பாடல் #614

பாடல் #614: மூன்றாம் தந்திரம் – 8. தியானம் (தியான வகைகளும், செய்யும் முறைகளும்)

இளைக்கின்ற நெஞ்சத் திருட்டறை உள்ளே
முளைக்கின்ற மண்டலம் மூன்றினும் ஒன்றித்
துளைப்பெரும் பாசந் துருவிடு மாகில்
இளைப்பின்றி மார்கழி ஏற்றம தாமே.

விளக்கம்:

அறியாமை என்னும் மாயையால் மனம் தளர்ந்து இருளாக இருக்கின்றது. அந்த இருள் நீங்க மூன்று சக்கரங்களிலும் (மூலாதாரம், ஆக்ஞா, சகஸ்ரதளம்) தியானம் செய்து முதுகுத்தண்டு வழியாக குண்டலினியை மேலே ஏற்றி அறியாமை நீங்கப் பெறலாம். அப்படிச் செய்தால் மும்மலங்களான ஆணவம், கன்மம், மாயை ஆகிய இருள்கள் நீங்கி ஏற்றம் பெறலாம்.

பாடல் #615

பாடல் #615: மூன்றாம் தந்திரம் – 8. தியானம் (தியான வகைகளும், செய்யும் முறைகளும்)

முக்குண மூடற வாயுவை மூலத்தே
சிக்கென மூடித் திரித்துப் பிடித்திட்டுத்
தக்க வலமிடம் நாழிகை சாதிக்க
வைக்கும் உயிர்நிலை வானவர் கோனே.

விளக்கம்:

மூன்று குணங்களான இராஜசம் (கோபம்) தாமசம் (சமரசம்) சாத்வீகம் (சாந்தம்) ஆகியவற்றால் ஏற்படும் மாயை என்னும் இருள் நீங்க தினமும் அதிகாலையில் ஒரு நாழிகை (24 நிமிஷம்) நேரம் மூலாதாரத்திலுள்ள காற்றை இடகலை பிங்கலை நாடிகள் (பாடல் #567 இல் உள்ளபடி) வழியாக மூச்சுப்பயிற்சி செய்தால் உடம்பில் உயிரை அழியாது சிவபெருமான் வைப்பார்.

பாடல் #616

பாடல் #616: மூன்றாம் தந்திரம் – 8. தியானம் (தியான வகைகளும், செய்யும் முறைகளும்)

நடலித்த நாபிக்கு நால்விரல் மேலே
மடலித்த வாணிக் கிருவிரல் உள்ளே
கடலித் திருந்து கருதவல் லார்கள்
சடலத் தலைவனைத் தாமறிந் தாரே.

விளக்கம்:

தொப்புள் குழியிலிருந்து நாலு அங்குலத்திற்கு மேலும் நெஞ்சுக்குழிக்கு இரண்டு அங்குலத்திற்கு உள்ளேயும் உள்ள இடத்தில் மனதை வைத்துத் தியானம் செய்யக் கூடியவர்களுக்கு அங்கே இருக்கும் உடலின் தலைவனான இறைவனை அறிய முடியும்.

பாடல் #617

பாடல் #617: மூன்றாம் தந்திரம் – 8. தியானம் (தியான வகைகளும், செய்யும் முறைகளும்)

அறிவாயசத் தென்னு மாறா றகன்று
செறிவான மாயை சிதைத்தரு ளாலே
பிறியாத பேரரு ளாயிடும் பெற்றி
நெறியான அன்பர் நிலையறிந் தாரே.

விளக்கம்:

மனம் தியானத்தில் நிலைக்கப் பெற்றால் நிலையில்லாத முப்பத்தாறு தத்துவங்கள் நீங்குவதை உணரலாம். வலிமையான மாயை சிவனருளாலே அழியும். அந்த சிவபெருமானை விட்டு என்றும் பிரியாதிருக்கும் பேரருளைப் பெற்றிடலாம். தியானத்தின் வழியை விட்டு விலகாமல் செல்பவர்கள் இந்த நிலையை உணர்ந்திடலாம்.

குறிப்பு: திருமந்திரம் – பாடல் #467 ல் முப்பத்தாறு தத்துவங்கள் பற்றி அறிந்து கொள்ளலாம்.

https://www.kvnthirumoolar.com/பாடல்-467/

பாடல் #588

பாடல் #588: மூன்றாம் தந்திரம் – 7. தாரணை (பிரத்தியாகாரம் மூலம் உள்ளே ஒருநிலைப்படுத்திய மனதை நிலைத்திருக்க வைத்தல்)

கோணா மனத்தைக் குறிக்கொண்டு கீழ்க்கட்டி
வீணாத்தண் டூடே வெளியுறத் தானோக்கிக்
காணாக்கண் கேளாச் செவியென் றிருப்பார்க்கு
வாணாள் அடைக்கும் வழியுமது வாமே.

விளக்கம்:

பிரத்தியாகாரம் மூலம் உள்ளே ஒருநிலைப்படுத்திய மனதை மீண்டும் முன்பு இருந்தபடி அலைபாயவிடாமல் வைத்து மனக் கண்ணை முதுகெலும்பின் வழியே செல்லும் சுழுமுனை சென்றுசேரும் இடமாகிய தலை உச்சிக்குச் சிறிது மேலே (தோராயமாக 9 அங்குலம் அளவு) உள்ள வெற்று இடத்தில் வைத்து கண்ணால் காணும் காட்சிகளும் காதால் கேட்கும் ஒலிகளும் மனதை பாதிக்காத வண்ணம் உணர்வில்லாமல் இருந்தால் இந்தப் பிறவியின் ஆயுள் முடியாமல் இருக்கலாம்.

பாடல் #589

பாடல் #589: மூன்றாம் தந்திரம் – 7. தாரணை (பிரத்தியாகாரம் மூலம் உள்ளே ஒருநிலைப்படுத்திய மனதை நிலைத்திருக்க வைத்தல்)

மலையார் சிரத்திடை வானீர் அருவி
நிலையாரப் பாயும் நெடுநாடி யூடுபோய்ச்
சிலையார் பொதுவில் திருநட மாடுந்
தொலையாத ஆனந்தச் சோதிகண் டேனே.

விளக்கம்:

மலை போன்ற தலையின் உச்சியில் வானத்திலிருந்து வரும் மழை போல அமிர்தம் எப்போதும் பொழிந்துகொண்டு இருக்கின்ற சுழுமுனை நாடியின் வழியாக மனதைச் செலுத்தி அம்பலத்தில் ஆடும் சிவபெருமானின் என்றும் தெவிட்டாத பேரின்பம் தரும் ஆனந்தக் கூத்தைக் கண்டேன்.

பாடல் #590

பாடல் #590: மூன்றாம் தந்திரம் – 7. தாரணை (பிரத்தியாகாரம் மூலம் உள்ளே ஒருநிலைப்படுத்திய மனதை நிலைத்திருக்க வைத்தல்)

மேலை நிலத்தினாள் வேதகப் பெண்பிள்ளை
மூல நிலத்தில் எழுகின்ற மூர்த்தியை
ஏல எழுப்பி இவளுடன் சந்திக்கப்
பாலனும் ஆவான் பார்நந்தியின் ஆணையே.

விளக்கம்:

மூலாதாரத்தில் இருக்கும் குண்டலினியாகிய இறைவனை சுழுமுனை வழியே மேல் நோக்கி எடுத்துச் சென்று தலை உச்சியிலிருக்கும் சகஸ்ரதளத்தில் இருக்கும் சக்தியுடன் சேர்த்துவிட்டால் அமுதம் சுரந்து அதன் விளைவாக வயதானவரும் வாலிபனாக மாறி என்றும் இளமையுடன் இருப்பார். இது உலகாளும் நந்தியின் ஆணை.

பாடல் #591

பாடல் #591: மூன்றாம் தந்திரம் – 7. தாரணை (பிரத்தியாகாரம் மூலம் உள்ளே ஒருநிலைப்படுத்திய மனதை நிலைத்திருக்க வைத்தல்)

கடைவாச லைக்கட்டிக் காலை எழுப்பி
இடைவாசல் நோக்கி இனிதுள் இருத்தி
மடைவாயிற் கொக்குப்போல் வந்தித் திருப்பார்க்
குடையாமல் ஊழி இருக்கலு மாமே.

விளக்கம்:

மூலாதாரத்திலிருக்கும் துவாரமாகிய மலத்துவாரத்தை இறுக்கி வைத்து உள்ளே இழுத்த மூச்சுக்காற்றை முதுகெலும்பின் வழியே செல்லும் சுழுமுனை வழியே செலுத்தி தொப்புளுக்குக் கீழே இருக்கும் மூன்று சக்கரங்களின் நடுவில் மனதை வைத்து இறையருளால் கிடைக்கும் ஒளியை அடையும் வரை இறைவனை வணங்கி இருப்பவர்களுக்கு உலகம் அழியும் காலம் வரை உடல் அழிவின்றி இருக்க முடியும்.

பாடல் # 592

பாடல் #592: மூன்றாம் தந்திரம் – 7. தாரணை (பிரத்தியாகாரம் மூலம் உள்ளே ஒருநிலைப்படுத்திய மனதை நிலைத்திருக்க வைத்தல்)

கலந்த உயிருடன் காலம் அறியில்
கலந்த உயிரது காலின் நெருக்கங்
கலந்த உயிரது காலது கட்டிற்
கலந்த உயிருடன் காலமும் நிற்குமே.

விளக்கம்:

உயிருடன் கலந்த உடலினுள்ளே செல்லும் மூச்சுக்காற்றைத் தெரிந்துகொண்டு அந்த மூச்சுக்காற்றுடன் உயிருக்கும் உடலுடக்கும் நெருக்கத்தை ஏற்படுத்தி அந்த மூச்சுக்காற்றை வெளியே சென்றுவிடாமல் அடக்கி வைத்திருந்தால் அந்த மூச்சுக்காற்று உயிருடன் கலந்த உடலோடு எப்போதும் கலந்து இருக்கும்.

பாடல் #593

பாடல் #593: மூன்றாம் தந்திரம் – 7. தாரணை (பிரத்தியாகாரம் மூலம் உள்ளே ஒருநிலைப்படுத்திய மனதை நிலைத்திருக்க வைத்தல்)

வாய்திற வாதார் மனத்திலோர் மாடுண்டு
வாய்திறப் பாரே வளியிட்டுப் பாய்ச்சுவர்
வாய்திற வாதார் மதியிட்டு மூட்டுவர்
கோய்திற வாவிடிற் கோழையு மாமே.

விளக்கம்:

பேசாமல் மெளன நிலையில் இருப்பவர்களின் மனதில் பிராணன் என்னும் பெரும் செல்வம் உள்ளது. அவ்வாறு மெளன நிலையில் இல்லாமல் பேசிக்கொண்டே இருப்பவர்கள் அந்தப் பிராணனாகிய செல்வத்தை வீணாக்குகின்றார்கள். பேசாமல் மெளன நிலையில் இருப்பவர்கள் தங்கள் அறிவை அந்தப் பிராணனாகிய செல்வத்தின் மீது செலுத்தி அதை சுழுமுனை வழியாகத் தலை உச்சியிலிருக்கும் சகஸ்ரதளத்திற்கு கொண்டு சென்று அந்தச் செல்வத்தை அடைவார்கள். அவ்வாறு பிராணனாகிய செல்வத்தை சுழுமுனை வழியாக மேலே உள்ள சகஸ்ரதளத்திற்குக் கொண்டு செல்லும் பயிற்சியை செய்யாமல், பெரும் செல்வத்தை மட்டும் அடைய நினைப்பவர்கள் கோழையாவார்கள்.