பாடல் #1576

பாடல் #1576: ஆறாம் தந்திரம் – 1. சிவகுரு தரிசனம் (இறைவனே குருவாக வந்து தரிசனம் தருவது)

எல்லா வுலகிற்கு மப்பாலோ னிப்பாலாய்
நல்லா ருளத்து மிக்கரு ணல்கலா
லெல்லாரு முய்யக் கொண்டிங்கே யளித்தலாற்
சொல்லார்ந்த நற்குருச் சுத்த சிவமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

எலலா வுலகிறகு மபபாலொ னிபபாலாய
நலலா ருளதது மிககரு ணலகலா
லெலலாரு முயயக கொணடிஙகெ யளிததலாற
சொலலாரநத நறகுருச சுதத சிவமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

எல்லா உலகிற்கும் அப்பாலோன் இப் பால் ஆய்
நல்லார் உளத்து மிக்கு அருள் நல்கல் ஆல்
எல்லாரும் உய்ய கொண்டு இங்கே அளித்தல் ஆல்
சொல் ஆர்ந்த நல் குரு சுத்த சிவமே.

பதப்பொருள்:

எல்லா (அண்ட சராசரங்களில் இருக்கின்ற அனைத்து) உலகிற்கும் (உலகங்களையும்) அப்பாலோன் (தாண்டி இருக்கின்றவனாகிய இறைவன்) இப் (இந்த) பால் (உலகத்தின் பக்கத்திலும்) ஆய் (இருக்கின்றான்)
நல்லார் (அவன் அன்பு கொண்ட நல்லவர்களின்) உளத்து (உள்ளத்தில் இருந்து) மிக்கு (மாபெரும் கருணையினால் மிகவும் அதிக அளவில்) அருள் (அருளை) நல்கல் (கொடுத்துக் கொண்டே) ஆல் (இருப்பதால்)
எல்லாரும் (நல்லவர்கள் மட்டுமின்றி அனைவரும்) உய்ய (மேல் நிலைக்கு) கொண்டு (கொண்டு செல்ல வேண்டும் என்று) இங்கே (இந்த உலகத்திலேயே) அளித்தல் (அவனது திருவருளை வழங்குகின்றான்) ஆல் (ஆதலால்)
சொல் (சொல்லை) ஆர்ந்த (முழுவதுமாக சொல்லி அடியவரை தெளிவு படுத்தும்) நல் (நன்மையே வடிவான) குரு (குருவாக இருப்பது) சுத்த (பரிசுத்தமான) சிவமே (சிவப் பரம் பொருளே ஆகும்).

விளக்கம்:

அண்ட சராசரங்களில் இருக்கின்ற அனைத்து உலகங்களையும் தாண்டி இருக்கின்றவனாகிய இறைவன் இந்த உலகத்தின் பக்கத்திலும் இருக்கின்றான். அவன் அன்பு கொண்ட நல்லவர்களின் உள்ளத்தில் இருந்து மாபெரும் கருணையினால் மிகவும் அதிக அளவில் அருளை கொடுத்துக் கொண்டே இருக்கின்றான். இந்த அருளால் இந்த உலகத்தில் உள்ள நல்லவர்கள் மட்டுமின்றி அனைவரும் மேல் நிலைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று அவனது திருவருளை வழங்குகின்றான். ஆதலால் சொல்லை முழுவதுமாக சொல்லி அடியவரை தெளிவு படுத்தும் நன்மையே வடிவான குருவாக இருப்பது பரிசுத்தமான சிவப் பரம் பொருளே ஆகும்.

பாடல் #1575

பாடல் #1575: ஆறாம் தந்திரம் – 1. சிவகுரு தரிசனம் (இறைவனே குருவாக வந்து தரிசனம் தருவது)

சித்திக ளெட்டோடுந் திண்சிவ மாக்கிய
சுத்தியு மெண்முத்தி தூய்மையும் யோகத்துச்
சத்தியு மந்திரஞ் சாதகம் போதமும்
பத்தியு நாத னருளிற் பயிலுமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

சிததிக ளெடடொடுந திணசிவ மாககிய
சுததியு மெணமுததி தூயமையும யொகததுச
சததியு மநதிரஞ சாதகம பொதமும
பததியு நாத னருளிற பயிலுமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

சித்திகள் எட்டோடும் திண் சிவம் ஆக்கிய
சுத்தியும் எண் முத்தி துய்மையும் யோகத்து
சத்தியும் மந்திரம் சாதகம் போதமும்
பத்தியும் நாதன் அருளில் பயிலுமே.

பதப்பொருள்:

சித்திகள் (மாபெரும் சித்திகளாகிய) எட்டோடும் (அட்டமா சித்திகளோடு) திண் (உறுதியான) சிவம் (சிவப் பரம் பொருளாகவே) ஆக்கிய (அடியவரையும் ஆக்குவதற்கு)
சுத்தியும் (பல விதமான சோதனைகளை செய்து பெற்ற பக்குவமும்) எண் (பல விதமான எண்ணங்களில் இருந்து) முத்தி (விடுதலை அடைந்து மோன நிலையில்) துய்மையும் (எண்ணங்கள் இல்லாத தூய்மையான மனமும்) யோகத்து (அந்த நிலையிலேயே இருக்கின்ற யோகமும்)
சத்தியும் (அதனால் தான் நினைப்பதும் சொல்லுவதும் அப்படியே நிகழ்கின்ற சக்தியும்) மந்திரம் (மந்திரம் போன்ற சொற்களும்) சாதகம் (செய்கின்ற அனைத்து செயல்களும் சாதகமாகவும்) போதமும் (முக்காலமும் அறிந்த ஞானமும்)
பத்தியும் (உண்மையான சரணாகதியாகிய பக்தியும்) நாதன் (ஆகிய இவை அனைத்தும் தலைவனாக வந்து குருநாதராக வழிகாட்டிய) அருளில் (இறைவனின் திருவருளால்) பயிலுமே (அடியவர்கள் கற்றுக் கொள்ளலாம்).

விளக்கம்:

மாபெரும் சித்திகளாகிய அட்டமா சித்திகளோடு உறுதியான சிவப் பரம் பொருளாகவே அடியவரையும் ஆக்குவதற்கு பல விதமான சோதனைகளை செய்து பெற்ற பக்குவமும், பல விதமான எண்ணங்களில் இருந்து விடுதலை அடைந்து மோன நிலையில் எண்ணங்கள் இல்லாத தூய்மையான மனமும், அந்த நிலையிலேயே இருக்கின்ற யோகமும், அதனால் தான் நினைப்பதும் சொல்லுவதும் அப்படியே நிகழ்கின்ற சக்தியும், மந்திரம் போன்ற சொற்களும், செய்கின்ற அனைத்து செயல்களும் சாதகமாகவும், முக்காலமும் அறிந்த ஞானமும், உண்மையான சரணாகதியாகிய பக்தியும், ஆகிய இவை அனைத்தும் தலைவனாக வந்து குருநாதராக வழிகாட்டிய இறைவனின் திருவருளால் அடியவர்கள் கற்றுக் கொள்ளலாம்.

பாடல் #1574

பாடல் #1574: ஆறாம் தந்திரம் – 1. சிவகுரு தரிசனம் (இறைவனே குருவாக வந்து தரிசனம் தருவது)

பாசத்தைக் கூட்டியே கட்டிப் பறித்திட்டு
நேசத்த காயம் விடுவித்து நேர்நேரே
கூசற்ற முத்தியிற் கூட்டலா னாட்டகத்
தாசற்ற சற்குரு வப்பர மாமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

பாசததைக கூடடியெ கடடிப பறிததிடடு
நெசதத காயம விடுவிதது நெரநெரெ
கூசறற முததியிற கூடடலா னாடடகத
தாசறற சறகுரு வபபர மாமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

பாசத்தை கூட்டியே கட்டி பறித்து இட்டு
நேசத்த காயம் விடுவித்து நேர் நேரே
கூசு அற்ற முத்தியில் கூட்டல் ஆல் நாட்டு அகத்து
ஆசு அற்ற சற் குரு அப் பரம் ஆமே.

பதப்பொருள்:

பாசத்தை (அடியவர் உலகப் பற்றுக்களின் மேல் வைத்திருக்கும் பல விதமான பந்த பாசங்களை) கூட்டியே (ஒன்றாக கூட்டி) கட்டி (அதை ஒரு கட்டாக கட்டி வைத்து) பறித்து (அதை அடியவரிடமிருந்து பறித்து நீக்கி) இட்டு (வெளியில் எறிந்து விட்டு)
நேசத்த (இது வரை என்னுடையது என்று அடியவர்) காயம் (தனது உடலின் மீது) விடுவித்து (வைத்திருந்த ஆசையை விடுவித்து) நேர் (இறைவனுக்கு நேரானதாகவும்) நேரே (சரிசமமாகவும் இருக்கின்ற)
கூசு (ஒரு பழியும்) அற்ற (இல்லாத) முத்தியில் (முக்தியில்) கூட்டல் (சேர்த்து) ஆல் (அருளியதால்) நாட்டு (இந்த உலகத்தில்) அகத்து (இருக்கும் போதே)
ஆசு (ஒரு குற்றமும்) அற்ற (இல்லாத) சற் (உண்மையான) குரு (குருவாக) அப் (அந்த) பரம் (பரம்பொருளே) ஆமே (வந்து வழிகாட்டி அருளுகின்றான்).

விளக்கம்:

அடியவர் உலகப் பற்றுக்களின் மேல் வைத்திருக்கும் பல விதமான பந்த பாசங்களை ஒன்றாக கூட்டி அதை ஒரு கட்டாக கட்டி வைத்து அதை அடியவரிடமிருந்து பறித்து நீக்கி வெளியில் எறிந்து விட்டு இது வரை என்னுடையது என்று அடியவர் தனது உடலின் மீது கொண்டிருந்த ஆசையை விடுவித்து இறைவனுக்கு நேரானதாகவும் சரிசமமாகவும் இருக்கின்ற ஒரு பழியும் இல்லாத முக்தியில் சேர்த்து அருளியதால் இந்த உலகத்தில் இருக்கும் போதே ஒரு குற்றமும் இல்லாத உண்மையான குருவாக அந்த பரம்பொருளே வந்து வழிகாட்டி அருளுகின்றான்.

பாடல் #1573

பாடல் #1573: ஆறாம் தந்திரம் – 1. சிவகுரு தரிசனம் (இறைவனே குருவாக வந்து தரிசனம் தருவது)

பத்திப் பணிந்து பரவும்படி நல்கிச்
சுத்த வுரையாற் றுரிசறச் சோதித்துச்
சத்து மசத்துஞ் சதசத்துங் காட்டலாற்
சித்த மிறையே சிவகுரு வாமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

பததிப பணிநது பரவுமபடி நலகிச
சுதத வுரையாற றுரிசறச சொதிததுச
சதது மசததுஞ சதசததுங காடடலாற
சிதத மிறையெ சிவகுரு வாமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

பத்தி பணிந்து பரவும் படி நல்கி
சுத்த உரையால் துரிசு அற சோதித்து
சத்தும் அசத்தும் சத சத்தும் காட்டலால்
சித்தம் இறையே சிவ குரு ஆமே.

பதப்பொருள்:

பத்தி (பக்தியையும்) பணிந்து (இறைவனை வணங்கி பணிவதையும்) பரவும் (செய்கின்ற அடியவரின் புகழை மற்றவர்களும்) படி (தெரிந்து கொள்ளும் படி) நல்கி (கொடுத்து அருளி)
சுத்த (தூய்மையான பக்தியால் சொல்வது அனைத்தும் நிகழும்) உரையால் (சத்திய வாக்கையும் கொடுத்து அருளி) துரிசு (ஒரு குற்றமும்) அற (இல்லாமல் போகும் படி) சோதித்து (பல விதமான சோதனைகளால் சோதித்து)
சத்தும் (நிலையானதாகிய சிவமும்) அசத்தும் (நிலையில்லாததாகிய உடலும்) சத (நிலையில்லாத உடலுக்குள்) சத்தும் (நிலையாக நிற்கின்ற ஆன்மாவும்) காட்டலால் (தாமே என்பதை காட்டி அருளியதால்)
சித்தம் (அடியவர்களின் சித்தத்திற்குள் நிலைத்திருக்கும்) இறையே (இறை சக்தியே) சிவ (அருளைக் கொடுக்கின்ற) குரு (குருவாக வந்து) ஆமே (இருக்கின்றான்).

விளக்கம்:

பக்தியையும் இறைவனை வணங்கி பணிவதையும் செய்கின்ற அடியவரின் புகழை மற்றவர்களும் தெரிந்து கொள்ளும் படி கொடுத்து அருளி, தூய்மையான பக்தியால் சொல்வது அனைத்தும் நிகழும் சத்திய வாக்கையும் கொடுத்து அருளி, ஒரு குற்றமும் இல்லாமல் போகும் படி பல விதமான சோதனைகளால் சோதித்து, நிலையானதாகிய சிவமும் நிலையில்லாததாகிய உடலும் நிலையில்லாத உடலுக்குள் நிலையாக நிற்கின்ற ஆன்மாவும் தாமே என்பதை காட்டி அருளியதால் அடியவர்களின் சித்தத்திற்குள் நிலைத்திருக்கும் இறை சக்தியே அருளைக் கொடுக்கின்ற குருவாக வந்து இருக்கின்றான்.

பாடல் #1572

பாடல் #1572: ஐந்தாம் தந்திரம் – 23. உட் சமயம் (அக வழிபாடு மூலம் இறைவனை அடையும் வழி முறைகள்)

அறிய வொண்ணாத வுடம்பின் பயனை
யறிய வொண்ணாத வறுவகை யாக்கி
யறிய வொண்ணாத வறுவகைக் கோசத்
தறிய வொண்ணாத தோரண்டம் பதித்தே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

அறிய வொணணாத வுடமபின பயனை
யறிய வொணணாத வறுவகை யாககி
யறிய வொணணாத வறுவகைக கொசத
தறிய வொணணாத தொரணடம பதிததெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

அறிய ஒண்ணாத உடம்பின் பயனை
அறிய ஒண்ணாத அறு வகை ஆக்கி
அறிய ஒண்ணாத அறு வகை கோசத்து
அறிய ஒண்ணாதது ஓர் அண்டம் பதித்தே.

பதப்பொருள்:

அறிய (அறிந்து கொள்ள) ஒண்ணாத (முடியாத) உடம்பின் (உடம்பின்) பயனை (உண்மையான பயனாகிய அக வழிபாட்டின் மூலம் இறைவனை அடைவதை உணர்ந்து)
அறிய (அறிந்து கொள்ள) ஒண்ணாத (முடியாத) அறு (இறைவனை அடைவதற்கான ஆறு விதமான) வகை (வழி முறைகளில் தங்களின் பக்குவத்து ஏற்ற) ஆக்கி (ஒரு வழி முறையை தேர்ந்து எடுத்து அதில் முழுமை பெற்று)
அறிய (அறிந்து கொள்ள) ஒண்ணாத (முடியாத) அறு (இறைவனை அடைவதற்கான ஆறு விதமான) வகை (வழி முறைகளில் தாங்கள் கடைபிடிக்கின்ற வழி முறையின் மூலம் கிடைக்கின்ற) கோசத்து (தம்மை முழுவதும் மூடியிருக்கும் பாதுகாப்பு அரனாக இருக்கின்ற உறையை பெற்று)
அறிய (அறிந்து கொள்ள) ஒண்ணாதது (முடியாததாக இருக்கின்ற) ஓர் (ஒரு) அண்டம் (அண்டத்தையே தமது உடம்பிற்குள்) பதித்தே (பதித்து காணுவதே இறைவனை அடைவதற்கான வழி முறையாகும்).

விளக்கம்:

அறிந்து கொள்ள முடியாத உடம்பின் உண்மையான பயனாகிய அக வழிபாட்டின் மூலம் இறைவனை அடைவதை உணர்ந்து, இறைவனை அடைவதற்கான ஆறு விதமான வழி முறைகளில் தங்களின் பக்குவத்து ஏற்ற ஒரு வழி முறையை தேர்ந்து எடுத்து அதில் முழுமை பெற்று அந்த முறையின் மூலம் கிடைக்கின்ற தம்மை முழுவதும் மூடியிருக்கும் பாதுகாப்பு அரனாக இருக்கின்ற உறையை பெற்று, ஒரு அண்டத்தையே தமது உடம்பிற்குள் பதித்து காணுவதே இறைவனை அடைவதற்கான வழி முறையாகும்.

பாடல் #1571

பாடல் #1571: ஐந்தாம் தந்திரம் – 23. உட் சமயம் (அக வழிபாடு மூலம் இறைவனை அடையும் வழி முறைகள்)

ஆய்ந்தறி வார்கள மரர்வித் தியாதர
ராய்ந்தறி யாவண்ணம் நின்ற வரனெறி
யாய்ந்தறிந் தேனவன் சேவடி கைதொழ
வாய்ந்தறிந் தேன்மன மயம்மைகண் டேனே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

ஆயநதறி வாரகள மரரவித தியாதர
ராயநதறி யாவணணம நினற வரனெறி
யாயநதறிந தெனவன செவடி கைதொழ
வாயநதறிந தெனமன மயமமைகண டெனெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

ஆய்ந்து அறிவார்கள் அமரர் வித்தியாதரர்
ஆய்ந்து அறியா வண்ணம் நின்ற அரன் நெறி
ஆய்ந்து அறிந்தேன் அவன் சேவடி கை தொழ
ஆய்ந்து அறிந்தேன் மனம் மய அம்மை கண்டேனே.

பதப்பொருள்:

ஆய்ந்து (இறைவனை ஆராய்ந்து) அறிவார்கள் (அறிவார்கள்) அமரர் (அமரர்களும்) வித்தியாதரர் (உண்மை ஞானமும் உலக ஞானமும் பெற்ற ஞானிகளும்)
ஆய்ந்து (ஆனாலும் ஆராய்ந்து) அறியா (அறிந்து கொள்ள முடியாத) வண்ணம் (தன்மையை உடையவனாக) நின்ற (நின்று) அரன் (அனைத்தையும் காக்கின்ற இறைவனை அடைகின்ற) நெறி (வழி முறையாக இருக்கின்றது அன்பினால் உணர்கின்ற வழி முறையாகும்)
ஆய்ந்து (அப்படிப் பட்ட இறைவனை யானும் அன்பினால் ஆராய்ந்து) அறிந்தேன் (அறிந்து கொண்டு) அவன் (அவனின்) சேவடி (திருவடிகளை) கை (எமது இரண்டு கைகளையும் கூப்பி) தொழ (தொழுது வணங்கி)
ஆய்ந்து (எமக்குள்ளே ஆராய்ந்து) அறிந்தேன் (அறிந்து கொண்டோம்) மனம் (எமது மனமாகவும்) மய (அதன் தன்மைகளாகவும்) அம்மை (எமக்குள் இயங்குகின்ற அனைத்துமாகவும் அன்பின் வடிவமாகிய இறைவனின் சக்தியே இருந்து எமக்கு காண்பித்ததை) கண்டேனே (யாம் கண்டு கொண்டோம்).

விளக்கம்:

இறைவனை ஆராய்ந்து அறிந்தவர்களே அமரர்களாகவும் உண்மை ஞானமும் உலக ஞானமும் பெற்ற ஞானிகளாகவும் இருக்கின்றார்கள். ஆனாலும் ஆராய்ந்து அறிந்து கொள்ள முடியாத தன்மையை உடையவனாக நின்று அனைத்தையும் காக்கின்ற இறைவனை அடைகின்ற வழி முறை அன்பினால் உணர்கின்ற வழி முறையாகும். அப்படிப் பட்ட இறைவனை யானும் அன்பினால் ஆராய்ந்து அறிந்து கொண்டு அவனின் திருவடிகளை எமது இரண்டு கைகளையும் கூப்பி தொழுது வணங்கி எமக்குள்ளே ஆராய்ந்து அறிந்து கொண்டோம். அது எப்படி என்றால் அன்பின் வடிவமாகிய இறைவனின் சக்தியே எமக்குள் இருக்கின்ற மனமாகவும் அதன் தன்மைகளாகவும் எமக்குள் இயங்குகின்ற அனைத்துமாகவும் இருந்து எமக்கு காண்பித்தை யாம் கண்டு கொண்டோம்.

பாடல் #1570

பாடல் #1570: ஐந்தாம் தந்திரம் – 23. உட் சமயம் (அக வழிபாடு மூலம் இறைவனை அடையும் வழி முறைகள்)

ஆதிப் பிரானுல கேழு மளந்தவ
னோதக் கடலு முயிர்களு மாய்நிற்கும்
பேதிப் பிலாமையி னின்றபரா சத்தி
யாதிகட் டெய்வமு மந்தமு மாமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

ஆதிப பிரானுல கெழு மளநதவ
னொதக கடலு முயிரகளு மாயநிறகும
பெதிப பிலாமையி னினறபரா சததி
யாதிகட டெயவமு மநதமு மாமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

ஆதி பிரான் உலகு ஏழும் அளந்தவன்
ஓத கடலும் உயிர்களும் ஆய் நிற்கும்
பேதிப்பு இலாமையில் நின்ற பராசத்தி
ஆதி கண் தெய்வமும் அந்தமும் ஆமே.

பதப்பொருள்:

ஆதி (ஆதியிலிருந்தே இருக்கின்ற) பிரான் (தலைவனாகிய இறைவனே) உலகு (உலகங்கள்) ஏழும் (ஏழையும்) அளந்தவன் (அவற்றின் தேவைக்கு ஏற்ப அளந்து படைத்தான்)
ஓத (அலைகளால் பேரிரைச்சல் கொண்டு இருக்கின்ற) கடலும் (கடல்களும்) உயிர்களும் (அது சூழ்ந்து நிற்கின்ற உலகத்தில் வாழ்கின்ற உயிர்களும்) ஆய் (ஆகிய அனைத்துமாக) நிற்கும் (அவனே நிற்கின்றான்)
பேதிப்பு (அவை அனைத்தில் இருந்தும் வேறு பட்டு) இலாமையில் (இல்லாதவனாக) நின்ற (ஒன்றாகவே கலந்து நிற்கின்ற இறைவனே) பராசத்தி (அசையும் சக்தியாகவும் இருந்து அனைத்தையும் இயக்குகின்றான்)
ஆதி (ஆதியிலிருந்தே) கண் (அனைத்தையும் பார்க்கின்றவனாகவும் பார்க்கப் படுகின்ற பொருளாகவும் இருக்கின்ற) தெய்வமும் (தெய்வமாகவும்) அந்தமும் (அனைத்தையும் ஊழிக் காலத்தில் அழிக்கின்ற தெய்வமாகவும்) ஆமே (அவனே இருக்கின்றான்).

விளக்கம்:

ஆதியிலிருந்தே இருக்கின்ற தலைவனாகிய இறைவனே ஏழு உலகங்களையும் அவற்றின் தேவைக்கு ஏற்ப அளந்து படைத்தான். அலைகளால் பேரிரைச்சல் கொண்டு இருக்கின்ற கடல்களும் அது சூழ்ந்து நிற்கின்ற உலகத்தில் வாழ்கின்ற உயிர்களும் ஆகிய அனைத்துமாக அவனே நிற்கின்றான். அவை அனைத்தில் இருந்தும் வேறு பட்டு இல்லாதவனாக ஒன்றாகவே கலந்து நிற்கின்ற இறைவனே அசையும் சக்தியாகவும் இருந்து அனைத்தையும் இயக்குகின்றான். ஆதியிலிருந்தே அனைத்தையும் பார்க்கின்றவனாகவும் பார்க்கப் படுகின்ற பொருளாகவும் இருக்கின்ற தெய்வமாகவும் அனைத்தையும் ஊழிக் காலத்தில் அழிக்கின்ற தெய்வமாகவும் அவனே இருக்கின்றான்.

கருத்து:

உயிர்களுக்குள் இருக்கின்ற இறைவனே உயிர்கள் வெளிப்புறத்தில் பார்க்கின்ற அனைத்துமாகவும் இருக்கின்றான் அனைத்தையும் இயக்குகின்றான் என்பதை உணர்ந்து வழி படுதலே அவனை அடைவதற்கு எளிதான வழியாகும்.

பாடல் #1569

பாடல் #1569: ஐந்தாம் தந்திரம் – 23. உட் சமயம் (அக வழிபாடு மூலம் இறைவனை அடையும் வழி முறைகள்)

ஆமே பிரான்முக மைந்தொடு மாருயி
ராமே பிரானுக் கதோமுக மானதா
மாமே பிரானுக்குந் தன்சிர மாலைக்கும்
நாமே பிரானுக்கு நரரியல் பாமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

ஆமெ பிரானமுக மைநதொடு மாருயி
ராமெ பிரானுக கதொமுக மானதா
மாமெ பிரானுககுந தனசிர மாலைககும
நாமெ பிரானுககு நரரியல பாமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

ஆமே பிரான் முகம் ஐந்தொடும் ஆருயிர்
ஆமே பிரானுக்கு அதோ முகம் ஆனதாம்
ஆமே பிரானுக்கும் தன் சிர மாலைக்கும்
நாமே பிரானுக்கு நரர் இயல்பு ஆமே.

பதப்பொருள்:

ஆமே (ஆமாம் இருக்கின்றது) பிரான் (தலைவனாகிய இறைவனுக்கு) முகம் (முகங்கள்) ஐந்தொடும் (ஐந்தோடு) ஆருயிர் (உலகில் உள்ள உயிர்கள் எல்லாம்)
ஆமே (ஆமாம் இருக்கின்றது) பிரானுக்கு (தலைவனாகிய இறைவனுக்கு) அதோ (கீழ் நோக்கி இருக்கின்ற ஆறாவது) முகம் (முகமான) ஆனதாம் (அதோ முகமாக இருக்கின்றது. ஆகவே அண்ட சராசரங்களும் அதிலுள்ள அனைத்து உயிர்களும் இறைவனுக்கு அதோ முகமாகவே இருக்கின்றன)
ஆமே (ஆமாம் இருக்கின்றது) பிரானுக்கும் (தலைவனாகிய இறைவனுக்கும்) தன் (தமது கழுத்தில் அணிந்திருக்கும்) சிர (மண்டையோட்டு) மாலைக்கும் (மாலையாக)
நாமே (உயிர்கள் பலவாறாக அழைக்கின்ற பெயர்களே இருக்கின்றது) பிரானுக்கு (இவையெல்லாம் தலைவனாகிய இறைவனுக்கு) நரர் (மனிதர்களாகிய உயிர்களின்) இயல்பு (இயல்பான மாயையினால்) ஆமே (இருக்கின்றனவே தவிர இறைவனுக்கு என்று தனியாக ஒரு பெயரோ உருவமோ அல்லது தன்மையோ கிடையாது.

விளக்கம்:

அனைத்திற்கும் தலைவனாகிய இறைவனுக்கு ஐந்து திரு முகங்களோடு ஆறாவது முகமான அதோ முகமாக அண்ட சராசரங்களும் அதிலுள்ள அனைத்து உயிர்களுமே இருக்கின்றன. இந்த உலகத்தில் இருக்கின்ற உயிர்களால் அழைக்கப் படுகின்ற பலவாறான பெயர்களே இறைவன் தனது திருக்கழுத்தில் அணிந்து இருக்கின்ற மண்டையோட்டு மாலையாக இருக்கின்றது. இவையெல்லாம் மாயையை தமது இயல்பாக கொண்ட மனிதர்களால் பாவனை செய்யப் பட்ட உருவகங்களே தவிர இறைவனுக்கு என்று தனியாக ஒரு பெயரோ உருவமோ அல்லது தன்மையோ கிடையாது.

கருத்து:

இறைவனை அடைவதற்கு இருக்கின்ற ஆறு விதமான வழிகளில் செல்லுகின்ற உயிர்கள் தங்களின் மாயையால் இறைவனுக்கு பல விதமான பெயர்களையும் உருவங்களையும் பாவனை செய்து வழி படுகின்றன. அனைத்து பெயர்களும் உருவங்களும் ஒரே பரம் பொருளையே குறிக்கின்றது.

இறைவனுடைய ஆறு முகங்கள்:

  1. ஈசானம்
  2. தற்புருடம்
  3. அகோரம்
  4. வாமதேவம்
  5. சத்யோ ஜாதம்
  6. அதோ முகம்

பாடல் #1568

பாடல் #1568: ஐந்தாம் தந்திரம் – 23. உட் சமயம் (அக வழிபாடு மூலம் இறைவனை அடையும் வழி முறைகள்)

இத்தவ மத்தவ மென்றிரு பேரிடும்
பித்தரைக் காணில னாமெங்கள் பேர்நந்தி
யெத்தவ மாகிலெ னெங்கும் பிறக்கிலெ
னொத்துணர் வார்க்குஒல்லை யூர்புக லாமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

இததவ மததவ மெனறிரு பெரிடும
பிததரைக காணில னாமெஙகள பெரநநதி
யெததவ மாகிலெ னெஙகும பிறககிலெ
னொததுணர வாரககுஒலலை யூரபுக லாமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

இத் தவம் அத் தவம் என்று இரு பேர் இடும்
பித்தரை காண் இலன் ஆம் எங்கள் பேர் நந்தி
எத் தவம் ஆகில் என் எங்கும் பிறக்கில் என்
ஒத்து உணர்வார்க்கு ஒல்லை ஊர் புகல் ஆமே.

பதப்பொருள்:

இத் (இந்த) தவம் (தவம் சிறந்தது) அத் (அந்த) தவம் (தவம் சிறப்பு இல்லாதது) என்று (என்று) இரு (நன்மை தீமை என்று இரண்டு விதமான) பேர் (பெயர்களை) இடும் (வைக்கின்ற)
பித்தரை (பைத்தியக் காரர்களை) காண் (காண்பது) இலன் (இல்லாதவன்) ஆம் (ஆக இருக்கின்றான்) எங்கள் (எங்களின்) பேர் (பெருமை மிக்க) நந்தி (குருநாதனாகிய இறைவன்)
எத் (எந்த) தவம் (தவத்தை) ஆகில் (கடைபிடித்தால்) என் (என்ன?) எங்கும் (இந்த உலகத்தில் எந்த இடத்தில்) பிறக்கில் (எந்த உயிராக பிறந்திருந்தால்) என் (என்ன?)
ஒத்து (அனைத்து உயிர்களிலும் அன்பின் வடிவமாக இறைவன் ஒருவனே இருக்கின்றான் என்பதை) உணர்வார்க்கு (உணருபவர்களுக்கு) ஒல்லை (உடனடியாக) ஊர் (முக்திக்குள்) புகல் (நுழைய) ஆமே (முடியும்).

விளக்கம்:

இந்த தவம் சிறந்தது அந்த தவம் சிறப்பு இல்லாதது என்று நன்மை தீமை என்று இரண்டு விதமான பெயர்களை வைக்கின்ற பைத்தியக்காரர்களை எங்களின் பெருமை மிக்க குருநாதனாகிய இறைவன் கண்டு கொள்வது இல்லை. எந்த தவத்தை கடைபிடித்தால் என்ன? இந்த உலகத்தில் எந்த இடத்தில் எந்த உயிராக பிறந்திருந்தால் என்ன? அனைத்து உயிர்களிலும் அன்பின் வடிவமாக இறைவன் ஒருவனே இருக்கின்றான் என்பதை உணருபவர்களுக்கு உடனடியாக முக்திக்குள் நுழைய முடியும்.

பாடல் #1567

பாடல் #1567: ஐந்தாம் தந்திரம் – 23. உட் சமயம் (அக வழிபாடு மூலம் இறைவனை அடையும் வழி முறைகள்)

சைவச் சமையத் தனிநாயக னந்தி
யுய்ய வகுத்த தொருநெறி யொன்றுண்டு
தெய்வ வரனெறி சன்மார்கஞ் சேர்ந்தது
வையத் துள்ளவர்க்கு வகுத்துவைத் தானே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

சைவச சமையத தனிநாயக னநதி
யுயய வகுதத தொருநெறி யொனறுணடு
தெயவ வரனெறி சனமாரகஞ செரநதது
வையத துளளவரககு வகுததுவைத தானெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

சைவ சமைய தனி நாயகன் நந்தி
உய்ய வகுத்தது ஒரு நெறி ஒன்று உண்டு
தெய்வ அரன் நெறி சன்மார்க்கம் சேர்ந்தது
வையத்து உள்ளவர்க்கு வகுத்து வைத்தானே.

பதப்பொருள்:

சைவ (சைவ) சமைய (சமயத்திற்கு) தனி (தனிப் பெரும்) நாயகன் (தலைவனாகவும்) நந்தி (குரு நாதனாகவும் இருக்கின்ற இறைவன்)
உய்ய (அனைத்து உயிர்களும் முக்தியை அடைவதற்காக) வகுத்தது (வகுத்து அருளிய) ஒரு (ஒரு) நெறி (வழி முறையில்) ஒன்று (அன்பு ஒன்று மட்டுமே) உண்டு (இருக்கின்றது)
தெய்வ (அதுவே தெய்வீகமான) அரன் (இறைவனை அடைவதற்கான) நெறி (வழி முறையாகும்) சன்மார்க்கம் (உண்மை வழி முறைகள் அனைத்தும்) சேர்ந்தது (அதனோடு சேர்ந்தே)
வையத்து (உலகத்தில்) உள்ளவர்க்கு (உள்ள அனைத்து உயிர்களுக்கும் அதனதன் தகுதிக்கு ஏற்றவாறு) வகுத்து (பல வழி முறைகளாக பிரித்து) வைத்தானே (வைத்து அருளினான் இறைவன்).

விளக்கம்:

சைவ சமயத்திற்கு தனிப் பெரும் தலைவனாகவும் குரு நாதனாகவும் இருக்கின்ற இறைவன் அனைத்து உயிர்களும் முக்தியை அடைவதற்காக வகுத்து அருளிய வழி முறையில் அன்பு ஒன்று மட்டுமே இருக்கின்றது. அதுவே தெய்வீகமான இறைவனை அடைவதற்கான வழி முறையாகும். உண்மை வழி முறைகள் அனைத்தும் அதனோடு சேர்ந்தே உலகத்தில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் அதனதன் தகுதிக்கு ஏற்றவாறு பல வழி முறைகளாக பிரித்து வைத்து அருளினான் இறைவன்.