“ருத்ராட்சம்” எனும் தலைப்பில் “ஆன்மிகத் திண்ணை” எனும் குழுவில் Zoom நேரலையில் 30-03-2023 அன்று நிகழ்த்திய கலந்துரையாடல்.
திருவாசகத்தில் கருவியல்
“திருவாசகத்தில் கருவியல்” எனும் தலைப்பில் “ஆன்மிகத் திண்ணை” எனும் குழுவில் Zoom நேரலையில் 13-07-2025 அன்று நிகழ்த்திய கலந்துரையாடல்.
திருவாசகம் – கருத்துக்கள்
“திருவாசகம் – கருத்துக்கள்” எனும் தலைப்பில் “ஆன்மிகத் திண்ணை” எனும் குழுவில் Zoom நேரலையில் 07-07-2024 அன்று நிகழ்த்திய கலந்துரையாடல்.
நேர்த்திக் கடன்
“நேர்த்திக் கடன்” எனும் தலைப்பில் “ஆன்மிகத் திண்ணை” எனும் குழுவில் Zoom நேரலையில் 23-08-2025 அன்று நிகழ்த்திய கலந்துரையாடல்.
அட்டாங்க யோகம் சாதக முறைகள் பற்றிய சில கருத்துக்கள்
“அட்டாங்க யோகம் சாதக முறைகள் பற்றிய சில கருத்துக்கள்” எனும் தலைப்பில் “ஆன்மிகத் திண்ணை” எனும் குழுவில் Zoom நேரலையில் 18-05-2024 அன்று நிகழ்த்திய கலந்துரையாடல்.
திருமூலர் வர்க்க வேடம்
“திருமூலர் வர்க்க வேடம்” எனும் தலைப்பில் “ஆன்மிகத் திண்ணை” எனும் குழுவில் Zoom நேரலையில் 27-09-2025 அன்று நிகழ்த்திய கலந்துரையாடல்.
அகத்தியர்
“அகத்தியர் – சிந்தனைகள்” எனும் தலைப்பில் “ஆன்மிகத் திண்ணை” எனும் குழுவில் Zoom நேரலையில் 11-05-2024 அன்று நிகழ்த்திய கலந்துரையாடல்.
திருமந்திரம் நற்சிந்தனைகள்
“திருமந்திரம் நற்சிந்தனை” எனும் தலைப்பில் “ஆன்மிகத் திண்ணை” குழுவில் Zoom நேரலையில் 26-07-2025 அன்று நிகழ்த்திய கலந்துரையாடல்
பாடல் #1842
பாடல் #1842: ஏழாம் தந்திரம் – 11. சிவ பூசை (அகத்திலும் புறத்திலும் சிவத்தை அறிந்து பூஜை செய்தல்)
ஆவிக் கமலத்தினைப் புனத் தின்புற
மேவித் திரியும் விரிசடை நந்தியைக்
கூவிக் கருதிக் கொடுபோய்ச் சிவத்திடை
தாவிக்கு மந்திரந் தாமறி யாரே.
திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:
ஆவிக கமலததினைப புனத தினபுற
மெவித திரியும விரிசடை நநதியைக
கூவிக கருதிக கொடுபொயச சிவததிடை
தாவிககு மநதிரந தாமறி யாரெ.
சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:
ஆவி கமலத்தினை புனத்து இன்பு உற
மேவி திரியும் விரி சடை நந்தியை
கூவி கருதி கொடு போய் சிவத்து இடை
தாவிக்கும் மந்திரம் தாம் அறியாரே.
பதப்பொருள்:
ஆவி (உயிர்களின் உயிர்ப்பு ஆற்றலாகிய) கமலத்தினை (சகஸ்ரதளத்தின் உச்சியில் இருக்கும் ஆயிரம் இதழ் கொண்ட தாமரை மலரினை) புனத்து (சென்று சேரும்படி மூச்சுக்காற்றை கொண்டு சென்று அடைந்து) இன்பு (பேரின்பம்) உற (உருவாகுவதற்கு)
மேவி (அந்த தாமரை மலரின் மேல் பிரகாசமாக திகழும் ஜோதியாக வீற்றிருந்து) திரியும் (அதிலிருந்து அனைத்திற்கும் பரவுகின்ற ஒளிக் கதிர்களைப் போன்ற) விரி (விரிந்த) சடை (சடையைக் கொண்ட) நந்தியை (குரு நாதனாகிய இறைவனை)
கூவி (தாம் செய்கின்ற பூஜையின் மூலம் போற்றிப் புகழ்ந்து அழைத்தும்) கருதி (இறைவன் மேல் எண்ணங்களை வைத்து) கொடு (அந்த எண்ணங்களை கொண்டு) போய் (போய்) சிவத்து (சகஸ்ரதளத்தில் ஜோதியாக வீற்றிருக்கும் இறைவனின்) இடை (இடத்தில்)
தாவிக்கும் (நிலை பெற்று இருக்கும் படி சேர்க்கின்ற) மந்திரம் (மந்திரம் எதுவென்று) தாம் (தாங்கள்) அறியாரே (அறியாமல் இருக்கின்றார்கள்).
விளக்கம்:
உயிர்களின் உயிர்ப்பு ஆற்றலாகிய சகஸ்ரதளத்தின் உச்சியில் இருக்கும் ஆயிரம் இதழ் கொண்ட தாமரை மலரினை சென்று சேரும்படி மூச்சுக்காற்றை கொண்டு சென்று அடைந்து, அதன் பயனால் அமிழ்தம் சுரந்து பேரின்பம் உருவாகும் பலனை அனைத்து உயிர்களும் அடைய வேண்டும் என்ற கருணையினால் அந்த தாமரை மலரின் மேல் பிரகாசமாக திகழும் ஜோதியாக வீற்றிருந்து அதிலிருந்து அனைத்திற்கும் பரவுகின்ற ஒளிக் கதிர்களைப் போன்ற விரிந்த சடையைக் கொண்ட குரு நாதனாகிய இறைவன் அமர்ந்து இருக்கின்றான். அந்த இறைவனை தாம் செய்கின்ற பூஜையின் மூலம் போற்றிப் புகழ்ந்து அழைத்தும், இறைவன் மேல் எண்ணங்களை வைத்தும், அந்த எண்ணங்களை கொண்டு போய் சகஸ்ரதளத்தில் ஜோதியாக வீற்றிருக்கும் இறைவனுடன் நிலை பெற்று இருக்கும் படி சேர்க்கின்ற மனதின் திறமைக்கு திறவு கோலாக இருப்பது எதுவென்று தாங்கள் அறியாமல் இருக்கின்றார்கள்.

பாடல் #1841
பாடல் #1841: ஏழாம் தந்திரம் – 11. சிவ பூசை (அகத்திலும் புறத்திலும் சிவத்தை அறிந்து பூஜை செய்தல்)
சாத்தியும் வைத்துஞ் சயம்புவென் றேத்தியு
மாத்தியை நாளு மிறையை யறிகிலா
ராத்தி மலாகிட்டதற் கழுக்கற்றக் கால்
மாத்திக்கே செல்லும் வழியது வாமே.
திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:
சாததியும வைததுஞ சயமபுவென றெததியு
மாததியை நாளு மிறையை யறிகிலா
ராததி மலாகிடடதற கழுககறறக கால
மாததிககெ செலலும வழியது வாமெ.
சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:
சாத்தியும் வைத்தும் சயம்பு என்று ஏத்தியும்
ஆத்தியை நாளும் இறையை அறிகிலார்
ஆத்தி மல் ஆக்கு இட்டு அதற்கு அழுக்கு அற்ற கால்
மா திக்கே செல்லும் வழி அது ஆமே.
பதப்பொருள்:
சாத்தியும் (நறுமணமிக்க மலர்களை அணிவித்தும்) வைத்தும் (அறுசுவை உணவு படைத்தும்) சயம்பு (தானாகவே தோன்றிய மூர்த்தி) என்று (என்று) ஏத்தியும் (போற்றி வணங்கியும்)
ஆத்தியை (அடைவதற்கு மிகப் பெரும் செல்வமாகியவனை) நாளும் (தினம் தோறும் பூஜை செய்தும்) இறையை (இறைவனை) அறிகிலார் (யாரும் அறிந்து கொள்வது இல்லை)
ஆத்தி (உலக பற்றுக்களில் உள்ள ஆசையுடன்) மல் (மன உறுதியோடு போர் புரிந்து) ஆக்கு (அந்த ஆசைகளை பக்தியாக மாற்றி) இட்டு (இறைவன் மேல் எண்ணங்களை வைத்து) அதற்கு (அந்த எண்ணங்களில்) அழுக்கு (எந்தவிதமான மாசும்) அற்ற (இல்லாமல் போகும்) கால் (காலத்தில்)
மா (சென்று அடைவதற்கு மிகப்பெரிய) திக்கே (திசையாகிய முக்திக்கு) செல்லும் (செல்லுகின்ற) வழி (வழியாக) அது (அதுவே) ஆமே (ஆகி விடும்).
விளக்கம்:
நறுமணமிக்க மலர்களை அணிவித்தும், அறுசுவை உணவு படைத்தும், தானாகவே தோன்றிய மூர்த்தி என்றுபோற்றி வணங்கியும், தினம் தோறும் பூஜை செய்தும் அடைவதற்கு மிகப் பெரும் செல்வமாகிய இறைவனை யாரும் அறிந்து கொள்வது இல்லை. அதற்கு காரணம் உலகப் பற்றுக்களில் சிக்கி இறைவன் மேல் முழு பக்தி இல்லாமல் போவதே ஆகும். ஆகவே, உலக பற்றுக்களில் உள்ள ஆசைகளோடு மன உறுதியுடன் போர் புரிந்து அந்த ஆசைகளை பக்தியாக மாற்றி இறைவன் மேல் போகும் படி எண்ணங்களை வைத்து வந்தால் ஓரு காலத்தில் அந்த எண்ணங்களில் எந்தவிதமான மாசும் இல்லாமல் போகும். அப்போது சென்று அடைவதற்கு மிகப்பெரிய திசையாகிய முக்திக்கு செல்லுகின்ற வழியாக அதுவே ஆகி விடும்.
