பாடல் #280

பாடல் #280: முதல் தந்திரம் – 19. அன்பு செய்வாரை அறிவன் சிவன்

இகழ்ந்ததும் பெற்றதும் ஈசன் அறியும்
உகந்தருள் செய்திடும் உத்தம நாதன்
கொழுந்தன்பு செய்தருள் கூரவல் லார்க்கு
மகிழ்ந்தன்பு செய்யு மருளது வாமே.

விளக்கம்:

தம்மை இகழ்ச்சியாக பேசும் உயிர்களையும் போற்றி வணங்கும் உயிர்களையும் சிவபெருமான் அறிவான். தம்மை இகழ்ந்து பேசிய உயிர்களுக்கும் மனமுவந்து அவரவர் மனதிற்கேற்ப அருளை வழங்கும் உத்தமமான தலைவன் இறைவன். அப்படிப்பட்ட இறைவனை உயிர்கள் தமது உள்ளத்திலிருந்து வெளிவரும் தூய்மையான அன்போடு அழைத்து அருள் வேண்டுமென்று கேட்டுவிட்டால், அவர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியுடன் வேண்டியதை உடனே தந்துவிடுவதும் அந்த இறைவனின் பேரருளே ஆகும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.