பாடல் #621

பாடல் #621: மூன்றாம் தந்திரம் – 9. சமாதி (உயிரும் இறைவனும் ஒன்றி இருத்தல்)

விண்டலர் கூபமும் விஞ்சத் தடவியுங்
கண்டுணர் வாகக் கருதியிருப் பார்கள்
செண்டு வெளியிற் செழுங்கிரி யத்திடை
கொண்டு குதிரை குசைசெறுத் தாரே.

விளக்கம்:

குதிரையில் ஏறி பல இடங்களைச் சுற்றிப் பார்த்து புல்வெளியில் ஓடவிட்டு பின்பு குதிரையை பசுமையான மலையடிவாரத்தில் கட்டி வைப்பது போல மனமாகிய குதிரையை பிராணவாயுவாகிய கடிவாளத்தின் மூலம் மேல் நோக்கி செலுத்தி சுழுமுனை சேரும் இடத்தையும் அதைச் சுற்றியுள்ள தலை உச்சியையும் சுற்றிப் பார்த்துவிட்டு தலை உச்சிக்கு மேலுள்ள வெற்று வெளியில் செலுத்தி அங்கே வியாபித்திருக்கின்ற சிவபெருமானிடம் கட்டி வைத்து அதன் மூலம் இறைவனை கண்டு உணர்ந்து இறை நினைப்பிலேயே லயித்து இருப்பது சமாதி நிலை ஆகும்.

பாடல் #620

பாடல் #620: மூன்றாம் தந்திரம் – 9. சமாதி (உயிரும் இறைவனும் ஒன்றி இருத்தல்)

மன்மனம் எங்குண்டு வாயுவும் அங்குண்டு
மன்மனம் எங்கில்லை வாயுவும் அங்கில்லை
மன்மனத் துள்ளே மகிழ்ந்திருப் பார்க்கு
மன்மனத் துள்ளே மனோலய மாமே.

விளக்கம்;

இறைவனையே சிந்தித்திருக்கும் மனம் எங்கிருக்கின்றதோ அங்கு பிராணவாயு நிலைத்து இருக்கும். இறைவனை சிந்திக்காத மனம் எங்கிருக்கின்றதோ அங்கு பிராணவாயு நிலைத்து இருக்காது. இறைவனையே நினைத்து பேரானந்தத்தில் இருப்பவர்களின் மனதோடு இறைவனும் கலந்து இருப்பான்.

பாடல் #619

பாடல் #619: மூன்றாம் தந்திரம் – 9. சமாதி (உயிரும் இறைவனும் ஒன்றி இருத்தல்)

விந்துவும் நாதமும் மேருவில் ஓங்கிடில்
சந்தியி லான சமாதியிற் கூடிடும்
அந்தமி லாத அறிவின் அரும்பொருள்
சுந்தரச் சோதியுந் தோன்றிடுந் தானே.

விளக்கம்;

சக்தியாகிய ஒளியையும் சிவமாகிய ஒலியையும் புருவமத்தியில் ஒருமுகப்படுத்தி ஆழ்ந்து இருந்தால் அட்டாங்க யோகத்தின் இறுதியான சமாதி கைகூடும். அவ்வாறு சமாதி நிலையை அடைந்துவிட்டால் அழிவில்லாத அறிவின் உண்மைப் பொருளான சிவம் அழகிய ஜோதியாய் தமக்குள்ளேயே தோன்றிடும்.

பாடல் #618

பாடல் #618: மூன்றாம் தந்திரம் – 9. சமாதி (உயிரும் இறைவனும் ஒன்றி இருத்தல்)

சமாதிய மாதியிற் றான்சொல்லக் கேட்டிற்
சமாதிய மாதியிற் றானெட்டுச் சித்தி
சமாதிய மாதியில் தங்கினோர்க் கன்றே
சமாதிய மாதி தலைப்படுந் தானே.

விளக்கம்;

அட்டாங்க யோகத்தில் கூறியுள்ள இயமம் முதலான ஏழு யோகங்களையும் (பாடல் #549 இல் உள்ளபடி) முறையாக செய்வது மட்டுமன்றி அந்த யோகங்களையும் தவறாமல் கடைபிடித்தால் எட்டாவது யோகமான சமாதியும் கைகூடும். அவ்வாறு கைகூடிவிட்டால் எட்டுவித சித்திகளும் கைவரப் பெறும்.