பாடல் #1789

பாடல் #1789: ஏழாம் தந்திரம் – 8. சம்பிரதாயம் (இறையருளால் உணர்த்தப் பட்ட தர்மத்தை முறையாக கடைபிடிப்பது)

அவனு மவனு மவனை யறியா
ரவனை யறியி லறிவாரு மில்லை
யவனு மவனு மவனை யறியி
லவனு மவனு மவனிவ னாமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

அவனு மவனு மவனை யறியா
ரவனை யறியி லறிவாரு மிலலை
யவனு மவனு மவனை யறியி
லவனு மவனு மவனிவ னாமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

அவனும் அவனும் அவனை அறியார்
அவனை அறியில் அறிவாரும் இல்லை
அவனும் அவனும் அவனை அறியில்
அவனும் அவனும் அவன் இவன் ஆமே.

பதப்பொருள்:

அவனும் (இறைவனும்) அவனும் (அந்த இறைவனை தமக்குள் வைத்திருக்கின்ற உயிரும்) அவனை (உண்மையான பரம்பொருளை) அறியார் (அறிந்து கொள்வதில்லை)
அவனை (இறைவனை) அறியில் (மனித அறிவினால் அறிந்து கொண்டவர்களும்) அறிவாரும் (அவனை முழுவதுமாக அறிந்து கொள்வது) இல்லை (இல்லை)
அவனும் (இறைவன் உள்ளுக்குள் இருந்து உணர்த்தி அருளிய) அவனும் (தர்மத்தை முறையாக கடைபிடிப்பதன் மூலம் உயிராக இருப்பவன்) அவனை (இறைவனாக தனக்குள் இருப்பவனை) அறியில் (முழுவதுமாக அறிந்து உணர்ந்து கொண்ட பிறகு)
அவனும் (இறைவனும்) அவனும் (உயிராக இருப்பவனும்) அவன் (இறைவனே) இவன் (தான் என்பதை உணர்ந்து தானே இறைவனாக) ஆமே (வீற்றிருப்பான்).

விளக்கம்:

இறைவனும் அந்த இறைவனை தமக்குள் வைத்திருக்கின்ற உயிரும் உண்மையான பரம்பொருளை அறிந்து கொள்வதில்லை. இறைவனை மனித அறிவினால் அறிந்து கொண்டவர்களும் அவனை முழுவதுமாக அறிந்து கொள்வது இல்லை. இறைவன் உள்ளுக்குள் இருந்து உணர்த்தி அருளிய தர்மத்தை முறையாக கடைபிடிப்பதன் மூலம் உயிராக இருப்பவன் இறைவனாக தனக்குள் இருப்பவனை முழுவதுமாக அறிந்து உணர்ந்து கொண்ட பிறகு இறைவனும் உயிராக இருப்பவனும் இறைவனே தான் என்பதை உணர்ந்து தானே இறைவனாக வீற்றிருப்பான்.

பாடல் #1790

பாடல் #1790: ஏழாம் தந்திரம் – 8. சம்பிரதாயம் (இறையருளால் உணர்த்தப் பட்ட தர்மத்தை முறையாக கடைபிடிப்பது)

நானிது தானென நின்றில னாடோறு
மூனிது தானுயிர் போலுணர் வானுளன்
வானிரு மாமுகிற் போற்பொழி வானுள
னானிது வம்பர நாதனு மாமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

நானிது தானென நினறில னாடொறு
மூனிது தானுயிர பொலுணர வானுளன
வானிரு மாமுகிற பொறபொழி வானுள
னானிது வமபர நாதனு மாமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

நான் இது தான் என நின்று இலன் நாள் தோறும்
ஊன் இது தான் உயிர் போல் உணர்வான் உளன்
வான் இரு மா முகில் போல் பொழிவான் உளன்
நான் இது அம்பர நாதனும் ஆமே.

பதப்பொருள்:

நான் (நான்) இது (இறைவன்) தான் (தான்) என (என்று எண்ணுகின்ற எண்ணத்திலேயே) நின்று (நின்று) இலன் (இருக்காமல்) நாள் (தினந்) தோறும் (தோறும்)
ஊன் (தனது உடலாக) இது (இருப்பதே இறைவன்) தான் (தான் என்று எண்ணுகின்றான். அவன் இறைவன் அருளால் தனக்குள் உணர்த்தப் பட்ட இறை தர்மத்தை முறைப்படி கடைபிடிக்கும் போது) உயிர் (தனது உயிர்) போல் (போல் இருக்கின்றவன் இறைவனே) உணர்வான் (என்பதை உணர்ந்து) உளன் (கொள்கின்றான்)
வான் (அப்போது வானத்தில்) இரு (இருக்கின்ற) மா (மாபெரும்) முகில் (மேகக் கூட்டம்) போல் (மழையாகப் பொழிவதைப் போல) பொழிவான் (தமது பேரருளை மழையாகப் பொழிபவன்) உளன் (தனக்குள்ளே இருக்கின்றான் என்பதை உணர்ந்து கொள்கின்றான்)
நான் (அதன் பிறகு தாமாக இருக்கின்ற) இது (இறைவனே) அம்பர (ஆகாயத்தில்) நாதனும் (அனைத்திற்கும் தலைவனாகவும்) ஆமே (இருக்கின்றான் என்கின்ற நிலையை அடைந்து விடுகின்றான்).

விளக்கம்:

பாடல் #1789 இல் உள்ளபடி நான் இறைவன் என்று எண்ணுகின்ற எண்ணத்திலேயே இருக்காமல் தினந் தோறும் தனது உடலாக இருப்பதே இறைவன் தான் என்று எண்ணுகின்றான். அவன் இறைவன் அருளால் தனக்குள் உணர்த்தப் பட்ட இறை தர்மத்தை முறைப்படி கடைபிடிக்கும் போது, தனது உயிர் போல் இருக்கின்றவன் இறைவனே என்பதை உணர்ந்து கொள்கின்றான். அப்போது வானத்தில் இருக்கின்ற மாபெரும் மேகக் கூட்டம் மழையாகப் பொழிவதைப் போல தமது பேரருளை மழையாகப் பொழிபவன் தனக்குள்ளே இருக்கின்றான் என்பதை உணர்ந்து கொள்கின்றான். அதன் பிறகு தாமாக இருக்கின்ற இறைவனே ஆகாயத்தில் அனைத்திற்கும் தலைவனாகவும் இருக்கின்றான் என்கின்ற நிலையை அடைந்து விடுகின்றான்.

பாடல் #1791

பாடல் #1791: ஏழாம் தந்திரம் – 8. சம்பிரதாயம் (இறையருளால் உணர்த்தப் பட்ட தர்மத்தை முறையாக கடைபிடிப்பது)

பெருந்தண்மை தானென யானென வேறா
யிருந்தது மில்லை யதீச னறியும்
பொருந்து முடலுயிர் போலுண்மை மெய்யே
திருந்துமுன் செய்கின்ற தேவர் பிரானே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

பெருநதணமை தானென யானென வெறா
யிருநதது மிலலை யதீச னறியும
பொருநது முடலுயிர பொலுணமை மெயயெ
திருநதுமுன செயகினற தெவர பிரானெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

பெரும் தண்மை தான் என யான் என வேறு ஆய்
இருந்ததும் இல்லை அது ஈசன் அறியும்
பொருந்தும் உடல் உயிர் போல் உண்மை மெய்யே
திருந்தும் முன் செய்கின்ற தேவர் பிரானே.

பதப்பொருள்:

பெரும் (மிகப் பெரிய) தண்மை (சாந்த நிலையில்) தான் (இறைவன்) என (என்றும்) யான் (அடியவர்) என (என்றும்) வேறு (வேறு வேறு) ஆய் (ஆக பிரிந்து)
இருந்ததும் (இருக்கின்ற நிலை) இல்லை (இல்லாமல் எப்போதும் ஒன்றாகவே சேர்ந்து இருக்கின்ற) அது (அந்த நிலையை) ஈசன் (இறைவனே) அறியும் (அறிவான்)
பொருந்தும் (ஒன்றாக பொருந்தி இருக்கின்ற) உடல் (உடலும்) உயிர் (உயிரும்) போல் (போலவே) உண்மை (பேருண்மையாகிய தர்மத்தை) மெய்யே (எப்போதும் பொருந்தி இருக்கின்ற உடலாகவே)
திருந்தும் (அடியவரின் உடல் அழிந்து போவதற்கு) முன் (முன்) செய்கின்ற (மாற்றி அருளுவதை செய்கின்றவன்) தேவர் (தேவர்களுக்கெல்லாம்) பிரானே (தலைவனாகிய இறைவனே ஆகும்).

விளக்கம்:

மிகப் பெரிய சாந்த நிலையில் இறைவன் என்றும் அடியவர் என்றும் வேறு வேறாக பிரிந்து இருக்கின்ற நிலை இல்லாமல் எப்போதும் ஒன்றாகவே சேர்ந்து இருக்கின்ற அந்த நிலையை இறைவனே அறிவான். அடியவரின் உடல் அழிந்து போவதற்கு முன் உடலும் உயிரும் ஒன்றாக பொருந்தி இருப்பதை போலவே பேருண்மையாகிய தர்மத்தை எப்போதும் பொருந்தி இருக்கின்ற உடலாகவே இறையருளால் உணர்த்தப் பட்ட தர்மத்தை முறைப்படி கடைபிடிக்கின்ற அடியவரின் உடலை மாற்றி அருளுகின்றான் தேவர்களுக்கெல்லாம் தலைவனாகிய இறைவன்.

பாடல் #1773

பாடல் #1773: ஏழாம் தந்திரம் – 7. சிவ லிங்கம் (பேரருளாக இருக்கின்ற பரம்பொருளின் வடிவம்)

குரைக்கின்ற வாறிற் குவலைய நீரும்
பரக்கின்ற காற்றும் பயில்கின்ற தீயும்
நிரைக்கின்ற வாறிவை நீண்டகன் றானை
வரைத்து வலம்செய்யு மாறறி யேனே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

குரைககினற வாறிற குவலைய நீரும
பரககினற காறறும பயிலகினற தீயும
நிரைககினற வாறிவை நீணடகன றானை
வரைதது வலஞசெயயு மாறறி யெனெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

குரைக்கின்ற ஆறில் குவலைய நீரும்
பரக்கின்ற காற்றும் பயில்கின்ற தீயும்
நிரைக்கின்ற ஆறு இவை நீண்டு அகன்ற ஆனை
வரைத்து வலம் செய்யும் ஆறு அறியேனே.

பதப்பொருள்:

குரைக்கின்ற (சத்தம் இருக்கின்ற ஆகாயத்தின்) ஆறில் (வழியில்) குவலைய (உலகமும் [நிலம்]) நீரும் (உலகத்தில் இருக்கின்ற நீரும்)
பரக்கின்ற (அலைந்து திரிகின்ற) காற்றும் (காற்றும்) பயில்கின்ற (பொருளின் தன்மைக்கு ஏற்ப பழகுகின்ற) தீயும் (நெருப்பும்)
நிரைக்கின்ற (கூட்டமாக இருக்கின்ற) ஆறு (வழியில்) இவை (இந்த ஐந்து பூதங்களாகிய) நீண்டு (அனைத்திலும் நீண்டு விரிந்தும்) அகன்ற (இவை அனைத்தையும் தாண்டியும்) ஆனை (இருக்கின்ற பரம் பொருளாகிய இறைவனை)
வரைத்து (ஒரு எல்லைக்குள் வரையறுத்து) வலம் (அவனை வணங்குவதை) செய்யும் (செய்கின்ற) ஆறு (வழியை) அறியேனே (யாம் அறியாமல் இருக்கின்றோம்).

விளக்கம்:

சத்தம் இருக்கின்ற ஆகாயத்தின் வழியில் உலகமும் [நிலம்], உலகத்தில் இருக்கின்ற நீரும், அலைந்து திரிகின்ற காற்றும், பொருளின் தன்மைக்கு ஏற்ப பழகுகின்ற நெருப்பும், இப்படி ஐந்து பூதங்களின் கூட்டமாக இருக்கின்ற வழியில் அனைத்திலும் நீண்டு விரிந்தும், இவை அனைத்தையும் தாண்டியும் இருக்கின்ற பரம் பொருளாகிய இறைவனை ஒரு எல்லைக்குள் வரையறுத்து அவனை வணங்குவதற்கான வழியை யாம் அறியாமல் இருக்கின்றோம்.

பாடல் #1774

பாடல் #1774: ஏழாம் தந்திரம் – 7. சிவ லிங்கம் (பேரருளாக இருக்கின்ற பரம்பொருளின் வடிவம்)

வரைத்து வலஞ்செய்யு மாறுமிங் கொன்றுண்டு
நிரைத்து வருங்கங்கை நீர்மல ரேந்தி
யுரைத்த வனாம முணர வல்லார்க்குப்
புரைத் தெங்கும்போகான் புரிசடை யோனே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

வரைதது வலஞசெயயு மாறுமிங கொனறுணடு
நிரைதது வருஙகஙகை நீரமல ரெநதி
யுரைதத வனாம முணர வலலாரககுப
புரைத தெஙகுமபொகான புரிசடை யொனெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

வரைத்து வலம் செய்யும் ஆறு இங்கு ஒன்று உண்டு
நிரைத்து வரும் கங்கை நீர் மலர் ஏந்தி
உரைத்த அவன் நாமம் உணர வல்லார்க்கு
புரைத்து எங்கும் போகான் புரி சடையோனே.

பதப்பொருள்:

வரைத்து (அளவில்லாத இறைவனை ஒரு எல்லைக்குள் வரையறுத்து) வலம் (வழிபாடு) செய்யும் (செய்கின்ற) ஆறு (முறை) இங்கு (தாம் இருக்கின்ற இடத்திலேயே) ஒன்று (ஒன்று) உண்டு (இருக்கின்றது)
நிரைத்து (எப்போதும் எப்போதும் அசைந்து ஓடி) வரும் (வருகின்ற) கங்கை (கங்கையாக பாவித்த) நீர் (தூய்மையான நீரையும்) மலர் (வாசனை மிக்க தூய்மையான மலரையும்) ஏந்தி (கைகளில் ஏந்திக் கொண்டு)
உரைத்த (மனதிற்குள் ஜெபிக்கின்ற) அவன் (இறைவனின்) நாமம் (திருநாமத்தின் மூலம்) உணர (இறைவனை தமக்குள்ளேயே உணர) வல்லார்க்கு (முடிந்தவர்களுக்கு)
புரைத்து (பொய்யாக) எங்கும் (எங்கும்) போகான் (போகாமல் மாறாத சத்தியமாக எப்போதும் உடன் இருப்பான்) புரி (கயிறு போல் திரிந்த) சடையோனே (சடை முடியை தலையில் அணிந்து கொண்டு இருக்கின்ற அருள் வடிவான இறைவன்).

விளக்கம்:

பாடல் #1773 இல் உள்ளபடி பஞ்ச பூதங்களால் ஆகிய அனைத்துமாகவும் அவை அனைத்தையும் தாண்டியும் அளவில்லாமல் இருக்கின்ற இறைவனை ஒரு எல்லைக்குள் வரையறுத்து தாம் இருக்கின்ற இடத்திலேயே வழிபாடு செய்கின்ற முறை ஒன்று இருக்கின்றது. எப்போதும் அசைந்து ஓடி வருகின்ற கங்கையாக பாவித்த தூய்மையான நீரையும், வாசனை மிக்க தூய்மையான மலரையும் கைகளில் ஏந்திக் கொண்டு, மனதிற்குள் ஜெபிக்கின்ற இறைவனின் திருநாமத்தின் மூலம் இறைவனை தமக்குள்ளேயே உணர முடிந்தவர்களுக்கு, எங்கும் பொய்த்து போகாமல் மாறாத சத்தியமாக எப்போதும் உடன் இருப்பான் கயிறு போல் திரிந்த சடை முடியை தலையில் அணிந்து கொண்டு இருக்கின்ற அருள் வடிவான இறைவன்.

பாடல் #1775

பாடல் #1775: ஏழாம் தந்திரம் – 7. சிவ லிங்கம் (பேரருளாக இருக்கின்ற பரம்பொருளின் வடிவம்)

ஒன்றெனக் கண்டே னெம்மீச னொருவனை
நன்றென் றடியிணை நானவனைத் தொழ
வென்றைம் புலனு மிகக்கிடந் தின்புற
வன்றென் றருள்செய்யு மாதிப் பிரானே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

ஒனறெனக கணடெ னெமமீச னொருவனை
நனறென றடியிணை நானவனைத தொழ
வெனறைம புலனு மிகககிடந தினபுற
வனறென றருளசெயயு மாதிப பிரானெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

ஒன்று என கண்டேன் எம் ஈசன் ஒருவனை
நன்று என்று அடி இணை நான் அவனை தொழ
வென்று ஐம் புலனும் மிக கிடந்து இன்பு உற
அன்று என்று அருள் செய்யும் ஆதி பிரானே.

பதப்பொருள்:

ஒன்று (ஐந்து விதமான பூதங்களால் உருவாகிய அசையும் பொருள் அசையா பொருள் ஆகிய அனைத்தும் ஒன்றே) என (என்று) கண்டேன் (கண்டு தரிசித்து) எம் (எம்) ஈசன் (பரம்பொருளாகிய இறைவன்) ஒருவனை (ஒருவனே அவை அனைத்துமாக இருப்பதை உணர்ந்து கொண்டோம்)
நன்று (ஆகவே அவை அனைத்தும் நன்மையானது) என்று (என்றும்) அடி (இறைவனின் திருவடிகளுக்கு) இணை (சரிசமமானது என்றும்) நான் (யாம் அறிந்து கொண்டு) அவனை (அவனை ஐந்து பூதங்களால் ஆகிய அனைத்திலும் கண்டு) தொழ (வணங்கினோம்)
வென்று (அதன் பயனால் உலக ஆசைகளிலிருந்து வெற்றி பெற்ற) ஐம் (எமது ஐந்து) புலனும் (புலன்களும்) மிக (இறைவனுடனே மிகவும்) கிடந்து (சேர்ந்து கிடந்து) இன்பு (பேரின்பத்தில்) உற (திளைத்திருக்கும் படி)
அன்று (அப்பொழுதில் இருந்து) என்று (என்றும்) அருள் (அருள்) செய்யும் (செய்கின்றான்) ஆதி (ஆதி மூல) பிரானே (தலைவனாகிய இறைவன்).

விளக்கம்:

ஐந்து விதமான பூதங்களால் உருவாகிய அசையும் பொருள் அசையா பொருள் ஆகிய அனைத்தும் ஒன்றே என்று கண்டு தரிசித்து எம் பரம்பொருளாகிய இறைவன் ஒருவனே அவை அனைத்துமாக இருப்பதை உணர்ந்து கொண்டோம். ஆகவே அவை அனைத்தும் நன்மையானது என்றும் இறைவனின் திருவடிகளுக்கு சரிசமமானது என்றும் யாம் அறிந்து கொண்டு, அவனை ஐந்து பூதங்களால் ஆகிய அனைத்திலும் கண்டு வணங்கினோம். அதன் பயனால் உலக ஆசைகளிலிருந்து வெற்றி பெற்ற எமது ஐந்து புலன்களும் இறைவனுடனே மிகவும் சேர்ந்து கிடந்து பேரின்பத்தில் திளைத்திருக்கும் படி அப்பொழுதில் இருந்து என்றும் அருள் செய்கின்றான் ஆதி மூல தலைவனாகிய இறைவன்.

பாடல் #1776

பாடல் #1776: ஏழாம் தந்திரம் – 7. சிவ லிங்கம் (பேரருளாக இருக்கின்ற பரம்பொருளின் வடிவம்)

மலர்ந் தயன்மாலு முருத்திர மகேசன்
பலந்தெழு மைமுகன் பரவிந்து நாதம்
நலந்தரு சத்தி சிவன் வடிவாகிப்
பலந்தரு லிங்கம் பராநந்தி யாமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

மலரந தயனமாலு முருததிர மகெசன
பலநதெழு மைமுகன பரவிநது நாதம
நலநதரு சததி சிவன வடிவாகிப
பலநதரு லிஙகம பராநநதி யாமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

மலர்ந்த அயன் மாலும் உருத்திரன் மகேசன்
பலந்து எழும் ஐம் முகன் பர விந்து நாதம்
நலம் தரும் சத்தி சிவன் வடிவு ஆகி
பலம் தரும் இலிங்கம் பரா நந்தி ஆமே.

பதப்பொருள்:

மலர்ந்த (திருமாலின் தொப்புள் கொடியின் தாமரை மலரிலிருந்து வெளிப்படுகின்ற) அயன் (பிரம்மாவும்) மாலும் (திருமாலும்) உருத்திரன் (உருத்திரனும்) மகேசன் (மகேஸ்வரனும்)
பலந்து (அருளை வழங்குவதற்கு தம்மை பலவிதமாக பிரிந்து) எழும் (எழுகின்ற) ஐம் (ஐந்து) முகன் (முகங்களைக் கொண்ட சதாசிவனும்) பர (பரம்பொருளாகிய) விந்து (வெளிச்சத்திலும்) நாதம் (சத்தத்திலும் இருந்தே வெளிப்படுகின்றனர்)
நலம் (அந்த வெளிச்சமும் சத்தமும் அனைத்து நன்மைகளையும்) தரும் (தருகின்ற) சத்தி (வெளிச்ச வடிவாகிய இறைவி மற்றும்) சிவன் (சத்த வடிவாகிய இறைவனின்) வடிவு (வடிவங்களாக) ஆகி (ஆகி)
பலம் (இந்த ஐந்து தெய்வங்களுக்கும் சக்தியை) தரும் (தருகின்ற) இலிங்கம் (சிவ இலிங்க வடிவமாகவும்) பரா (அனைத்திற்கும் மேலான அசையா சக்தியாகவும்) நந்தி (குருநாதனாகவும் இருந்து அருளுகின்ற) ஆமே (ஆதிப் பரம்பொருளாகவும் இருக்கின்றது).

விளக்கம்:

அனைத்திற்கும் மேலான அசையா சக்தியாகிய சதாசிவமூர்த்தி எனும் பரம்பொருளே சிவ இலிங்க வடிவமாக இருந்து தனது பேரருளால் வெளிச்சத்தின் வடிவமாகிய இறைவி, சத்தத்தின் வடிவமாகிய இறைவன், அவர்களுக்கு கீழே ஐந்து விதமான தொழில்களை புரிகின்ற பிரம்மன், திருமால், உருத்திரன், மகேஸ்வரன், சதாசிவன் ஆகிய ஐந்து தெய்வங்களாகவும் இருந்து அனைவருக்கும் சக்தி கொடுத்து வழி நடத்துகின்ற குருநாதனாகவும் இருக்கின்றான்.

பாடல் #1777

பாடல் #1777: ஏழாம் தந்திரம் – 7. சிவ லிங்கம் (பேரருளாக இருக்கின்ற பரம்பொருளின் வடிவம்)

மேவி யெழுகின்ற செஞ்சுட ரூடுசென்
றாவி யெழுமள வன்றே யுடலுற
மேவப் படுவதும் விட்டு நிகழ்வதும்
பாவித் தடக்கிற் பரகெதி தானே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

மெவி யெழுகினற செஞசுட ரூடுசென
றாவி யெழுமள வனறெ யுடலுற
மெவப படுவதும விடடு நிகழவதும
பாவித தடககிற பரகெதி தானெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

மேவி எழுகின்ற செம் சுடர் ஊடு சென்று
ஆவி எழும் அளவு அன்றே உடல் உற
மேவ படுவதும் விட்டு நிகழ்வதும்
பாவித்து அடக்கில் பர கெதி தானே.

பதப்பொருள்:

மேவி (அசையா சக்திக்குள் கலந்து இருக்கின்ற ஆசைகளாகிய அசையும் சக்தியும் சேர்ந்து) எழுகின்ற (எழுகின்ற) செம் (சிகப்பான) சுடர் (சுடராகிய பேரொளியை) ஊடு (ஊடுருவிச்) சென்று (சென்று)
ஆவி (ஆசைகளை அனுபவிப்பதற்கு ஏற்ற வலிமை பெற்ற ஆன்மாவாக பலவாறாக பிரிந்து) எழும் (எழுந்து) அளவு (அதனதன் ஆசைகளின் அளவுக்கு ஏற்ப) அன்றே (அப்போதே) உடல் (அவற்றுக்கு ஏற்ற உடலை) உற (தமது அருளால் உருவாக்கி கொடுத்து)
மேவ (அதற்குள் பொருந்தி இருந்து) படுவதும் (செயல் படுவதும்) விட்டு (அந்த ஆன்மாக்களை விட்டு அனைத்திற்கும் மேலாக இருந்து) நிகழ்வதும் (தமது பேரருளால் அனைத்தையும் இயக்குவதையும் செய்கின்ற பரம்பொருளாகிய இறைவனின்)
பாவித்து (தன்மைகளை தமக்குள்ளே உணர்ந்து தாமும் அவராகவே பாவனை செய்து) அடக்கில் (தமது ஐந்து புலன்களை அடக்கி எண்ணங்கள் அற்ற நிலையை அடைந்தால்) பர (அனைத்திற்கும் மேலான) கெதி (இறை நிலையை) தானே (தாமும் அடைய முடியும்).

விளக்கம்:

அசையா சக்திக்குள் கலந்து இருக்கின்ற ஆசைகளாகிய அசையும் சக்தியும் சேர்ந்து எழுகின்ற சிகப்பான சுடராகிய பேரொளியை ஊடுருவிச் சென்று, ஆசைகளை அனுபவிப்பதற்கு ஏற்ற வலிமை பெற்ற ஆன்மாவாக பலவாறாக பிரிந்து எழுந்து, அதனதன் ஆசைகளின் அளவுக்கு ஏற்ப அப்போதே அவற்றுக்கு ஏற்ற உடலை தமது அருளால் உருவாக்கி கொடுத்து, அதற்குள் பொருந்தி இருந்து செயல் படுவதும், அந்த ஆன்மாக்களை விட்டு அனைத்திற்கும் மேலாக இருந்து தமது பேரருளால் அனைத்தையும் இயக்குவதையும் செய்கின்ற பரம்பொருளாகிய இறைவனின் தன்மைகளை தமக்குள்ளே உணர்ந்து தாமும் அவராகவே பாவனை செய்து, தமது ஐந்து புலன்களை அடக்கி எண்ணங்கள் அற்ற நிலையை அடைந்தால், அனைத்திற்கும் மேலான இறை நிலையை தாமும் அடைய முடியும்.

கருத்து:

இறைவனோடு எப்போதும் சேர்ந்தே இருந்த ஆன்மாவானது தமது ஆசைகளால் பிறவி எடுப்பதும், அதனதன் ஆசைகளுக்கு ஏற்ற வலிமை பெற்ற உடலும் உயிருமாக பிறப்பதும், வாழ்வில் பல வித செயல்களை புரிந்து ஆசைகளை தீர்த்துக் கொள்வதும், பின்பு இறைவனை தமக்குள் உணர்வதும், அதன் பயனால் ஆசைகளற்ற நிலைக்கு செல்வதும், எண்ணங்கள் அற்ற அந்த நிலையில் தாமே சிவமாக ஆகி விடுவதும், ஆகிய இவை அனைத்தும் சிவ இலிங்க வடிவமாக இருக்கின்ற இறைவனின் பேரருளால் ஆகும்.

    பாடல் #1763

    பாடல் #1763: ஏழாம் தந்திரம் – 6. ஞான லிங்கம் (உருவம், அருவம், அருவுருவம் ஆகிய மூன்றுமாக இருக்கின்ற சதாசிவத்தை ஞான இலிங்கமாக உணர்வது)

    உருவு மருவு மருவோ டுருவு
    மருவும் பரசிவன் மன்பல் லுயிர்க்குக்
    குருவு மெனநிற்குங் கொள்கைய னாகுந்
    தருவென நல்குஞ் சதாசிவன் தானே.

    திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

    உருவு மருவு மருவொ டுருவு
    மருவும பரசிவன மனபல லுயிரககுக
    குருவு மெனநிறகுங கொளகைய னாகுந
    தருவென நலகுஞ சதாசிவன றானெ.

    சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

    உருவும் அருவும் அருவோடு உருவும்
    அருவும் பர சிவன் மன் பல் உயிர்க்கு
    குருவும் என நிற்கும் கொள்கையன் ஆகும்
    தரு என நல்கும் சதா சிவன் தானே.

    பதப்பொருள்:

    உருவும் (உருவமாகவும்) அருவும் (உருவமில்லாத அருவமாகவும்) அருவோடு (அருவத்தோடு நிற்கின்ற) உருவும் (உருவமாகவும் [அருவுருவம் / இலிங்க வடிவம்])
    அருவும் (அருவமாக இருக்கின்ற) பர (பரம்பொருளாகிய) சிவன் (சிவம்) மன் (உலகத்தில் உள்ள) பல் (பல விதமான) உயிர்க்கு (உயிர்களுக்கு)
    குருவும் (உள்ளுக்குள் இருக்கின்ற குருவும்) என (தாமே என்று) நிற்கும் (நிற்கின்ற) கொள்கையன் (தம்மை அடைவதை கொள்கையாக கொண்ட அடியவர்களுக்கு) ஆகும் (கொள்கையாக உடையவனும் ஆகும்)
    தரு (கற்பகத் தரு) என (போல) நல்கும் (அவர்கள் வேண்டிய அனைத்தையும் கொடுத்து அருளுகின்றவனும்) சதா (சதா) சிவன் (சிவப் பரம்பொருள்) தானே (தான்).

    விளக்கம்:

    அருவமாக இருக்கின்ற பரம்பொருளாகிய சிவமே உருவமாகவும், உருவமில்லாத அருவமாகவும், அருவத்தோடு நிற்கின்ற உருவமாகவும் [அருவுருவம் / இலிங்க வடிவம்], உலகத்தில் உள்ள பல விதமான உயிர்களில் தம்மை அடைவதையே கொள்கையாக கொண்ட அடியவர்களுக்கு உள்ளுக்குள் குருவுமாகவும் நின்று கற்பகத் தரு போல அவர்கள் வேண்டிய அனைத்தையும் கொடுத்து அருளுகின்றான். அவனே சதா சிவப் பரம்பொருள் ஆகும்.

    பாடல் #1764

    பாடல் #1764: ஏழாம் தந்திரம் – 6. ஞான லிங்கம் (உருவம், அருவம், அருவுருவம் ஆகிய மூன்றுமாக இருக்கின்ற சதாசிவத்தை ஞான இலிங்கமாக உணர்வது)

    நாலான கீழது ருவநடு நிற்க
    மேலான நான்கு மருவமிகு நாப்ப
    ணூலான வொன்று மருவுரு நண்ணலாற்
    பாலா மிவையாவும் பரசிவன் தானே.

    திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

    நாலான கீழது ருவநடு நிறக
    மெலான நானகு மருவமிகு நாபப
    ணூலான வொனறு மருவுரு நணணலாற
    பாலா மிவையாவும பரசிவன றானெ.

    சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

    நால் ஆன கீழ் அது உருவம் நடு நிற்க
    மேல் ஆன நான்கும் அருவம் மிகு நா பண்
    நூல் ஆன ஒன்று அரு உரு நண்ணல் ஆல்
    பால் ஆம் இவை யாவும் பர சிவன் தானே.

    பதப்பொருள்:

    நால் (பிரம்மா, திருமால், உருத்திரன், மகேஸ்வரன் என்கின்ற நான்கு) ஆன (தெய்வங்கள் ஆக) கீழ் (கீழே) அது (இருக்கின்றது) உருவம் (உருவங்களாகும்) நடு (நடுவில்) நிற்க (அருவுருவமாக சதாசிவம் நிற்க)
    மேல் (மேலே இருக்கின்றது) ஆன (ஆகிய) நான்கும் (சத்தம் [நாதம்], வெளிச்சம் [விந்து], சக்தி, சிவம் ஆகிய நான்கும்) அருவம் (அருவங்களாகும்) மிகு (இவை அனைத்தும் மிகுந்து இருப்பது) நா (நான்கு விதமான) பண் (மந்திரங்களால் பாடப் பெற்ற)
    நூல் (ரிக்கு, யஜூர், சாமம், அதர்வணம் ஆகிய நான்கு நூல்களாகிய வேதங்களின்) ஆன (மூலப் பொருளாகிய) ஒன்று (ஒன்றே) அரு (மேலே இருக்கின்ற நான்கு விதமான அருவங்களாகவும்) உரு (கீழே இருக்கின்ற நான்கு விதமான உருவங்களாகவும்) நண்ணல் (இருந்து அருளுகின்றது) ஆல் (ஆதலால்)
    பால் (அந்த அருவங்களையும் உருவங்களையும் சார்ந்து) ஆம் (இருக்கின்ற) இவை (வடிவங்கள்) யாவும் (அனைத்தும்) பர (பரம்பொருளாகிய) சிவன் (சிவம்) தானே (ஒன்றே ஆகும்).

    விளக்கம்:

    உருவமாக கீழே இருக்கின்ற பிரம்மா, திருமால், உருத்திரன், மகேஸ்வரன் ஆகிய நான்கு தெய்வங்களாகவும், அருவுருவமாக நடுவில் இருக்கின்ற சதாசிவமூர்த்தியாகவும், அருவமாக மேலே இருக்கின்ற சத்தம் [நாதம்], வெளிச்சம் [விந்து], சக்தி, சிவம் ஆகிய நான்கு சக்திகளாகவும், இவை அனைத்தும் மிகுந்து இருக்கின்ற நான்கு விதமான மந்திரங்களால் பாடப் பெற்ற ரிக்கு, யஜூர், சாமம், அதர்வணம் ஆகிய நான்கு நூல்களாகிய வேதங்களின் மூலப் பொருளாகவும் இருந்து அருவங்களாகவும், உருவங்களாகவும், அருவுருவங்களாகவும், இவற்றை சார்ந்து இருக்கின்ற அனைத்துமாகவும் அருளுவது பரம்பொருளாகிய சிவம் ஒன்றே ஆகும்.