பாடல் #1792

பாடல் #1792: ஏழாம் தந்திரம் – 9. திருவருள் வைப்பு (இறைவன் கொடுத்த அருளை காப்பாற்றுதல்)

பொருள் பேதமீச னிரவும் பகலு
முருவது வாவ துடலு முயிரு
மருளது வாவ தறமுந் தவமும்
பொருளது வுண்ணின்ற போகம தாமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

பொருள பெதமீச னிரவும பகலு
முருவது வாவ துடலு முயிரு
மருளது வாவ தறமுந தவமும
பொருளது வுணணினற பொகம தாமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

பொருள் பேதம் ஈசன் இரவும் பகலும்
உரு அது ஆவது உடலும் உயிரும்
அருள் அது ஆவது அறமும் தவமும்
பொருள் அது உள் நின்ற போகம் அது ஆமே.

பதப்பொருள்:

பொருள் (மாயையாகிய உலகத்தில் பொருளாக) பேதம் (பிரித்து அறிந்து கொள்ள) ஈசன் (இறைவன் அருளியது) இரவும் (இரவும்) பகலும் (பகலுமாகிய இரண்டு நிலைகளே ஆகும்)
உரு (அதை அனுபவிக்கின்ற உருவம்) அது (அது) ஆவது (ஆக இருப்பது) உடலும் (இறைவன் அருளிய உடலும்) உயிரும் (அதற்குள் இருக்கின்ற உயிரும் ஆகும்)
அருள் (இறைவன் கொடுக்கின்ற திருவருள்) அது (அது) ஆவது (ஆக இருப்பது) அறமும் (அடியவர்கள் கடைபிடிக்கின்ற தர்மங்களும்) தவமும் (மேற்கொள்ளுகின்ற தவங்களும் ஆகும்)
பொருள் (உண்மைப் பொருள்) அது (அது ஆக இருப்பது) உள் (அடியவருக்குள்) நின்ற (இறையருளாக நிற்கின்ற) போகம் (பேரின்பம்) அது (அதுவே) ஆமே (ஆகும்).

விளக்கம்:

மாயையாகிய உலகத்தில் பொருளாக பிரித்து அறிந்து கொள்ள இறைவன் அருளியது இரவும் பகலுமாகிய இரண்டு நிலைகளே ஆகும். அதை வினைகளுக்கு ஏற்ப அனுபவிக்கின்ற உருவமாக இருப்பது இறைவன் அருளிய உடலும் அதற்குள் இருக்கின்ற உயிரும் ஆகும். அப்படி வினைகளை அனுபவித்துக் கொண்டு இருந்தாலும் இறையருளால் உள்ளுக்குள் உணர்த்தப்பட்ட தர்மத்தை முறைப்படி கடை பிடிக்கின்றவர்களுக்கு அந்த தர்மத்தின் பலனும் அவர்கள் மேற்கொண்ட தவத்தின் பலனுமே இறைவன் கொடுக்கின்ற திருவருளாக இருக்கின்றது. அந்த திருவருளே உண்மைப் பொருளாக அடியவருக்குள் நிற்கின்ற பேரின்பம் ஆகும்.

பாடல் #1793

பாடல் #1793: ஏழாம் தந்திரம் – 9. திருவருள் வைப்பு (இறைவன் கொடுத்த அருளை காப்பாற்றுதல்)

காண்டற் கரியன் கருத்தில னந்தியுந்
தீண்டற்குஞ் சார்தற்குஞ் சேயனாதந் தோன்றிடும்
வேண்டிக் கிடந்து விளக்கொளி யாய்நேச
மீண்டிக் கிடந்தங்கு இருளறு மாறே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

காணடற கரியன கருததில னநதியுந
தீணடறகுஞ சாரதறகுஞ செயனாதந தொனறிடும
வெணடிக கிடநது விளககொளி யாயநெச
மீணடிக கிடநதஙகு இருளறு மாறெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

காண்டற்கு அரியன் கருத்து இலன் நந்தியும்
தீண்டற்கும் சார்தற்கும் சேயன் நாதம் தோன்றிடும்
வேண்டி கிடந்து விளக்கு ஒளி ஆய் நேசம்
ஈண்டி கிடந்து அங்கு இருள் அறும் ஆறே.

பதப்பொருள்:

காண்டற்கு (கண்களால் பார்த்து அறிந்து கொள்ளுவதற்கு) அரியன் (மிகவும் கடினமானவன்) கருத்து (எண்ணங்களால் யோசித்து பார்த்து அறிந்து கொள்ள) இலன் (முடியாதவன்) நந்தியும் (உள்ளுக்குள் குருநாதனாக இருந்து வழிகாட்டுகின்ற இறைவன்)
தீண்டற்கும் (வெளியில் தீண்டி பார்ப்பதற்கும்) சார்தற்கும் (பற்றிக் கொண்டு இருப்பதற்கும்) சேயன் (முடியாதபடி தொலைவில் இருக்கின்றவன்) நாதம் (உள்ளுக்குள்ளே நாதமாக) தோன்றிடும் (தோன்றுபவன்)
வேண்டி (அவன் மட்டுமே வேண்டும் என்று வேண்டி) கிடந்து (கிடக்கின்ற அடியவர்களுக்கு) விளக்கு (உள்ளுக்குள் விளக்கில் இருக்கின்ற) ஒளி (ஜோதி) ஆய் (ஆகிய) நேசம் (அன்பின் வடிவமாக வருகின்றவன்)
ஈண்டி (திருவளாகிய இவற்றை பெற்றுக் கொண்டு) கிடந்து (அதிலேயே கிடக்கும் போது) அங்கு (அடியவரின் உள்ளுக்குள் இருக்கின்ற) இருள் (அனைத்து விதமான மலங்களும்) அறும் (நீங்கிப் போய்விடும்) ஆறே (வழியாக அதுவே இருக்கும்).

விளக்கம்:

கண்களால் பார்த்து அறிந்து கொள்ளுவதற்கு மிகவும் கடினமானவன், எண்ணங்களால் யோசித்து பார்த்து அறிந்து கொள்ள முடியாதவன், உள்ளுக்குள் குருநாதனாக இருந்து வழிகாட்டுகின்ற இறைவன், வெளியில் தீண்டி பார்ப்பதற்கும் பற்றிக் கொண்டு இருப்பதற்கும் முடியாதபடி தொலைவில் இருக்கின்றவன், உள்ளுக்குள்ளே நாதமாக தோன்றுபவன், அவன் மட்டுமே வேண்டும் என்று வேண்டி கிடக்கின்ற அடியவர்களுக்கு உள்ளுக்குள் விளக்கில் இருக்கின்ற ஜோதியாகிய அன்பின் வடிவமாக வருகின்றவன். இப்படிப்பட்ட இறைவனின் திருவருளை பெற்றுக் கொண்டு அதிலேயே கிடக்கும் போது அடியவரின் உள்ளுக்குள் இருக்கின்ற அனைத்து விதமான மலங்களும் நீங்கிப் போய்விடும் வழியாக அதுவே இருக்கும்.

பாடல் #1794

பாடல் #1794: ஏழாம் தந்திரம் – 9. திருவருள் வைப்பு (இறைவன் கொடுத்த அருளை காப்பாற்றுதல்)

குறிப்பினி னுள்ளே குவலையந் தோன்றும்
வெறுப்பிரு ணீக்கில் விகிர்தனு நிற்குஞ்
செறிப்புறு சிந்தையைச் சிக்கென நாடி
லறிப்புறு காட்சி யமரரு மாமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

குறிபபினி னுளளெ குவலையந தொனறும
வெறுபபிரு ணீககில விகிரதனு நிறகுஞ
செறிபபுறு சிநதையைச சிககென நாடி
லறிபபுறு காடசி யமரரு மாமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

குறிப்பினின் உள்ளே குவலயம் தோன்றும்
வெறுப்பு இருள் நீக்கில் விகிர்தனும் நிற்கும்
செறிப்பு உறு சிந்தையை சிக்கென நாடில்
அறிப்பு உறு காட்சி அமரரும் ஆமே.

பதப்பொருள்:

குறிப்பினின் (உள்ளுக்குள் தோன்றும் ஜோதியாகிய இறைவனையே குறிக்கோளாக கொண்டு தியானிக்கின்ற அடியவர்களின்) உள்ளே (உள்ளே) குவலயம் (அண்ட சராசரங்களும் அதிலுள்ள அனைத்தும்) தோன்றும் (உண்மைப் பொருளாக தோன்றும் அந்த திருவருள் ஜோதியால்)
வெறுப்பு (ஆணவமாகிய) இருள் (மலத்தை) நீக்கில் (நீக்கி விட்டால்) விகிர்தனும் (அனைத்திலும் மாறுபட்டவனாகிய இறைவன்) நிற்கும் (அடியவருக்குள் வந்து நிற்பான்)
செறிப்பு (அந்த இறைவனுக்கு நெருக்கமாக இருப்பதில்) உறு (உறுதியாக நிற்கின்ற) சிந்தையை (சிந்தனையை) சிக்கென (விடாது பற்றிக் கொண்டு) நாடில் (இறைவனை தேடும் போது)
அறிப்பு (உள்ளுக்குள் உணரக்கூடிய) உறு (முழுமையான) காட்சி (திருவருள் காட்சி தோன்றும்) அமரரும் (அதை தரிசித்து தாமும் இறப்பு இல்லாத நிலையை) ஆமே (அடையலாம்).

விளக்கம்:

உள்ளுக்குள் தோன்றும் ஜோதியாகிய இறைவனையே குறிக்கோளாக கொண்டு தியானிக்கின்ற அடியவர்களின் உள்ளே அண்ட சராசரங்களும் அதிலுள்ள அனைத்தும் உண்மைப் பொருளாக தோன்றும். அந்த திருவருள் ஜோதியால் ஆணவமாகிய மலத்தை நீக்கி விட்டால் அனைத்திலும் மாறுபட்டவனாகிய இறைவன் அடியவருக்குள் வந்து நிற்பான். அந்த இறைவனுக்கு நெருக்கமாக இருப்பதில் உறுதியாக நிற்கின்ற சிந்தனையை விடாது பற்றிக் கொண்டு இறைவனை தேடும் போது உள்ளுக்குள் உணரக்கூடிய முழுமையான திருவருள் காட்சி தோன்றும். அதை தரிசித்து தாமும் இறப்பு இல்லாத நிலையை அடையலாம்.

பாடல் #1795

பாடல் #1795: ஏழாம் தந்திரம் – 9. திருவருள் வைப்பு (இறைவன் கொடுத்த அருளை காப்பாற்றுதல்)

தேர்ந்தறி யாமையின் காலங்கள் போயின
பேர்ந்தறி வானெங்கள் பிஞ்ஞக னெம்மிறை
யார்ந்தறி வாரறி வேதுணை யாமெனச்
சார்ந்தறி வான்பெருந் தன்மைவல் லானே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

தெரநதறி யாமையின காலஙகள பொயின
பெரநதறி வானெஙகள பிஞஞக னெமமிறை
யாரநதறி வாரறி வெதுணை யாமெனச
சாரநதறி வானபெருந தனமைவல லானெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

தேர்ந்து அறியாமை இன் காலங்கள் போயின
பேர்ந்து அறிவான் எங்கள் பிஞ்ஞகன் எம் இறை
ஆர்ந்து அறிவார் அறிவே துணை ஆம் என
சார்ந்து அறிவான் பெரும் தன்மை வல்லானே.

பதப்பொருள்:

தேர்ந்து (தமக்குள்ளே இருக்கின்ற இறைவனின் திருவருளால் பிறவி இல்லாத நிலையை அடைய முடியும்) அறியாமை (என்பதை அறிந்து கொள்ளாத) இன் (தன்மையினால்) காலங்கள் (உயிர்களின் ஒரு பிறவியின் காலங்கள்) போயின (வீணாக கழிந்து போகின்றது)
பேர்ந்து (இப்படி வீணாக வாழ்நாளை கழிக்காமல் இறைவனை தேடுகின்ற உயிர்கள் எது என்பதை பிரித்து) அறிவான் (அறிகின்றவன்) எங்கள் (எங்களின் தலைவனாகிய) பிஞ்ஞகன் (பிறை நிலாவையும் கங்கையையும் தலையில் சடையாகச் சூடிக்கொண்டு பிறவி இல்லாத நிலையை அருளும்) எம் (எமது) இறை (இறைவன் ஆவான்)
ஆர்ந்து (அவனை தமக்குள்ளே ஆராய்ந்து) அறிவார் (அறிகின்றவர்களுக்கு) அறிவே (உண்மை அறிவாக) துணை (எப்போதும் துணை) ஆம் (ஆக) என (இருப்பான்)
சார்ந்து (அந்த இறைவன் உள்ளுக்குள் இருந்து உணர்த்துகின்ற அறிவுத் துணையை எப்போதும் சார்ந்து இருந்து) அறிவான் (அனைத்தையும் அறிந்து கொள்ளுகின்ற அடியவர்கள்) பெரும் (மிகப் பெரிய) தன்மை (தன்மைகளை) வல்லானே (அடையும் வல்லமை பெற்றவர்களாக இருப்பார்கள்).

விளக்கம்:

தமக்குள்ளே இருக்கின்ற இறைவனின் திருவருளால் பிறவி இல்லாத நிலையை அடைய முடியும் என்பதை அறிந்து கொள்ளாத தன்மையினால் உயிர்களின் ஒரு பிறவியின் காலங்கள் வீணாக கழிந்து போகின்றது. இப்படி வீணாக வாழ்நாளை கழிக்காமல் இறைவனை தேடுகின்ற உயிர்கள் எது என்பதை பிரித்து அறிகின்றவன் பிறை நிலாவையும் கங்கையையும் தலையில் சடையாகச் சூடிக்கொண்டு பிறவி இல்லாத நிலையை அருளும் எமது தலைவனாகிய இறைவன் ஆவான். அவனை தமக்குள்ளே ஆராய்ந்து அறிகின்றவர்களுக்கு உண்மை அறிவாக எப்போதும் துணையாக இருப்பான். அந்த இறைவன் உள்ளுக்குள் இருந்து உணர்த்துகின்ற அறிவுத் துணையை எப்போதும் சார்ந்து இருந்து அனைத்தையும் அறிந்து கொள்ளுகின்ற அடியவர்கள் மிகப் பெரிய தன்மைகளை அடையும் வல்லமை பெற்றவர்களாக இருப்பார்கள்.

பாடல் #1796

பாடல் #1796: ஏழாம் தந்திரம் – 9. திருவருள் வைப்பு (இறைவன் கொடுத்த அருளை காப்பாற்றுதல்)

தானே யறியும் வினைக ளறிந்தபின்
நானே யறுதியென் னந்தி யறியுங்கோ
னூனே யுருக்கி யுணர்வை யுணர்ந்தபின்
தேனே யனைய நந்திதேவர் பிரானே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

தானெ யறியும வினைக ளறிநதபின
நானெ யறுதியென னநதி யறியுஙகொ
னூனெ யுருககி யுணரவை யுணரநதபின
தெனெ யனைய நநதிதெவர பிரானெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

தானே அறியும் வினைகள் அறிந்த பின்
நானே அறுதி என் நந்தி அறியும் கோன்
ஊனே உருக்கி உணர்வை உணர்ந்த பின்
தேனே அனையன் நந்தி தேவர் பிரானே.

பதப்பொருள்:

தானே (இறைவன் உள்ளுக்குள் இருந்து உணர்த்துகின்ற அறிவின் துணையால் அடியவர்கள் தாமே) அறியும் (அறிந்து கொள்ளக் கூடிய) வினைகள் (தங்களின் வினைகளையும் அவற்றை நீக்குகின்ற வழிகளையும்) அறிந்த (அறிந்து கொண்ட) பின் (பிறகு)
நானே (அவர்களின் அறிவுக்கு அவர்களே) அறுதி (வகுத்துக் கொண்ட வரை முறைப்படி இருப்பதை) என் (அவர்களுக்குள் இருக்கின்ற) நந்தி (குருநாதராகிய இறைவன்) அறியும் (அறிவான்) கோன் (அனைத்திற்கும் தலைவனாகிய அவனின் மேல் கொண்ட)
ஊனே (பேரன்பினால் தமது உடலையும்) உருக்கி (உருக்கிக் கொள்ளுகின்ற) உணர்வை (அளவிற்கு உருகின்ற மனதின் உணர்ச்சி நிலையை) உணர்ந்த (உண்மையாக உணர்ந்த) பின் (பிறகு)
தேனே (எவ்வளவு அருந்தினாலும் தெகிட்டாத தேனைப்) அனையன் (போன்று அவர்களுக்கு துணையாக இருப்பவன்) நந்தி (குருநாதனாகவும்) தேவர் (தேவர்களுக்கெல்லாம்) பிரானே (தலைவனாகவும் இருக்கின்ற இறைவன்).

விளக்கம்:

இறைவன் உள்ளுக்குள் இருந்து உணர்த்துகின்ற அறிவின் துணையால் அடியவர்கள் தாமே அறிந்து கொள்ளக் கூடிய தங்களின் வினைகளையும் அவற்றை நீக்குகின்ற வழிகளையும் அறிந்து கொண்ட பிறகு, அவர்களின் அறிவுக்கு அவர்களே வகுத்துக் கொண்ட வரை முறைப்படி இருப்பதை அவர்களுக்குள் இருக்கின்ற குருநாதராகிய இறைவன் அறிவான். இப்படி வரை முறைப்படி வாழ்வதினால் தங்களின் வினைகள் அழிந்து போகும் போது அவர்களுக்குள் இருந்து பேரன்பானது வெளிப்படுகின்றது. அனைத்திற்கும் தலைவனாகிய இறைவனின் மேல் கொண்ட பேரன்பினால் தமது உடலையும் உருக்கிக் கொள்ளுகின்ற அளவிற்கு உருகின்ற மனதின் உணர்ச்சி நிலையை உண்மையாக உணர்ந்த பிறகு எவ்வளவு அருந்தினாலும் தெகிட்டாத தேனைப் போன்று அவர்களுக்கு துணையாக இருப்பவன் குருநாதனாகவும் தேவர்களுக்கெல்லாம் தலைவனாகவும் இருக்கின்ற இறைவன்.

பாடல் #1778

பாடல் #1778: ஏழாம் தந்திரம் – 8. சம்பிரதாயம் (இறையருளால் உணர்த்தப் பட்ட தர்மத்தை முறையாக கடைபிடிப்பது)

உடல்பொரு ளாவி யுதகத்தாற் கொண்டு
படர்வினை பற்றறப் பார்த்துக் கைவைத்து
நொடியிலடி வைத்து நுண்ணுணர் வாக்கிக்
கடிய பிறப்பறக் காட்டின னந்தியே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

உடலபொரு ளாவி யுதகததாற கொணடு
படரவினை பறறறப பாரததுக கைவைதது
நொடியிலடி வைதது நுணணுணர வாககிக
கடிய பிறபபறக காடடின னநதியெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

உடல் பொருள் ஆவி உதகத்தால் கொண்டு
படர் வினை பற்று அற பார்த்து கை வைத்து
நொடியில் அடி வைத்து நுண் உணர்வு ஆக்கி
கடிய பிறப்பு அற காட்டினன் நந்தியே.

பதப்பொருள்:

உடல் (உடல்) பொருள் (உடலுக்குள் பொருளாக மறைந்து இருக்கின்ற இறைவன்) ஆவி (ஆன்மா ஆகிய மூன்றும் சேர்ந்து) உதகத்தால் (தாயின் கர்ப்பப் பைக்குள் இருக்கின்ற தண்ணீரில் பிறவி) கொண்டு (எடுத்துக் கொண்டு வரும் படி செய்து)
படர் (அந்த பிறவியில் தமது ஆசைகளை தீர்த்துக் கொள்ளும் போது அதனால் சேர்ந்து கொள்ளுகின்ற) வினை (பல விதமான வினைகளால்) பற்று (உருவாகுகின்ற பற்றுக்கள்) அற (நீங்கும் படி) பார்த்து (தமது திருக்கண்ணால் பார்த்து [நயன தீட்சை]) கை (தமது திருக்கரங்களை) வைத்து (வைத்து அபயம் கொடுத்து [ஸ்பரிச தீட்சை])
நொடியில் (ஒரு கண நேரத்தில்) அடி (தமது திருவடிகளை) வைத்து (வைத்து [திருவடி தீட்சை]) நுண் (அதன் மூலம் ஞானமாகிய நுண்ணியமான) உணர்வு (உணர்வுகளை [ஞான தீட்சை]) ஆக்கி (ஆக்கிக் கொடுத்து)
கடிய (துன்பங்களால் நீண்டு கொண்டே இருக்கின்ற) பிறப்பு (பிறவி சுழற்சியிலிருந்து) அற (நீங்குவதற்கான) காட்டினன் (வழியை காட்டி அருளினான்) நந்தியே (உள்ளுக்குள் குருநாதனாக இருக்கின்ற இறைனவன்).

விளக்கம்:

உடல், அதற்குள் பொருளாக மறைந்து இருக்கின்ற இறைவன், ஆன்மா ஆகிய மூன்றும் சேர்ந்து தாயின் கர்ப்பப் பைக்குள் இருக்கின்ற தண்ணீரில் பிறவி எடுத்துக் கொண்டு வரும் படி செய்து, அந்த பிறவியில் தமது ஆசைகளை தீர்த்துக் கொள்ளும் போது அதனால் சேர்ந்து கொள்ளுகின்ற பல விதமான வினைகளால் உருவாகுகின்ற பற்றுக்கள் நீங்கும் படி தமது திருக்கண்ணால் பார்த்து (நயன தீட்சை), தமது திருக்கரங்களை வைத்து அபயம் கொடுத்து (ஸ்பரிச தீட்சை), ஒரு கண நேரத்தில் தமது திருவடிகளை வைத்து (திருவடி தீட்சை), அதன் மூலம் ஞானமாகிய நுண்ணியமான உணர்வுகளை (ஞான தீட்சை) ஆக்கிக் கொடுத்து, துன்பங்களால் நீண்டு கொண்டே இருக்கின்ற பிறவி சுழற்சியிலிருந்து நீங்குவதற்கான வழியை காட்டி அருளினான் உள்ளுக்குள் குருநாதனாக இருக்கின்ற இறைவன்.

பாடல் #1779

பாடல் #1779: ஏழாம் தந்திரம் – 8. சம்பிரதாயம் (இறையருளால் உணர்த்தப் பட்ட தர்மத்தை முறையாக கடைபிடிப்பது)

உயிராஞ் சரீரமு மொண் பொருளான
வியவார் பரமும் பின்மேவு பிராணன்
செயலார் சிவமுஞ் சிற்சத்தி யாதிக்கே
யுயலார் குருபர னுய்யக்கொண் டானே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

உயிராஞ சரீரமு மொண பொருளான
வியவார பரமும பினமெவு பிராணன
செயலார சிவமுஞ சிறசததி யாதிககெ
யுயலார குருபர னுயயககொண டானெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

உயிர் ஆம் சரீரமும் ஒண் பொருள் ஆன
வியவு ஆர் பரமும் பின் மேவும் பிராணன்
செயல் ஆர் சிவமும் சித் சத்தி ஆதிக்கே
உயல் ஆர் குரு பரன் உய்ய கொண்டானே.

பதப்பொருள்:

உயிர் (உயிரோடு) ஆம் (இருக்கின்ற) சரீரமும் (உடலும்) ஒண் (அதனோடு ஒன்றாக சேர்ந்து இருக்கின்ற) பொருள் (பொருள்) ஆன (ஆகிய ஆன்மாவும்)
வியவு (அனைத்திலும் உயர்ந்து) ஆர் (முழுவதுமாக இருக்கின்ற) பரமும் (பரம்பொருளும்) பின் (உடல் எடுத்த பிறகு) மேவும் (வந்து சேர்ந்து கொள்ளுகின்ற) பிராணன் (மூச்சுக்காற்றும் ஆகிய இவை அனைத்தின்)
செயல் (செயல்களிலும்) ஆர் (முழுவதுமாக இருக்கின்ற) சிவமும் (இறைவனும்) சித் (ஞானமாக இருக்கின்ற) சத்தி (இறைவியுமே) ஆதிக்கே (ஆதியிலிருந்தே செயல் பட வைக்கின்றார்கள்)
உயல் (என்பதை முழுவதுமாக உணர்ந்த அடியவர்களிடம்) ஆர் (முழுமையாக இருக்கின்ற) குரு (குருவாகிய) பரன் (பரம்பொருள்) உய்ய (அவர்களை முக்தி நிலைக்கு ஏற்றிச் செல்வதற்கு) கொண்டானே (ஆட்கொண்டு அருளுவார்).

விளக்கம்:

உயிரோடு இருக்கின்ற உடலும், அதனோடு ஒன்றாக சேர்ந்து இருக்கின்ற பொருளாகிய ஆன்மாவும், அனைத்திலும் உயர்ந்து முழுவதுமாக இருக்கின்ற பரம்பொருளும், உடல் எடுத்த பிறகு வந்து சேர்ந்து கொள்ளுகின்ற மூச்சுக்காற்றும், ஆகிய இவை அனைத்தின் செயல்களிலும் முழுவதுமாக இருக்கின்ற இறைவனும் ஞானமாக இருக்கின்ற இறைவியுமே ஆதியிலிருந்தே செயல் பட வைக்கின்றார்கள் என்பதை முழுவதுமாக உணர்ந்த அடியவர்களிடம் முழுமையாக இருக்கின்ற குருவாகிய பரம்பொருள் அவர்களை முக்தி நிலைக்கு ஏற்றிச் செல்வதற்கு ஆட்கொண்டு அருளுவார்.

பாடல் #1780

பாடல் #1780: ஏழாம் தந்திரம் – 8. சம்பிரதாயம் (இறையருளால் உணர்த்தப் பட்ட தர்மத்தை முறையாக கடைபிடிப்பது)

பச்சிமத் திக்கிலே வைச்ச வாசாரியன்
நிச்சலு மென்னை நினையென்ற வப்பொரு
ளுச்சிக்குக் கீழது வுண்ணாவுக்கு மேலது
வைச்ச பதமிது வாய்திற வாதே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

பசசிமத திககிலெ வைசச வாசாரியன
நிசசலு மெனனை நினையெனற வபபொரு
ளுசசிககுக கீழது வுணணாவுககு மெலது
வைசச பதமிது வாயதிற வாதெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

பச்சிமம் திக்கிலே வைத்த ஆசாரியன்
நிச்சலும் என்னை நினை என்ற அப் பொருள்
உச்சிக்கு கீழ் அது உள் நாவுக்கு மேல் அது
வைத்த பதம் இது வாய் திறவாதே.

பதப்பொருள்:

பச்சிமம் (மேல்) திக்கிலே (திசையிலே) வைத்த (இறையருளால் வைக்கப் பட்ட) ஆசாரியன் (குருவாக வழிகாட்டுகின்ற ஜோதியானது)
நிச்சலும் (தினமும்) என்னை (தன்னை) நினை (நினைத்துக் கொண்டே இரு) என்ற (என்று அருளிய) அப் (அந்த) பொருள் (பரம்பொருளின் வடிவமானது)
உச்சிக்கு (உச்சந் தலைக்கு) கீழ் (கீழ்) அது (உள்ள இடத்திலும்) உள் (வாய்க்கு உள்ளே இருக்கின்ற) நாவுக்கு (அண்ணாக்குக்கு) மேல் (மேலே) அது (உள்ள இடத்திலும் உள்ள சகஸ்ரதளத்தில்)
வைத்த (இறையருளால் வைக்கப் பட்ட) பதம் (திருவடிகளாக) இது (இருக்கின்றது) வாய் (வாய்) திறவாதே (திறந்து பேசாமல் மனதை அடக்கி அந்த திருவடிகளின் மேலேயே எண்ணத்தை வைத்து இருக்க வேண்டும்).

விளக்கம்:

மேல் திசையிலே இறையருளால் வைக்கப் பட்ட குருவாக வழிகாட்டுகின்ற ஜோதியானது தினமும் தன்னை நினைத்துக் கொண்டே இரு என்று அருளிய அந்த பரம்பொருளின் வடிவமானது உச்சந் தலைக்கு கீழ் உள்ள இடத்திலும், வாய்க்கு உள்ளே இருக்கின்ற அண்ணாக்குக்கு மேலே உள்ள இடத்திலும் உள்ள சகஸ்ரதளத்தில் இறையருளால் வைக்கப் பட்ட திருவடிகளாக இருக்கின்றது. வாய் திறந்து பேசாமல் மனதை அடக்கி அந்த திருவடிகளின் மேலேயே எண்ணத்தை வைத்து இருக்க வேண்டும்.

பாடல் #1781

பாடல் #1781: ஏழாம் தந்திரம் – 8. சம்பிரதாயம் (இறையருளால் உணர்த்தப் பட்ட தர்மத்தை முறையாக கடைபிடிப்பது)

பிட்டி யடித்துப் பிதற்றித் திரிவேனை
யொட்டடித் துள்ளமர் மாசெல்லாம் வாங்கிப்பின்
தட்டொக்கா மாற்றின தன்னையு மென்னையும்
வட்டம தொத்தது வாணிபம் வாய்த்ததே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

பிடடி யடிததுப பிதறறித திரிவெனை
யொடடடித துளளமர மாசெலலாம வாஙகிபபின
தடடொககா மாறறின தனனையு மெனனையும
வடடம தொததது வாணிபம வாயதததெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

பிட்டி அடித்து பிதற்றி திரிவேனை
ஒட்டு அடித்து உள் அமர் மாசு எல்லாம் வாங்கி பின்
தட்டு ஒக்கா மாற்றினன் தன்னையும் என்னையும்
வட்டம் அது ஒத்து அது வாணிபம் வாய்த்த அதே.

பதப்பொருள்:

பிட்டி (அனைத்தையும் இறைவனே செய்கின்றான் என்று நினைக்காமல் நான் செய்கின்றேன் என்கிற தாழ்வான எண்ணத்தில் பல விதமான செயல்களை) அடித்து (செய்து கொண்டு) பிதற்றி (தேவை இல்லாதவற்றை பேசிக் கொண்டு) திரிவேனை (வீணாக அலைந்து திரிந்தாலும் இறைவன் விதித்த தர்மப்படி வாழ்க்கையை கடத்துகின்ற எம்மை)
ஒட்டு (தூசுகளை) அடித்து (நீக்கி) உள் (எமக்கு உள்ளே) அமர் (வீற்றிருக்கின்ற) மாசு (அழுக்குகளை) எல்லாம் (அனைத்தையும்) வாங்கி (தாமே வாங்கிக் கொண்டு) பின் (பிறகு)
தட்டு (குற்றத்தை) ஒக்கா (சேர்ந்து இருக்காத தூய்மையாக) மாற்றினன் (எம்மை மாற்றி அருளிய) தன்னையும் (இறைவனையும்) என்னையும் (எம்மையும்)
வட்டம் (ஒரே வட்டம்) அது (ஆகிய தன்மைக்குள்) ஒத்து (ஒன்றாக சேர்ந்து இருப்பது) அது (ஆகிய நிலைக்கு கொண்டு வந்து) வாணிபம் (தம்மை நோக்கி பிற உயிர்களும் வருவதற்கான வழிகளை எம்மை செய்ய வைத்து) வாய்த்த (அதன் பயனால் முக்தியை கொடுத்து) அதே (எமக்கு அருளுகின்றான் இறைவன்).

விளக்கம்:

அனைத்தையும் இறைவனே செய்கின்றான் என்று நினைக்காமல் நான் செய்கின்றேன் என்கிற தாழ்வான எண்ணத்தில் பல விதமான செயல்களை செய்து கொண்டு, தேவை இல்லாதவற்றை பேசிக் கொண்டு, வீணாக அலைந்து திரிந்தாலும் இறைவன் விதித்த தர்மப்படி வாழ்க்கையை கடத்துகின்ற எம்மிடமுள்ள தூசுகளை நீக்கி, எமக்குள்ளே வீற்றிருக்கின்ற அழுக்குகளை அனைத்தையும் தாமே வாங்கிக் கொண்டு அருளினான் இறைவன். பிறகு, குற்றத்தை சேர்ந்து இருக்காத தூய்மையாக எம்மை மாற்றி அருளிய இறைவனையும் எம்மையும் ஒரே வட்டமாகிய தன்மைக்குள் ஒன்றாக சேர்ந்து இருப்பதாகிய நிலைக்கு கொண்டு வந்து, தம்மை நோக்கி பிற உயிர்களும் வருவதற்கான வழிகளை எம்மை செய்ய வைத்து, அதன் பயனால் முக்தியை கொடுத்து எமக்கு அருளுகின்றான் இறைவன்.

பாடல் #1782

பாடல் #1782: ஏழாம் தந்திரம் – 8. சம்பிரதாயம் (இறையருளால் உணர்த்தப் பட்ட தர்மத்தை முறையாக கடைபிடிப்பது)

தரிக்கின்ற பல்லுயிர்க் கெல்லாந் தலைவ
னிருக்கின்ற தன்மையை யேது முணரார்
பிரிக்கின்ற விந்துப் பிணக்கறுத் தெல்லாங்
கருக்கொண்ட வீசனைக் கண்டுகொண் டேனே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

தரிககினற பலலுயிரக கெலலாந தலைவ
னிருககினற தனமையை யெது முணரார
பிரிககினற விநதுப பிணககறுத தெலலாங
கருககொணட வீசனைக கணடுகொண டெனெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

தரிக்கின்ற பல் உயிர்க்கு எல்லாம் தலைவன்
இருக்கின்ற தன்மையை ஏதும் உணரார்
பிரிக்கின்ற விந்து பிணக்கு அறுத்து எல்லாம்
கரு கொண்ட ஈசனை கண்டு கொண்டேனே.

பதப்பொருள்:

தரிக்கின்ற (உடல் கொண்டு பிறவி எடுக்கின்ற) பல் (பல விதமான) உயிர்க்கு (உயிர்கள்) எல்லாம் (அனைத்திற்கும்) தலைவன் (தலைவனாக)
இருக்கின்ற (இருக்கின்ற இறைவனின்) தன்மையை (தன்மைகள்) ஏதும் (எதையும்) உணரார் (உணராதவர்கள் இறையருளால் உணர்த்தப் பட்ட தர்மத்தை முறையாக கடை பிடித்து வாழும் போது)
பிரிக்கின்ற (இறைவனிடமிருந்து அவர்களை பிரித்து வைத்திருக்கின்ற) விந்து (மாயையாகிய) பிணக்கு (ஆசைகள் பந்தங்களாகிய கட்டுக்களை) அறுத்து (அறுத்து) எல்லாம் (அவர்களது உடல் பொருள் ஆவி ஆகிய அனைத்தையும்)
கரு (தமக்குள்ளேயே சேர்த்துக்) கொண்ட (கொண்டு அருளுகின்ற) ஈசனை (இறைவனை) கண்டு (யாம் கண்டு) கொண்டேனே (கொண்டோம்).

விளக்கம்:

உடல் கொண்டு பிறவி எடுக்கின்ற பல விதமான உயிர்கள் அனைத்திற்கும் தலைவனாக இருக்கின்ற இறைவனின் தன்மைகள் எதையும் உணராதவர்கள் இறையருளால் உணர்த்தப் பட்ட தர்மத்தை முறையாக கடை பிடித்து வாழும் போது, இறைவனிடமிருந்து அவர்களை பிரித்து வைத்திருக்கின்ற மாயையாகிய ஆசைகள் பந்தங்களாகிய கட்டுக்களை அறுத்து, அவர்களது உடல் பொருள் ஆவி ஆகிய அனைத்தையும் தமக்குள்ளேயே சேர்த்துக் கொண்டு அருளுகின்ற இறைவனை யாம் கண்டு கொண்டோம்.