மூலநட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #30

20-9-2007 அன்று நடந்த மூல நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

நாம் வியர்வை சிந்தி உழைப்பால் கிடைக்கும் பொருளை உணவாக எடுத்துக் கொண்டால் அனைத்து தீயவைகளும் நல்வழியில் செல்லும். மற்றவர்கள் உழைப்பில் வாழ எண்ணுபவன் பெரும் மடங்கு கர்மாக்களை ஏற்றுக் கொள்கிறான். இக்காலத்தில் மற்றவர்கள் உழைப்பில் வாழ்வது ஓர் சாதாரண நிலை ஆகி விட்டது. அலுவலகங்களில் சம்பளம் கிடைக்கும் அளவிற்கு எந்த அளவிற்கு குறைவாக வேலை செய்ய முடியுமோ அந்த அளவிற்கு குறைவாக வேலை செய்கின்றனர். அது மட்டுமில்லாது வேகமாக வேலை செய்தால் அதிக சம்பளம் எப்படி பெறுவது என்று எண்ணுகின்றனர். பொதுவாக அவரவர் பணிகள் அவரவர்கள் செய்திட நலமாகும். இக்கால நிலையில் தன்னுடைய துணிகளைத் தானாகவே சுத்தம் செய்து தேய்த்து வைப்பது என்பது ஆகாத நிலையாக இருக்கிறது. இருப்பினும் உணவு சாப்பிட்ட பின்பு நாம் உண்ட பாத்திரத்தை நாமாகவே சுத்தம் செய்து வைக்கலாமே? இதில் தடை ஏதும் இல்லையே?

இவ்விதம் சிறு சிறு பணிகள் நாம் இயன்ற அளவிற்கு செய்து மற்றவர்களுக்குத் துன்பம் கொடுக்காமல் வாழ்ந்தால் சர்வ நலமும் உண்டாகும். மேலும் நாம் உழைப்பால் தான் வளர முடியும் என்பதையும் இங்கு கூறுகிறோம். உழைப்பு இல்லையென்றால் வளர்ச்சி இல்லை என்பது பொது விதியாகின்றது. உழைக்காமல் இப்பொழுது வரை நன்றாகவே வாழ்ந்து வருகின்றேன் எனப் பலரும் கூறக்கூடும் இது சீராகாது. ஏனெனில் உழைப்பை உடல் உழைப்பு என்றும் மன உழைப்பு என்றும் பிரித்திட முடியும். மன உழைப்பின் காரணமாகப் பலர் தூக்கமில்லாமல் அவதிப்படுகின்றனர். பின்பு மருத்துவரைப் பார்த்து மாத்திரைகள் சாப்பிடுவதும் இல்லையென்றால் இரவு முழுவதும் தூங்காமல் மறுநாள் கோபத்தில் ஆடுவதையும் காண்கின்றோம். தாமதமாகத் தூங்காமல் உணவு உண்ட பின் ஒரு மணி நேரம் கழித்துத் தூங்கி அதிகாலை எழுந்து காரியங்கள் செய்தால் ஆரோக்கியம் தானாக உண்டாகும். அனைவரும் பிராணாயாமம் செய்து வர உடல் நோய்கள் நீங்கி அனைவருக்கும் நலம் என்று கூறுகிறோம். இவ்வார்த்தையின் பொருளில் இருந்து நீங்கள் அனைத்தும் உணரலாம். பிராணாயாமம் என்பது பிராணத்தை உள் சேகரிக்கும் முறை என்று அர்த்தம் ஆகின்றது. இப்பூத உடலுக்கும் ஆத்மாவுக்கும் உள்ள தொடர்பே இந்தப் பிராணன்தான் என அறிந்து கொள்ள வேண்டும். இத்தகைய நிலையில் பிராணத்துடன் பிராணன் உள் செல்வதையும் வெளி செல்வதையும் கூர்ந்து கவனித்துத் தியான முறையாக மாற்றிக் கொண்டால் விரைவில் நலன்கள் அனைத்தும் காணலாம்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.