அனைத்து உயிர்களுடனும் கலந்திருக்கும் இறைவனை எண்ணிலடங்காத தேவர்கள் தினந்தோறும் போற்றித் தொழுகின்ற இறைவனை தத்துவங்களைக் கடந்து அனைத்திற்கும் தலைவனாக இருக்கும் இறைவனை பக்கத்தில் இருந்தாலும் அறிந்துகொள்ள முடியாத இறைவனை யாம் அவனுள் அடங்கி நின்று அவனைத் தியானித்து அவன் புகழைப் போற்றி உரைப்போம்.
இறைவனைப் போற்றிப் புகழ்ந்து, இசைத்துப் பாடும் அடியவர்களின் உள்ளத்தில் வீற்றிருக்கும் புனிதமானவனும் நான்கு திசைகளுக்கும் (உலகமனைத்திற்கும்) நன்மை புரியும் மாதுவாகிய சக்திக்குத் தலைவனானவனும். மேற்கூறிய நான்கு திசைகளுக்குள் தென் திசைக்கு தலைவனானவனும் காலத்தின் அதிபதியான எமனை எட்டி உதைத்ததால் காலத்தை வென்றவனும் ஆகிய இறைவனை யான் கூறிகின்றேன்.
இறைவன் ஒருவனே அவனைத்தவிர வேறு தெய்வங்கள் இல்லை. அதாவது உலகத்தில் உள்ள அனைத்து தெய்வங்களும் அண்டசராசரங்களும், அதிலுள்ள அனைத்தும் இறைவன் ஒருவனாகவே இருக்கின்றான்.
ஒன்றாக இருக்கும் இறைவனின் அருளானது இரண்டாக இருக்கின்றது. அசையா சக்தியான இறைவனின் அருள் அவனிடமிருந்து அசையும் சக்தியாக வெளிப்படுகிறது. அதாவது எப்படி கசப்பான மருந்தும் இனிப்பான மருந்தும் நோயைக் குணப்படுத்துகிறதோ அதுபோலவே இன்பம் துன்பம் ஆகிய இரண்டும் இறைவனின் அருளாகும்.
இரண்டாக இருக்கும் இறைவனே பிரம்மன், விஷ்ணு, சிவன் ஆகிய மூன்று தெய்வங்களாகவும் நின்று படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய மூன்றுவிதமான தொழில்களையும் புரிகின்றான்.
மூன்றாய் நின்ற இறைவனே உயிர்கள் தன்னை அறிந்துகொள்ள வேண்டும் என்கிற மாபெரும் கருணையில் ரிக், யஜூர், சாம, அதர்வண ஆகிய நான்கு விதமான வேதங்களாகவும் நிற்கின்றான்.
நான்கு வேதங்களாக இருக்கும் இறைவனே நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் ஆகிய ஐந்து பூதங்களகவும் இருக்கின்றான். அதாவது தெய்வம் அருளும் ஐந்து வகை தொழில்களாகிய படைத்தல், காத்தல், மாயையால் மறைத்தல், அருளல், மாயையை அழித்தல் ஆகிய ஐந்தின் தலைவன் அவன் ஒருவனே.
ஐம்பூதங்களாக இருக்கும் இறைவனே உயிர்களின் உடலில் மூலாதாரம், சுவாதிட்டானம், மணிப்பூரகம், அநாகதம், விசுத்தம், ஆஞ்ஞை ஆகிய ஆறு சக்கரங்களாக விரிந்து இருக்கின்றான்.
ஆறு சக்கரங்களாக விரிந்திருக்கும் இறைவனே மூலாதாரத்தில் குண்டலினி சக்தியாக இருந்து யோகங்கள் புரிவதன் மூலம் ஆறு சக்கரங்களுக்கும் மேலேறி ஏழாவது சகஸ்ரரதளத்திற்கு சென்று அதையும் தாண்டி பரவெளியில் உறைந்திருக்கின்றான்.
ஏழு சக்கரங்களிலும் உறைந்திருக்கும் இறைவனை தனக்குள்ளே உணர்ந்து உயிர்கள் அவனை எட்டுதலே முக்தியாகும்.
இந்து (நிலவின்) இளம் (வளரும்) பிறை (பிறை) போலும் (போன்ற) எயிற்று (கொம்புகளை) அனை (கூர்மையாக உடையவனும்)
நந்தி (குருவாக இருக்கின்ற இறைவனின்) மகன் (மகனாக) தனை (இறை தன்மையாகவே இருப்பவனை) ஞான (உண்மை ஞானத்தின்) கொழுந்தினை (உச்சமாகவும் இருப்பவனை)
புந்தி (எமது அறிவுக்கு) இல் (உள்ளே) வைத்து (வைத்து) அடி (அவனது திருவடிகளை) போற்றுகின்றேனே (யான் எப்போதும் போற்றி வணங்குகின்றேன்).
விளக்கம்:
ஐந்து கரங்களையே ஐந்து பூதங்களாக (நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம்) கொண்டவனும், உலகத்தையே தனது திருமுகமாக கொண்டவனும், இளப் பிறை நிலாவைப் போன்ற கூர்மையான கொம்புகளை உடையவனும், குருவாக இருக்கின்ற இறைவனின் மகனாக இறை தன்மையாகவே இருப்பவனும், உண்மை ஞானத்தின் உச்சமாகவும் இருப்பவனை எமது அறிவுக்கு உள்ளே வைத்து அவனது திருவடிகளை யான் எப்போதும் போற்றி வணங்குகின்றேன்.
இப்பாடலில் 3 ஆவது அடிக்கான பொருளை நேரடியாக புரிந்து கொள்வது சிறிது கடினம். கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவில் விளக்கமாக கொடுக்கப்பட்டுள்ளது.
திருமந்திரத்தின் மூலப் பாடல்கள் 3,046 மட்டுமன்றி பிற்சேர்க்கைகளான 62 பாடல்களும் சேர்த்து மொத்தம் 3,108 பாடல்களுக்கு அருமையான இசையில், கம்பீரமான வெண்கலக் குரலில் பாடி அருளிய தெய்வத்திரு. வீர மணிகண்டன் ஐயா அவர்களுக்கு நன்றிகூறி அவர் வழங்கிய “திருமூலர் அருளிய திருமந்திரம்” என்னும் இசைப் பாடல்கள் தொகுப்பை அனைவரும் கேட்டுப் பயன்பெற இங்கே முழுமையாக வழங்குகின்றோம்.
தொகுப்பு: திருமூலர் அருளிய திருமந்திரம்
பாடியவர்: தெய்வத்திரு. வீர மணிகண்டன்
இசைத்தவர்: தெய்வத்திரு. வீர மணிகண்டன்
வெளியீடு: திருமந்திர தமிழிசை
அனைத்து பாடல்களையும் பதிவிறக்க கீழ்க்கண்ட இணைப்பை சொடுக்கவும்:
12-9-2005 அன்று நடந்த மூல நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:
கேள்வி: எவ்வழியில் ஆண்டவனை அடைய முயற்சித்தல் வேண்டும்? யோக நிலையா பக்தி நிலையா இல்லையேல் ஞான நிலையா என்பதே கேள்விகள் ஆகின்றது.
எவர் எவர்க்கு எம் மார்க்கம் எளிதாக தோன்றுகிறதோ அதனை ஏற்றுக் கொள்ளலாம். பொதுவாக ஓர் கட்டிடம் என்றால் அதற்கு இரண்டு அல்லது மூன்று வழிகள் காணக்கூடும். எவ்வழியில் செல்கின்ற போதிலும் உள்ளே செல்ல முடியும். இருப்பினும் நமக்கு எளிதாக தொல்லை தராத வழியை நாடிப் பயன் படுத்துவதே நல்ல முறையாகின்றது. அனைவருக்கும் யோக நிலைகள் நலம் தருவதாகக் காணாது. ஏனெனில் உடல்கூறு மனநிலை என்பதெல்லாம் தடையாகக் காணலாம்.
பக்தி மார்க்கத்தில் மந்திரங்கள் ஜெபித்து எளிதாக சிலரால் இறைவனை அடைய இயலுகின்றது. இவ்விதமே இசையும் ஓர் பக்தியின் வழியாகவே யாம் காண்கின்றோம். இறைவனை நன்று துதித்துப் பாடினால் அவன் (இறைவன்) வராது இருக்க மாட்டான் என்பதே எமது கருத்தாகின்றது. இக்கலியுக தன்மையில் பெரும் யோகங்கள் யோக பயிற்சிகள் தவநிலைகள் என்பதெல்லாம் எளிதில் கடை பிடிக்க இயலாது என்கின்றதால் இக்காலத்திற்கு எளியவழி பக்தி மார்க்கமும் நாம கீர்த்தனமும் என்பதேயாகும் என்று இங்கு எடுத்துரைக்கின்றோம். இருப்பினும் திடமும் நம்பிக்கையும் உயர்ந்திருந்தால் யோக நிலையை கை கொள்வதில் தவறாகாது. எளிதான முறையைச் செப்பிவிட்டோம். இவைகளில் தேர்ச்சி செய்வீர்களாக.
ஞானமார்க்கம் என செப்பிக்கொண்டால் பல குழப்பங்கள் நேரிடல் காணக்கூடும். ஏனெனில் பலர் பலவிதத்தில் உபதேசிப்பர். எது சரி எது தவறு என்பதனை தேடிக் கண்டு பயன் அடைவதற்குமுன் இஜ் ஜென்மமும் மூடிவிடும் என்பதே நிலை. இந்நிலையில் யோகம் இல்லையேல் பக்தி மார்க்கங்களில் செல்வதே நலம்தரும் என்றும் செப்பினோமே.
15-8-2005 அன்று நடந்த மூல நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:
கேள்வி: ஒரே சமயத்தில் ஒரு ஸ்தலம்தனில் அமர்ந்து தியானம் செய்தல் வேண்டும். இல்லையேல் சாதனை புரிதல் வேண்டும் என்பது விதியா? விதியாயிருந்தால் இது ஏன்?
இது ஓர் சிறப்பான வினாவாகிறது. உடல் சூட்சுமம் ஸ்தூலம் பின்பு ஆன்மா என பிரித்துப் பார்த்தால் எளிதாகும். ஸ்தூல உடலுக்கு நாம் உணவு அளிக்கின்றோம். குறிப்பிட்ட காலங்களில் அமர்ந்து உண்ணுகின்றோம். உண்ணும் காலம் நெருங்க வயிற்றினில் பசிக்கின்றது. உண்டபின் பசி மறைகின்றது. இதற்கு காரணம் நாட (தேட) அச்சமயத்தில் உடலுக்கு உணவு வேண்டும் என பழக்கம் ஏற்படுகின்றது. இவ்விதமே ஒரே சமயத்தில் ஓர் ஸ்தலம்தனில் அமர்ந்து தியானம் செய்திட சூட்சும உடலுக்கும் ஆன்மாவிற்கும் உணவு அளிப்பது போல் ஆகின்றது. இவ்விதமே பழகிட குறித்த காலங்களில் அமர்ந்தே ஆகுதல் வேண்டும் என்ற எண்ணம் உண்டாகும் என்பது மட்டும் அல்லாது பழகிட்ட ஸ்தலத்தில் அமர்ந்திட்ட போதே மனம் ஒரு நிலைப்பாடு காணும். சதா தியானம் ஜபம் செய்கின்றவர்க்கு இது அவசியமில்லை. அவ்விதம் தியானம் செய்கின்றவர் குறைவே. இது கலியுகத் தன்மை பொதுவாக ஆன்மீக முன்னேற்றம் நாடுவோர் ஒரு ஸ்தலம் தேர்ந்து எடுத்து குறித்த சமயங்களில் தியானம் கூட நன்மைகள் ஏற்படும் என அறிவுரை அளித்தோம்.
பெற்றவர்கள் செய்திடும் குற்றங்களுக்குப் பின்பு அவர்கள் மக்கள் அவதிப்படுவார்கள் என்பது உண்மையான நிலையா என ஒருவர் வினாவக் கண்டோம்.
இதற்கு யாம் எளிதாக விடை அளித்திட இயலும். இக்காலத்தில் பெற்றவன் ஒருவன் கள்வனாக மாறி களவு செய்ததற்காக மகனை தண்டிக்க இயலாது. இவ்விதமே கர்ம நிலையும் அவரவர் கர்மங்கள் அவரவர் அனுபவித்துக் கழித்தல் வேண்டும் என்பதே விதி. இருப்பினும் கூட்டுக் குடும்பங்கள் என்கின்ற நிலையில் சில பிரச்சினைகள் உருவாகின்றது. உதாரணமாக பெற்றவர்கள் நோயுற்றவர்கள் எனக் கண்டு கொண்டால் இதன் விளைவாக மக்களும் சிறிது பாதிக்கப்படுகின்றனர். இதற்குக் காரணம் என்னவென்றால் பந்தமே என்றும் இங்கு எடுத்துரைப்போமே. தனியாக அவதிப்படுவதில்லை. ஆனால் பந்தம் கொள்ள பாசம் கொள்ள சிறு வேதனைகள் உருவாகின்றது. இதுவும் தன்னுடைய கர்மங்கள் தீர்த்திடவே இத்தகைய பெற்றோரின் குடும்பத்தில் வந்து பிறக்கின்றான் என்பதே விதியாகின்றது. இதேபோல நல்ல பெற்றோர்கள் தீய புத்திரனை பெற்று அவதிப்படுகின்றனர் இதுவும் அதே காரணமாம். பெற்றவர்களின் கர்மங்களை தீர்க்க அத்தகைய மகன் அக்குடும்பத்தில் பிறக்கின்றான். இருப்பினும் பெற்றவர்களின் தீய கர்மத்தால் புத்திரர்கள் பிற்காலத்தில் அவதிப்படுவார்கள் என கூறுவது தவறாகும். அவரவர் கர்மங்கள் அவரவர் தீர்த்தல் வேண்டும் என்றும் விளக்கிட்டோமே.
22-6-2005 அன்று நடந்த மூல நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:
கேள்வி: இந்து மதத் தெய்வங்களுக்கு மட்டும் ஏன் எட்டு கரங்கள் பத்து கரங்கள்? அக் கரங்களில் ஆயுதம் எதற்கு? என்ற வினா பொதுவாக கேட்கின்றோம்.
சிந்தித்தால் இதற்கு விடை எளிதாக கிட்டும் என்றும் இங்கு விளக்கிடுவோம். எட்டு திக்குகளும் காக்க வல்லவர்களாக இருப்பதால் எட்டு கரங்கள் அவர்களை சுற்றி இருக்கின்றன என்றும் ஒவ்வொரு கரங்களிலும் ஓர் ஆயுதம் காப்பை (பாதுகாப்பு) குறிக்கின்றது என்றும் இங்கு செப்பிட்டோமே. மற்ற இரண்டு கரங்கள் இருந்தால் அது நன்றாகப் பார்த்தால் மேலும் கீழும் இருக்கும். அது காக்க வல்லதாம் என்றும் இங்கு எடுத்துரைப்போமே. அது பொதுவாக அபயம் என்றும் கொடுத்தல் வாங்கல் என்றும் செப்புவார்கள். உண்மையான நிலை மேலும் கீழும் காக்குதல் என்பதேயாகும்.
இரண்டாவது கேள்வி: முக்கியத்துவம் காணும் ஒரு கேள்வியானது பெரும் அளவில் பெரிதான விநாயகர் சிறு எலி மேல் ஏன் அமர்ந்து கொள்கின்றார் என்பதேயாகின்றது.
இதற்கு விடை ஒன்று அகங்காரம்தனை சிறிதாக்கி அதற்கு மேல் அமர்ந்து நாமும் அதேபோல் செய்தல் வேண்டும் என முதல் தெய்வம் சுட்டிக் காட்டுகின்றார். ஆதியில் இதை செய்தால் ஒழிய ஞானத்தில் முன்னேற்றம் காணாது என எடுத்துரைக்கின்றார். இரண்டாவது யோக நெறியில் சிந்திக்க அஷ்டமா சித்திகள் கை கொண்டால் பெரிய உருவமும் சிறு உருவத்தின் மேல் லேசாக அமர இயலும் என்றும் ஓங்காரம் அதாவது பிராணமும் ஓங்காரமும் இணைந்து உள் அடக்க எதையும் சாதிக்க இயலும் என்பதையும் சுட்டிக் காட்டுகின்றார். இதனை அனைவரும் நன்கு சிந்தித்து மேலும் இரண்டு விளக்கங்கள் கண்டு பிடிப்பீர்களாக.