பாடல் #206

பாடல் #206: முதல் தந்திரம் – 9. மகளிரிழிவு (பெண்களின் மேல் கொண்ட காமத்தால் பெறும் இழிவு)

இயலுறும் வாழ்க்கை இளம்பிடி மாதர்
புயலுறும் புல்லின் புணர்ந்தவ ரேயினும்
மயலுறும் வானவர் சாரவிரும் என்பார்
அயலுறப் பேசி அகன்றொழிந் தாரே.

விளக்கம்:

இளம் பெண் யானையைப் போல இல்வாழ்க்கையில் இல்லாமல் பொது மகளிராக இருக்கும் பெண்கள் மழை துளிகளைத் தழுவி வளரும் புற்களைப் போல ஆரத்தழுவி ஆணுடன் இருந்தாலும் புதியதாக வேறொரு பணக்காரர் வந்துவிட்டால் அவரைத் தேவர் என்று புகழ்ந்து எம்மோடு இன்புற்று இருங்கள் என்று வேண்டிக்கொள்வார்கள். அப்போது பழைய காதலரை உடனே வெளியே செல்லுமாறு கடுமையான வார்த்தைகளால் பேசி அவர்களிடமிருந்து சுத்தமாக விலகிச் சென்றுவிடுவார்கள்.

கருத்து: பொது மகளிர் எவ்வளவுதான் நம்மீது அன்போடு இருப்பது போல் காட்டிக்கொண்டு ஆரத்தழுவினாலும் அவர்களின் எண்ணம் எப்போதும் பணத்தின் மேலேயே இருக்கும். நம்மைவிட வேறொரு பணக்காரர் வந்துவிட்டால் அவரை தேவர் என்று புகழுந்து தம்மோடு வைத்துக்கொண்டு இருப்பவரை வெளியே போகச் சொல்லிவிடுவார்கள்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.