பாடல் #1794

பாடல் #1794: ஏழாம் தந்திரம் – 9. திருவருள் வைப்பு (இறைவன் கொடுத்த அருளை காப்பாற்றுதல்)

குறிப்பினி னுள்ளே குவலையந் தோன்றும்
வெறுப்பிரு ணீக்கில் விகிர்தனு நிற்குஞ்
செறிப்புறு சிந்தையைச் சிக்கென நாடி
லறிப்புறு காட்சி யமரரு மாமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

குறிபபினி னுளளெ குவலையந தொனறும
வெறுபபிரு ணீககில விகிரதனு நிறகுஞ
செறிபபுறு சிநதையைச சிககென நாடி
லறிபபுறு காடசி யமரரு மாமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

குறிப்பினின் உள்ளே குவலயம் தோன்றும்
வெறுப்பு இருள் நீக்கில் விகிர்தனும் நிற்கும்
செறிப்பு உறு சிந்தையை சிக்கென நாடில்
அறிப்பு உறு காட்சி அமரரும் ஆமே.

பதப்பொருள்:

குறிப்பினின் (உள்ளுக்குள் தோன்றும் ஜோதியாகிய இறைவனையே குறிக்கோளாக கொண்டு தியானிக்கின்ற அடியவர்களின்) உள்ளே (உள்ளே) குவலயம் (அண்ட சராசரங்களும் அதிலுள்ள அனைத்தும்) தோன்றும் (உண்மைப் பொருளாக தோன்றும் அந்த திருவருள் ஜோதியால்)
வெறுப்பு (ஆணவமாகிய) இருள் (மலத்தை) நீக்கில் (நீக்கி விட்டால்) விகிர்தனும் (அனைத்திலும் மாறுபட்டவனாகிய இறைவன்) நிற்கும் (அடியவருக்குள் வந்து நிற்பான்)
செறிப்பு (அந்த இறைவனுக்கு நெருக்கமாக இருப்பதில்) உறு (உறுதியாக நிற்கின்ற) சிந்தையை (சிந்தனையை) சிக்கென (விடாது பற்றிக் கொண்டு) நாடில் (இறைவனை தேடும் போது)
அறிப்பு (உள்ளுக்குள் உணரக்கூடிய) உறு (முழுமையான) காட்சி (திருவருள் காட்சி தோன்றும்) அமரரும் (அதை தரிசித்து தாமும் இறப்பு இல்லாத நிலையை) ஆமே (அடையலாம்).

விளக்கம்:

உள்ளுக்குள் தோன்றும் ஜோதியாகிய இறைவனையே குறிக்கோளாக கொண்டு தியானிக்கின்ற அடியவர்களின் உள்ளே அண்ட சராசரங்களும் அதிலுள்ள அனைத்தும் உண்மைப் பொருளாக தோன்றும். அந்த திருவருள் ஜோதியால் ஆணவமாகிய மலத்தை நீக்கி விட்டால் அனைத்திலும் மாறுபட்டவனாகிய இறைவன் அடியவருக்குள் வந்து நிற்பான். அந்த இறைவனுக்கு நெருக்கமாக இருப்பதில் உறுதியாக நிற்கின்ற சிந்தனையை விடாது பற்றிக் கொண்டு இறைவனை தேடும் போது உள்ளுக்குள் உணரக்கூடிய முழுமையான திருவருள் காட்சி தோன்றும். அதை தரிசித்து தாமும் இறப்பு இல்லாத நிலையை அடையலாம்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.