பாடல் #1532

பாடல் #1532: ஐந்தாம் தந்திரம் – 21. புறச் சமய நிந்தனை (இறைவனை அடைய வேண்டும் என்று வழிபாடு செய்யாமல் ஆசைகளுக்காக புற வழிபாடு செய்வதை நிந்திப்பது)

உள்ளத்து முள்ளன் புறத்துள னென்பவர்க்
குள்ளத்து முள்ளன் புறத்துள னெம்மிறை
யுள்ளத்து மில்லைப் புறத்தில்லை யென்பவர்க்
குள்ளத்து மில்லைப் புறத்தில்லைத் தானே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

உளளதது முளளன புறததுள னெனபவரக
குளளதது முளளன புறததுள னெமமிறை
யுளளதது மிலலைப புறததிலலை யெனபவரக
குளளதது மிலலைப புறததிலலைத தானெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

உள்ளத்தும் உள்ளன் புறத்து உள்ளன் என்பவர்க்கு
உள்ளத்தும் உள்ளன் புறத்து உள்ளன் எம் இறை
உள்ளத்தும் இல்லை புறத்து இல்லை என்பவர்க்கு
உள்ளத்தும் இல்லை புறத்து இல்லை தானே.

பதப்பொருள்:

உள்ளத்தும் (உள்ளத்திற்கு உள்ளேயும்) உள்ளன் (கலந்து இருக்கின்றான்) புறத்து (வெளியேயும்) உள்ளன் (அனைத்திலும் கலந்து இருக்கின்றான்) என்பவர்க்கு (என்று நம்புபவர்களுக்கு)
உள்ளத்தும் (உள்ளத்திற்கு உள்ளேயும்) உள்ளன் (கலந்து இருக்கின்றான்) புறத்து (வெளியேயும்) உள்ளன் (அனைத்திலும் கலந்து இருக்கின்றான்) எம் (எமது உரிமையான) இறை (இறைவன்)
உள்ளத்தும் (உள்ளத்திற்கு உள்ளேயும்) இல்லை (இல்லை) புறத்து (வெளியேயும் எங்கும்) இல்லை (இல்லை) என்பவர்க்கு (என்று நினைப்பவர்களுக்கு)
உள்ளத்தும் (உள்ளத்திற்கு உள்ளே) இல்லை (உணரும் படியும் இல்லாமல்) புறத்து (வெளியேயும் எங்கும்) இல்லை (அறிந்து கொள்ளும் படியும் இல்லாமல்) தானே (இருக்கின்றான் இறைவன்).

விளக்கம்:

உள்ளத்திற்கு உள்ளேயும் கலந்து இருக்கின்றான் வெளியேயும் அனைத்திலும் கலந்து இருக்கின்றான் என்று நம்புபவர்களுக்கு உள்ளத்திற்கு உள்ளேயும் கலந்து இருக்கின்றான் வெளியேயும் அனைத்திலும் கலந்து இருக்கின்றான் எமது உரிமையான இறைவன். உள்ளத்திற்கு உள்ளேயும் இல்லை வெளியேயும் எங்கும் இல்லை என்று நினைப்பவர்களுக்கு உள்ளத்திற்கு உள்ளே உணரும் படியும் இல்லாமல் வெளியேயும் எங்கும் அறிந்து கொள்ளும் படியும் இல்லாமல் இருக்கின்றான் இறைவன்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.