பாடல் #1672

பாடல் #1672: ஆறாம் தந்திரம் – 11. ஞான வேடம் (உண்மை ஞானம் உள்ளவர்களின் வேடம்)

அடியா ரவரே யடியா ரல்லாதா
ரடியாரு மாகாது வேடமு மாகா
வடியார் சிவஞான மானது பெற்றா
ரடியா ரல்லாதா ரடியாரு மன்றே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

அடியா ரவரெ யடியா ரலலாதா
ரடியாரு மாகாது வெடமு மாகா
வடியார சிவஞான மானது பெறறா
ரடியா ரலலாதா ரடியாரு மனறெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

அடியார் அவரே அடியார் அல்லாதார்
அடியாரும் ஆகாது வேடமும் ஆகா
அடியார் சிவ ஞானம் ஆனது பெற்றார்
அடியார் அல்லாதார் அடியாரும் அன்றே.

பதப்பொருள்:

அடியார் (உண்மையான ஞானத்தைக் கொண்டு இறைவனின் அடியவர்களாக இருக்கின்ற) அவரே (ஞானிகளே) அடியார் (அடியவர்கள் ஆவார்கள்) அல்லாதார் (அப்படி இல்லாதவர்கள்)
அடியாரும் (அடியவர்களாகவும்) ஆகாது (ஆக மாட்டார்கள்) வேடமும் (அவர்கள் போடுகின்ற பொய்யான வேடங்களும்) ஆகா (உண்மையான அடியாருக்கான வேடமாக இருக்காது)
அடியார் (அடியவர் என்பவர்கள்) சிவ (இறைவனது சிவ) ஞானம் (ஞானமாக) ஆனது (இருக்கின்ற உண்மையான ஞானத்தை) பெற்றார் (இறையருளால் பெற்றவர்கள் ஆவார்கள்)
அடியார் (அவ்வாறு உண்மையான ஞானம் பெறுவதற்கான) அல்லாதார் (எந்த தன்மையும் இல்லாதவர்கள்) அடியாரும் (அடியவர்களாக) அன்றே (ஆக மாட்டார்கள்).

விளக்கம்:

உண்மையான ஞானத்தைக் கொண்டு இறைவனின் அடியவர்களாக இருக்கின்ற ஞானிகளே அடியவர்கள் ஆவார்கள். அப்படி இல்லாதவர்கள் அடியவர்களாகவும் ஆக மாட்டார்கள் அவர்கள் போடுகின்ற பொய்யான வேடங்களும் உண்மையான அடியாருக்கான வேடமாக இருக்காது. அடியவர் என்பவர்கள் இறைவனது சிவ ஞானமாக இருக்கின்ற உண்மையான ஞானத்தை இறையருளால் பெற்றவர்கள் ஆவார்கள். அவ்வாறு உண்மையான ஞானம் பெறுவதற்கான எந்த தன்மையும் இல்லாதவர்கள் அடியவர்களாக ஆக மாட்டார்கள்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.