பாடல் #1623

பாடல் #1623: ஆறாம் தந்திரம் – 4. துறவு (அனைத்தையும் விட்டு விலகி இருக்கின்ற தவ நிலை)

தூம்பு துறந்தன வொன்பது வாய்தலு
மாம்பற் குழியி லகஞ்சுழிப் பட்டது
வேம்பேறி நோக்கினென் மீகாமன் கூறையிற்
கூம்பேறிக் கோயில் பழுக்கின்ற வாறே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

தூமபு துறநதன வொனபது வாயதலு
மாமபற குழியி லகஞசுழிப படடது
வெமபெறி நொககினென மீகாமன கூறையிற
கூமபெறிக கொயில பழுககினற வாறெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

தூம்பு துறந்தன ஒன்பது வாய்தலும்
ஆம்பல் குழியில் அகம் சுழி பட்டது
வேம்பு ஏறி நோக்கின் என் மீகாமன் கூறையில்
கூம்பு ஏறி கோயில் பழுக்கின்ற ஆறே.

பதப்பொருள்:

தூம்பு (தமது துளைகளாகிய கர்மங்களை) துறந்தன (துறந்தன) ஒன்பது (உடலில் உள்ள இரண்டு கண்கள், இரண்டு காதுகள், இரண்டு நாசிகள், வாய், கருவாய், எருவாய் ஆகிய ஒன்பது) வாய்தலும் (கர்மங்களின் செயல்களாகிய நுழை வாயில்கள்)
ஆம்பல் (இதுவரை துன்பக்) குழியில் (குழியில்) அகம் (ஆன்மாவனது) சுழி (தனது கர்மங்களை அனுபவிக்கின்ற வாழ்க்கை சுழலிலேயே) பட்டது (அகப் பட்டுக் கொண்டு இருந்தது)
வேம்பு (கர்மங்களை துறந்த பிறகு சுழுமுனை நாடியின் வழியே) ஏறி (குண்டலினி சக்தியானது மேல் நோக்கி ஏறி) நோக்கின் (பார்க்கும் போது) என் (அங்கே எமது ஆன்மாவை) மீகாமன் (காக்கின்றவனாகிய இறைவனை) கூறையில் (எனது ஆன்மாவை மூடியிருந்த திரையை விலக்கிப் பார்த்து)
கூம்பு (சுழுமுனையின் உச்சித் துளைக்கு மேலே இருக்கின்ற சகஸ்ரதளத்தில்) ஏறி (ஏறி) கோயில் (அங்கே கோயில் கொண்டு வீற்றிருந்து) பழுக்கின்ற (முக்தியை அளிக்கின்ற பேரோளியாகிய இறைவனை) ஆறே (அடைகின்ற வழி கிடைத்தது).

விளக்கம்:

இதுவரை துன்பக் குழியில் ஆன்மாவனது தனது கர்மங்களை அனுபவிக்கின்ற வாழ்க்கை சுழலிலேயே அகப் பட்டுக் கொண்டு இருந்தது. அனைத்தையும் விட்டு விலகி துறவு எனும் தவ நிலையில் மேன்மை நிலையை அடையும் போது தமது உடலில் உள்ள இரண்டு கண்கள், இரண்டு காதுகள், இரண்டு நாசிகள், வாய், கருவாய், எருவாய் ஆகிய ஒன்பது துளைகளாகிய கர்மங்களின் செயல்களை துறந்து விடுகின்றது. அதன் பிறகு பிறகு சுழுமுனை நாடியின் வழியே குண்டலினி சக்தியானது மேல் நோக்கி ஏறி பார்க்கும் போது அங்கே அவரது ஆன்மாவை காக்கின்றவனாகிய இறைவனை அவரது ஆன்மாவை மூடியிருந்த திரையை விலக்கிப் பார்த்து சுழுமுனையின் உச்சித் துளைக்கு மேலே இருக்கின்ற சகஸ்ரதளத்தில் ஏறி அங்கே கோயில் கொண்டு வீற்றிருந்து முக்தியை அளிக்கின்ற பேரோளியாகிய இறைவனை அடைகின்ற வழி அவருக்கு கிடைத்தது.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.