பாடல் #562

பாடல் #562: மூன்றாம் தந்திரம் – 4. ஆதனம் (யோகம் புரிவதற்கு முன் இருக்க வேண்டிய ஆசன முறைகளும் அவற்றால் உண்டாகும் பயன்களும்)

பாத முழந்தாளிற் பாணி களைநீட்டி
ஆதர வோடும்வாய் அங்காந் தழகுறக்
கோதில் நயனங் கொடிமூக்கி லேயுறச்
சீர்திகழ் சிங்கா தனமெனச் செப்புமே.

விளக்கம்:

பாத நுனிகள் தரையில் அழுந்தும்படி வைத்து முழந்தாளிட்டு காலின் மேல் அமர்ந்து கைகளை பின்புறமாக பாதங்களில் படும்படி நீட்டி வைத்து ஆதரவாக இருக்க வாயை ஆவெனப் பிளந்து கொண்டு அழகாக கண்களை வேறெங்கும் சுழற்றாமல் மூக்கின் நுனியை நோக்கி பார்த்துக் கொண்டு இருப்பது புகழ் பெற்ற சிங்காசனம் என்று கூறப்படும்.

சிங்காசனம் ஆசனத்தின் பயன்கள்:

நன்கு பசியெடுக்கும். முகதாடை நாக்கு தொண்டையை ஒட்டிய நாக்கின் தொடக்கப்பகுதி ஆகியவற்றிற்கு நன்கு பயிற்சி கிடைக்கிறது. கண்களுக்கு நல்ல கூர்மையான நோக்கும் சக்தி கிடைக்கிறது. காது, மூக்கு தொண்டைக்கு ஆரோக்கியம் கிடைக்கிறது. வயிற்றில் ஜீரண சுரப்பிகள் வேலை செய்யும். நாக்கை வெளியில் இழுப்பதால் தொண்டை மூக்கில் சுத்த ரத்தம் பாயும். உணவு நன்கு ஜீரணமாகும். நாக்கை வெளியில் நீட்டுவதால் நரம்புகள் இழுக்கப்பட்டு தாடைகள் இறுக்கம் குறைந்து பலப்படுகின்றன. விக்கல் வியாதி தடுக்கப்படுகிறது. சிங்காசனத்தை தொடர்ந்து செய்து பழகிய பின் முழங்கால் தொடை சதைபிடிப்பு நீங்கி பலமுள்ளதாக ஆகின்றன. தன்னுள் சிங்கத்தின் பலம் வருவது போல பாவனை செய்தால் எல்லா அங்கங்களும் வலிமை பெற்றுவிடும். இவ்வாறு தியானம் செய்தால் மன உறுதி கிடைக்கும். சக்தி பெருகும்.

பாடல் #563

பாடல் #563: மூன்றாம் தந்திரம் – 4. ஆதனம் (யோகம் புரிவதற்கு முன் இருக்க வேண்டிய ஆசன முறைகளும் அவற்றால் உண்டாகும் பயன்களும்)

பத்திரங் கோமுகம் பங்கயங் கேசரி
சொத்திரம் வீரஞ் சுகாதனம் ஓரேழும்
உத்தம மாமுது ஆசனம் எட்டெட்டுப்
பத்தொடு நூறு பலஆ சனமே.

விளக்கம்:

  1. பத்திரம் (பத்திராசனம்) 2. கோமுகம் (கோமுகாசனம்) 3. பங்கயம் (பத்மாசனம்) 4. கேசரி (சிங்காசனம்) 5. சொத்திரம் (குக்குட ஆசனம்) 6. வீரம் (வீராசனம்) 7. சுகாதனம் ஆகிய ஏழு ஆசனங்களோடு மிகவும் சிறப்பான சுவத்திகாசனம் சேர்த்து எட்டு ஆசனங்கள் இறைவனை அடைய உதவும் அட்டங்க யோகத்திற்கு முக்கியமானவை ஆகும். மற்ற ஆசனங்கள் எட்டும் சேர்ந்து பதினாறு அவற்றோடு நூற்றிப் பத்தும் சேர்ந்து மொத்தம் 126 ஆசனங்கள் உள்ளது.

பாடல் #555

பாடல் #555: மூன்றாம் தந்திரம் – 3. நியமம்

ஆதியை வேதத்தின் அகப்பொரு ளானைச்
சோதியை அங்கே சுடுகின்ற அங்கியைப்
பாதியுள் மன்னும் பராசத்தி யோடுடன்
நீதியை உணர்ந்து நியமத்த னாமே.

விளக்கம்:

ஆதியாய் முதற் பொருளானவனை, வேதத்தின் பொருளாக உள்ளவனை, அக்கினி சொரூபமானவனை, அக்கினியின் வெப்பமானவனை, திருமேனியில் சரிபாதியாக பராசத்தியோடு இருக்கும் இறைவனை உணர்ந்து சத்தியத்தை கடைபிடிப்பவனே நியமத்தைக் கடைபிடிப்பவன் ஆவான்.

பாடல் #556

பாடல் #556: மூன்றாம் தந்திரம் – 3. நியமம் (நன்மைகளை செய்தல்)

தூய்மை அருளூண் சுருக்கம் பொறைசெவ்வை
வாய்மை நிலைமை வளர்த்தலே மற்றிவை
காமம் களவு கொலையெனக் காண்பவை
நேமியீ ரைந்து நியமத்த னாமே.

விளக்கம்:

  1. தூய்மையாக இருத்தல் 2. இறையருளோடு இருத்தல் 3. அளவான உணவு 4. பொறுமையோடு இருத்தல் 5. நேர்மையுடன் இருத்தல் 6. பொய் பேசாது சத்தியத்தைக் கடைபிடித்தல் 7. சத்தியத்திற்காக வைராக்கியத்தை வளர்த்தல், 8. காமத்தை எண்ணாதிருத்தல் 9. களவு (திருடு) எண்ணாமலிருத்தல் 10. கொலை எண்ணாமலிருத்தல் ஆகிய பத்து குணங்களையும் கொண்டவரே நியமத்தின் வழியின்படி இருப்பவர்.

பாடல் #557

பாடல் #557: மூன்றாம் தந்திரம் – 3. நியமம் (நன்மைகளைப் பெறுதல்)

தவஞ்செபஞ் சந்தோடம் ஆத்திகந் தானஞ்
சிவன்றன் விரதமே சித்தாந்தக் கேள்வி
மகஞ்சிவ பூசையொண் மதிசொல்லீ ரைந்து
நிவம்பல செய்யின் நியமத்த னாமே.

விளக்கம்:

  1. தவம் செய்தல், 2. ஜெபித்தல், 3. பேரின்பம் அடைதல், 4. தெய்வ நம்பிக்கையோடிருத்தல், 5. தானம் செய்தல், 6. சிவ விரதம் கடைபிடித்தல், 7. ஞானத்தைப் பற்றிய உண்மையைக் கேட்டறிதல், 8. யாகம் செய்தல், 9. சிவ பூஜை செய்தல், 10. எண்ணத்தையும் இறைவனையும் இரண்டறக் கலத்தல் ஆகிய பத்தையும் உணர்ந்து பிறருக்குக் அறியக் கூறவும் செய்பவனே நியமத்தின் வழி நடப்பவனாவான்.

பாடல் #553

பாடல் #553: மூன்றாம் தந்திரம் – 2. இயமம் (தீயவற்றிலிருந்து விலகி இருப்பது)

எழுந்துநீர் பெய்யினும் எட்டுத் திசையுஞ்
செழுந்த ணியமங்கள் செய்மினென் றண்ணல்
கொழுந்தண் பவளக் குளிர்சடை யோடே
அழுந்திய நால்வர்க் கருள்புரிந் தானே.

விளக்கம்:

பவளம் போல் ஜொலிக்கும் குளிர்ந்த சடையுடைய இறைவனை முழுமையாக உணர்ந்த சனகர், சதானந்தர், சனாநந்தர் மற்றும் சனத்குமாரர் ஆகிய நால்வர்களுக்கும் எட்டுத்திசையிலும் சூழ்ந்து மூழ்கும் அளவிற்கு பெருமழை பெய்தாலும் செழுமையான குளிர்ந்த இயமங்களை (பாடல் #552 இல் இயமத்தின் விளக்கம் காண்க) தவறாமல் செய்யுங்கள் என்று இறைவன் கூறினார்.

பாடல் #554

பாடல் #554: மூன்றாம் தந்திரம் – 2. இயமம் (தீயவற்றிலிருந்து விலகி இருப்பது)

கொல்லான் பொய்கூறான் களவிலான் எண்குணன்
நல்லான் அடக்க முடையான் நடுச்செய்ய
வல்லான் பகுந்துண்பான் மாசிலான் கட்காமம்
இல்லா னியமத் திடைநின் றானே.

விளக்கம்:

எவருக்கும் மனதளவிலும் தீங்கு நினைக்காதவன், பொய் கூறாதவன், களவு (திருடு) செய்யாதவன், எட்டு குணங்களை கொண்டவன் (1. அன்பு, 2. அமைதி, 3. பொறாமையின்மை, 4. சுத்தமாக இருத்தல், 5. மனதினால் சிரமப்படாமல் எதையும் சுலபமாக எடுத்துக் கொள்ளுதல், 6. ஆனந்தத்தைக் கொடுப்பது, 7. தர்ம சிந்தனை, 8. ஆசையின்மை), நன்மை மட்டுமே நினைப்பவன், பணிவுடையவன், நீதி தவறாமல் இருக்கக் கூடியவன், பகிர்ந்து கொடுத்து உண்பவன், குற்றம் இல்லாதவன், கள், காமம் இல்லாத தன்மையுடையவன், ஆகிய இவர்கள் இயம ஒழுக்கத்தின்படி இருப்பவர்கள் ஆவார்கள்.

பாடல் #549

பாடல் #549: மூன்றாம் தந்திரம் – 1. அட்டாங்க யோகம் (இயமம், நியமம், ஆதனம், பிரணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி ஆகிய எட்டு பகுதிகள் சேர்ந்தது அட்டாங்க யோகம் ஆகும்)

உரைத்தன வற்கரி ஒன்று மூடிய
நிரைத்த இராசி நிரைமுறை எண்ணிப்
பிரைச்சதம் எட்டையும் பேசியே நந்தி
நிரைத்த இயமம் நியமஞ்செய் தானே.

விளக்கம்:

குருநாதராகிய சிவபெருமான் அட்டங்க யோகத்தை அருளத் திருவுள்ளங் கொண்டு தீமையைப் போக்குவதற்கும் (இயமம்) நன்மையைப் பெறுவதற்கும் (நியமம்) வழிவகை செய்தருளி பிராணாயாமம் மூலம் மூச்சுக் காற்றை இழுக்கவும் அடக்கி வைக்கவும் விடவும் வேண்டிய அளவு பன்னிரண்டங்குலம் முதலான பலவகைகளை முறைப்படுத்தி அவற்றை எட்டு அங்கங்களைக் கொண்ட யோகங்களாக அமைத்து அருளினான்.

பாடல் #550

பாடல் #550: மூன்றாம் தந்திரம் – 1. அட்டாங்க யோகம் (இயமம், நியமம், ஆதனம், பிரணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி ஆகிய எட்டு பகுதிகள் சேர்ந்தது அட்டாங்க யோகம் ஆகும்)

செய்த இயம நியமஞ் சமாதிசென்
றுய்யப் பராசத்தி உத்தர பூருவ
மெய்த கவச நியாசங்கள் முத்திரை
எய்தவே உரைசெய்வன் இந்நிலை தானே.

விளக்கம்:

உயிர்கள் தீயவற்றை போக்கி நன்மை தரக்கூடியவற்றே செய்து இறை நினைப்பில் தன்னையே மறந்து சமாதி நிலையை அடைந்து ஆதியிலிருந்தே பரம்பொருளாக இருக்கும் இறைவனை அடைவதற்கு துணையாக கவசம், நியாசம், முத்திரை ஆகிய மூன்று யோகங்கள் முன்னும் பின்னும் பாதுகாப்பாக உடன் வரும். இந்த உயர்ந்த நிலையை உயிர்கள் அடைய வேண்டும் என்பதற்காக இந்த யோக வழிகளைப் பற்றி யாம் கூறுவோம்.

கவசம் – சமாதி நிலையில் உயிர்களுக்குப் பாதுகாப்பாக உடலை மூடியிருக்கும் கோசங்களை மந்திர ஜபம் செய்து அடக்கியாள்வது.

நியாசம் – தமது உடல் உறுப்புகளையே இறைவனது உறுப்புகளாக பாவனை செய்வது.

முத்திரை – கை விரல்கள் மூலம் முத்திரைகளை (யோக நிலை எண்ணங்களை கை விரல்கள் மூலம் அபிநயம் செய்து காட்டுதல்) செய்யும் யோக நிலை.

பாடல் #551

பாடல் #551: மூன்றாம் தந்திரம் – 1. அட்டாங்க யோகம் (இயமம், நியமம், ஆதனம், பிரணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி ஆகிய எட்டு பகுதிகள் சேர்ந்தது அட்டாங்க யோகம் ஆகும்)

அந்நெறி இந்நெறி என்னாதட் டாங்கந்
தன்நெறி சென்று சமாதியி லேநின்மின்
நன்னெறி செல்வார்க்கு ஞானத்தி லேகலாம்
புன்னெறி யாகத்திற் போக்கில்லை யாகுமே.

விளக்கம்:

இறைவனை அடைய நாம் செல்லும் வழி நன்றானதா இல்லை வேறு வழி நன்றானதா என்று சந்தேகப் படாமல் எந்த வழிக்கும் தேவைப்படுகின்ற அட்டாங்க யோகங்களின் வழியிலே சென்று சமாதி நிலையில் (இறைவனை நினைத்து தன்னை மறந்திருக்கும் நிலை) இருங்கள். இத்தகைய நல்ல வழியில் செல்பவர்களுக்கு ஞான யோகம் கைகூடிச் சிவப்பேறு அடைவது மட்டுமில்லாமல் அந்த ஞானத்தின் பயனாக இனிப் பிறவி என்பது இல்லை.