பாடல் #1505

பாடல் #1505: ஐந்தாம் தந்திரம் – 12. தாச மார்க்கம் (இறைவனை எஜமானராகவும் தம்மை அடியவராகவும் பாவிக்கின்ற வழி முறை)

அண்ணலை வானவ ராயிரம் பேர்சொல்லி
யுன்னுவ ருள்மகிழ்ந் துண்ணின் றடிதொழக்
கண்ணவ னென்று கருது மவர்கட்குப்
பண்ணவன் பேரன்பு பற்றிநின் றானே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

அணணலை வானவ ராயிரம பெரசொலலி
யுனனுவ ருளமகிழந துணணின றடிதொழக
கணணவ னெனறு கருது மவரகடகுப
பணணவன பெரனபு பறறிநின றானெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

அண்ணலை வானவர் ஆயிரம் பேர் சொல்லி
உன்னுவர் உள் மகிழ்ந்து உள் நின்று அடி தொழ
கண் அவன் என்று கருதும் அவர்கட்கு
பண் அவன் பேர் அன்பு பற்றி நின்றானே.

பதப்பொருள்:

அண்ணலை (அனைத்திற்கும் எஜமானனாகிய இறைவனை) வானவர் (அடியவர்களாகிய வானவர்கள்) ஆயிரம் (ஆயிரம் விதமான) பேர் (பெயர்களை) சொல்லி (சொல்லி போற்றி)
உன்னுவர் (தமது எண்ணத்திற்குள் வைத்து நினைந்து) உள் (உள்ளம்) மகிழ்ந்து (மகிழ்ந்து) உள் (தமக்குள்) நின்று (நிற்கின்ற) அடி (அவனது திருவடியை) தொழ (தொழுவார்கள்)
கண் (தமது கண்ணுக்கு கண்ணாக இருப்பவன்) அவன் (அவனே) என்று (என்று) கருதும் (எண்ணுகின்ற) அவர்கட்கு (அவர்களுக்கு உள்ளே இருந்து)
பண் (இலயிக்கின்ற இசையைப் போல) அவன் (அந்த இறைவன்) பேர் (மாபெரும்) அன்பு (அன்பு காட்டி) பற்றி (அவர்களை அரவணைத்து) நின்றானே (நிற்கின்றான்).

விளக்கம்:

அனைத்திற்கும் எஜமானனாகிய இறைவனை அடியவர்களாகிய வானவர்கள் ஆயிரம் விதமான பெயர்களை சொல்லி போற்றி தமது எண்ணத்திற்குள் வைத்து நினைந்து உள்ளம் மகிழ்ந்து தமக்குள் நிற்கின்ற அவனது திருவடியை தொழுவார்கள். தமது கண்ணுக்கு கண்ணாக இருப்பவன் அவனே என்று எண்ணுகின்ற அவர்களுக்கு உள்ளே இருந்து இலயிக்கின்ற இசையைப் போல அந்த இறைவன் மாபெரும் அன்பு காட்டி அவர்களை அரவணைத்து நிற்கின்றான்.

பாடல் #1504

பாடல் #1504: ஐந்தாம் தந்திரம் – 12. தாச மார்க்கம் (இறைவனை எஜமானராகவும் தம்மை அடியவராகவும் பாவிக்கின்ற வழி முறை)

அந்திப்பன் திங்க ளதன்பின்பு ஞாயிறு
சிந்திப்ப னென்று மொருவன் செழிகழல்
வந்திப்பன் வானவர் தேவனை நாடோறும்
வந்திப்ப தெல்லாம் வகையின் முடிந்தே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

அநதிபபன திஙக ளதனபினபு ஞாயிறு
சிநதிபப னெனறு மொருவன செழிகழல
வநதிபபன வானவர தெவனை நாடொறும
வநதிபப தெலலாம வகையின முடிநதெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

அந்திப்பன் திங்கள் அதன் பின்பு ஞாயிறு
சிந்திப்பன் என்றும் ஒருவன் செழி கழல்
வந்திப்பன் வானவர் தேவனை நாள் தோறும்
வந்திப்பது எல்லாம் வகையின் முடிந்தே.

பதப்பொருள்:

அந்திப்பன் (காலையிலும் மாலையிலும்) திங்கள் (மனதாலும்) அதன் (அதன்) பின்பு (பிறகு அதற்கு ஏற்றபடி) ஞாயிறு (உடலாலும் வழிபாடு செய்து)
சிந்திப்பன் (சிந்தித்துக் கொண்டே இருப்பேன்) என்றும் (எப்போதும் எமக்கு எஜமானராக இருக்கின்ற) ஒருவன் (ஒருவனையும்) செழி (நினைப்பதை அருளுபவனுமாகிய அவனின்) கழல் (திருவடிகளை)
வந்திப்பன் (போற்றி வணங்குவேன்) வானவர் (வானவர்களுக்கு எல்லாம்) தேவனை (அதிபதியாக இருக்கின்ற இறைவனை) நாள் (தினம்) தோறும் (தோறும்)
வந்திப்பது (இவ்வாறு நான் போற்றி வணங்குவது) எல்லாம் (எல்லாமே) வகையின் (இறைவனை எஜமானராகவும் எம்மை அடியவராகவும் பாவிக்கின்ற) முடிந்தே (வழி முறைப் படியே ஆகும்).

விளக்கம்:

காலையிலும் மாலையிலும் மனதாலும் அதன் பிறகு அதற்கு ஏற்றபடி உடலாலும் வழிபாடு செய்து சிந்தித்துக் கொண்டே இருப்பேன். எப்போதும் எமக்கு எஜமானராக இருக்கின்ற ஒருவனையும் நினைப்பதை அருளுபவனுமாகிய அவனின் திருவடிகளை போற்றி வணங்குவேன். வானவர்களுக்கு எல்லாம் அதிபதியாக இருக்கின்ற இறைவனை தினம் தோறும் இவ்வாறு நான் போற்றி வணங்குவது எல்லாமே இறைவனை எஜமானராகவும் எம்மை அடியவராகவும் பாவிக்கின்ற வழி முறைப் படியே ஆகும்.

பாடல் #1503

பாடல் #1503: ஐந்தாம் தந்திரம் – 12. தாச மார்க்கம் (இறைவனை எஜமானராகவும் தம்மை அடியவராகவும் பாவிக்கின்ற வழி முறை)

அதுவிது வாதிப் பரமென் றகல
மிதுவழி யென்றங் கிறைஞ்சின ரில்லை
விதிவழி யேசென்று வேந்தனை நாடு
மதுவிதி நெஞ்சிற் றழிகின்ற வாறே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

அதுவிது வாதிப பரமென றகல
மிதுவழி யெனறங கிறைஞசின ரிலலை
விதிவழி யெசெனறு வெநதனை நாடு
மதுவிதி நெஞசிற றழிகினற வாறெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

அது இது ஆதி பரம் என்று அகலம்
இது வழி என்று அங்கு இறைஞ்சினர் இல்லை
விதி வழியே சென்று வேந்தனை நாடும்
அது விதி நெஞ்சில் அழிகின்ற ஆறே.

பதப்பொருள்:

அது (அதுவும்) இது (இதுவும்) ஆதி (ஆதியாக இருக்கின்ற) பரம் (பரம் பொருள்) என்று (என்று நினைத்துக் கொண்டு) அகலம் (பரந்து விரிந்து இருக்கின்ற உலகில்)
இது (இதுவே) வழி (இறைவனை அடையும் வழி) என்று (என்று எடுத்துக் கொண்டு) அங்கு (அதன் மூலம்) இறைஞ்சினர் (இறைவனை அடைய முயற்சி செய்கின்றவர்கள்) இல்லை (யாரும் இல்லை)
விதி (தங்களுக்கு விதிக்கப் பட்ட) வழியே (வழியில்) சென்று (சென்று) வேந்தனை (தமக்குள் மறைந்து இருந்து தம்மை ஆளுகின்ற இறைவனை அடியவராக) நாடும் (தேடி அடைகின்ற)
அது (வழி முறையே) விதி (விதி என்று கடைபிடிக்கின்றவர்களின்) நெஞ்சில் (மனதில் இருந்து) அழிகின்ற (ஆசைகளை அழித்து) ஆறே (இறைவனிடம் சேர்க்கின்ற வழி முறை இதுவே ஆகும்).

விளக்கம்:

அதுவும் இதுவும் ஆதியாக இருக்கின்ற பரம் பொருள் என்று நினைத்துக் கொண்டு பரந்து விரிந்து இருக்கின்ற உலகில் இதுவே இறைவனை அடையும் வழி என்று எடுத்துக் கொண்டு அதன் மூலம் இறைவனை அடைய முயற்சி செய்கின்றவர்கள் யாரும் இல்லை. அப்படி இல்லாமல் தங்களுக்கு விதிக்கப் பட்ட வழியில் சென்று தமக்குள் மறைந்து இருந்து தம்மை ஆளுகின்ற இறைவனை அடியவராக தேடி அடைகின்ற வழி முறையே விதி என்று கடைபிடிக்கின்றவர்களின் மனதில் இருந்து ஆசைகளை அழித்து இறைவனிடம் சேர்க்கின்ற வழி முறை இதுவே ஆகும்.

பாடல் #1502

பாடல் #1502: ஐந்தாம் தந்திரம் – 12. தாச மார்க்கம் (இறைவனை எஜமானராகவும் தம்மை அடியவராகவும் பாவிக்கின்ற வழி முறை)

எளியன தீபமிட லலர் கொய்த
லளியின் மெழுக லதுதூர்த்தல் வாழ்த்தல்
பளிபணி பற்றல் பன்மஞ் சனமாதி
தளிதொழில் செய்வது தான்றாச மார்கமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

எளியன தீபமிட லலர கொயத
லளியின மெழுக லதுதூரததல வாழததல
பளிபணி பறறல பனமஞ சனமாதி
தளிதொழில செயவது தானறாச மாரகமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

எளியன தீபம் இடல் அலர் கொய்தல்
அளி இன் மெழுகல் அது தூர்த்தல் வாழ்த்தல்
பளி பணி பற்றல் பன் மஞ்சனம் ஆதி
தளி தொழில் செய்வது தான் தாச மார்கமே.

பதப்பொருள்:

எளியன (தங்களால் இயன்ற வரை) தீபம் (தீபங்களை) இடல் (ஏற்றி வைத்தல்) அலர் (நறுமணமிக்க மலர்ந்த மலர்களை) கொய்தல் (கொய்து அணிவித்தல்)
அளி (இறைவன் இருக்கின்ற) இன் (இடங்களை) மெழுகல் (சாணி பூசி மெழுகி) அது (அந்த இடத்தை) தூர்த்தல் (சுத்தமாக வைத்தல்) வாழ்த்தல் (இறைவனின் புகழ்களை பாடி வாழ்த்துதல்)
பளி (இறைவன் அமர்ந்து வருகின்ற பல்லக்கு) பணி (சேவை செய்வதற்கு) பற்றல் (பல்லக்கின் கழிகளை பற்றிக் கொண்டு வலம் வருதல்) பன் (பல விதமான) மஞ்சனம் (அபிஷேகப் பொருள்களை கொண்டு அபிஷேகம் செய்தல்) ஆதி (முதல் கொண்டு)
தளி (கோயில்களுக்கு) தொழில் (தேவையான தொண்டுகளில் தங்களால் இயன்ற அளவு) செய்வது (செய்து பணி புரிவது) தான் (தான்) தாச (இறைவனை எஜமானராகவும் தம்மை அடியவராகவும் பாவிக்கின்ற) மார்கமே (வழி முறையாகும்).

விளக்கம்:

தங்களால் இயன்ற வரை தீபங்களை ஏற்றி வைத்தல் நறுமணமிக்க மலர்ந்த மலர்களை கொய்து சாற்றுதல் இறைவன் இருக்கின்ற இடங்களை சாணி பூசி மெழுகி அந்த இடத்தை சுத்தமாக வைத்தல் இறைவனின் புகழ்களை பாடி வாழ்த்துதல் இறைவன் அமர்ந்து வருகின்ற பல்லக்கு சேவை செய்வதற்கு பல்லக்கின் கழிகளை பற்றிக் கொண்டு வலம் வருதல் பல விதமான அபிஷேகப் பொருள்களை கொண்டு அபிஷேகம் செய்தல் முதல் கொண்டு கோயில்களுக்கு தேவையான தொண்டுகளில் தங்களால் இயன்ற அளவு செய்து பணி புரிவது தான் இறைவனை எஜமானராகவும் தம்மை அடியவராகவும் பாவிக்கின்ற வழி முறையாகும்.

பாடல் #1501

பாடல் #1501: ஐந்தாம் தந்திரம் – 11. சற்புத்திர மார்க்கம் (இறைவனை உண்மையான தந்தையாக பாவித்து அவனை அடைகின்ற வழி முறை)

திருமன்னுஞ் சற்புத்திர மார்க சரிதை
யுருமன்னி வாழு முலகத்தீர் கேண்மின்
கருமன்னு பாசங் கைகூப்பத் தொழுது
விருமன்னு நாடோறு மின்புற் றிருந்தே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

திருமனனுஞ சறபுததிர மாரக சரிதை
யுருமனனி வாழு முலகததீர கெணமின
கருமனனு பாசங கைகூபபத தொழுது
விருமனனு நாடொறு மினபுற றிருநதெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

திரு மன்னும் சற் புத்திர மார்க சரிதை
உரு மன்னி வாழும் உலகத்தீர் கேண்மின்
கரு மன்னு பாசம் கை கூப்ப தொழுது
இரு மன்னு நாள் தோறும் இன்பு உற்று இருந்தே.

பதப்பொருள்:

திரு (இறை சக்தியானது ஆன்மாவிற்குள்) மன்னும் (நிலை பெற்று இருக்கும்) சற் (இறைவனை தந்தையாக பாவித்து) புத்திர (தம்மை மகனாக பாவிக்கின்ற) மார்க (வழி முறையே) சரிதை (இறைவனை அடைவதற்கு மூல காரணமாக செயல் படுகின்ற வழிமுறையை சொல்லுகிறேன்)
உரு (உடல் இருக்கும் வரை) மன்னி (நிலை பெற்று) வாழும் (வாழுகின்ற) உலகத்தீர் (உலகத்தவர்களே) கேண்மின் (கேளுங்கள்)
கரு (கருவிலேயே) மன்னு (நிலை பெற்று வருகின்ற) பாசம் (பாசத் தளைகளை நீக்கி இறைவனை அடைவதற்கு) கை (இரண்டு கைகளையும்) கூப்ப (ஒன்றாக கூப்பி) தொழுது (இறைவனை தொழுது வணங்கி)
இரு (இறைவனை நினைத்துக் கொண்டே இருப்பதில்) மன்னு (நிலை பெற்று) நாள் (தினம்) தோறும் (தோறும்) இன்பு (அதன் மூலம் கிடைக்கின்ற பேரின்பத்தை) உற்று (அனுபவித்துக் கொண்டே) இருந்தே (இருங்கள்).

விளக்கம்:

இறை சக்தியானது ஆன்மாவிற்குள் நிலை பெற்று இருக்கும் இறைவனை தந்தையாக பாவித்து தம்மை மகனாக பாவிக்கின்ற வழி முறையே இறைவனை அடைவதற்கு மூல காரணமாக செயல் படுகின்ற வழி முறையை சொல்லுகிறேன் உடல் இருக்கும் வரை நிலை பெற்று வாழுகின்ற உலகத்தவர்களே கேளுங்கள். கருவிலேயே நிலை பெற்று வருகின்ற பாசத் தளைகளை நீக்கி இறைவனை அடைவதற்கு அவனை இரண்டு கைகளையும் ஒன்றாக கூப்பி தொழுது வணங்கி அவனை நினைத்துக் கொண்டே இருப்பதில் நிலை பெற்று தினம் தோறும் அதன் மூலம் கிடைக்கின்ற பேரின்பத்தை அனுபவித்துக் கொண்டே இருங்கள்.

பாடல் #1500

பாடல் #1500: ஐந்தாம் தந்திரம் – 11. சற்புத்திர மார்க்கம் (இறைவனை உண்மையான தந்தையாக பாவித்து அவனை அடைகின்ற வழி முறை)

நின்று தொழுவன் கிடந்தெம் பிரான்றன்னை
யென்று தொழுவ னியற்பரஞ் சோதியைத்
துன்று மலர்தூவித் தொழுமின் றொழுந்தோறுஞ்
சென்று வெளிப்படுந் தேவர் பிரானே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

நினறு தொழுவன கிடநதெம பிரானறனனை
யெனறு தொழுவ னியறபரஞ சொதியைத
துனறு மலரதூவித தொழுமின றொழுநதொறுஞ
செனறு வெளிபபடுந தெவர பிரானெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

நின்று தொழுவன் கிடந்து எம் பிரான் தன்னை
என்றும் தொழுவன் இயற் பரஞ் சோதியை
துன்று மலர் தூவி தொழுமின் தொழும் தோறும்
சென்று வெளிப்படும் தேவர் பிரானே.

பதப்பொருள்:

நின்று (மனதை ஒருநிலைப் படுத்தி) தொழுவன் (தொழுகின்றேன்) கிடந்து (எதை செய்தாலும் அதை இறைவனை நினைத்தே செய்கின்றேன்) எம் (எம்) பிரான் (தந்தையாகிய) தன்னை (இறைவனை)
என்றும் (எப்போதும்) தொழுவன் (தொழுது கொண்டே இருக்கின்றேன்) இயற் (தானாகவே இருக்கின்ற) பரஞ் (பரம்பெரும்) சோதியை (சோதியாக இருக்கின்ற இறைவனை)
துன்று (மாசு இல்லாத) மலர் (மலர்களைத்) தூவி (தூவி) தொழுமின் (நீங்களும் தொழுங்கள்) தொழும் (அப்படி தொழுது கொண்டே) தோறும் (எப்போதும் இருக்கின்ற போது)
சென்று (நீங்கள் செய்கின்ற அனைத்திற்குள்ளும் சென்று) வெளிப்படும் (சோதியாக வெளிப்பட்டு அருள்வான்) தேவர் (தேவர்களுக்கும்) பிரானே (தந்தையாக இருக்கின்ற இறைவன்).

விளக்கம்:

எம் தந்தையாகிய இறைவனை மனதை ஒருநிலைப் படுத்தி தொழுகின்றேன் எதை செய்தாலும் அதை அவனை நினைத்தே செய்கின்றேன். தானாகவே இருக்கின்ற பரம்பெரும் சோதியாக இருக்கின்ற அந்த இறைவனை எப்போதும் தொழுது கொண்டே இருக்கின்றேன். உங்களுக்கும் தந்தையாகிய அந்த இறைவனை மாசு இல்லாத மலர்களைத் தூவி நீங்களும் தொழுங்கள் அப்படி தொழுது கொண்டே எப்போதும் இருக்கின்ற போது நீங்கள் செய்கின்ற அனைத்திற்குள்ளும் சென்று சோதியாக வெளிப்பட்டு அருள்வான் தேவர்களுக்கும் தந்தையாக இருக்கின்ற இறைவன்.

பாடல் #1499

பாடல் #1499: ஐந்தாம் தந்திரம் – 11. சற்புத்திர மார்க்கம் (இறைவனை உண்மையான தந்தையாக பாவித்து அவனை அடைகின்ற வழி முறை)

உயர்ந்து பணிந்து முகந்துந் தழுவி
வியந்து மரனடிக் கைமுறை செய்யின்
பயந்தும் பிறவிப் பயனது வாகும்
பயந்தும் பரிக்கிற் பான்நன்மையி னாகுமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

உயரநது பணிநது முகநதுந தழுவி
வியநது மரனடிக கைமுறை செயயின
பயநதும பிறவிப பயனது வாகும
பயநதும பரிககிற பானநனமையி னாகுமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

உயர்ந்து பணிந்தும் உகந்தும் தழுவி
வியந்தும் அரன் அடி கை முறை செய்யின்
பயந்தும் பிறவி பயன் அது ஆகும்
பயந்தும் பரிக்கில் பான் நன்மையின் ஆகுமே.

பதப்பொருள்:

உயர்ந்து (ஒழுக்கத்தில் உயர்ந்து நின்றும்) பணிந்தும் (இறைவனின் திருவடிகளை பணிந்து தொழுதும்) உகந்தும் (அவனுக்கு செய்கின்ற பணிவிடைகளை விரும்பி செய்தும்) தழுவி (இறைவனின் திருவுருவத்தை தழுவிக் கொண்டும்)
வியந்தும் (அதனால் கிடைக்கின்ற இறையனுபவத்தால் வியப்பு அடைந்தும்) அரன் (இறைவனின்) அடி (திருவடிகளுக்கு) கை (தமது கைகளால்) முறை (தொண்டுகளை) செய்யின் (செய்தால்)
பயந்தும் (கிடைக்கின்ற) பிறவி (பிறவிக்கான) பயன் (மேலான பயனாக) அது (அந்த) ஆகும் (தொண்டே இருக்கும்)
பயந்தும் (கிடைத்த அருளினால்) பரிக்கில் (இறைவனை தந்தையாக பாவித்து தொடர்ந்து அந்த தொண்டுகளை செய்து கொண்டே வந்தால்) பான் (தந்தையாக இருந்து அதை செய்ய வைக்கின்ற இறைவனே) நன்மையின் (அதனால் கிடைக்கின்ற அனைத்து நன்மையாகவும்) ஆகுமே (இருக்கின்றான்).

விளக்கம்:

ஒழுக்கத்தில் உயர்ந்து நின்றும் இறைவனின் திருவடிகளை பணிந்து தொழுதும் அவனுக்கு செய்கின்ற பணிவிடைகளை விரும்பி செய்தும் இறைவனின் திருவுருவத்தை தழுவிக் கொண்டும் அதனால் கிடைக்கின்ற இறையனுபவத்தால் வியப்படைந்தும் இறைவனின் திருவடிகளுக்கு தமது கைகளால் தொண்டுகளை செய்தால் அந்த தொண்டே தாம் எடுத்த பிறவிக்கு கிடைக்கின்ற மிகப் பெரும் பயனாக இருக்கும். அப்படி கிடைத்த அருளினால் இறைவனை தந்தையாக பாவித்து தொடர்ந்து அந்த தொண்டுகளை செய்து கொண்டே வந்தால் தந்தையாக இருந்து அதை செய்ய வைக்கின்ற இறைவனே அதனால் கிடைக்கின்ற அனைத்து நன்மையாகவும் இருக்கின்றான்.

பாடல் #1498

பாடல் #1498: ஐந்தாம் தந்திரம் – 11. சற்புத்திர மார்க்கம் (இறைவனை உண்மையான தந்தையாக பாவித்து அவனை அடைகின்ற வழி முறை)

அருங்கரை யாவது அவ்வடி நீழல்
பெருங்கரை யாவது பிஞ்ஞக னாணை
வருங்கரை யேகின்ற மன்னுயிர்க் கெல்லா
மொருங்கரை வாயுல கேழினொத் தானே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

அருஙகரை யாவது அவவடி நீழல
பெருஙகரை யாவது பிஞஞக னாணை
வருஙகரை யெகினற மனனுயிரக கெலலா
மொருஙகரை வாயுல கெழினொத தானெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

அரும் கரை ஆவது அவ் அடி நீழல்
பெரும் கரை ஆவது பிஞ்ஞகன் ஆணை
வரும் கரை ஏகின்ற மன் உயிர்க்கு எல்லாம்
ஒரும் கரை ஆய் உலகு ஏழின் ஒத்தானே.

பதப்பொருள்:

அரும் (சென்று சேருவதற்கு மிகவும் அரியதான) கரை (எல்லையாக) ஆவது (இருப்பது) அவ் (இறைவனின்) அடி (திருவடிகளின்) நீழல் (நிழலாகும்)
பெரும் (பிறப்பு இல்லாத மாபெரும் நிலையை) கரை (பெறுகின்ற எல்லையாக) ஆவது (இருப்பது) பிஞ்ஞகன் (பிறை நிலாவை சூடிக்கொண்டு இருக்கும் இறைவனின்) ஆணை (ஆணைகளாகும்)
வரும் (தத்தமது வினைகளுக்கு ஏற்றபடி வருகின்ற கர்மங்களின்) கரை (எல்லைகளுக்கு) ஏகின்ற (ஏற்றபடி இந்த உலகத்தில்) மன் (நிலை பெற்று வாழுகின்ற) உயிர்க்கு (உயிர்களுக்கு) எல்லாம் (எல்லாம்)
ஒரும் (அவற்றின் வினைகளை தீர்த்துக் கொண்டு சென்று சேரும்) கரை (கரையாக) ஆய் (இருக்கின்ற) உலகு (உலகங்கள்) ஏழின் (ஏழு விதத்திற்கும்) ஒத்தானே (ஒத்து இருக்கின்ற தந்தையாக இறைவனே இருக்கின்றான்).

விளக்கம்:

சென்று சேருவதற்கு மிகவும் அரியதான எல்லையாக இருப்பது இறைவனின் திருவடிகளின் நிழலாகும். பிறை நிலாவை சூடிக்கொண்டு இருக்கும் இறைவனின் ஆணைகளே பிறப்பு இல்லாத மாபெரும் நிலையை பெறுகின்ற எல்லையாக இருக்கின்றன. தத்தமது வினைகளுக்கு ஏற்றபடி வருகின்ற கர்மங்களின் எல்லைகளுக்கு ஏற்றபடி இந்த உலகத்தில் நிலை பெற்று வாழுகின்ற உயிர்களுக்கு எல்லாம் அவற்றின் வினைகளை தீர்த்துக் கொண்டு சென்று சேரும் கரையாக இருக்கின்ற உலகங்கள் ஏழு விதத்திற்கும் ஒத்து இருக்கின்ற தந்தையாக இறைவனே இருக்கின்றான்.

கருத்து:

உயிர்கள் தங்களின் கர்மங்களை தீர்த்துக் கொள்ளவே ஏழு விதமான உலகங்களிலும் தத்தமது வினைகளுக்கு ஏற்ப பிறவிகள் எடுத்துக் கொண்டே இருக்கின்றன. இந்த ஏழு விதமான உலகங்களிலும் எடுக்கின்ற அனைத்து பிறவிகளிலும் தந்தையாக இருந்து காக்கின்ற இறைவனே முக்தி எனும் எல்லையாகவும் இருக்கின்றான்.

பாடல் #1497

பாடல் #1497: ஐந்தாம் தந்திரம் – 11. சற்புத்திர மார்க்கம் (இறைவனை உண்மையான தந்தையாக பாவித்து அவனை அடைகின்ற வழி முறை)

அறுகாற் பறவை யலர்தேர்ந் துழலு
மறுகால் நரையன்னந் தாமரை நீலங்
குறுகார் நறுமலர் கொய்வன கண்டுஞ்
சிறுகா லரனெறி செல்லுகி லாரே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

அறுகாற பறவை யலரதெரந துழலு
மறுகால நரையனனந தாமரை நீலங
குறுகார நறுமலர கொயவன கணடுஞ
சிறுகா லரனெறி செலலுகி லாரெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

அறு கால் பறவை அலர் தேர்ந்து உழலும்
மறு கால் நரை அன்னம் தாமரை நீலம்
குறுகார் நறு மலர் கொய்வன கண்டும்
சிறு கால் அரன் நெறி செல்லு கிலாரே.

பதப்பொருள்:

அறு (ஆறு) கால் (கால்களைக் கொண்ட) பறவை (தேனீக்கள்) அலர் (தேனுள்ள மகரந்த மலர்களை) தேர்ந்து (ஆராய்ந்து தேடி) உழலும் (அலைந்து தேனை சேகரிப்பதையும்)
மறு (இன்னொரு) கால் (வகையில்) நரை (வெள்ளை நிறத்தில் உள்ள) அன்னம் (அன்னப் பறவைகள்) தாமரை (தாமரை மலர்களையும்) நீலம் (நீலோற்பல மலர்களையும் தேடிச் சென்று அதன் தண்டுகளில் இருக்கும் பாலை சேகரிப்பதையும்)
குறுகார் (இறைவனின் அடியவர்கள்) நறு (நறுமணம் மிக்க) மலர் (மலர்களை) கொய்வன (கொய்து மாலையாக கோர்த்து இறைவனுக்கு சாற்றி வணங்கி அருளை சேகரிப்பதையும்) கண்டும் (பார்த்தும்)
சிறு (சிறுது) கால் (காலம் கூட) அரன் (தமக்கு தந்தை போல அரனாக இருக்கின்ற இறைவனின்) நெறி (அருளைப் பெறும் வழியில்) செல்லு (செல்லாமல்) கிலாரே (இருக்கின்றார்கள்).

விளக்கம்:

ஆறு கால்களைக் கொண்ட தேனீக்கள் தேனுள்ள மகரந்த மலர்களை ஆராய்ந்து தேடி அலைந்து தேனை சேகரிப்பதையும் இன்னொரு வகையில் வெள்ளை நிறத்தில் உள்ள அன்னப் பறவைகள் தாமரை மலர்களையும் நீலோற்பல மலர்களையும் தேடிச் சென்று அதன் தண்டுகளில் இருக்கும் பாலை சேகரிப்பதையும் இறைவனின் அடியவர்கள் நறுமணம் மிக்க மலர்களை கொய்து மாலையாக கோர்த்து இறைவனுக்கு சாற்றி வணங்கி அருளை சேகரிப்பதையும் பார்த்தும் சிறுது காலம் கூட தமக்கு தந்தை போல அரனாக இருக்கின்ற இறைவனின் அருளைப் பெறும் வழியில் செல்லாமல் இருக்கின்றார்கள்.

பாடல் #1496

பாடல் #1496: ஐந்தாம் தந்திரம் – 11. சற்புத்திர மார்க்கம் (இறைவனை உண்மையான தந்தையாக பாவித்து அவனை அடைகின்ற வழி முறை)

பூசித்தல் வாசித்தல் போற்றல் சேவித்திட
லாசற்ற நற்றவம் வாய்மை யழுக்கின்மை
நேசித்திட் டன்னமு நீர்சுத்தி செய்தல்மற்
றாசற்றல் சற்புத்திர மார்க மாமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

பூசிததல வாசிததல பொறறல செவிததிட
லாசறற நறறவம வாயமை யழுககினமை
நெசிததிட டனனமு நீரசுததி செயதலமற
றாசறறல சறபுததிர மாரக மாமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

பூசித்தல் வாசித்தல் போற்றல் சேவித்திடல்
ஆசு அற்ற நல் தவம் வாய்மை அழுக்கு இன்மை
நேசித்து இட்ட அன்னமும் நீர் சுத்தி செய்தல் மற்று
ஆசு அற்றல் சற் புத்திர மார்கம் ஆமே.

பதப்பொருள்:

பூசித்தல் (பூஜை செய்தல்) வாசித்தல் (மந்திரங்களை பாடுதல்) போற்றல் (போற்றி வணங்குதல்) சேவித்திடல் (தரிசனம் செய்தல்)
ஆசு (குற்றம்) அற்ற (இல்லாத) நல் (நன்மையான) தவம் (தவத்தை மேற்கொள்ளுதல்) வாய்மை (உண்மையே பேசுதல்) அழுக்கு (அழுக்கு) இன்மை (இல்லாமல் சுற்றுப் புறத்தையும் தம்மையும் சுத்தமாக வைத்தல்)
நேசித்து (அன்போடு) இட்ட (சமைத்து வைத்த) அன்னமும் (உணவை நைவேத்யமாக படைத்தல்) நீர் (நீரினால்) சுத்தி (சுத்தம்) செய்தல் (செய்து சமர்ப்பணம் செய்தல்) மற்று (ஆகிய இவை அனைத்தையும்)
ஆசு (தாம் செய்கின்றோம் என்கின்ற எண்ணம்) அற்றல் (இல்லாமல் இருந்து செய்வதே) சற் (உண்மையான தந்தையாக இறைவனையும்) புத்திர (அவரின் பிள்ளையாக தன்னையும் பாவித்து) மார்கம் (அவனை அடைகின்ற வழி முறை) ஆமே (ஆகும்).

விளக்கம்:

இறைவனை உண்மையான தந்தையாக பாவித்து அவருக்கு பூஜை செய்தல், மந்திரங்களை பாடுதல், போற்றி வணங்குதல், தரிசனம் செய்தல், குற்றம் இல்லாத நன்மையான தவத்தை மேற்கொள்ளுதல், உண்மையே பேசுதல், அழுக்கு இல்லாமல் சுற்றுப் புறத்தையும் தம்மையும் சுத்தமாக வைத்தல், அன்போடு சமைத்து வைத்த உணவை நைவேத்யமாக படைத்தல், நீரினால் சுத்தம் செய்து சமர்ப்பணம் செய்தல் ஆகிய இவை அனைத்தையும் தாம் செய்கின்றோம் என்கின்ற எண்ணம் இல்லாமல் இருந்து செய்வதே இறைவனின் பிள்ளையாக தன்னை பாவித்து அவனை அடைகின்ற வழி முறை ஆகும்.