பாடல் #213

பாடல் #213: முதல் தந்திரம் – 10. நல்குரவு (வறுமை)

அறுத்தன ஆறினும் ஆனினம் மேவி
அறுத்தனர் ஐவரும் எண்ணிலி துன்பம்
ஒறுத்தன வல்வினை ஒன்றல்ல வாழ்வை
வெறுத்தனன் ஈசனை வேண்டிநின் றானே.

விளக்கம்:

உயிர்கள் கண் – பார்த்தல், காது – கேட்டல், மூக்கு – நுகர்தல், வாய் – சுவைத்தல், மெய் – தொடுதல்/உணர்தல்) ஆகிய ஐந்து இந்திரியங்களின் உதவியால் உயிர்களின் பசி உணவு சாப்பிட்டவுடன் தீர்ந்துவிட்டாலும் அதே இந்திரியங்கள்தான் ஆன்மாவுக்கும் இறைவனுக்கும் உள்ள தொடர்பையும் அறுத்து விடுகிறது. ஆகையால் உயிர் தான் எடுத்த பிறவியில் எண்ணிலடங்காத துன்பங்களைப் பெற்று வருந்துகின்றது. மேலும் ஜென்ம வினை, கர்ம வினை, எண்ண வினை, பந்தம், பாசம், பற்று, செல்வம் என பல காரணங்களாலும் துன்பம் அடைகின்றது. துன்பத்தின் இறுதியில் இனி இப்படிப் பட்ட பிறவியே வேண்டாம் என்று வெறுக்கும் உயிர்கள் பிறவி இல்லாத நிலை வேண்டி ஈசனிடம் நிற்கின்றான்.

கருத்து : செல்வ செழிப்புடன் இருப்பவர்களை விட வறுமை நிலையில் இருக்கின்றவர்கள் விரைவில் இந்த பிறவி வாழ்க்கையை வெறுத்து இறைவனை அடைந்து பிறவி இல்லாத பேரின்பநிலை அடைய எண்ணுகின்றார்கள்.

பாடல் #204

பாடல் #204: முதல் தந்திரம் – 9. மகளிரிழிவு (பெண்களின் மேல் கொண்ட காமத்தால் பெறும் இழிவு)

இலைநல வாயினும் எட்டி பழுத்தால்
குலைநல வாங்கனி கொண்டுண லாகா
முலைநலங் கொண்டு முறுவல்செய் வார்மேல்
விலகுறு நெஞ்சினை வெய்துகொள் ளீரே.

விளக்கம்:

எட்டி மரத்தின் இலைகள் பார்க்க அழகாக இருக்கும் அதன் பழங்கள் பழுத்துவிட்டால் குலை குலையாக அழகாகத் தொங்கும். அதற்காக அழகாகவும் சாப்பிடுவதற்கு சுவையானது போலவும் தோன்றும் எட்டிப் பழத்தைப் பறித்துச் சாப்பிட்டுவிட்டால் உடனே அதன் விஷம் உயிரைக் கொல்லும். அதுபோலவே அழகான முலைகளைக் கொண்டு சிந்தனையைக் கவரும் வண்ணம் புன்னகையை வீசும் பெண்களின் மேல் காமம் ஏற்பட்டால் அதுவும் விஷமாகி அழித்துவிடும். அத்தகைய பெண்களின் மேல் ஆசைப்படும் நெஞ்சை விஷத்திற்கு ஆசைப்படாதே என்றும் கொடியதென்றும் கோபத்துடன் திட்டி ஆசையால் முறைதவறிச் செல்லாமல் வைத்திருங்கள்.

பாடல் #205

பாடல் #205: முதல் தந்திரம் – 9. மகளிரிழிவு (பெண்களின் மேல் கொண்ட காமத்தால் பெறும் இழிவு)

மனைபுகு வார்கள் மனைவியை நாடில்
சுனைபுகு நீர்போல் சுழித்துடன் வாங்கும்
கனவது போலக் கசிந்தெழும் அன்பை
நனவது போலவும் நாடவொண் ணாதே.

விளக்கம்:

கணவர் வீட்டில் வாழும் இல்லற நெறியில் இருக்கும் பெண்களின் மேல் காமம் கொண்டு அணுகினால் சுழல் நீரின் மேலே நீந்துபவர்களையும் தன்னுடன் இழுத்துச் சென்றுவிடுவது போல நம்மையும் அந்தக் காமம் இழிவில் இழுத்துக் கொண்டு போய்விடும். மற்றவர்களின் மனைவிகள் மீது கசிந்து எழும் சிறிது அன்பானது தூக்கத்தில் கண்ட கனவு போன்றது அதை உண்மை என்று நம்பி மேலும் அன்பு செய்வது அழிவுக்கே வழிவகுக்கும்.

கருத்து:

தூங்கும்போது சாப்பிடுவது போல கனவு கண்டால் அப்போதைக்குச் சந்தோஷமாக இருக்குமே தவிர உண்மையில் பசி தீர்ந்துவிடாது. அதுபோலவே தமக்கு உரிமையில்லாத பெண்கள் மீது காட்டும் அன்பானது அப்போதைக்கு இன்பமாக இருக்குமே தவிர உண்மையில் இழிவு நிலைக்கு இழுத்துச் சென்றுவிடும்.

பாடல் #206

பாடல் #206: முதல் தந்திரம் – 9. மகளிரிழிவு (பெண்களின் மேல் கொண்ட காமத்தால் பெறும் இழிவு)

இயலுறும் வாழ்க்கை இளம்பிடி மாதர்
புயலுறும் புல்லின் புணர்ந்தவ ரேயினும்
மயலுறும் வானவர் சாரவிரும் என்பார்
அயலுறப் பேசி அகன்றொழிந் தாரே.

விளக்கம்:

இளம் பெண் யானையைப் போல இல்வாழ்க்கையில் இல்லாமல் பொது மகளிராக இருக்கும் பெண்கள் மழை துளிகளைத் தழுவி வளரும் புற்களைப் போல ஆரத்தழுவி ஆணுடன் இருந்தாலும் புதியதாக வேறொரு பணக்காரர் வந்துவிட்டால் அவரைத் தேவர் என்று புகழ்ந்து எம்மோடு இன்புற்று இருங்கள் என்று வேண்டிக்கொள்வார்கள். அப்போது பழைய காதலரை உடனே வெளியே செல்லுமாறு கடுமையான வார்த்தைகளால் பேசி அவர்களிடமிருந்து சுத்தமாக விலகிச் சென்றுவிடுவார்கள்.

கருத்து: பொது மகளிர் எவ்வளவுதான் நம்மீது அன்போடு இருப்பது போல் காட்டிக்கொண்டு ஆரத்தழுவினாலும் அவர்களின் எண்ணம் எப்போதும் பணத்தின் மேலேயே இருக்கும். நம்மைவிட வேறொரு பணக்காரர் வந்துவிட்டால் அவரை தேவர் என்று புகழுந்து தம்மோடு வைத்துக்கொண்டு இருப்பவரை வெளியே போகச் சொல்லிவிடுவார்கள்.

பாடல் #207

பாடல் #207: முதல் தந்திரம் – 9. மகளிரிழிவு (பெண்களின் மேல் கொண்ட காமத்தால் பெறும் இழிவு)

வையகத் தேமட வாரொடும் கூடியென்
மெய்யகத் தோருளம் வைத்த விதியது
கையகத் தேகரும் பாலையின் சாறுகொள்
மெய்யகத் தேபெறு வேம்புஅது வாமே.

விளக்கம்:

உலகத்தில் பெண்களுடன் மோகம் கொள்வதால் கிடைக்கும் பயன் என்று ஒன்றும் இல்லை. இது உண்மை ஞானத்தை உணர்ந்தவர்களின் உள்ளம் கண்ட விதியாகும். கையில் பணத்தை வைத்தால் கரும்புச்சாறு போல் இனிக்கப் பேசிப் பழகும் பெண்கள் அந்தப் பணம் தீர்ந்துவிட்டால் வேப்பங்காயாகக் கசந்து பேசி விலகுவார்கள். இத்தகையப் பெண்களின் மேல் மோகம் கொள்வது நமக்கு நாமே வைத்துக்கொள்ளும் கசப்பு இதுவென்று அறிந்துகொள்ளுங்கள்.

பாடல் #208

பாடல் #208: முதல் தந்திரம் – 9. மகளிரிழிவு (பெண்களின் மேல் கொண்ட காமத்தால் பெறும் இழிவு)

கோழை ஒழுக்கங் குளமூடு பாசியில்
ஆழ நடுவார் அளப்புறு வார்களைத்
தாழத் துடக்கித் தடுக்ககில் லாவிடில்
பூழை நுழைந்துஅவர் போகின்ற வாறே.

விளக்கம்:

உணவாக மாறும் விளையும் பயிரை பாசிபடிந்த குளத்தின் அடியில் நட்டால் அது விளையாமல் பாசியோடு பாசியாகி அழிந்து போய்விடும். அதே குளத்தைப் பாசி நீக்கித் தூர்வாரி வரும் நீரை சேமித்தால் அந்த நீர் பெரும் விளைச்சலுக்கு உதவும். அதுபோலவே இல்லறத்தின் மூலம் பிள்ளைகள் பெற்று சந்ததி வளர உபயோகமாகும் விந்துவை பொது மகளிரின் மேல் மோகம் கொண்டு அவர்களின் பாசிபடிந்த கருவறைக்குள் நட்டுவைத்து அதில் இன்பம் காண்பவர்களை உண்மை அறிவுள்ளவர்கள் தடுத்து அவர்களின் மயக்கத்தைப் போக்க முயலாவிட்டால் தம் குலமும் தம்மால் பிறக்குக் கிடைக்க வேண்டிய நலமும் கெட்டு அதனால் பல இழிவுகள் ஏற்பட்டுப் பின்பு இறந்தும் போவார்கள்

கருத்து: உரிமையில்லாத பெண்களைக் கூடுவது கெடுதல் என்பதைப் புரிந்துகொள்ளாமல் அதில் கிடைக்கும் இன்பத்திலேயே திளைத்திருக்கும் மூடர்களை தடுத்து நிறுத்தி சரியான பாதையைக் காட்டி வழி நடத்துதல் அறிவுள்ளவர்களின் கடமையாகும். அப்படிச் செய்வதனால் மூடர்கள் நலம் பெறுவது மட்டுமின்றி அவர்களால் பலரும் நலம் பெறுவார்கள்.

பாடல் #201

பாடல் #201: முதல் தந்திரம் – 8. பிறர்மனை நயவாமை (மற்றவர்கள் துணையின் மீது ஆசைப்படாமல் இருத்தல்)

ஆத்த மனையாள் அகத்தில் இருக்கவே
காத்த மனையாளைக் காமுறும் காளையர்
காய்ச்ச பலாவின் கனியுண்ண மாட்டாமல்
ஈச்சம் பழத்துக்கு இடருற்ற வாறே.

விளக்கம்:

எனக்கு இவள்தான் என்று உறுதிமொழி கூறி திருமணம் செய்த அன்பான மனைவி தமது வீட்டில் இருக்கும்போதே மற்றொருவர் திருமணம் செய்து பாதுகாத்து வைத்திருக்கும் மனைவியர் மீது ஆசைப்படும் இளைஞர்கள் தமது வீட்டின் கொல்லைப்புறத்தில் காய்த்து பழுத்துத் தொங்கும் பலாப் பழத்தை சாப்பிட விரும்பாமல் எங்கோ முட்காட்டுச் செடிகளுக்கு நடுவே வளர்ந்து கிடக்கும் ஈச்சம் பழத்தைச் சாப்பிட ஆசைப்படுவது போன்ற முட்டாள்தனம்.

பாடல் #202

பாடல் #202: முதல் தந்திரம் – 8. பிறர்மனை நயவாமை (மற்றவர்கள் துணையின் மீது ஆசைப்படாமல் இருத்தல்)

திருத்தி வளர்த்ததோர் தேமாங் கனியை
அருத்தமென் றெண்ணி அறையில் புதைத்துப்
பொருத்த மிலாத புளிமாங்கொம் பேறிக்
கருத்தறி யாதவர் காலற்ற வாறே.

விளக்கம்:

நன்றாக உரமிட்டு நீர் பாய்ச்சி பாதுகாத்து வளர்த்த மாமரத்தில் விளைந்த சுவைமிகுந்த மாம்பழத்தை சாப்பிட விரும்பாமல் அதை பத்திரமாக அறைக்குள் பூட்டி வைத்துவிட்டு தமக்குச் சற்றும் பொருத்தம் இல்லாத யாரோ இட்ட விதையிலிருந்து எப்போதோ பெய்த மழை நீரில் வளர்ந்த புளிய மரத்தில் விளைந்த புளியம் பழத்திற்கு ஆசைப்பட்டு உறுதியில்லாத புளிய மரத்துக் கிளையில் ஏறி புளியம் பழத்தை பறிக்கும் போது கிளை முறிந்து கீழே விழுந்து காலை உடைத்துக் கொள்வது அறிவற்ற செயல். அதுபோல் தமக்கு பெற்றவர்கள் பார்த்து திருமணம் செய்து வைத்த அழகிய மனைவி இருக்கும்போது அவளை அறைக்குள்ளேயே பூட்டி வைத்துவிட்டு மற்றவரின் மனைவியின் மேல் ஆசைப்பட்டால் அறைக்குள் பூட்டி வைத்த பழம் எப்படி நாளாக நாளாக அழுகிவிடுமோ அதுபோலவே கட்டிய மனைவியை வீட்டிலேயே அடைத்து வைத்திருந்தால் அவளுக்கும் முதுமை வந்து அவள் மூலம் பெறக்கூடிய சந்ததி இல்லாமல் போய்விடும்.

பாடல் #203

பாடல் #203: முதல் தந்திரம் – 8. பிறர்மனை நயவாமை (மற்றவர்கள் துணையின் மீது ஆசைப்படாமல் இருத்தல்)

பொருள்கொண்ட கண்டனும் போதத்தை யாளும்
இருள்கொண்ட மின்வெளி கொண்டுநின் றோரும்
மருள்கொண்ட மாதர் மயலுறு வார்கள்
மருள்கொண்ட சிந்தையை மாற்றகில் லாரே.

விளக்கம்:

உலகத்தில் இருக்கும் செல்வங்களே சிறப்பானவை என்று எண்ணி செல்வங்களை மேலும் மேலும் பெருக்க விரும்பி பல நாடுகளில் படை எடுத்துப் பெரும் செல்வம் சம்பாதித்த அரசனும் இருண்ட வானத்தில் எப்போதாவது தோன்றுகின்ற மின்னல் ஒளி போல அறியாமையாகிய இருளில் எப்போதாவது தோன்றும் சிற்றறிவு ஞானத்தையே பெரிதாக எண்ணிக்கொண்டு தமக்கு அனைத்தும் தெரியும் என்று காட்டிக் கொள்கின்றவனும் ஆண்களைக் கண்டால் பயந்து பார்க்கும் அழகிய பெண்களைக் கண்டு அவர்களின் அழகில் மயங்கி மோகம் கொண்டால் தங்களது அறிவு இருளாகிக் கொண்டு இருப்பதை அறிந்திருப்பவர் ஆகிய இந்த மூவலும் மோகத்தில் சிக்கிக்கொண்ட தங்களின் எண்ணங்களை மாற்ற முடியாமல் இருப்பார்கள் இவர்கள்.

பாடல் #199

பாடல் #199: முதல் தந்திரம் – 7. புலால் மறுத்தல் (அசைவம் சாப்பிடாமல் இருத்தல்)

பொல்லாப் புலாலை நுகரும் புலையரை
எல்லாரும் காண இயமன்றன் தூதுவர்
செல்லாகப் பற்றித் தீவாய் நரகத்தினுள்
மல்லாக்கத் தள்ளி மறித்துவைப் பார்களே.

விளக்கம்:

பிற உயிர்களை கொன்று அதன் உடலிலிருந்து பெறுவதாலும் மனித உடலுக்கு தீமை தருவதாலும் பொல்லாத புலாலை (அசைவத்தை) விரும்பிச் சாப்பிடும் கீழ்மையான மக்களை அவர்கள் இறக்கும் தறுவாயில் அவர்களைச் சுற்றி நின்ற அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே எமதர்மனின் தூதுவர்கள் வந்து கரையானைப் போல இறுக்கமாகப் பற்றி இழுத்துக் கொண்டு போய் எப்போதும் எரிந்து கொண்டிருக்கும் கொடிய நரகத் தீயினுள் அவர்களின் முதுகு கீழே பட முகமும் உடலும் மற்றவர்கள் பார்க்கும் படி மேலே தெரிய மல்லாக்கத் தள்ளிவிட்டு அவர்கள் சுடும் தீயிலிருந்து தப்பிச்செல்லாமல் இருக்க கதவுகளையும் மூடிவிடுவார்கள்.

கருத்து: பிற உயிர்களுக்குத் துன்பம் தந்து பெற்ற கொடிய புலாலை விரும்பி சாப்பிடுபவர்கள் இறந்த பின் கொடிய நரகத் தீயில் எப்போதும் வெந்துகொண்டே இருப்பார்கள்.