பாடல் #892

பாடல் #892: நான்காம் தந்திரம் – 1. அசபை (உச்சரிக்கப் படாமல் மூச்சுக்காற்றோடு சேர்ந்து இயக்கும் மந்திரம்)

ஆனந்தம் மூன்றும் அறிவிரண் டொன்றாகும்
ஆனந்தம் சிவாய அறிவார் இங்கில்லை
ஆனந்த மோடும் அறியவல் லார்கட்கு
ஆனந்தக் கூத்தாகவே அகப்படுந் தானே.

விளக்கம்:

ந என்கின்ற சிகார எழுத்தும் ம என்கின்ற வகார எழுத்தும் அறிவெழுத்துக்கள் ஆகும். ந எழுத்து அறிவைச் செலுத்துவதும் ம எழுத்து செலுத்தியவாற்றிலே சென்று அறிவதும் ஆகும். அறிவதாகிய வகாரம் தன்னைச் செலுத்துவதாகிய சிகாரத்திலே அடங்கி விடும். அதோடு யகரமாகிய சிவம் சேர்க்க வரும் சிவாய என்னும் மூன்றெழுத்து ஆன்மாக்களுக்கு ஆனந்தத்தை வழங்குவதை அறிபவர் மிகச் சிலரே. இவற்றை அறிந்து கொள்பவர்களுக்கு சிவன் ஆனந்த கூத்தனாய் இருப்பதும் அவன் ஆனந்தக்கூத்தும் அறிந்து கொள்ளலாம்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.