பாடல் #904

பாடல் #904: நான்காம் தந்திரம் – 1. அசபை (உச்சரிக்கப் படாமல் மூச்சுக்காற்றோடு சேர்ந்து இயக்கும் மந்திரம்)

திருவம் பலமாகச் சீர்ச்சக் கரத்தைத்
திருவம் பலமாக ஈராறு கீறித்
திருவம் பலமாக இருபத் தைஞ்சு
திருவம் பலமாச் செபிக்கின்ற வாறே.

விளக்கம்:

இறைவன் திருக்கூத்தாடுகின்ற திருவம்பலத்தை ஸ்ரீ சக்கரமாக வடிவமைக்க மேலிருந்து கீழாக ஆறு கோடுகளும் இடமிருந்து வலமாக ஆறு கோடுகளும் வரைந்தால் அதில் இருபத்தைந்து கட்டங்கள் வரும். இந்த கட்டங்களுக்குள் சிவயநம எனும் மந்திர எழுத்துக்களை மாற்றி எழுதி அதை உச்சரிக்காமல் ஜெபிக்க சாதகரின் உடம்பு இறைவன் திருக்கூத்து ஆடுகின்ற திருஅம்பலமாகும்.

குறிப்பு: இப்பாடலில் வரும் ஸ்ரீசக்கரம் என்பது புடம் செய்யப்பட்ட கட்டம் வரைந்து சிவயநம என்னும் எழுத்தை எழுத தகுதிவாய்ந்த உலோகத்தை குறிக்கும்.

பாடல் #905

பாடல் #905: நான்காம் தந்திரம் – 1. அசபை (உச்சரிக்கப் படாமல் மூச்சுக்காற்றோடு சேர்ந்து இயக்கும் மந்திரம்)

வாறே சிவாய நமச்சி வாயநம
வாறே செபிக்கில் வரும்பேர் பிறப்பில்லை
வாறே அருளால் வளர்கூத்துக் காணலாம்
வாறே செபிக்கில் வருஞ்செம்பு பொன்னே.

விளக்கம்:

பாடல் 904ல் உள்ளபடி சிவயநம என்ற மந்திரத்தை இடைவிடாது பல காலம் உச்சரிக்காமல் மூச்சுக்காற்றோடு சேர்த்து ஜெபித்தால் பிறப்பில்லாத நிலையை அடையலாம். இறைவன் அருளால் திருவம்பலக் கூத்தின் தரிசனம் காணலாம். சாதகரின் செம்பு போன்ற கடினமான உடல் பொன் போல் ஜொலிக்கின்ற ஒளி உடம்பு ஆகிவிடும்.

பாடல் #906

பாடல் #906: நான்காம் தந்திரம் – 1. அசபை (உச்சரிக்கப் படாமல் மூச்சுக்காற்றோடு சேர்ந்து இயக்கும் மந்திரம்)

பொன்னான மந்திரம் புகலவும் ஒண்ணாது
பொன்னான மந்திரம் பொறிகிஞ்சு கத்தாகும்
பொன்னான மந்திரம் புகையுண்டு பூரிக்கிற்
பொன்னாக வல்லோர்க் குடம்புபொற் பாதமே.

விளக்கம்:

பாடல் #904 இல் உள்ளபடி ஸ்ரீ சக்கரத்தில் பொறிக்கப்படும் சிவயநம எனும் மந்திரம் பொன் போன்ற மந்திரமாகும். அந்த மந்திரத்தை வாயால் உச்சரிக்காமல் மூச்சுக்காற்றோடு சேர்த்து ஜெபித்தால் உடலுக்குள் இருக்கும் ஐம்புலன்களும் இறையருளால் செம்மையாகும். அதன் பிறகு மந்திரத்தோடு இழுக்கப்பட்ட மூச்சுக்காற்றை உடம்பின் அனைத்து பகுதிக்கும் செலுத்தக்கூடிய சாதகர்களின் உடம்பே இறைவனின் பொன்னான பாதங்களாக மாறும்.

பாடல் #907

பாடல் #907: நான்காம் தந்திரம் – 1. அசபை (உச்சரிக்கப் படாமல் மூச்சுக்காற்றோடு சேர்ந்து இயக்கும் மந்திரம்)

பொற்பாதம் காணலாம் புத்திர ருண்டாகும்
பொற்பாதத் தாணையே செம்புபொன் னாயிடும்
பொற்பாதங் காணத் திருமேனி யாயிடும்
பொற்பாத நன்னடஞ் சிந்தனை சொல்லுமே.

விளக்கம்:

பாடல் #906 இல் உள்ளபடி சாதகர்களின் உடம்பே இறைவனின் பொன்னான பாதங்களாக மாறிய பிறகு இறைவனும் தானும் வேறில்லை எனும் ஞானம் கிடைக்கும். இறைவனின் திருவடி மேல் ஆணையாக செம்பு போன்ற உடல் பொன் போன்ற ஒளி உடம்பாகும். இறைவனின் திருவடிகளை தமக்குள் தரிசிக்க இறைவனின் திருஉருவமே தாமாக உணரலாம். அவ்வாறு தரிசித்த சாதகர்களுக்கு பேரறிவு ஞானம் அடையும் வழிகள் சிந்தனையாக கிடைக்கும்.

பாடல் #908

பாடல் #908: நான்காம் தந்திரம் – 1. அசபை (உச்சரிக்கப் படாமல் மூச்சுக்காற்றோடு சேர்ந்து இயக்கும் மந்திரம்)

சொல்லு மொருகூட்டிற் புக்குச் சுகிக்கலாம்
நல்ல மடவார் நயந்துட னேவருஞ்
சொல்லினும் பாசச் சுடர்ப்பாம்பு நீங்கிடுஞ்
சொல்லுந் திருக்கூத்தின் சூக்குமமுந் தானே.

விளக்கம்:

பாடல் #907 இல் உள்ளபடி சாதகருக்கு கிடைத்த சிந்தனைகளை செயல்படுத்தினால் உடலை விட்டு ஆத்மா வெளியே சென்று பேரின்பத்தை அனுபவிக்கும். சாதகரின் உடலை விட்டு ஆன்மா வெளியே சென்றாலும் ஆன்மாவிற்கும் நல்ல உடலுக்குமான இணைப்பு விட்டு பிரியாமல் தானாகவே இணைந்து இருக்கும். இதனால் பாசமாகிய பற்று அறுந்து குண்டலினி சக்தி உடலைவிட்டு வெளியே சென்று பாடல் #858 இல் உள்ளபடி தலைக்கு மேல் இருக்கும் சந்திரமண்டலத்தோடு இணைந்துவிடும். இதனால் கிடைக்கும் ஞானம் இறைவன் ஆடுகின்ற திருக்கூத்துகளின் சூட்சுமங்களாகும்.

குறிப்பு: நல்ல உடல் என்பது பாடல் #902 இல் உள்ளபடி சாதகருக்கு கிடைக்கும் பொன் போன்ற ஒளி உடம்பாகும்.

பாடல் #909

பாடல் #909: நான்காம் தந்திரம் – 1. அசபை (உச்சரிக்கப் படாமல் மூச்சுக்காற்றோடு சேர்ந்து இயக்கும் மந்திரம்)

சூக்குமம் எண்ணா யிரஞ்செபித் தாலுமேற்
சூக்கும மான வழியிடைக் காணலாஞ்
சூக்கும மான வினையைக் கெடுக்கலாஞ்
சூக்கும மான சிவனதா னந்தமே.

விளக்கம்:

பாடல் #908 இல் உள்ளபடி திருக்கூத்தின் சூட்சுமமாக இருக்கும் சிவயநம மந்திரத்தை அறிந்து எட்டாயிரத்திற்கும் மேலான எண்ணிக்கையில் உச்சரிக்காமல் மூச்சுக்காற்றோடு சேர்த்து ஜெபிக்கும் சாதகர்கள் இறைவனை அடையும் சூட்சுமமான பாதையை காண்பார்கள். அந்த பாதையில் செல்லும் சாதகர்கள் தங்களின் பல ஜென்மங்களாக தொடரும் சூட்சுமமான வினைகளை அழித்துவிடலாம். வினைகள் அழிந்த பின் இறைவனை உணர்ந்து பேரின்பத்தில் திளைத்திருக்கலாம்.

பாடல் #910

பாடல் #910: நான்காம் தந்திரம் – 1. அசபை (உச்சரிக்கப் படாமல் மூச்சுக்காற்றோடு சேர்ந்து இயக்கும் மந்திரம்)

ஆனந்த மென்றென் றறைந்திட மானந்த
மானந்த மாயீயூ யேயோமென் றைந்திட
மானந்த மஞ்சு மாதாயிடு மானந்த
மானந்த மம்மிரீ மம்க்ஷமா மாகுமே.

ஒலைச் சுவடியில் உள்ள திருமந்திர பாடலை எளிதாக படிக்க பிரித்து கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஆனந்தம் என்று என்று அறைந்த இடம் ஆனந்தம்
ஆனந்தம் ஆ ஈ ஊ ஏ ஓம் என்ற ஐந்து இடம்
ஆனந்தம் அஞ்சும் அது ஆயிடும் ஆனந்தம்
ஆனந்தம் அம்-ஹ்ரீம்-ஹம்-க்ஷம்-ஹாம் ஆகுமே.

விளக்கம்:

பாடல் எண் 909 இல் உள்ளபடி கிடைத்த பேரின்பம் என்று அழைக்கப்படுகின்ற அனைத்தும் அடங்கியிருக்கும் இடமே பேரின்பமாகும். இந்த பேரின்பம் ஆ, ஈ, ஊ, ஏ, ஓம் ஆகிய ஐந்து ஆதார மந்திரங்களில் அடங்கியிருக்கின்றது. இந்த ஐந்து மந்திரங்களும் பேரின்பத்தின் வடிவமாக இருக்கின்றது. இந்த ஐந்து மந்திரங்களின் ஒலி வடிவமாக அம், ஹ்ரீம், ஹம், க்ஷம், ஹாம் ஆகிய ஐந்து பீஜங்கள் இருக்கிறன.

பாடல் #911

பாடல் #911: நான்காம் தந்திரம் – 1. அசபை (உச்சரிக்கப் படாமல் மூச்சுக்காற்றோடு சேர்ந்து இயக்கும் மந்திரம்)

மேனி யிரண்டும் விலங்காமன் மேற்கொள்ள
மேனி யிரண்டு மிகாரவி காரியா
மேனி யிரண்டுமூ வாயியே யோவென்று
மேனி யிரண்டுமீ யோவூவா வேகூத்தே.

ஒலைச் சுவடியில் உள்ள திருமந்திர பாடலை எளிதாக படிக்க பிரித்து கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மேனி இரண்டும் விலங்காமல் மேற்கொள்ள
மேனி இரண்டும் மிகார விகாரியா
மேனி இரண்டும் ஊ ஆ ஈ ஏ ஓ என்று
மேனி இரண்டும் ஈ ஓ ஊ ஆ ஏ கூத்தே.

விளக்கம்:

இறைவனது சொரூபமும் உயிர்களுடைய ஆன்மாவின் சொரூபமும் ஒன்றை விட்டு ஒன்று விலகிவிடாமல் மூச்சுக்காற்றோடு சேர்த்து ஜெபிக்கும் போது இறைவனது சொரூபமும் சாதகருடைய ஆன்மாவின் சொரூபமும் ஒன்றுக்கு ஒன்று அளவில் மாறுபடாமலும் ஒன்றோடு ஒன்று வேறுபடாமலும் இருக்கும். இறைவனது சொரூபமானது ஊ ஆ ஈ ஏ ஓ ஆகிய ஐந்து ஆதார மந்திரங்களாகவும் உயிர்களுடைய ஆன்மாவின் சொரூபமானது ஈ ஓ ஊ ஆ ஏ ஆகிய ஐந்து ஆதார மந்திரங்களாகவும் இருக்கின்றது. சாதகர்கள் இந்த மந்திரங்களை உச்சரிக்காமல் ஜெபிக்கும் போது இரண்டு சொரூபமும் ஒன்றாக கலப்பதே திருக்கூத்து ஆகும்.

குறிப்பு: இறைவனது சொரூபம் அனைத்திலும் கலந்திருக்கும் பேரொளியாகும். ஆன்ம சொரூபம் என்பது ஒவ்வொரு உயிர்களுடைய சிறிய ஒளி உருவமாகும். இறைவனது பேரொளியும் ஆன்மாவின் சிறிய ஒளியும் ஒன்றாக பாவித்து சாதகம் செய்யும் போது இறையருளால் ஆன்ம ஒளியானது பேரொளியால் காந்தம் போல் கவர்ந்திழுக்கப்பட்டு ஒன்றாக கலப்பதே திருக்கூத்தாகும்.

பாடல் #912

பாடல் #912: நான்காம் தந்திரம் – 1. அசபை (உச்சரிக்கப் படாமல் மூச்சுக்காற்றோடு சேர்ந்து இயக்கும் மந்திரம்)

கூத்தே சிவாய நமமசி வாயிடுங்
கூத்தே யாயீயூ யேயோ நமசிவாய வாயிடுங்
கூத்தே யோவாவீ யூயே யநமசிவா வாயிடுங்
கூத்தே யேயோவா யீயூவா யநமசி கோளொன்றுமாறே.

ஒலைச் சுவடியில் உள்ள திருமந்திர பாடலை எளிதாக படிக்க பிரித்து கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கூத்தே சிவாயநம மசிவா ஆயிடும்
கூத்தே ஆ ஈ ஊ ஏ ஓம் நமசிவாய ஆயிடும்
கூத்தே ஓம் ஆ ஈ ஊ ஏ யநமசிவா ஆயிடும்
கூத்தே ஏ ஓம் ஆ ஈ ஊ வாயநமசி கோளொன்றும் ஆறே.

விளக்கம்:

இறைவன் ஆடுகின்ற திருக்கூத்தே சிவாயநம என்னும் மந்திரமாக இருக்கின்றது. இந்த மந்திரத்திற்கான ஆதார எழுத்துக்கள் ஊ ஏ ஓம் ஆ ஈ எனும் ஐந்து எழுத்து வடிவங்களாக இருக்கின்றது. இதை பாடல் 904 இல் உள்ளபடி மேலிருந்து கீழாக ஆறு கோடுகளும் இடமிருந்து வலமாக ஆறு கோடுகளும் வரைந்து எழுத்துக்களை மாற்றி மாற்றி அமைத்தால் வரும் திருவம்பலத்தை சக்கரமாக வடிவமைத்தால் அதில் ஒன்பது கோள்களும் அடங்கி இருக்கும்.

குறிப்பு: பாடலில் உள்ளபடி சக்கரம் அமைத்து ஆதார மந்திரங்களை உச்சரிக்காமல் மூச்சுக்காற்றோடு சேர்ந்து இயக்கும் சாதகர்களுக்கு ஒன்பது கோள்களும் இறையருளால் வசப்படும்.

பாடல் #913

பாடல் #913: நான்காம் தந்திரம் – 1. அசபை (உச்சரிக்கப் படாமல் மூச்சுக்காற்றோடு சேர்ந்து இயக்கும் மந்திரம்)

ஒன்றி லிரண்டாட வோரொன் றுடமாட
வொன்றினின் மூன்றாட வோரேழு மொத்தாட
வொன்றினி னாலாட வோரொன் பதுமாட
மன்றினி லாடினான் மாணிக்கத்து கூத்தே.

ஒலைச் சுவடியில் உள்ள திருமந்திர பாடலை எளிதாக படிக்க பிரித்து கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஒன்றில் இரண்டு ஆட ஓர் ஒன்று உடன் ஆட
ஒன்றினில் மூன்று ஆட ஓர் ஏழும் ஒத்து ஆட
ஒன்றினிர் நால் ஆட ஓர் ஒன்பதும் ஆட
மன்றினில் ஆடினான் மாணிக்கத்து கூத்தே.

விளக்கம்:

அசையா சக்தியாக இருக்கின்ற இறைவன் அசையும் சக்தியோடு சிவசக்தியாக ஆடுகின்ற போது அவரோடு சேர்ந்து அண்டசராசரங்கள் அனைத்தும் ஆடுகின்றன. அசபை மூலம் சாதகம் செய்யும் சாதகர்களின் ஆன்மாவும் சிவசக்தியோடு சேர்ந்து ஆட அவர்களின் உடலிலுள்ள ஏழு சக்கரங்களும் அந்த சக்திகளோடு சேர்ந்து ஒன்றாக இணைந்து ஆடுகின்றது. நான்கு திசைகளும் ஒன்பது கோள்களும் சேர்ந்து இறைவன் அண்டசராசரத்தில் ஆடுகின்ற திருக்கூத்தே சாதகரின் உடலாகிய பிண்டத்தில் இறையருள் நிறைந்து மாணிக்க ஜோதியாக திருக்கூத்தாடும்.