பாடல் #1732

பாடல் #1732: ஏழாம் தந்திரம் – 4. சதாசிவ லிங்கம் (அருவுருவமாக இருக்கின்ற பரம்பொருளின் வடிவம்)

ஆகின்ற சத்தியி னுள்ளே கலைநிலை
யாகின்ற சத்தியி னுள்ளே கதிரெழ
வாகின்ற சத்தியி னுள்ளே யமர்ந்தபி
னாகின்ற சத்தியு ளத்திசை பத்தே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

ஆகினற சததியி னுளளெ கலைநிலை
யாகினற சததியி னுளளெ கதிரெழ
வாகினற சததியி னுளளெ யமரநதபி
னாகினற சததியு ளததிசை பததெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

ஆகின்ற சத்தியின் உள்ளே கலை நிலை
ஆகின்ற சத்தியின் உள்ளே கதிர் எழ
ஆகின்ற சத்தியின் உள்ளே அமர்ந்த பின்
ஆகின்ற சத்தி உள் அத் திசை பத்தே.

பதப்பொருள்:

ஆகின்ற (அசையாத சக்தியாகிய சதாசிவப் பரம்பொருளில் எண்ண அலைகள் உருவாகின்ற போது அந்த அசைவினால் வெளிப்படுகின்ற) சத்தியின் (அசையும் சக்திக்கு) உள்ளே (உள்ளே) கலை (உலக இயக்கத்திற்கு தேவையான ஐந்து விதமான கலைகளாகிய படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய ஐந்தும்) நிலை (நிலை பெறும்)
ஆகின்ற (சதாசிவப் பரம்பொருளிலிருந்து வெளிப்பட்ட) சத்தியின் (சக்தியின்) உள்ளே (உள்ளே) கதிர் (வெளிச்சமாகிய சக்தி) எழ (எழுந்து வரும் போது)
ஆகின்ற (சதாசிவப் பரம்பொருளிலிருந்து வெளிப்பட்ட) சத்தியின் (சக்தியின்) உள்ளே (உள்ளே) அமர்ந்த (சத்தமாகிய சிவமும் அமர்ந்த) பின் (பிறகு)
ஆகின்ற (சதாசிவப் பரம்பொருளிலிருந்து வெளிப்பட்ட) சத்தி (சக்திக்கு) உள் (உள்) அத் (அண்ட சராசரங்களும்) திசை (திசைகள்) பத்தே (பத்தும் அடங்கி இருக்கும்).

விளக்கம்:

அசையாத சக்தியாகிய சதாசிவப் பரம்பொருளில் எண்ண அலைகள் உருவாகின்ற போது அந்த அசைவினால் வெளிப்படுகின்ற அசையும் சக்திக்கு உள்ளே உலக இயக்கத்திற்கு தேவையான ஐந்து விதமான கலைகளாகிய படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய ஐந்தும் நிலை பெறும். அதற்குள்ளிருந்து வெளிச்சமாகிய சக்தி எழுந்து வரும் போது அதனுள் சத்தமாகிய சிவமும் அமரும். அதற்குள்ளேயே அண்ட சராசரங்களும் அதிலிருக்கும் பத்து திசைகளும் அடங்கி இருக்கும்.

பாடல் #1731

பாடல் #1731: ஏழாம் தந்திரம் – 4. சதாசிவ லிங்கம் (அருவுருவமாக இருக்கின்ற பரம்பொருளின் வடிவம்)

வேதா நெடுமா லுருத்திரன் மேலீசன்
மீதான வைமுகன் விந்துவு நாதமு
மாதார சத்தியு மாதிச் சிவனோடுஞ்
சாதாரண மாகுஞ் சதாசிவன் றானே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

வெதா நெடுமா லுருததிரன மெலீசன
மீதான வைமுகன விநதுவு நாதமு
மாதார சததியு மாதிச சிவனொடுஞ
சாதாரண மாகுஞ சதாசிவன றானெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

வேதா நெடு மால் உருத்திரன் மேல் ஈசன்
மீது ஆன ஐம் முகன் விந்துவும் நாதமும்
ஆதார சத்தியும் ஆதி சிவனோடும்
சாதாரணம் ஆகும் சதா சிவம் தானே.

பதப்பொருள்:

வேதா (பிரம்மா) நெடு (பூமிக்கும் ஆகாயத்திற்கும் விஸ்வரூபமாக நிற்கின்ற) மால் (திருமால்) உருத்திரன் (உருத்திரன்) மேல் (ஆகிய மூவர்க்கும் மேலான) ஈசன் (மகேஸ்வரன்)
மீது (அவருக்கும் மேல்) ஆன (ஆனவராகிய) ஐம் (ஐந்து) முகன் (முகங்களைக் கொண்ட சதாசிவன் ஆகிய ஐந்து தெய்வங்களும்) விந்துவும் (வெளிச்சமாகவும்) நாதமும் (சத்தமாகவும் இருக்கின்ற)
ஆதார (அனைத்திற்கும் ஆதாரமான) சத்தியும் (பராசக்தியும்) ஆதி (அனைத்திற்கு ஆதியாகிய) சிவனோடும் (பரமசிவனும்)
சாதாரணம் (ஆகிய அனைத்து தெய்வ நிலைகளுக்கும் பொதுவானது) ஆகும் (ஆக இருப்பதே) சதா (அனைத்திற்கும் மேலானதாகிய) சிவம் (அன்பின் வடிவமாகிய சிவப் பரம்பொருள்) தானே (ஆகும்).

விளக்கம்:

வேதங்களை ஓதி படைக்கின்ற பிரம்மன், அனைத்தையும் காக்கின்ற திருமால், மாயையை அழிக்கின்ற உருத்திரன் ஆகிய மும்மூர்த்திகளும், அவர்களுக்கு மேல் இருக்கின்ற மாயையால் மறைக்கின்ற மகேஸ்வரன், அடியவருக்கு அருளுகின்ற சதாசிவன் ஆகியவரோடு சேர்த்து ஐந்து விதமான தொழில்களை செய்கின்ற தெய்வங்களும், அவர்களுக்கு மேல் வெளிச்சமாகவும் சத்தமாகவும் அவர்கள் அனைவருக்கும் ஆதார சக்தியாகிய பராசக்தியும், ஆதியாகிய பரமசிவனும் ஆகிய இந்த அனைத்து தெய்வ நிலைகளுக்கும் பொதுவானதாகவும் அனைத்திற்கும் மேலானதாகவும் அன்பே வடிவமாகவும் இலிங்க அடையாளம் கொண்டும் இருப்பதே சதாசிவப் பரம்பொருள் ஆகும்.

பாடல் #1730

பாடல் #1730: ஏழாம் தந்திரம் – 4. சதாசிவ லிங்கம் (அருவுருவமாக இருக்கின்ற பரம்பொருளின் வடிவம்)

கூடிய பாத மிரண்டும் படிமிசை
பாடிய கையிரண் டெட்டும் பரந்தெழுந்
தேடு முகமைந்துஞ் செங்கணின் மூவைந்து
நாடுஞ் சதாசிவம் நல்லொளி முத்தே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

கூடிய பாத மிரணடும படிமிசை
பாடிய கையிரண டெடடும பரநதெழுந
தெடு முகமைநதுஞ செஙகணின மூவைநது
நாடுஞ சதாசிவம நலலொளி முததெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

கூடிய பாதம் இரண்டும் படி மிசை
பாடிய கை இரண்டு எட்டும் பரந்து எழும்
தேடும் முகம் ஐந்தும் செம் கணின் மூ ஐந்து
நாடும் சதா சிவம் நல் ஒளி முத்தே.

பதப்பொருள்:

கூடிய (ஒன்றாக சேர்ந்து இருக்கின்ற) பாதம் (இறைவனது திருவடிகள்) இரண்டும் (இரண்டும்) படி (தம்மை சரணடைந்த உயிர்களை அடுத்த படியான) மிசை (மேல் நிலைக்கு கொண்டு செல்லுவது ஆகும்)
பாடிய (அடியவர்களால் புகழ்ந்து பாடப் படுகின்ற) கை (இறைவனது திருக்கரங்கள்) இரண்டு (இரண்டும்) எட்டும் (எட்டும் சேர்ந்து மொத்தம் பத்தும்) பரந்து (பத்து திசைகளுக்கும் பரந்து) எழும் (எழுந்து செல்லுவது ஆகும்)
தேடும் (அடியவர்கள் தேடுகின்ற) முகம் (இறைவனது திருமுகம்) ஐந்தும் (ஐந்தும்) செம் (செம்மையான) கணின் (கண்கள்) மூ (முகத்திற்கு மூன்றாக) ஐந்து (ஐந்து முகங்களுக்கும் சேர்த்து மொத்தம் பதினைந்து ஆகும்)
நாடும் (அடியவர்கள் தேடி அடைய விரும்பும்) சதா (அனைத்திற்கும் மேலானதாகிய) சிவம் (சிவப் பரம்பொருள்) நல் (நன்மையே கொடுக்கும்) ஒளி (பிரகாசமான ஒளி வீசும்) முத்தே (முத்தைப் போன்ற ஜோதி வடிவம் ஆகும்).

விளக்கம்:

அனைத்திற்கும் மேலான சிவப் பரம்பொருளாகிய சதாசிவமூர்த்தியின் திருவுருவமானது அடியவர்களை மேல் நிலைக்கு கொண்டு செல்லும் இணைந்தே இருக்கின்ற இரண்டு திருவடிகளைக் கொண்டும், பத்து திசைகளுக்கும் பரந்து எட்டுகின்ற பத்து திருக்கரங்களைக் கொண்டும், ஐந்து திருமுகங்களைக் கொண்டும், அந்த ஐந்து திருமுகங்களிலும் முகத்திற்கு மூன்றாக மொத்தம் பதினைந்து திருக்கண்களைக் கொண்டும், ஒப்பில்லாத முத்துப் போல பிரகாசமான ஒளி வீசும் ஜோதி அம்சமாகவும் இருக்கின்றது. உருவமே இல்லாத இறைவனுக்கு இப்படி அடியவர்கள் காணக்கூடிய அருவுருவமான வடிவமாக இருப்பதே சதாசிவ இலிங்கம் ஆகும்.

கருத்து:

சதாசிவ மூர்த்தியின் அருவுருவத் திருவடிகளானது தம்மை சரணடைகின்ற அடியவர்களின் பந்த பாசங்களை அறுக்கின்றது ஆகும். சதாசிவ மூர்த்தியின் அருவுருவத் திருக்கரங்களானது அவர் இருக்கின்ற இடத்திலிருந்தே தம்மை வேண்டுகின்ற அடியவர்கள் இருக்கின்ற இடம் வரை பத்து திசைகளிலும் பரந்து வந்து அபயமும் ஐஸ்வர்யமும் அருளுவது ஆகும்.சதாசிவ மூர்த்தியின் அருவுருவத் திருக்கண்களானது தகுதியான அடியவர்களின் பாவங்களை பார்வையாலே நீக்குகின்றது ஆகும். சதாசிவ மூர்த்தியின் அருவுருவப் பிரகாசமான ஜோதி வடிவமானது காண்கின்றவர்களை கவர்கின்ற நல்ல முத்தைப் போல் அடியவர்களை தம்மை நோக்கி ஈர்க்கின்றது ஆகும்.