பாடல் #887

பாடல் #887: நான்காம் தந்திரம் – 1. அசபை (உச்சரிக்கப் படாமல் மூச்சுக்காற்றோடு சேர்ந்து இயக்கும் மந்திரம்)

ஆமே பொன்னம்பலம் அற்புதம் ஆனந்தம்
ஆமே திருக்கூத் தனவரத் தாண்டவம்
ஆமே பிரளய மாகும்அத் தாண்டவம்
ஆமே சங்காரத் தருந்தாண் டவங்களே.

விளக்கம்:

பாடல் #886 ல் உள்ளபடி உலகத்திலுள்ள அனைவருக்கும் பொதுவான இறை சக்தி வீற்றிருக்கும் தென் நாட்டு சிதம்பரத்திலுள்ள பொன்னம்பலம் இறைவனின் ஐந்து வகையான திருக்கூத்துக்களை (நடனம்) காட்டி நிற்கின்றது. அவை அண்ட சராசரங்களில் இருக்கும் அனைத்து உயிர்களையும் படைக்கின்ற அற்புத தாண்டவம், அந்த உயிர்களில் உண்மை ஞானம் பெற்றவருக்கு பேரின்பத்தைக் கொடுக்கும் ஆனந்த தாண்டவம், அனைத்து உயிர்களின் வாழ்க்கை முழுதும் அவற்றைத் தாங்கிக் கொண்டு மூச்சாய் உயிராய் இயங்குகின்ற அனவரத் தாண்டவம், அவற்றின் விதி முடியும் போது உலக வாழ்க்கையை அழித்து அருளுகின்ற சங்காரத் தாண்டவம், உலகங்களையும் அதிலிருக்கும் உயிர்களையும் முற்றாக அழித்துத் தம்மோடு மீண்டும் சேர்த்துக்கொள்ளும் ஊழிக்காலப் பிரளயத் தாண்டவம் ஆகிய பெருமை வாய்ந்த ஐந்து தாண்டவங்களே ஆகும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.