பாடல் #1677

பாடல் #1677: ஆறாம் தந்திரம் – 12. சிவ வேடம் (உண்மையான அடியவரின் வேடமே சிவ வேடம் ஆதல்)

உடலிற் றுலக்கிய வேடமுயிர்க் காகா
வுடல்கழன் றால்வேட முடனே கழலு
முடலுயி ருள்ளமை யொன்றோர்ந்து கொள்ளாதார்
கடலி லகப்பட்ட கட்டையொத் தாரே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

உடலிற றுலககிய வெடமுயிரக காகா
வுடலகழன றாலவெட முடனெ கழலு
முடலுயி ருளளமை யொனறொரநது கொளளாதார
கடலி லகபபடட கடடையொத தாரெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

உடலில் துலக்கிய வேடம் உயிர்க்கு ஆகா
உடல் கழன்றால் வேடம் உடனே கழலும்
உடல் உயிர் உள் அமை ஒன்று ஓர்ந்து கொள்ளாதார்
கடலில் அகப்பட்ட கட்டை ஒத்தாரே.

பதப்பொருள்:

உடலில் (ஞானிகளின் உடலில் இருந்து) துலக்கிய (வெளிப்படுகின்ற) வேடம் (வேடமானது) உயிர்க்கு (அவர்களின் உயிர் நிலையை) ஆகா (குறிப்பது ஆகாது)
உடல் (அவர்கள் தங்களின் உடலை) கழன்றால் (நீக்கி விட்டால்) வேடம் (அவர்களிடமிருந்து வெளிப்பட்ட வேடமும்) உடனே (அதனுடனே சேர்ந்து) கழலும் (நீங்கி விடும்)
உடல் (உடலோடு இருக்கும்) உயிர் (உயிருக்கு) உள் (உள்ளே) அமை (அமைந்து இருக்கின்ற) ஒன்று (ஒரு பரம்பொருளை) ஓர்ந்து (ஆராய்ந்து) கொள்ளாதார் (உணர்ந்து கொள்ளாதவர்கள்)
கடலில் (கடல் அலைகளில்) அகப்பட்ட (அகப்பட்டுக் கொண்ட) கட்டை (கட்டையைப்) ஒத்தாரே (போலவே பிறவி எனும் சுழற்சியில் சிக்கிக் கொண்டு மீண்டும் மீண்டும் பிறவி எடுத்து துன்பத்தில் உழல்வார்கள்).

விளக்கம்:

ஞானிகளின் உடலில் இருந்து வெளிப்படுகின்ற வேடமானது அவர்களின் உயிர் நிலையை குறிப்பது ஆகாது. அவர்கள் தங்களின் உடலை நீக்கி விட்டால் அவர்களிடமிருந்து வெளிப்பட்ட வேடமும் அதனுடனே சேர்ந்து நீங்கி விடும். உடலோடு இருக்கும் உயிருக்கு உள்ளே அமைந்து இருக்கின்ற ஒரு பரம்பொருளை ஆராய்ந்து உணர்ந்து கொள்ளாதவர்கள் கடல் அலைகளில் அகப்பட்டுக் கொண்ட கட்டையைப் போலவே பிறவி எனும் சுழற்சியில் சிக்கிக் கொண்டு மீண்டும் மீண்டும் பிறவி எடுத்து துன்பத்தில் உழல்வார்கள்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.