பாடல் #1741

பாடல் #1741: ஏழாம் தந்திரம் – 4. சதாசிவ லிங்கம் (அருவுருவமாக இருக்கின்ற பரம்பொருளின் வடிவம்)

சத்தி தானிற்கின்ற வைமுகஞ் சாற்றிடி
லுத்தர வாம முரையற் றிருந்திடுந்
தத்துவம் புரவி தற்புருடன் சீர
மத்த வகோர மகுடத்தீசா னனே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

சததி தானிறகினற வைமுகஞ சாறறிடி
லுததர வாம முரையற றிருநதிடுந
தததுவம புரவி தறபுருடன சீர
மதத வகொர மகுடததீசா னனெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

சத்தி தான் நிற்கின்ற ஐம் முகம் சாற்றிடில்
உத்தரம் வாமம் உரை அற்று இருந்திடும்
தத்துவம் புரவி தற்புருடன் சீரம்
அத்த அகோரம் மகுடத்து ஈசானனே.

பதப்பொருள்:

சத்தி (இயங்குகின்ற சக்தியாகிய இறைவியானவள்) தான் (தானாக) நிற்கின்ற (நிற்கின்ற அசையாத சக்தியாகிய இறைவனின்) ஐம் (ஐந்து) முகம் (முகங்களோடு) சாற்றிடில் (இணைந்து விட்டால்)
உத்தரம் (வடக்கு நோக்கி இருக்கின்ற) வாமம் (வாமதேவமாகிய திருமுகம்) உரை (பேச்சு) அற்று (இல்லாமல்) இருந்திடும் (இறைவியின் ஆற்றலுக்கு உட்பட்டு விடும்)
தத்துவம் (மேற்கு நோக்கி இருக்கின்ற சத்தியோசாதமாகிய திருமுகத்தின் தன்மையானது) புரவி (குதிரையைப் போல் விரைந்து இயங்கும்) தற்புருடன் (கிழக்கு நோக்கி இருக்கின்ற தற்புருடமாகிய திருமுகம்) சீரம் (சிகப்பான இரத்தத்தின் ஓட்டம் போல இயங்கும்)
அத்த (இறைவி இறைவனில் பாதியாகி) அகோரம் (தெற்கு நோக்கி இருக்கின்ற அகோரமாகிய திருமுகத்தில் சேர்ந்து) மகுடத்து (நடுவில் இருவரும் இணைந்து மகுடமாக மேல் நோக்கி இருக்கின்ற) ஈசானனே (ஈசானமாகிய திருமுகத்தில் வீற்றிருப்பார்கள்).

விளக்கம்:

ஆதியிலிருந்தே தானாக இருக்கின்ற அசையாத சக்தியாகிய இறைவனின் ஐந்து விதமான திருமுகங்களோடு அசையும் சக்தியாகிய இறைவி சேர்ந்து விட்டால் வடக்கு நோக்கி இருக்கின்ற வாமதேவ திருமுகம் அமைதியாகி இறைவியின் ஆற்றலுக்கு உட்பட்டு விடும். மேற்கு நோக்கி இருக்கின்ற சத்தியோசாத திருமுகம் குதிரையின் ஓட்டம் போல இயங்கும். கிழக்கு நோக்கி இருக்கின்ற தற்புருட திருமுகம் சிகப்பான இரத்த ஓட்டம் போல இயங்கும். தெற்கு நோக்கி இருக்கின்ற அகோர திருமுகத்தில் இறைவனும் இறைவியும் சரிபாதியாக இருப்பார்கள். நடுவில் மேல் நோக்கி இருக்கின்ற ஈசான திருமுகத்தில் இறைவனும் இறைவியும் இணைந்து மகுடம் போல உயர்ந்து இருப்பார்கள்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.