பாடல் # 809

பாடல் # 809 : மூன்றாம் தந்திரம் – 18. கேசரி யோகம் (பார்வையை மேல் நோக்கி செலுத்தினால் ஆகாயத்தில் சஞ்சரிக்கும் ஆற்றலை பெறுவர்)

ஊனீர் வழியாக வுண்ணாவை யேறிட்டுத்
தேனீர் பருகிச் சிவாய நமவென்று
கானீர் வரும்வழி கங்கை தருவிக்கும்
வானீர் வரும்வழி வாய்ந்தறி வீரே.

விளக்கம் :

கேசரி யோகத்தைச் செய்து நாவின் வழியாக உண்ணாக்கை மேலே செலுத்தி அங்கு ஊற்றெடுக்கும் அமுதத்தை பருகி சிவாய நம என்ற ஐந்து எழுத்துக்களை சிந்தனை செய்பவர்களுக்கு ஓர் ஒளி வெள்ளம் நீர் வெள்ளம் போல முகத்தின் முன்பு பெருகும். (வியர்வை போல்) காற்றும், நீரும் உலாவும் இடமாகிய இந்த உடம்பு ஆகாய கங்கையை உம்மிடம் வரச்செய்யும். அந்த வான கங்கையை பெற்று அறிந்து கொள்ளுங்கள்.


பாடல் # 810

பாடல் # 810 : மூன்றாம் தந்திரம் – 18. கேசரி யோகம் (பார்வையை மேல் நோக்கி செலுத்தினால் ஆகாயத்தில் சஞ்சரிக்கும் ஆற்றலை பெறுவர்)

வாய்ந்தறிந் துள்ளே வழிபாடு செய்தவர்
காய்ந்தறி வாகக் கருணை பொழிந்திடும்
பாய்ந்தறிந் துள்ளே படிக்கத வொன்றிட்டுக்
கூய்ந்தறிந் துள்ளுறை கோயிலுமாமே.

விளக்கம் :

சிவனை மனதில் உணர்ந்து வழிபாடு செய்தவர்களின் அறியாமையை சக்தி ஒலி ஒளி வடிவாக வந்து சுட்டெரித்து வெளிப்படுவாள். கேசரி முத்திரையினால் அந்த ஒளி ஒலிகளில் மனத்தைப் பதித்து அதன் மீது தியானம் செய்தால் அந்த யோகியின் உடலே ஓர் கோயிலாகி விடும்.

பாடல் # 811

பாடல் # 811 : மூன்றாம் தந்திரம் – 18. கேசரி யோகம் (பார்வையை மேல் நோக்கி செலுத்தினால் ஆகாயத்தில் சஞ்சரிக்கும் ஆற்றலை பெறுவர்)

கோயிலின் உள்ளே குடிசெய்து வாழ்பவர்
தாயினும் நல்லார் தரணி முழுதுக்கும்
காயினும் நல்லவர் காய்ந்தவர் தம்முளுந்
தீயினுந் தீயரத் தீவினை யாளர்க்கே.

விளக்கம் :

உள்ளத்தைக் கோயிலாகக் கொண்டு சிவபெருமானுடன் குடியிருந்து வாழ்பவர். எல்லாவுலகங்களுக்கும் திருவருள் செய்வதில் தாயினும் நல்லவராவர். பிறர் இவர் மீது கோபம் கொண்டாலும் இவர் நன்மையே செய்வார். தீவினையாளர்களின் தீவினைத் துன்பம் போக நோய்க்கு மருந்துபோல் தீவினையாளர்களுக்கு துன்பத்தை கொடுத்து தீயினும் கொடியராவர்.

பாடல் # 812

பாடல் # 812 : மூன்றாம் தந்திரம் – 18. கேசரி யோகம் (பார்வையை மேல் நோக்கி செலுத்தினால் ஆகாயத்தில் சஞ்சரிக்கும் ஆற்றலை பெறுவர்)

தீவினை யாளர்தஞ் சென்னியி லுள்ளவன்
பூவினை யாளர்தம் பொற்பதி யானவன்
பாவினை யாளர்தம் பாவகத் துள்ளவன்
மாவினை யாளர்தம் மதியிலுள் ளானே.

விளக்கம் :

தன்னை வழிபடும் நல்வினை இல்லாதவர்க்கும் அவர் தலையில் மறைந்தே இறைவன் இருக்கின்றான். தன்னை ஏதேனும் ஒரு வழியில் வெளிப்பக்கமாக வைத்து வழிபடுகின்றவர்களுக்கும் அவ்வழியாய் நின்று இறைவன் அருள் செய்கின்றான். தன்னை மானசீகமாய் ஆதாரங்களில் வைத்து பாவிக்கின்றவர்கட்கு அப்பாவனையிலே இறைவன் விளங்குகின்றான். யோகத்தைச் செய்கின்றவர்களுக்கு அவர்களது உணர்வு வடிவாய் இறைவன் நிற்கின்றான்.

சிவன் லிங்கமாக இருப்பதன் தத்துவம் என்ன? - ஆன்மிகம்

பாடல் # 813

பாடல் # 813 : மூன்றாம் தந்திரம் – 18. கேசரி யோகம் (பார்வையை மேல் நோக்கி செலுத்தினால் ஆகாயத்தில் சஞ்சரிக்கும் ஆற்றலை பெறுவர்)

மதியி னெழுங்கதிர் போலப் பதினாறாய்ப்
பதிமனை நூறுநூற் றிருபத்து நாலாய்க்
கதிமனை யுள்ளே கணைகள் பரப்பி
எதிர்மலை யாமல் இருந்தனன் தானே.

விளக்கம் :

சந்திரனில் இருந்து வரும் கதிர்கள் பதினாறு. அது போல் கழுத்துப் பகுதி விசுத்திச் சக்கரத்தில் இருந்து வரும் கதிர்கள் பதினாறாய் இருந்தும், உடம்பில் அந்தந்த இடங்களின் அதிபதியாய் 224 கதிர்களாய் இருந்தும், இயங்கும் இல்லமாகிய உடம்பினுள் வினைகளாய் உள்ள பகைவர்களை அவ்யோகியர் எதிர்சென்று போர் புரியாதவாறு தனது அருளாற்றலாகிய கணைகளைப் பொழிந்து கொண்டு இருக்கின்றான்.

பாடல் # 814

பாடல் # 814 : மூன்றாம் தந்திரம் – 18. கேசரி யோகம் (பார்வையை மேல் நோக்கி செலுத்தினால் ஆகாயத்தில் சஞ்சரிக்கும் ஆற்றலை பெறுவர்)

இருந்தனள் சத்தியு மக்கலை சூழ
இருந்தனள் கன்னியு மந்நடு வாக
இருந்தனள் மானேர் முகநில வார
இருந்தனள் தானும் அமுதம் பொழிந்தே.

விளக்கம் :

விசுத்திச்சக்கரத்தின் 16 கதிர்களின் நடுவே இறைவனின் சக்தி திருவருளோடு இருக்கின்றாள். மான்போல் விழிகளும் சந்திரன் போல் திருமுகமும் கொண்டு உடலில் இருந்து அமுதத்தைப் பொழிந்துகொண்டு அவற்றோடு தானும் இருக்கின்றாள்.

பாடல் # 815

பாடல் # 815 : மூன்றாம் தந்திரம் – 18. கேசரி யோகம் (பார்வையை மேல் நோக்கி செலுத்தினால் ஆகாயத்தில் சஞ்சரிக்கும் ஆற்றலை பெறுவர்)

பொழிந்த இருவெள்ளி பொன்மண் ணடையில்
வழிந்துள் ளிருந்தது வான்முத லங்குக்
கழிந்தது போகாமற் காக்கவல் லார்க்குக்
கொழுந்தது வாகுங் குணமது தானே.

விளக்கம்:

திருவருளால் உடம்பில் உள்ள வெண்ணிறமான அமிர்தம் பொன்நிறமான மண்போல் இருக்கும் மூலத்திடம் சேர்ந்தால் அங்குப் பெருகி வழிந்து நிறைந்திருந்து உடம்புக்கு உறுதி தரும். ஐம்பூதங்களால் ஆன உடம்பில் கழிவுகள் ஏற்பாடாது. இது போல் உடம்பை காக்க வல்லவர்களுக்கு உடம்பு இளமையுடன் கொழுந்து போல் என்றும் பொலிவுடன் இருக்கும்.

Eklingji temple at Kumbhalgarh fort Rajasthan

பாடல் # 816

பாடல் # 816 : மூன்றாம் தந்திரம் – 18. கேசரி யோகம் (பார்வையை மேல் நோக்கி செலுத்தினால் ஆகாயத்தில் சஞ்சரிக்கும் ஆற்றலை பெறுவர்)

குணமது வாகிய கோமள வல்லி
மணமது வாக மகிழ்ந்தங் கிருக்கில்
தனமது வாகிய தத்துவ ஞானம்
இனமது வாக இருந்தனன் தானே.

விளக்கம் :

ஒரு பொருளுக்கும் அப்பொருளின் குணத்திற்கும் உள்ள சம்பந்தம் பிரிக்க முடியாது. அது போல ஆன்மாவின் குணமாய் ஒன்றாய் இருக்கும் திருவருள் சக்தி யோகத்தால் வெளிப்பட்டு யோகியோடு என்றும் உடனாய் சிவனோடு சேர்ந்து இருக்கும். கேசரி யோகம் அளிக்கும் உண்மை ஞானத்தின் வழியாகச் சிவனும் அவனிடத்தினின்றும் நீங்காதிருப்பான்.

பாடல் # 817

பாடல் # 817 : மூன்றாம் தந்திரம் – 18. கேசரி யோகம் (பார்வையை மேல் நோக்கி செலுத்தினால் ஆகாயத்தில் சஞ்சரிக்கும் ஆற்றலை பெறுவர்)

இருந்த பிராணனும் உள்ளே எழுமாம்
பரிந்தஇத் தண்டுடன் அண்டம் பரிய
விரிந்தஅப் பூவுடன் மேலெழ வைக்கின்
மலர்ந்தது மண்டலம் வாழலு மாமே.

விளக்கம் :

கேசரி யோகப் பயிற்சியால் மூலாதாரத்தில் உள்ள பிராணனை உள்ளே நடுநாடியின் வழியாக மேல் எழுப்பி தலை உச்சியில் உள்ள சஹஸ்ரதளத்தில் சேர்க்க ஆயிரம் இதழ் தாமரை நன்கு விரிந்து உடலுடன் நெடுங்காலம் வாழலாம்.

பாடல் # 818

பாடல் # 818 : மூன்றாம் தந்திரம் – 18. கேசரி யோகம் (பார்வையை மேல் நோக்கி செலுத்தினால் ஆகாயத்தில் சஞ்சரிக்கும் ஆற்றலை பெறுவர்)

மண்டலத் துள்ளே மனவொட்டி யாணத்தைக்
கண்டகத் தங்கே கருதியே கீழ்க்கட்டிப்
பண்டகத் துள்ளே பகலே ஒளியாகக்
குண்டலக் காதனுங் கூத்தொழிந் தானே.

விளக்கம் :

ஞான எண்ணத்துள் மனம் ஒடுங்கும் நிலை உள்ளதை உணர்ந்து கேசரி யோகத்தின் மூலம் கீழே செல்ல விடாமல் வைத்தால் உடம்பில் பகலில் உள்ள ஒளி போல குண்டலம் அணிந்த சிவபெருமான் தன் ஐந்தொழில்களை விட்டு அசைவின்றி அங்கே இருப்பான்.