நான்கு முகங்களோடு தாமரை மலரை இருப்பிடமாகக் கொண்டு அமர்ந்திருக்கும் பிரம்மனும் கருமையான நிறத்தோடு பாற்கடலை இருப்பிடமாகக் கொண்டு படுத்திருக்கும் திருமாலும் ஊழிக்காலத்தில் அழிவின் தலைவனாக இருக்கும் உருத்திரனும், உயிர்களின் உடலாகவும் உயிராகவும் உயிரின் உணர்வாகவும் உயிர்களுடனே கலந்து இருக்கும் மாபெரும் பரம்பொருளாகிய சதாசிவமூர்த்தியின் தன்மையை ஒத்தவர்கள் ஆக முடியாது.
அண்டங்கள் அனைத்தலும் இரண்டறக்கலந்து எழுந்து நின்ற மாபெரும் தீப்பிழம்பான பரம்பொருள் உயிர்கள் தம்மை நாடி வந்து சேர பெருங்கருணை கொண்டு உண்மையான வழிமுறைகளை கொடுத்து உலகத்துப்பொருட்கள் எல்லாவற்றிலும் கலந்து உலா வருகிறது. இறைவனை அடையவேண்டும் என்ற உயர்ந்த குறிக்கோளுடன் அந்த உண்மையான வழிமுறைகளை பின்பற்றினால் எல்லாவற்றிலும் கலந்திருக்கும் அடிமுடி காண முடியாத பரம்பொருள் இறைவனை உணரலாம்.
உட்கருத்து: அடிமுடி காண முடியாத அளவு மிகப்பெரும் மகோன்னதம் மிக்கவனாக இறைவன் காட்டிய நெறி வழிகளைப் பின்பற்றி சென்றால் எல்லாவற்றிலும் கலந்திருக்கும் அடிமுடி காண முடியாத பரம்பொருள் இறைவனை உணரலாம்.
ஒளிபொருந்திய உடலைக் கொடுத்த இறைவனை வழிபடுகின்ற தேவர்கள் எம்மைப் போல இறைவனிடம் தம்மையே ஒப்படைத்தாலும் இறைவனின் தன்மையை அறிய மாட்டார்கள். இறைவனிடம் தன்னைக் கொடுத்தால் இறைவனை அறியலாம். தன்னைக் கொடுத்தவர்க்கு இறைவனும் தன்னையும் தந்து பேரின்பத்தையும் தருவான். அந்த இன்பத்திலேயே மூழ்கித் தம்மை மறந்துவிடாதபடி வலிமை பெறும் பொருட்டு தம் திருவடியையும் தருகிறான் இறைவன். ஆனால் தேவர்கள் யாம் இறைவனின் திருவடியை சார்ந்திருப்பதைப்போல தேவர்கள் இறைவனின் திருவடியைச் சார்ந்திருக்கவில்லை.
22-3-2006 அன்று நடந்த மூல நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:
வானம் போல் தியானம் செய் என்று கூறுகின்றனர் அதன் பொருள் என்ன?
பொதுவாக மானிடன் வழிபடும் போது வானத்தை நோக்கி கை கூப்புகின்றான். இதற்குக் காரணம் என்ன என அறிதல் வேண்டும். மற்ற மதத்தோர் வானகத் தந்தை என்றும் அழைக்கின்றனர். இறைவன் வானத்திலிருந்து இறங்கி வருகின்றவனா என்றெல்லாம் குழப்பம் காண்பது நியாயமே. இதற்கு யோக நெறியில் விளக்கம் கண்டால் எளிதாகப் புரியும் என்று கூறுகின்றோம். மனித உடல் எனக் கண்டு கொண்டால் வானமானது சகஸ்ரரத்தின் மேலாகும். எப்பொழுது மனிதனின் எண்ணங்கள் அச்சகஸ்ரர நிலையை எட்டுகின்றதோ அன்று அவன் இறைவனை அடைந்தான் எனக் கூற இயலும். இத்தகைய நிலையில் வானத்தில் இறைவன் இருக்கின்றான் என்றும் அவ்வானத்தை நோக்கி மக்கள் வழிபடுகின்றனர் என்றும் எடுத்துரைத்தோம். இதற்கு மற்றொரு காரணம் உண்டாம் ஆதி காலங்களில் வெளிச்சம் தரும் சூரியனே தெய்வம் என்று மக்கள் எண்ணிட மேல் நோக்கியே வணங்கினர். இச்சம்பிரதாயமானது இக்காலத்தில் தொடங்கியது என்றும் கூறுகின்றோமே. இன்று யாம் இதை மட்டும் கூறுவோம். இருப்பினும்ம் இங்கு கூடியுள்ளோர் இதற்கு மேலான விளக்கங்களை சிந்தித்தல் வேண்டும் என்றென ஆர்வமாக இருக்கின்றோம்.
26-1-2006 அன்று நடந்த மூல நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:
கேள்வி: கர்ம வினை என்று சொல்கிறார்கள். கர்மம் என்றால் செயல். செயலுக்கு உண்டான வினை அதற்குரிய விளைவு உடனடியாக இருக்கிறது இந்தக் கலிகாலத்தில். இருந்த போதிலும் வேதங்கள் சொல்லுவதாவது நீங்கள் போன ஜென்மத்தில் செய்தது தான் இந்த ஜென்மத்தில் கஷ்டப்படுகிறீர்கள் என்று அது ஏன்? வேதம் சொல்வது சரியா? அல்லது நாம் பார்ப்பது சரியா?
ஒரே நேரத்தில் மூன்று விதைகள் விதைக்கின்றோம். ஒன்று கீரை இரண்டாவது நெல் மூன்றாவது பனை. மூன்றும் ஒரே நேரத்தில் தான் விதைக்கின்றோம். கீரையானது பதினைந்து நாட்களிலிருந்து ஒரு மாதத்திற்குள் அதனுடைய பலனைக் கொடுக்கிறது. நெல்லானது அதனுடைய பலனை ஆறு மாதத்தில் கொடுக்கிறது. ஆனால் பனையானது மூன்று தலைமுறைகள் கழித்துத் தான் அதனுடைய பலனைக் கொடுக்கிறது. அதனால் நாம் என்ன வினையைச் செய்கின்றோமோ அதனைப் பொறுத்துத்தான் அதனுடைய விளைவுகள் இருக்கும். ஆதலால் இந்த ஜென்மத்தில் செய்வது உடனடியாக கிடைக்கின்றது. ஜென்மாந்திரமாக வருவது பெரிய வினை. இக்காலத்தில் கிடைப்பது உடனடியாக மாற்றக்கூடிய வினைகள். இதை வைத்துத்தான் அரசன் அன்றே கொல்வான் தெய்வம் நின்று கொல்லும் என்று வினையை வைத்துப் பொதுவாகச் சொல்லியிருக்கின்றார்கள். பெரும் வினையென்றால் தாமதித்துத்தான் விளைவுகள் இருக்கும்.
30-12-2005 அன்று நடந்த மூல நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்
கேள்வி: நமக்குள் இறைவன் குடிகொண்டிருக்கிறான் எனில் நாம் எதற்கு ஆலயங்களிலிலும் உருவங்களிலிலும் இறைவனை நாட வேண்டும்?
இறைவன் அனைவருக்குள்ளும் உள்ளான் என்பது உறுதியானது. எந்த அளவிற்கு உள்ளான் என்பதே வினாவாகும். இதனை யாம் நன்கு ஆராய்ந்த பின் இவ்விடையையும் இங்கு அளிக்க சித்தம் கண்டோம். தூய்மை வேண்டும் நல்வழியில் பல ரூபங்கள் வேண்டும் என்கிறது மானிடனின் நிலை. ஏனெனில் அகக்கண் திறக்கும் வரை புறக்கண்ணே மேலானது என்கின்ற நிலைதான். தமது கண்களில் காண்பதே உண்மை என எண்ணுகின்றான் மானிடன். இவ்விதமே வேள்விகள் ஹோமங்கள் என்பதெல்லாம் துவங்கின. கண்ணால் காணும் சூரிய பகவானைத் தெய்வமாகக் கண்டு அவன் உண்ணும் வகைகளை அவனுக்கும் படைத்தான். சிறிது நேரம் சென்ற பின் பார்க்கும் போது படைத்தது அங்கேயே இருக்கக்கண்டு திகைத்தனர். அச்சூரிய பகவானின் அனல் தரும் வடிவத்திற்கு இங்கு ஈடானது அக்னி எனக் கண்டு அக்கினியை வளர்த்து அதில் படைத்ததை இட்டனர். இதன் வழியாக தெய்வம் ஏற்றுக் கொண்டது என ஓர் கணக்கு கண்டு வேள்விகள் துவங்கின. இதுவே உண்மை நிலையாகும். இதற்குப் பிறகு பலப்பல வடிவங்கள் மனதில் தோன்ற அவ்வித வடிவங்களை உருவாக்கிப் பிரதிஷ்டை என்கின்ற ஒரு சக்தியையும் அளித்து வணங்கத் துவங்கினர். இவ்விதம் இருக்க மனதில் பலப்பல உருவங்களைக் குறைத்து ஒன்று அல்லது இரு உருவமாக்கிப் பின் அதுவும் மறைந்து மனிதன் தனக்குள் சென்று அவன் ஆத்மாவுடன் கலந்து ஆனந்தம் காணுதல் வேண்டும். இதுவே இறைநிலை என்பது உண்மை நிலையாகும். அந்த உண்மை நிலை வர பல காலங்கள் பல ஜென்மங்கள் வேண்டும் என்கின்ற விதியும் உண்டு. அக்காலம் வரும் வரை உறுதியாக மனிதனும் மூர்த்திகளை வணங்கிப் படிப்படியாக அம்மூர்த்திகளை விட்டு விலகுதல் வேண்டும்.
இது பாசம் கொடுத்து பின்பு பாசத்தை அறுத்தல் வேண்டும் என்கின்ற தத்துவமாகின்றது. அதாவது மனிதன் பிறக்கும் பொழுதே சிறு நாட்களிலேயே பாசமதன் உணர்வை அறிகின்றான். பிறவியில் அன்னையின் நாமத்தைக் கூறுகின்றான் பின்பு அன்னையுடன் ஒட்டுகின்றான் பின்பு பெற்றவரை அறிகின்றான் பின்பு சகோதரர்கள் பெற்றவர்களின் தாய் தந்தையர் என அனைவரையும் அறிந்து அப்பாசத்தில் தழுவுகின்றான். சிறிது காலம் செல்ல தெய்வம் என்கின்ற ஓர் நிலையை அறிந்து தெய்வத்துடன் பாசத்தைக் காட்டுகின்றான். இப்பாசமதை அறுத்து வெளி பூசைகள் அனைத்தையும் அகற்றி உள் செல்லுதல் வேண்டும் என்பது எளிதான காரியம் அல்ல. அந்நிலை அடைந்தோர்க்கு சீராகும் அனைத்தும். அந்நிலை அடையும் வரை வெளி பூஜைகள் அவசியம் என்றும் இங்கு செப்புவோம். ஆலயங்கள் என்பது முன்பு கூறியது போல் குருடர்களுக்கு உள்ள கொம்பைப் போல ஆன்மீகத்தில் சில குருடு நிலை உள்ளோர்க்கு ஆலயங்கள் அவசியம் என்றும் இங்கு யாம் உறுதியாகக் கூறிக் கொண்டோமே.
மேலாக முன்பு ஒன்று கூறியுள்ளோம் ஆலயங்கள் ஆகமவிதியில் கட்டப்படுவதால் அங்கு சில விசேஷமான கதிர் ஒளிகள் பரவும் இதில் அமர்ந்தால் பல வகையில் நமக்கு ரோக மாற்றங்கள் மனநிலை மாற்றங்கள் ஏற்படுகின்றது. இதை மறுக்க இயலாது. இதன் காரணமாகவே கிராமத்தில் அனைவரும் ஆலயத்தில் சிறிது நேரம் போய் அமர்ந்து கொண்டு வருவது உண்டு. இக்காலத்தில் இதை யாம் காணவில்லை இருப்பினும் விசித்திரமாக இக்கால இளைஞர்கள் படிப்படியாக மீண்டும் இறைவனை நாடத் துவங்கி உள்ளனர். இவர்களுக்கு யாம் கூறுவது மெதுவாக படிப்படியாக முதலில் ஓர் மூர்த்தி என்கின்றதை அடையச் செய்து அதனை ஆராதனை புரிந்து அதற்குரியதை அளித்துச் சிறப்பாக பூசித்து வர நன்மைகள் உண்டாகும் என்றும் இங்கு விளக்கினோம். அதனை விட்டு விட்டு இது ஏன்? எதற்கு? என வினா கேட்டுக் கொண்டிருந்தால் காலங்கள் செல்லுமே தவிர ஞானம் கிட்டாது என்கின்ற ஓர் நிலையும் உண்டு.
சாஸ்திரங்கள் கூறுவது போல ரூபத்திலிருந்து அரூபம் செல்லுதல் வேண்டும். ஸ்தூலத்தை முதலில் அறிந்து பின்பு சூட்சுமத்தை அறிதல் வேண்டும். முதலில் உன் உடலை அறிந்து பின்பு உள்ளிருக்கும் இறைவனை அறிதல் வேண்டும். மண்ணை அறிந்து அதனுள் உள்ள சத்தை அறிதல் வேண்டும். இந்த தத்துவம் விளக்கிடவே மசானம் என்பது நம் புராணங்களிலும் இக்காலத்திலும் மகத்துவம் காண்கிறது. மண்ணால் படைக்கப்பட்டது மீண்டும் மண்ணாகிறது என்கின்றது ஒரு தத்துவம். இதில் எதுவும் நித்யம் இல்லை. அவ்விதம் இருக்கும் போது அம் மண் கல் என்கின்றதால் தீட்டப்பட்ட மூர்த்திகள் எவ்விதம் நித்யமாக இருத்தல் கூடும்? மனிதன் பூசிக்கும் வரை நித்யம் பின்பு அநித்யம். இதை நிரூபிக்கும் வகையில் பல பாழடைந்த ஆலயங்கள் நம் நாட்டில் உள்ளன. இது இத்தத்துவத்திற்கு எடுத்துக் காட்டாக உள்ளது. இந்நிலையில் யாம் கூறும் பூஜைகள் வீணாகுவதில்லை இவை அனைத்தும் நம் மனம் ஒருநிலைப்படுத்த உபயோகிக்கப்படும் பல வழிகள் முழுமையான நம்பிக்கையுடன் செய்தவர்களுக்கு எவ்வித குறைகளும் நேரிடாது நன்மைகள் பெரிதாகும் என்றும் இங்கு எடுத்துரைத்தோம்.
3-12-2005 அன்று நடந்த மூல நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:
கேள்வி: குடிக்க நீர் அல்லவா கேட்டோம் ஏன் இவ்விதம் வெள்ளப் பெருக்கு உண்டாகிறது?
குடிக்க நீர் கேட்டது உண்மை இதை யாம் மறுக்கவில்லை. இருப்பினும் மானிடர்கள் இயற்கையிடம் பெருமளவில் விளையாட்டு காட்டுகின்றனர். காரணமின்றி மரங்களை அழிப்பத. பூமியிலிருக்கும் கால்வாய்கள் நீர் செல்லும் வழிகள் அடைத்து வீடுகள் கட்டுவது. இவையாவும் பூமிக்கும் அதாவது பஞ்ச பூதங்களுக்கும் பொறுக்கவில்லை என அறிந்து கொள்ளுங்கள். இக்காலம் வரை பொறுமை கண்ட அவர்கள் திருப்பி அவர்களின் வலிமையை காட்டத் துவங்கினர். இதன்வழி உலகெங்கும் இந்நாட்டில் மட்டுமல்ல பூமியால் அக்கினியால் வெள்ளத்தால் ஏன் இனி வருங்காலங்களில் ஆகாயம் வாயு வழியாகவும் பல தீமைகள் உண்டாக உள்ளது. இயற்கையின் விதி என்பதை அறிந்து கொள்ளுதல் வேண்டும்.
அனைவரும் பிரார்த்தனை செய்திருந்தால் இயற்கையின் வலிமையை குறைத்திருக்கலாம். இதன் முக்கியத்துவத்தை எவரும் அறியாது இதற்கென பிரார்த்தனை செய்ததாக யாம் காணவில்லை. மக்களை காக்குங்கள் என்கின்ற ஓர் அலறலோ யாம் இன்று வரை கேட்கவில்லை. இது வருந்துதலுக்குரிய ஒர் காரியமாகிறது. ஏனெனில் நாம் மிருகங்களை பார்த்துக் கொண்டாலும் பூச்சிகளை பார்த்துக் கொண்டாலும் இவை மற்றொன்றுக்கு ஆபத்து என்றால் உடனடியாக சேர்ந்து காக்க முயற்சிக்கின்றது. தீனி கிடைத்திட அனைவரையும் அழைத்து பங்கிடுகிறது. இறைவன் படைப்பில் மானிடன் மட்டும் மாறிவிட்டான். இவன் பங்கிடுவதில்லை ஏனெனில் இன்று பங்கிட்டால் மீண்டும் பங்கிற்கு வருவானோ என்கின்ற அச்சம். இதுவும் உண்மை தான் கலிகால தன்மை அவ்விதமே உதவி செய்தால் உதவி செய்கின்றவன் ஏமாளி எனக்கருதி அவனிடம் எவ்வளவிற்கு வசூல் செய்யலாம் என பார்க்கின்றனர்.
இத்தகைய நிலையில் எவரை யாம் குற்றம் சூட்டுவது என எமக்கே அறியவில்லை. எல்லாம் இறைவனின் விளையாட்டு என்றே எடுத்துக் கொண்டோம்.
5-11-2005 அன்று நடந்த மூல நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:
கேள்வி: நாகம் ஒன்றில் தவக்களையை வாயில் இருப்பதைக் கண்டால் தவக்களையை காப்பாற்றினால் நாகத்தின் உணவை பறித்த பாவமும் அப்படியே விட்டு விட்டால் தவக்களையின் உயிரை போக்கிய பாவமும் உண்டு இந்நிலையில் பாவ புண்ணிய நிலைகளை எவ்விதம் அறிவது?
இயற்கையின் வழியில் ஓர் ஜீவனுக்கு மற்றோர் ஜீவன் இரையாகின்றது. நாம் உண்ணும் போது செடி கொடி கீரை வகைகள் பழ வகைகள் மரக்கறி வகைகள் நமக்கு உணவாகின்றன. பெரும் மிருகங்களுக்கு சிறு மிருகங்கள் இரையாகின்றது. இது இயற்கையின் விதி என்பதால் அவ்விதம் நடக்கட்டும். இதில் நமது குறிக்கீடு தேவையற்றதாம். நாம் செய்யும் பணிகள் சீராகவும் நலம் தரும் வகையிலும் செய்வதே போதுமானது. இதுவே எமது விளக்கம் ஆகின்றது.
பாடல் #380: இரண்டாம் தந்திரம் – 8. அடிமுடி தேடல் (இறைவனது மகோன்னதம்)
ஊழி வலஞ்செய்தங் கோரும் ஒருவற்கு
வாழி சதுமுகன் வந்து வெளிப்படும்
வீழித் தலைநீர் விதித்தது தாவென
ஊழிக் கதிரவன் ஒளியைவென் றானே.
விளக்கம்:
ஊழிக்காலம் முடிந்ததும் இறைவனை சரணடைந்து ஒளி உடலோடு வாழும் அடியவர்களில் ஒருவரை நான்கு முகங்கள் கொண்டு படைத்தல் தொழில் புரியும் பிரம்மனின் தொழிலை செய்ய இறைவன் தேர்ந்தெடுக்கின்றான். புதியதாக பிரம்மனின் தொழில் பெற்ற அடியவரும் இறைவனை நாடி வந்து என்ன வேலை செய்ய வேண்டும் என்று அதைத் தந்தருளுங்கள் என்று வேண்டிக்கொள்ள ஊழிக்காலத்தில் அனைத்தையும் சுட்டெரிக்கும் சூரியனையும் மிஞ்சி நிற்கும் மாபெரும் ஒளியாகிய இறைவனும் அவருக்கு படைக்கும் தொழிலைக் கொடுத்து அருளினான்.
குறிப்பு: பிரம்மன் திருமால் மற்றும் உலக தொழில்கள் செய்யும் தேவர்கள் அனைவருமே பல காலமாக இறைவனின் அடியவர்களாக இருந்து தவம் புரிந்தவர்கள்தான். தற்போது இருக்கும் பிரம்மன் திருமால் மற்றும் உலக தொழில்கள் செய்யும் தேவர்களின் பதவிக்காலம் முடிந்ததும் அடுத்த அடியவர்களுக்கு அந்த தொழிலை செய்யும் தகுதி இறைவனது திருவருளால் கிடைத்ததும் அவர்களுக்கு ஏற்ற தொழிலை இறைவன் கொடுத்து அருளுகின்றார்.
ஊழிக்காலத்தில் மனித உடலின் எலும்புகளையும் மண்டையோடுகளையும் மாலையாகத் தரித்து எழுந்தருளும் இறைவன் வீரர்களுக்கெல்லாம் மிகச் சிறந்த வீரனும் மணிமுடி சூடிய விண்ணுலகத் தேவர்களுக்கெல்லாம் முதன்மையானவனும் ஆவான். ஊழிக்காலத்தில் இறைவன் மானிட உடலின் எலும்புகளையும் மண்டையோடுகளையும் ஏந்தி நிற்கவில்லை என்றால் அனைத்து உயிர்களின் எலும்புகளும் மண்டையோடுகளும் மண்ணோடு மண்ணாக மக்கிப் போய் அழிந்துவிடும்.
உட்கருத்து: ஊழிக்காலத்தில் (பிரளயம்) உயிர்கள் மொத்தமாக சுவடின்றி மண்ணோடு மண்ணாக அழிந்து போய்விடாமல் காக்கும் மாபெரும் கருணையினால் இறைவனே மனித உடலின் எலும்புகளையும் மண்டையோடுகளையும் தாங்கி நிற்கின்றான். அப்படி அவன் நிற்கவில்லையெனில் உயிர்களின் சுவடுகூட மிஞ்சாது மொத்த உலகமும் அழிந்துபோய்விடும்.