பாடல் #1673

பாடல் #1673: ஆறாம் தந்திரம் – 11. ஞான வேடம் (உண்மை ஞானம் உள்ளவர்களின் வேடம்)

ஞானிக்குச் சுந்தர வேடமு நல்லவாந்
தானுற்ற வேடமுந் தற்சிவ யோகமே
ஞானமவ் வேடமருண் ஞான சாதன
மானது மாமொன்று மாகாதவ னுக்கே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

ஞானிககுச சுநதர வெடமு நலலவாந
தானுறற வெடமுந தறசிவ யொகமெ
ஞானமவ வெடமருண ஞான சாதன
மானது மாமொனறு மாகாதவ னுககெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

ஞானிக்கு சுந்தர வேடமும் நல்ல ஆம்
தான் உற்ற வேடமும் தன் சிவ யோகமே
ஞானம் அவ் வேடம் அருள் ஞான சாதனம்
ஆனதும் ஆம் ஒன்றும் ஆகாது அவனுக்கே.

பதப்பொருள்:

ஞானிக்கு (உண்மையான ஞானிக்கு) சுந்தர (எந்த ஒரு அழகிய) வேடமும் (வேடமும்) நல்ல (நல்லதே) ஆம் (ஆகும்)
தான் (அவர்களுக்கு) உற்ற (தானாகவே அமைந்த) வேடமும் (வேடமும்) தன் (அவர்களின்) சிவ (சிவ) யோகமே (யோகமாகவே இருக்கின்றது)
ஞானம் (உண்மையான ஞானமாகவும்) அவ் (அந்த) வேடம் (வேடமே இருக்கின்றது) அருள் (இறைவனின் திருவருள்) ஞான (ஞானத்தை) சாதனம் (பெறுகின்ற சாதனம்)
ஆனதும் (ஆகவும் அதுவே) ஆம் (இருக்கின்றது) ஒன்றும் (ஆதலால் அந்த வேடத்தினால் எந்த விதமான) ஆகாது (பாதிப்புகளும் ஏற்படுவது இல்லை) அவனுக்கே (உண்மையான ஞானிகளுக்கு).

விளக்கம்:

உண்மையான ஞானிக்கு எந்த ஒரு அழகிய வேடமும் நல்லதே ஆகும். அவர்களுக்கு தானாகவே அமைந்த வேடமும் அவர்களின் சிவ யோகமாகவே இருக்கின்றது. உண்மையான ஞானமாகவும் அந்த வேடமே இருக்கின்றது. இறைவனின் திருவருள் ஞானத்தை பெறுகின்ற சாதனமாகவும் அதுவே இருக்கின்றது. ஆதலால் உண்மையான ஞானிகளுக்கு அந்த வேடத்தினால் எந்த விதமான பாதிப்புகளும் ஏற்படுவது இல்லை.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.