பாடல் #1674

பாடல் #1674: ஆறாம் தந்திரம் – 11. ஞான வேடம் (உண்மை ஞானம் உள்ளவர்களின் வேடம்)

ஞானத்தி னாற்பத நண்ணுஞ் சிவஞானி
தானத்தில் வைத்தல் தனியாலை யத்தனா
மோனத்த னாதலின் முத்தனாஞ் சித்தனா
மேனைத் தவசி யிவனென லாகுமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

ஞானததி னாறபத நணணுஞ சிவஞானி
தானததில வைததல தனியாலை யததனா
மொனதத னாதலின முததனாஞ சிததனா
மெனைத தவசி யிவனென லாகுமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

ஞானத்தின் ஆல் பதம் நண்ணும் சிவ ஞானி
தானத்தில் வைத்தல் தனி ஆலையத்தன் ஆம்
மோனத்தன் ஆதலின் முத்தன் ஆம் சித்தன் ஆம்
ஏனை தவசி இவன் எனல் ஆகுமே.

பதப்பொருள்:

ஞானத்தின் (உண்மையான ஞானத்தின்) ஆல் (மூலம்) பதம் (இறைவனது திருவடிகளை) நண்ணும் (அடைந்து) சிவ (சிவ ஞானத்தை பெற்ற) ஞானி (ஞானிகள்)
தானத்தில் (தங்களிடமுள்ள அருளை தம்மை நாடி வருகின்ற தகுதியானவர்களுக்கு) வைத்தல் (கொடுக்கின்றதால்) தனி (அவர்கள் ஒரு தனித்துவம் பெற்ற) ஆலையத்தன் (ஆலயமாகவே) ஆம் (இருக்கின்றார்கள்)
மோனத்தன் (அவர்கள் சொல்லும் செயலும் மனமும் அடங்கிய மோன நிலையிலேயே) ஆதலின் (இருப்பவர்கள் ஆதலால்) முத்தன் (முக்தி நிலையில் வீற்றிருக்கின்ற முக்தர்கள்) ஆம் (ஆகவும்) சித்தன் (சித்தத்தில் எப்போதும் சிவத்தையே நினைக்கின்ற சித்தர்கள்) ஆம் (ஆகவும் இருக்கின்றார்கள்)
ஏனை (மற்ற) தவசி (தவசிகளும்) இவன் (இவர்களைப் போலவே இறைவனது திருவடிகளை மட்டுமே எண்ணிக்கொண்டு மோன நிலையில் இருந்தால் இவர்களுடைய நிலையை அடைய முடியும்) எனல் (என்பது) ஆகுமே (உண்மையே ஆகும்).

விளக்கம்:

உண்மையான ஞானத்தின் மூலம் இறைவனது திருவடிகளை அடைந்து சிவ ஞானத்தை பெற்ற ஞானிகள் தங்களிடமுள்ள அருளை தம்மை நாடி வருகின்ற தகுதியானவர்களுக்கு கொடுக்கின்றதால் அவர்கள் ஒரு தனித்துவம் பெற்ற ஆலயமாகவே இருக்கின்றார்கள். அவர்கள் சொல்லும் செயலும் மனமும் அடங்கிய மோன நிலையிலேயே இருப்பவர்கள் ஆதலால் முக்தி நிலையில் வீற்றிருக்கின்ற முக்தர்களாகவும் சித்தத்தில் எப்போதும் சிவத்தையே நினைத்துக் கொண்டிருப்பதால் சித்தர்களாகவும் இருக்கின்றார்கள். இவர்களைப் போலவே மற்ற தவசிகளும் இறைவனது திருவடிகளை மட்டுமே எண்ணிக்கொண்டு மோன நிலையில் இருந்தால் இவர்களுடைய நிலையை அடைய முடியும் என்பது உண்மையே ஆகும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.