பாடல் #1736

பாடல் #1736: ஏழாம் தந்திரம் – 4. சதாசிவ லிங்கம் (அருவுருவமாக இருக்கின்ற பரம்பொருளின் வடிவம்)

அஞ்சு முகமுள வைம்மூன்று கண்ணுள
வஞ்சி னோடைந்து கரதலந் தானுள
வஞ்சி னோடைஞ் சாயுதமுள நம்பியென்
னெஞ்சுள் புகுந்து நிறைந்துநின் றானே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

அஞசு முகமுள வைமமூனறு கணணுள
வஞசி னொடைநது கரதலந தானுள
வஞசி னொடைஞ சாயுதமுள நமபியென
னெஞசுள புகுநது நிறைநதுநின றானெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

அஞ்சு முகம் உள ஐம் மூன்று கண் உள
அஞ்சினோடு ஐந்து கரதலம் தான் உள
அஞ்சினோடு ஐஞ்சு ஆயுதம் உள நம்பி என்
நெஞ்சு உள் புகுந்து நிறைந்து நின்றானே.

பதப்பொருள்:

அஞ்சு (சதா சிவப் பரம்பொருளுக்கு ஐந்து) முகம் (திருமுகங்கள்) உள (உள்ளது) ஐம் (அந்த ஐந்து திருமுகங்களிலும்) மூன்று (முகத்திற்கு மூன்றாக மொத்தம் பதினைந்து) கண் (திருக்கண்கள்) உள (உள்ளது)
அஞ்சினோடு (ஐந்து திருமுகங்களோடு சேர்ந்து ஐந்தும்) ஐந்து (ஐந்தும் கூட்டி மொத்தம்) கரதலம் (பத்து திருக்கரங்கள்) தான் (அவருக்கு) உள (உள்ளது)
அஞ்சினோடு (ஐந்து திருமுகங்களோடு சேர்ந்து ஐந்தும்) ஐஞ்சு (ஐந்தும் கூட்டி மொத்தம்) ஆயுதம் (பத்து திருக்கரங்களிலும் பத்து விதமான ஆயுதங்கள் தம் அடியவரைக் காக்கின்ற கருவிகளாக) உள (உள்ளது) நம்பி (இவ்வாறு சதாசிவ இலிங்கமாக இருக்கின்ற இறைவன் தம்மை நம்புகின்ற) என் (அடியவர்களின்)
நெஞ்சு (நெஞ்சத்திற்கு) உள் (உள்ளே) புகுந்து (புகுந்து) நிறைந்து (முழுவதுமாக நிறைந்து) நின்றானே (நிற்கின்றான்).

விளக்கம்:

சதா சிவப் பரம்பொருளுக்கு ஐந்து திருமுகங்கள் உள்ளது. அந்த ஐந்து திருமுகங்களிலும் முகத்திற்கு மூன்றாக மொத்தம் பதினைந்து திருக்கண்கள் உள்ளது. அவருக்கு பத்து திருக்கரங்கள் உள்ளது. அந்த பத்து திருக்கரங்களிலும் பத்து விதமான ஆயுதங்கள் தம் அடியவரைக் காக்கின்ற கருவிகளாக உள்ளது. இவ்வாறு சதாசிவ இலிங்கமாக இருக்கின்ற இறைவன் தம்மை நம்புகின்ற அடியவர்களின் நெஞ்சத்திற்கு உள்ளே புகுந்து முழுவதுமாக நிறைந்து நிற்கின்றான்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.