மூலநட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #31

17-10-2007 அன்று நடந்த மூல நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

ஆன்மீக பாதையில் தடைகள் பல வருகின்றதே இறைவனை நாடத் தடைகள் ஏன் வருகின்றது? தடைகள் என்பது பொதுவாக அனைத்திலும் வரக்கூடியது என்பதை அறிதல் வேண்டும். தடை என்றால் அத்தடைகளை மீற வேண்டும் என்பதே பொருள். தடை ஒன்று இருந்தால் அதைச் சுற்றிச் செல்லலாம். அதன் மீது தாவிச் செல்லலாம் இல்லை மாற்று வழியாகச் செல்லலாம். தடைகளை நாம் தாண்டிச் செல்ல நம் ஆன்மீக வளர்ச்சி பெருமளவில் வளரும் என்பது இதற்குப் பொருள். தடைகள் இல்லையேல் ஆன்மீகப் பாதையில் சாதனை புரியும் வாய்ப்புக்கள் கிடைக்காது என்ற ஓர் நிலையும் உள்ளது. போராடிச் செல்வதே எப்பொழுதும் நலம். அவ்விதம் போராட்டம் நடத்தும் காலங்களில் நாம் நம்முடைய குறைகளையும் நிறைகளையும் தானாக அறிவோம். அதற்கு ஏற்றாற் போல் நாம் செல்வதும் உண்டு. இது மட்டும் இல்லாமல் தடைகளை வெல்ல பெரியோர்களை நாடுவோம். இவ்வழியில் பெரியோர்களின் ஆசிகளும் கிடைக்கும். இதற்காகத்தான் தடைகளை நம் வாழ்க்கையில் பலவகைகளாக அனைவரும் காண்கிறோம். குறிப்பாக ஆன்மீகப் பாதையில் தடைகள் ஓர் தடையல்ல ஓர் பிரசாதமாக காணுதல் வேண்டும். ஏனெனில் நாம் அத்தடைகளைத் தாண்டி மேலே செல்லும் போது ஆண்டவன் ஆனந்தம் கொள்கிறான். ஆனந்தத்தின் பூரிப்பால் அவன் அருள் புரிகின்றான். அந்த அருளை நாமும் பெற மேலும் மேலும் மேன்மைகள் உண்டாகும் என்பதே பொருளாகும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.