மூல நட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் # 5

19-7-2005 அன்று நடந்த மூல நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

பெற்றவர்கள் செய்திடும் குற்றங்களுக்குப் பின்பு அவர்கள் மக்கள் அவதிப்படுவார்கள் என்பது உண்மையான நிலையா என ஒருவர் வினாவக் கண்டோம்.

இதற்கு யாம் எளிதாக விடை அளித்திட இயலும். இக்காலத்தில், பெற்றவன் ஒருவன் கள்வனாக மாறி களவு செய்ததற்காக மகனை தண்டிக்க இயலாது, இவ்விதமே கர்ம நிலையும், அவரவர் கர்மங்கள் அவரவர் அனுபவித்துக் கழித்தல் வேண்டும் என்பதே விதி. இருப்பினும், கூட்டுக் குடும்பங்கள் என்கின்ற நிலையில் சில பிரச்சினைகள் உருவாகின்றது. உதாரணமாக, பெற்றவர்கள் நோயுற்றவர்கள் எனக் கண்டு கொண்டால், இதன் விளைவாக மக்களும் சிறிது பாதிக்கப்படுகின்றனர். இதற்குக் காரணம் என்னவென்றால் பந்தமே என்றும் இங்கு எடுத்துரைப்போமே. தனியாக அவதிப்படுவதில்லை, ஆனால் பந்தம் கொள்ள, பாசம் கொள்ள, சிறு வேதனைகள் உருவாகின்றது. இதுவும் தன்னுடைய கர்மங்கள் தீர்த்திடவே, இத்தகைய பெற்றோரின் குடும்பத்தில் வந்து பிறக்கின்றான் என்பதே விதியாகின்றது. இதேபோல, நல்ல பெற்றோர்கள் தீய புத்திரனை பெற்று அவதிப்படுகின்றனர், இதுவும் அதே காரணமாம். பெற்றவர்களின் கர்மங்களை தீர்க்க, அத்தகைய மகன் அக்குடும்பத்தில் பிறக்கின்றான். இருப்பினும், பெற்றவர்களின் தீய கர்மத்தால் புத்திரர்கள் பிற்காலத்தில் அவதிப்படுவார்கள் என கூறுவது தவறாகும். அவரவர் கர்மங்கள் அவரவர் தீர்த்தல் வேண்டும் என்றும் விளக்கிட்டோமே.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.