ஆதியிலிருந்து இருக்கும் மூன்று தெய்வங்களான சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய மூவருக்கும் மூத்தவன் சதாசிவமூர்த்தி. தனக்கு ஈடுஇணை இல்லாத தலைவன் அவன். அவனை அப்பா என்று அழைத்தால் உயிர்களுக்கு அப்பாவாகவே தோன்றுவான் (அவனை என்ன சொல்லி அழைத்தாலும் அதுவாகவே உயிர்களுக்குத் தோன்றி அருள்பாலிப்பான்). பொன் போன்ற அறிவு ஒளியைத் தரும் பல உபதேசங்களை குருவாக நின்று வழங்குபவனும் அவனே. பொன்னைப் போன்ற பேரொளியாக இருப்பவன் வேதங்களை தனக்குள்ளே கொண்டவன் அவன்.
அவனை ஓழிய அமரரும் இல்லை அவனன்றிச் செய்யும் அருந்தவம் இல்லை அவனன்றி மூவரால் ஆவதொன் றில்லை அவனன்றி ஊர்புகு மாறறி யேனே.
விளக்கம்:
சிவத்தைத் தவிர பிறப்பு இறப்பு இல்லாத அமரர்கள் யாரும் இல்லை. சிவத்தை நோக்கி செய்யப்படும் தவத்தை விட சிறந்த தவம் வேறு இல்லை. சிவமுடைய அருள் இல்லாமல் படைத்தல் காத்தல் அழித்தல் ஆகிய தொழில்களைச் செய்யும் தெய்வங்களால் எதுவும் செய்ய இயலாது. சிவமில்லாமல் முக்தி அடையும் வேறு எந்த வழியையும் நான் அறியவில்லை.
சிவனொடொக் குந்தெய்வந் தேடினும் இல்லை அவனொடொப் பார்இங்கும் யாவரும் இல்லை புவனங் கடந்தன்று பொன்னொளி மின்னுந் தவனச் சடைமுடித் தாமரை யானே.
விளக்கம்:
சிவத்தோடு ஒப்பிட்டுப் பார்க்குமளவிற்கு எங்கு தேடினாலும் வேறு எந்த தெய்வமும் கிடையாது. அவன் ஈடுஇணை இல்லாதவன். அனைத்து தெய்வங்களுக்கும் மேலானவன். அவனோடு ஒப்பிட்டுப் பார்க்குமளவிற்கு வேறு யாருமே இந்த உலகத்தில் இல்லை. இந்த உலகத்தையும் தாண்டிய பரவெளியில் சூரியனைப் போன்ற ஒளியுடன் பிரகாசித்துக்கொண்டும் சூரியனின் ஒளிக்கற்றைகள் போல மின்னும் சடையைக் கொண்டும் அவன் ஆயிரம் தாமரை மலரின் மேல் வீற்றிருக்கின்றான்.
அழிந்து போகக்கூடிய அண்டசராசரங்களுக்கும் அதிலுள்ள அனைத்து உயிர்களுக்கும் உண்மைப் பொருளாகவும் அனைத்திற்கும் ஆரம்பமாகவும் இருக்கும் இறைவனை மண்ணுலகில் எம்மை வந்து இருக்குமாறு செய்து மண்ணுலக மாயையிலிருந்து விடுபடும் வழியாக தனது திருவடியையும் எமக்கு அருளிய இறைவனை இடைவெளியின்றி பகலிலும் இரவிலும் அவன் பாதங்களைப் பணிந்து அவனைத் துதித்து எம்முள் இருக்கும் மாயையாகிய இருளை நீக்கி அவனுடைய உண்மைப் பொருளை உணர்ந்து இருந்தோம்.
அனைத்து உயிர்களுடனும் கலந்திருக்கும் இறைவனை எண்ணிலடங்காத தேவர்கள் தினந்தோறும் போற்றித் தொழுகின்ற இறைவனை தத்துவங்களைக் கடந்து அனைத்திற்கும் தலைவனாக இருக்கும் இறைவனை பக்கத்தில் இருந்தாலும் அறிந்துகொள்ள முடியாத இறைவனை யாம் அவனுள் அடங்கி நின்று அவனைத் தியானித்து அவன் புகழைப் போற்றி உரைப்போம்.
இறைவனைப் போற்றிப் புகழ்ந்து, இசைத்துப் பாடும் அடியவர்களின் உள்ளத்தில் வீற்றிருக்கும் புனிதமானவனும் நான்கு திசைகளுக்கும் (உலகமனைத்திற்கும்) நன்மை புரியும் மாதுவாகிய சக்திக்குத் தலைவனானவனும். மேற்கூறிய நான்கு திசைகளுக்குள் தென் திசைக்கு தலைவனானவனும் காலத்தின் அதிபதியான எமனை எட்டி உதைத்ததால் காலத்தை வென்றவனும் ஆகிய இறைவனை யான் கூறிகின்றேன்.
இறைவன் ஒருவனே அவனைத்தவிர வேறு தெய்வங்கள் இல்லை. அதாவது உலகத்தில் உள்ள அனைத்து தெய்வங்களும் அண்டசராசரங்களும், அதிலுள்ள அனைத்தும் இறைவன் ஒருவனாகவே இருக்கின்றான்.
ஒன்றாக இருக்கும் இறைவனின் அருளானது இரண்டாக இருக்கின்றது. அசையா சக்தியான இறைவனின் அருள் அவனிடமிருந்து அசையும் சக்தியாக வெளிப்படுகிறது. அதாவது எப்படி கசப்பான மருந்தும் இனிப்பான மருந்தும் நோயைக் குணப்படுத்துகிறதோ அதுபோலவே இன்பம் துன்பம் ஆகிய இரண்டும் இறைவனின் அருளாகும்.
இரண்டாக இருக்கும் இறைவனே பிரம்மன், விஷ்ணு, சிவன் ஆகிய மூன்று தெய்வங்களாகவும் நின்று படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய மூன்றுவிதமான தொழில்களையும் புரிகின்றான்.
மூன்றாய் நின்ற இறைவனே உயிர்கள் தன்னை அறிந்துகொள்ள வேண்டும் என்கிற மாபெரும் கருணையில் ரிக், யஜூர், சாம, அதர்வண ஆகிய நான்கு விதமான வேதங்களாகவும் நிற்கின்றான்.
நான்கு வேதங்களாக இருக்கும் இறைவனே நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் ஆகிய ஐந்து பூதங்களகவும் இருக்கின்றான். அதாவது தெய்வம் அருளும் ஐந்து வகை தொழில்களாகிய படைத்தல், காத்தல், மாயையால் மறைத்தல், அருளல், மாயையை அழித்தல் ஆகிய ஐந்தின் தலைவன் அவன் ஒருவனே.
ஐம்பூதங்களாக இருக்கும் இறைவனே உயிர்களின் உடலில் மூலாதாரம், சுவாதிட்டானம், மணிப்பூரகம், அநாகதம், விசுத்தம், ஆஞ்ஞை ஆகிய ஆறு சக்கரங்களாக விரிந்து இருக்கின்றான்.
ஆறு சக்கரங்களாக விரிந்திருக்கும் இறைவனே மூலாதாரத்தில் குண்டலினி சக்தியாக இருந்து யோகங்கள் புரிவதன் மூலம் ஆறு சக்கரங்களுக்கும் மேலேறி ஏழாவது சகஸ்ரரதளத்திற்கு சென்று அதையும் தாண்டி பரவெளியில் உறைந்திருக்கின்றான்.
ஏழு சக்கரங்களிலும் உறைந்திருக்கும் இறைவனை தனக்குள்ளே உணர்ந்து உயிர்கள் அவனை எட்டுதலே முக்தியாகும்.
இந்து (நிலவின்) இளம் (வளரும்) பிறை (பிறை) போலும் (போன்ற) எயிற்று (கொம்புகளை) அனை (கூர்மையாக உடையவனும்)
நந்தி (குருவாக இருக்கின்ற இறைவனின்) மகன் (மகனாக) தனை (இறை தன்மையாகவே இருப்பவனை) ஞான (உண்மை ஞானத்தின்) கொழுந்தினை (உச்சமாகவும் இருப்பவனை)
புந்தி (எமது அறிவுக்கு) இல் (உள்ளே) வைத்து (வைத்து) அடி (அவனது திருவடிகளை) போற்றுகின்றேனே (யான் எப்போதும் போற்றி வணங்குகின்றேன்).
விளக்கம்:
ஐந்து கரங்களையே ஐந்து பூதங்களாக (நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம்) கொண்டவனும், உலகத்தையே தனது திருமுகமாக கொண்டவனும், இளப் பிறை நிலாவைப் போன்ற கூர்மையான கொம்புகளை உடையவனும், குருவாக இருக்கின்ற இறைவனின் மகனாக இறை தன்மையாகவே இருப்பவனும், உண்மை ஞானத்தின் உச்சமாகவும் இருப்பவனை எமது அறிவுக்கு உள்ளே வைத்து அவனது திருவடிகளை யான் எப்போதும் போற்றி வணங்குகின்றேன்.
இப்பாடலில் 3 ஆவது அடிக்கான பொருளை நேரடியாக புரிந்து கொள்வது சிறிது கடினம். கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவில் விளக்கமாக கொடுக்கப்பட்டுள்ளது.
திருமந்திரம் என்பது திருமூலரால் எழுதப்பட்ட ஒரு தமிழ் சைவசமயப் படைப்பு ஆகும். இது ஒன்பது தந்திரங்களைக் (இயல்கள்) கொண்டது. மூவாயிரம் பாடல்கள் உடையது. சராசரியாக ஒவ்வொரு பாடலும் நான்கு வரிகளாகவும், ஒவ்வொரு வரியும் நான்கு சொற்களைக் கொண்டதாகவும், மொத்தம் 1,92,000 சொற்களைக் கொண்டது. திருமந்திரம், எடுத்துக் கொண்ட பொருளை எளிய சொற்களால் அனைவருக்கும் புரியும்படி திருக்குறளைப்போல் சுருக்கமாகவும், தெளிவாகவும் கூறுகிறது.
வேதம், ஆகமம் ஆகிய இரண்டிற்கும் திருமந்திரம் விளக்கம் தருகிறது. இது சைவ ஆகமம் என்றும் போற்றப்படுகிறது. திருமந்திரம் சைவத் திருமுறைகள் பன்னிரண்டினுள் பத்தாவது திருமுறையாக பெரியோர்களால் வைக்கப்பட்டுள்ளது. தோத்திரத்திற்குத் திருவாசகம், சாத்திரத்திற்குத் திருமந்திரம் எனச் சான்றோர் கூறுவர். மேலும் சிவமே அன்பு, அன்பே சிவம் எனக் கூறும் திருமந்திரமே சைவ சித்தாந்தத்தின் முதல் நூலாகக் கருதப்படுகிறது.
திருமூலர் திருமந்திரத்தில் மூன்று அதிமுக்கியமான வாக்கியங்களை, இன்றளவும் நாம் பயன்படுத்தும் விதமாக அருளியுள்ளார், அவையாவன:
ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்
யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்
அன்பே சிவம்
இவரது திருநூலுக்கு “தமிழ் மூவாயிரம்” என்ற பெயரே முதலில் இருந்தது, அந்த நூலில் மிக நிரம்பிய மந்திரங்களும், சில தந்திரங்களும், நம் மனித ஸ்தூல சரீரத்துக்குத் தேவையான எல்லாவற்றையும் விளக்கியுள்ளதால், பின்னர் அந்த நூல் “திருமூலர் திருமந்திரம்” என்று வழங்கப்பட்டது.
திருமந்திரத்தில் “ஐந்து கரத்தினை” என்று தொடங்கும் விநாயகர் வணக்க பாடல் தற்காலத்தில்தான் திருமூலர் திருமந்திரம் நூலில் சேர்க்கப்பட்டது, அவர் காலத்தில் சைவம் என்று கொண்டால் சிவனை அன்றி வேறொரு தெய்வத்தை வைத்து எந்த ஒரு காரியங்களையும், இலக்கியங்களையும், நூல்களையும் தொடங்கியது இல்லை. விநாயகரின் வழிபாடு பிற்காலத்தில், அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான, சிறுத்தொண்டர் என்று போற்றப்படுகிற, பரஞ்சோதி என்கிற மன்னன் வாதாபி வரை சென்று அங்கு போரிலே வெற்றி கொண்டு அந்த பிராந்தியத்திலே அவர்கள் வணங்கும் தெய்வமாகிய கணபதியை தமிழகத்துக்கு திரும்பும்பொழுது கொண்டு வந்தார் என்பதும், அப்பொழுது விநாயகரின் வயிற்றுப் பகுதி இப்படி தொந்தியாக இல்லாமல் தட்டையாக இருந்தது என்பதற்கும், சான்றாக இன்றளவும் ஒன்று திருவாரூர் தியாகேசர் ஆலயத்திலும், மற்றொன்று இங்கிலாந்தில் இருக்கும் அருங்காட்சியத்திலும் காட்சி அளிக்கின்றது.