பாடல் #49

பாடல் #49: பாயிரம் – 1. கடவுள் வாழ்த்து

பரைபசு பாசத்து நாதனை உள்ளி
உரைபசு பாசத் தொருங்கவல் லார்க்குத்
திரைபசு பாவச் செழுங்கடல் நீந்திக்
கரைபசு பாசம் கடந்தெய்த லாமே.

விளக்கம்:

மாயையால் உயிர்களைக் கட்டிப்போடும் பரை (பராசக்தி) மும்மலங்களால் கட்டுண்ட ஆன்மாவாகிய பசு ஆன்மாக்களை உலகோடு கட்டிப்போடும் பாசம் (உலகப் பற்றுக்கள்) இவை அனைத்திற்கும் தலைவனான இறைவனை உள்ளத்தில் வைத்துப் போற்றிப் புகழ்ந்து அன்பினால் அவனோடு கலந்து இருக்கக்கூடியவர்களுக்கு ஆன்மாவின் கர்மாக்கள் பெருங்கடல் போன்று சூழ்ந்து மெய்ஞானத்தை மறைக்கும் திரைபோல இருந்தாலும் இறைவனின் அருளால் அந்தக் கடலையும் நீந்திக் கரையேறி மும்மலக்கட்டுக்களை அறுத்து உலகப் பற்றுக்களை ஒதுக்கி மாயையைக் கடந்து முக்தியை எய்தலாம்.

பாடல் #50

பாடல் #50: பாயிரம் – 1. கடவுள் வாழ்த்து

சூடுவன் நெஞ்சிடை வைப்பன் பிரான்என்று
பாடுவன் பன்மலர் தூவிப் பணிந்துநின்
றாடுவன் ஆடி அமரர்பி ரான்என்று
நாடுவன் நானின் றறிவது தானே.

விளக்கம்:

இறைவனின் திருவடிகளை என் தலைமேல் சூடிக்கொள்வேன். அவனின் திருவடிகளை என் நெஞ்சத்தில் வைத்துக்கொள்வேன். எம்பெருமான் என்று அவன் புகழ்களைப் பாடுவேன். பலவித மலர்களை அவன் திருவுருவத்தின் மேல் தூவி அவனைப் பணிந்து நின்று அவன் முன்னால் அவன் பெருமைகளைப் பாடிக்கொண்டே ஆடுவேன். ஆடியபின் அமரர்களின் தலைவனான இவனே எனக்கு முக்தியளிக்கக்கூடியவன் என்று அவனை நாடி அடைந்தபின் அனைத்தும் அவனே எனும் உண்மை ஞானத்தை அறிந்து அவனோடே கலந்து நிற்பேன்.

உள்விளக்கம்:

இறைவனை அடைந்து முக்திபெற மாபெரும் தவங்கள் யோகங்கள் யாகங்கள் இருந்தாலும் அவனது திருவடியை எண்ணத்தில் எப்போதும் வைத்து அவனைப் புகழ்ந்து பாடி ஆடி பலவித மலர்களைத் தூவி பூஜித்தாலே அவனை நாடி முக்தியை அடையலாம். இதுவே யாம் அறிந்த சிறந்த உபாயம் என்று திருமூலர் அருளுகின்றார்.

பாடல் #0

பாடல் #0: பாயிரம் – கடவுள் வணக்கம்

ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தி னிளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்றனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே.

விளக்கம்:

ஐந்து கரங்களைக் கொண்டவனும் யானையை முகமாகக் கொண்டவனும் இளம் பிறை நிலா போன்ற வளைந்த கொம்பைக் கொண்டவனும் குருவாக இருக்கும் இறைவனின் மகனாக இருப்பவனும் அறிவின் முழுஉருவாகவும் இருப்பவனை எனது தலைமேல் வைத்து, அவனது திருவடியை போற்றி வழிபடுகிறேன்.

 

திருமந்திரம் – அறிமுகம்

திருமந்திரம் என்பது திருமூலரால் எழுதப்பட்ட ஒரு தமிழ் சைவசமயப் படைப்பு ஆகும். இது ஒன்பது தந்திரங்களைக் (இயல்கள்) கொண்டது. மூவாயிரம் பாடல்கள் உடையது. சராசரியாக ஒவ்வொரு பாடலும் நான்கு வரிகளாகவும், ஒவ்வொரு வரியும் நான்கு சொற்களைக் கொண்டதாகவும், மொத்தம் 1,92,000 சொற்களைக் கொண்டது. திருமந்திரம், எடுத்துக் கொண்ட பொருளை எளிய சொற்களால் அனைவருக்கும் புரியும்படி திருக்குறளைப்போல் சுருக்கமாகவும், தெளிவாகவும் கூறுகிறது.

வேதம், ஆகமம் ஆகிய இரண்டிற்கும் திருமந்திரம் விளக்கம் தருகிறது. இது சைவ ஆகமம் என்றும் போற்றப்படுகிறது. திருமந்திரம் சைவத் திருமுறைகள் பன்னிரண்டினுள் பத்தாவது திருமுறையாக பெரியோர்களால் வைக்கப்பட்டுள்ளது. தோத்திரத்திற்குத் திருவாசகம், சாத்திரத்திற்குத் திருமந்திரம் எனச் சான்றோர் கூறுவர். மேலும் சிவமே அன்பு, அன்பே சிவம் எனக் கூறும் திருமந்திரமே சைவ சித்தாந்தத்தின் முதல் நூலாகக் கருதப்படுகிறது.

திருமூலர் திருமந்திரத்தில் மூன்று அதிமுக்கியமான வாக்கியங்களை, இன்றளவும் நாம் பயன்படுத்தும் விதமாக அருளியுள்ளார், அவையாவன:

  1. ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்
  2. யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்
  3. அன்பே சிவம்

இவரது திருநூலுக்கு “தமிழ் மூவாயிரம்” என்ற பெயரே முதலில் இருந்தது, அந்த நூலில் மிக நிரம்பிய மந்திரங்களும், சில தந்திரங்களும், நம் மனித ஸ்தூல சரீரத்துக்குத் தேவையான எல்லாவற்றையும் விளக்கியுள்ளதால், பின்னர் அந்த நூல் “திருமூலர் திருமந்திரம்” என்று வழங்கப்பட்டது.

திருமந்திரத்தில் “ஐந்து கரத்தினை” என்று தொடங்கும் விநாயகர் வணக்க பாடல் தற்காலத்தில்தான் திருமூலர் திருமந்திரம் நூலில் சேர்க்கப்பட்டது, அவர் காலத்தில் சைவம் என்று கொண்டால் சிவனை அன்றி வேறொரு தெய்வத்தை வைத்து எந்த ஒரு காரியங்களையும், இலக்கியங்களையும், நூல்களையும் தொடங்கியது இல்லை. விநாயகரின் வழிபாடு பிற்காலத்தில், அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான, சிறுத்தொண்டர் என்று போற்றப்படுகிற, பரஞ்சோதி என்கிற மன்னன் வாதாபி வரை சென்று அங்கு போரிலே வெற்றி கொண்டு அந்த பிராந்தியத்திலே அவர்கள் வணங்கும் தெய்வமாகிய கணபதியை தமிழகத்துக்கு திரும்பும்பொழுது கொண்டு வந்தார் என்பதும், அப்பொழுது விநாயகரின் வயிற்றுப் பகுதி இப்படி தொந்தியாக இல்லாமல் தட்டையாக இருந்தது என்பதற்கும், சான்றாக இன்றளவும் ஒன்று திருவாரூர் தியாகேசர் ஆலயத்திலும், மற்றொன்று இங்கிலாந்தில் இருக்கும் அருங்காட்சியத்திலும் காட்சி அளிக்கின்றது.