் நந்தியின் ஆணை.

பாடல் #591

பாடல் #591: மூன்றாம் தந்திரம் – 7. தாரணை (பிரத்தியாகாரம் மூலம் உள்ளே ஒருநிலைப்படுத்திய மனதை நிலைத்திருக்க வைத்தல்)

கடைவாச லைக்கட்டிக் காலை எழுப்பி
இடைவாசல் நோக்கி இனிதுள் இருத்தி
மடைவாயிற் கொக்குப்போல் வந்தித் திருப்பார்க்
குடையாமல் ஊழி இருக்கலு மாமே.

விளக்கம்:

மூலாதாரத்திலிருக்கும் துவாரமாகிய மலத்துவாரத்தை இறுக்கி வைத்து உள்ளே இழுத்த மூச்சுக்காற்றை முதுகெலும்பின் வழியே செல்லும் சுழுமுனை வழியே செலுத்தி தொப்புளுக்குக் கீழே இருக்கும் மூன்று சக்கரங்களின் நடுவில் மனதை வைத்து இறையருளால் கிடைக்கும் ஒளியை அடையும் வரை இறைவனை வணங்கி இருப்பவர்களுக்கு உலகம் அழியும் காலம் வரை உடல் அழிவின்றி இருக்க முடியும்.

பாடல் # 592

பாடல் #592: மூன்றாம் தந்திரம் – 7. தாரணை (பிரத்தியாகாரம் மூலம் உள்ளே ஒருநிலைப்படுத்திய மனதை நிலைத்திருக்க வைத்தல்)

கலந்த உயிருடன் காலம் அறியில்
கலந்த உயிரது காலின் நெருக்கங்
கலந்த உயிரது காலது கட்டிற்
கலந்த உயிருடன் காலமும் நிற்குமே.

விளக்கம்:

உயிருடன் கலந்த உடலினுள்ளே செல்லும் மூச்சுக்காற்றைத் தெரிந்துகொண்டு அந்த மூச்சுக்காற்றுடன் உயிருக்கும் உடலுடக்கும் நெருக்கத்தை ஏற்படுத்தி அந்த மூச்சுக்காற்றை வெளியே சென்றுவிடாமல் அடக்கி வைத்திருந்தால் அந்த மூச்சுக்காற்று உயிருடன் கலந்த உடலோடு எப்போதும் கலந்து இருக்கும்.

பாடல் #593

பாடல் #593: மூன்றாம் தந்திரம் – 7. தாரணை (பிரத்தியாகாரம் மூலம் உள்ளே ஒருநிலைப்படுத்திய மனதை நிலைத்திருக்க வைத்தல்)

வாய்திற வாதார் மனத்திலோர் மாடுண்டு
வாய்திறப் பாரே வளியிட்டுப் பாய்ச்சுவர்
வாய்திற வாதார் மதியிட்டு மூட்டுவர்
கோய்திற வாவிடிற் கோழையு மாமே.

விளக்கம்:

பேசாமல் மெளன நிலையில் இருப்பவர்களின் மனதில் பிராணன் என்னும் பெரும் செல்வம் உள்ளது. அவ்வாறு மெளன நிலையில் இல்லாமல் பேசிக்கொண்டே இருப்பவர்கள் அந்தப் பிராணனாகிய செல்வத்தை வீணாக்குகின்றார்கள். பேசாமல் மெளன நிலையில் இருப்பவர்கள் தங்கள் அறிவை அந்தப் பிராணனாகிய செல்வத்தின் மீது செலுத்தி அதை சுழுமுனை வழியாகத் தலை உச்சியிலிருக்கும் சகஸ்ரதளத்திற்கு கொண்டு சென்று அந்தச் செல்வத்தை அடைவார்கள். அவ்வாறு பிராணனாகிய செல்வத்தை சுழுமுனை வழியாக மேலே உள்ள சகஸ்ரதளத்திற்குக் கொண்டு செல்லும் பயிற்சியை செய்யாமல், பெரும் செல்வத்தை மட்டும் அடைய நினைப்பவர்கள் கோழையாவார்கள்.

பாடல் #594

பாடல் #594: மூன்றாம் தந்திரம் – 7. தாரணை (பிரத்தியாகாரம் மூலம் உள்ளே ஒருநிலைப்படுத்திய மனதை நிலைத்திருக்க வைத்தல்)

வாழலு மாம்பல காலும் மனத்திடைப்
போழ்கின்ற வாயு புறம்படாப் பாய்ச்சுறில்
ஏழுசா லேகம் இரண்டு பெருவாய்தல்
பாழி பெரியதோர் பள்ளி அறையிலே.

விளக்கம்:

உள்ளிழுத்த மூச்சுக்காற்றை வெளியே விட்டுவிடாமல் மனதை ஒருமுகப்படுத்தி சுழுமுனை வழியாக அந்த மூச்சுக்காற்றை மேலே ஏற்றி தலை உச்சியிலுள்ள சகஸ்ரதளத்திற்குக் கொண்டு சென்றுவிட்டால் ஒன்பது துவாரங்களைக் கொண்ட இந்த உடம்பில் நீண்ட காலம் அழியாமல் பேரானந்த நிலையில் இருக்கலாம்.

பாடல் #595

பாடல் #595: மூன்றாம் தந்திரம் – 7. தாரணை (பிரத்தியாகாரம் மூலம் உள்ளே ஒருநிலைப்படுத்திய மனதை நிலைத்திருக்க வைத்தல்)

நிரம்பிய ஈரைந்தில் ஐந்திவை போனால்
இரங்கி விழித்திருந் தென்செய்வை பேதாய்
வரம்பினைக் கோலி வழிசெய்கு வார்க்குக்
குரங்கினைக் கோட்டை பொதியலு மாமே.

விளக்கம்:

உடம்பில் உள்ள பத்துவித வாயுக்களில் முக்கியமான ஐந்து வாயுக்களை பிராணாயாம முறைப்படி கட்டுப்படுத்தி வெளியே விடாமல் வீணாக வெளியேற்றுபவர்கள் இந்த உலகில் வெறுமனே உயிர் வாழ்ந்து எந்தப் பயனையும் அடையமாட்டார்கள். அந்த ஐந்து வாயுக்களையும் வீணாக்காமல் பிராணாயாம முறையில் கூறிய அளவுகளின்படி அடக்கி வெளியே விடுபவர்களுக்கு மனமாகிய குரங்கை ஒருமுகப்படுத்தி உடம்பின் உள்ளேயே நிலைத்திருக்கும்படி வைக்க முடியும்.

உடலிலுள்ள பத்துவித வாயுக்கள்:

  1. பிராணன் – உயிர்க்காற்று
  2. அபாணன் – மலக் காற்று
  3. வியானன் – தொழிற்காற்று
  4. உதானன் – ஒலிக்காற்று
  5. சமானன் – நிரவுக்காற்று
  6. நாகன் – விழிக்காற்று
  7. கூர்மன் – இமைக்காற்று
  8. கிருகரன் – தும்மற் காற்று
  9. தேவதத்தன் – கொட்டாவிக் காற்று
  10. தனஞ்செயன் – வீங்கல் காற்று

முறைப்படி கட்டுப்படுத்தி வெளியே விடவேண்டிய ஐந்து வாயுக்கள்:

  1. பிராணன் – உயிர்க்காற்று
    நுரையீரலில் இருந்து மேல் நோக்கிச் செல்வது. பசியையும், தாகத்தையும் ஏற்படுத்துவது. உணவை செரிமானம் செய்வது.
  2. அபாணன் – மலக் காற்று
    உடற்கழிவுகளான மலம், ஜலம், சுக்கிலம் (விந்து), சுரோணிதம் (கரு முட்டை) ஆகியவற்றை வெளியேற்ற உதவுவது.
  3. வியானன் – தொழிற்காற்று
    உடல் முழுவதும் பரவி தொடு உணர்ச்சியை உணர வைப்பது ஜீரணமான உணவை சத்து வேறாகவும் சக்கை வேறாகவும் பிரிக்கும் பணியைச் செய்வது.
  4. உதானன் – ஒலிக்காற்று
    தொண்டையில் இருந்து கொண்டு உணவை விழுங்கச்செய்வது, ஏப்பம் வரச்செய்வது, குறட்டை வரச்செய்வது, உறங்கும் போது ஐம்புலன்களுக்கும் ஓய்வு கொடுப்பதும் விழித்த பின்பு ஐம்புலன்களின் இயல்பிற்கேற்ப மறுபடியும் இயங்கச் செய்வது.
  5. சமானன் – நிரவுக்காற்று
    தொப்புள் பகுதியில் இருந்து கொண்டு உணவின் சத்தையெல்லாம் எல்லா உறுப்புகளுக்கும் அதனதன் தேவைக்கேற்ப பகிர்ந்து அளிப்பது.

பாடல் #596

பாடல் #596: மூன்றாம் தந்திரம் – 7. தாரணை (பிரத்தியாகாரம் மூலம் உள்ளே ஒருநிலைப்படுத்திய மனதை நிலைத்திருக்க வைத்தல்)

முன்னமே வந்தனர் எல்லாம் முடிந்தனர்
பின்னையும் வந்தவர்க் கென்ன பிரமாணம்
முன்னூறு கோடி உறுகதி பேசிடில்
என்ன மாயம் இடிகரையும் நிற்குமே.

விளக்கம்:

நமக்கு முன்பு வந்தவர்களெல்லாம் மனதை ஒருமுகப்படுத்தி நிலைத்து வைக்காமல் இறந்து போய்விட்டார்கள். பின்பு பிறந்த நாமும் அவ்வாறே மனதை ஒருமுகப்படுத்தாமல் அழிந்து விடுவோம் என்பது நிச்சயம் இல்லை. முன்பு வந்த முன்னூறு கோடி மனிதர்களும் அடைந்த கதியைப் பற்றிப் பேசி ஒரு பயனும் இல்லை. மனதை ஒருமுகப்படுத்தி நிலைத்து வைத்தால் அழியக்கூடியதாக இருக்கும் இந்த உடல் அழியாததாக மாற்ற முடியும்.

பாடல் #597

பாடல் #597: மூன்றாம் தந்திரம் – 7. தாரணை (பிரத்தியாகாரம் மூலம் உள்ளே ஒருநிலைப்படுத்திய மனதை நிலைத்திருக்க வைத்தல்)

அரித்த வுடலைஐம் பூதத்தில் வைத்து
பொருத்தஐம் பூதஞ்சத் தாதியிற் போந்து
தெரித்த மனாதிசத் தாதியிற் செல்லத்
தரித்தது தாரணை தற்பரத் தோடே.

விளக்கம்:

ஆற்று வெள்ளம் கரையினை அரித்துப் பாழாக்குவது போல ஐம்பூதங்களான மெய் (உணர்வது) கண் (பார்ப்பது) காது (கேட்பது) மூக்கு (நுகர்வது) வாய் (சுவைப்பது) ஆகிய ஐம்புலன்கள் உடம்பினை அரித்துப் பாழாக்குகின்றது. ஐம்புலன்களும் உடலுக்குள் அடங்கும் முறையை உணர்ந்தால் உலகம் அழியக்கூடியது சிவமே அழியாதது என்ற உண்மையை உணரலாம். அவ்வாறு உணர்ந்து விட்டால் உலகப்பற்று அறுந்துவிடும். உடலைக் கட்டுப்படுத்தும் ஐம்பூதங்களையும் மனதால் கட்டுப்படுத்த வேண்டும். வெளியே உள்ள ஐம்பூதங்களின் (உணர்ச்சி, காட்சி, சத்தம், வாசனை, சுவை) உணர்வுகளை உள்ளுக்குள் உணர வேண்டும். மனதை மூலாதாரத்தில் ஒருநிலைப்படுத்த வேண்டும். உடலில் இருக்கும் ஆத்மாவை இறைவனோடு சேர்த்தல் வேண்டும். இவை அனைத்தும் செய்வதே தாரணை எனப்படும்.