பாடல் #1543

பாடல் #1543: ஐந்தாம் தந்திரம் – 21. புறச் சமய நிந்தனை (இறைவனை அடைய வேண்டும் என்று வழிபாடு செய்யாமல் ஆசைகளுக்காக புற வழிபாடு செய்வதை நிந்திப்பது)

அரனெறி யப்பனை யாதிப் பிரானை
யுரநெறி யாகிவந் துள்ளம் புகுந்தான்
பரனெறி தேடிய பத்தர்கள் சித்தம்
பரனறி யாவிடிற் பல்வகை தூரமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

அரனெறி யபபனை யாதிப பிரானை
யுரநெறி யாகிவந துளளம புகுநதான
பரனெறி தெடிய பததரகள சிததம
பரனறி யாவிடிற பலவகை தூரமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

அரன் நெறி அப்பனை ஆதி பிரானை
உர நெறி ஆகி வந்து உள்ளம் புகுந்தான்
பரன் நெறி தேடிய பத்தர்கள் சித்தம்
பரன் அறியா விடில் பல் வகை தூரமே.

பதப்பொருள்:

அரன் (தங்களை காத்து அருளுகின்ற) நெறி (வழி முறையில்) அப்பனை (அப்பனாகவும்) ஆதி (ஆதிப் பரம்பொருளாகவும்) பிரானை (அனைத்திற்கும் தலைவனாகவும் இருக்கின்ற இறைவனே)
உர (தங்களுக்கு உத்வேகத்தை கொடுத்து முயற்சி செய்ய வைக்கின்ற) நெறி (வழி முறைகளாகவே) ஆகி (ஆகி) வந்து (வந்து) உள்ளம் (தங்களின் உள்ளத்திற்குள்) புகுந்தான் (புகுந்து வீற்றிருப்பான்)
பரன் (பரம் பொருளை அடைகின்ற) நெறி (வழி முறைகளை) தேடிய (தேடி அலைகின்ற) பத்தர்கள் (பக்தர்கள்) சித்தம் (தங்களின் எண்ணத்தினால்)
பரன் (அந்தப் பரம் பொருளை) அறியா (அறிந்து கொள்ளாமல்) விடில் (போய் விட்டால்) பல் (இறைவனும் அவர்களால் நெருங்க முடியாத) வகை (அளவிற்கு) தூரமே (தூரமாகவே இருப்பான்).

விளக்கம்:

தங்களை காத்து அருளுகின்ற வழி முறையில் அப்பனாகவும் ஆதிப் பரம்பொருளாகவும் அனைத்திற்கும் தலைவனாகவும் இருக்கின்ற இறைவனே தங்களுக்கு உத்வேகத்தை கொடுத்து முயற்சி செய்ய வைக்கின்ற வழி முறைகளாகவே ஆகி வந்து தங்களின் உள்ளத்திற்குள் புகுந்து வீற்றிருப்பான். பரம் பொருளை அடைகின்ற வழி முறைகளை தேடி அலைகின்ற பக்தர்கள் தங்களின் எண்ணத்தினால் அந்தப் பரம் பொருளை அறிந்து கொள்ளாமல் போய் விட்டால் இறைவனும் அவர்களால் நெருங்க முடியாத அளவிற்கு தூரமாகவே இருப்பான்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.